“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.”

எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என் அத்தை தடுத்து நகரச் சொல்லிவிட்டு, அவரே சுத்தம் செய்தார்.

தன் குழந்தை மலம் கழித்ததை ஒரு தந்தை சுத்தம் செய்வதில் என்ன தவறு?

நானும் என் அத்தையும் குழந்தையைக் குளிக்க வைத்து, துணி மாற்றிவிடும் நேரத்தில் என் கணவர் சுத்தம் செய்யச் சென்றார். ஆனால், என் அத்தை அவர் அதை எடுக்கக் கூடாது எனத் தடுத்துவிட்டார். செய்யும் வேலையை முடித்துவிட்டு வந்து எங்களில் ஒருவர்தான் அதைச் சுத்தம் செய்ய வேண்டுமாம்.

என் கணவரும் எங்களுக்கு உதவி செய்யத்தான் முன் வந்தார். என் அத்தையும் எங்களைப் பார்த்துக்கொள்வதில் சிறந்தவர்தான். ஆனால், இது தாயின் வேலை, அதைத் தந்தை செய்யக் கூடாது என்பதை யார் அவர் மனதில் புகுத்தியது?

இன்னொரு நாள் குழந்தை தூங்காமல் வெகு நேரம் அழுது கொண்டே இருந்ததில் தொட்டிலில் போட்டு சில நிமிடங்கள் ஆட்டினேன். வெகு நேராமாக ஆட்டியும் தூங்காததால் என்னால் முடியாமல் என் கணவரை அழைத்து ஆட்டச் சொன்னேன்.

நான் ஆட்டும் வரை அமைதியாக இருந்த என் பெற்றோர், அவர் ஆட்டத் தொடங்கியதும் அவரைத் தடுத்தனர்.

“ஏன் நீங்க இதெல்லாம் பண்றிங்க.. நாங்க பாத்துக்குறோம் நீங்க உக்காருங்க” என்றனர்.

ஏன் குழந்தையின் அப்பா குழந்தையைத் தூங்க வைக்கக் கொஞ்ச நேரம் நின்றால் என்ன தவறு?

மற்றொரு நாள் நான் குழந்தையின் துணியைத் துவைத்துக் கொண்டிருந்த நேரம், என் கணவர் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். வெளியில் அவரைக் கடந்து சென்ற பக்கத்து வீட்டு அக்கா, “ஏன் குழந்தையோட அம்மா என்ன பண்றாங்க.. நீங்க ஊட்றீங்க?” என்றார்.

நான் வேறொரு வேலையில் இருந்தாலும் வேலையை முடித்து விட்டு நானேதான் குழந்தைக்கு ஊட்ட வேண்டும் என நினைக்கிறதா இந்தச் சமூகம்?

முந்தைய தலைமுறையில் என் அப்பா எனக்கு என்ன செய்தார் என்றால், என்னைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்றார். படிக்க வைத்தார்.

எங்களைப் பார்த்துக் கொண்டது எங்கள் அம்மாதான்.

அம்மாவிற்குச் சோர்வாக இருக்கும் போது சில நாட்களில் பாத்திரங்களைக் கழுவி வைத்துள்ளார். வீடு பெருக்கிச் சுத்தம் செய்துள்ளார். அப்பொழுது எனக்கு என் அப்பாவை நினைத்துப் பெருமையாக இருக்கும். அப்படித்தான் என் மனநிலையையும் சலவை செய்து வைத்திருந்தனர்.

இன்று ஏன் திடீரென இத்தனை கோபம்?

நானும் என் கணவரும் இரவு உணவை உண்டு கொண்டிருந்தோம். என் தட்டில் குழம்பு தீர்ந்ததும் நான் எழுந்து சென்று ஊற்றிக்கொண்டு வந்து அமர்ந்தேன்.

என் கணவரின் தட்டில் குழம்பு தீர்ந்ததும் அவர் என் அத்தையிடம் குழம்பு கொண்டுவரும்படி அமர்ந்த இடத்தில் இருந்தே கேட்டார். உள்ளே வேலையாக இருந்த என் அத்தை என்னை அழைத்தார்.

“குழம்பு கேக்குறான் எடுத்துட்டுப் போம்மா” என்றார்.

நானும் கீழே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் அவரும் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எனக்கு ஏதாவது வேண்டும் என்றாலும் நான்தான் எழுந்து சென்று எடுத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு ஏதாவது வேண்டும் என்றாலும் நான்தான் எழுந்து சென்று எடுத்து வர வேண்டும்.

இது என்ன பெரிய விஷயமா, இருவரும் சேர்ந்தே அமர்ந்து குழம்பைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால் தீர்ந்துவிட்டது.

அப்படியே சமையல் அறைக்குள் பாத்திரம் இருந்தாலும் இணையருக்காக இதைக்கூடச் செய்ய மாட்டேனா என்றால் அவருக்கு அன்பு காட்டுவது, அவருக்குத் தேவையானவற்றைச் செய்வது எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், இந்தச் சூழல் எந்த மாதிரியான வாழ்வியலை வளர்க்கிறது?

ஒரு பெண்ணின் பொறுப்புதான் இது என்பதைத் தானே சொல்லாமல் சொல்கிறது.

குழந்தை வளர்ப்பிலும் இதேதான் தொடர்கிறது.

ஒன்று செய்ய முன் வருபவரைச் செய்ய விடாமல் தடுப்பது அல்லது இதெல்லாம் நீ செய்யத் தேவை இல்லை என்கிற சிந்தனையை விதைத்ததில், தான் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பதாகக் கண்டுகொள்ளாமல் இருப்பது.

இயற்கை ஏற்கெனவே அம்மாவிற்கென்று சில பொறுப்புகளை ஒதுக்கிவிட்டது. அதைத் தவிர மற்ற வேலைகளை யாரால் அந்நேரத்தில் செய்ய முடியுமோ அவர்கள் செய்யலாம் அல்லவா!

குழந்தையுடன் ஒருமுறை வெளியில் சென்றபோது குழந்தைக்குத் தேவையான உணவு, பழங்கள், சுட வைத்த தண்ணீர் என எல்லாவற்றையும் நான் எடுத்து வைத்துக் கொண்டேன்.

அங்கே சென்ற போதுதான் குழந்தைக்கு மாற்றுத் துணி எடுத்து வைக்க மறந்ததை உணர்ந்தேன். எல்லாரிடம் இருந்தும் எனக்கு வசவுகள் வந்தன. எப்படியும் இரவுக்குள் வீட்டிற்குச் சென்றுவிடுவோம் எனினும் மாற்றுத் துணி எடுத்து வைக்க மறந்தது நிச்சயம் தவறுதான். ஆனால், கிளம்பும் இறுதி நிமிடம் வரை அவளைத் தயார் செய்வதிலும் அவளுக்கான உணவு, பழங்கள் எடுத்து வைப்பதிலும்தான் ஓய்வில்லாமல் ஈடுபட்டிருந்தேன்.

“எனக்கு அப்பவே துணி எடுத்து வெக்கணும்னு தோணுச்சு. நீயே எடுத்து வெச்சிப்பேன்னு நினைச்சேன்” என்றார் என் கணவர்.

தோன்றிய போதே அவர் அதைச் செய்திருக்கலாமே… இல்லை எனக்கு நினைவூட்டி இருக்கலாமே… எல்லாம் தாயின் வேலை என விட்டுவிடுகிறார்களா..

வீட்டிற்குத் திரும்பியதும் அதே கதைதான்.

அவர் வீட்டிற்குள் வந்ததும் பயணக் களைப்பில் சில நிமிடங்கள் படுத்துக்கொள்ளலாம். ஆனால், அம்மாக்களுக்கு அந்த அனுமதி இல்லை.

உள்ளே வந்ததும் குழந்தையைக் குளிக்க வைத்து உடை மாற்றிவிட வேண்டும். சாப்பிட ஏதாவது தயார் செய்து ஊட்டி விட வேண்டும். தன் உடல் எவ்வளவு அலுப்பாக இருந்தாலும் குழந்தைக்காகச் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அப்பாக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. சிறிது நேரம் இளைப்பாறலாம் அப்படியே படுத்துக்கொண்டே அலைபேசியிலேயே மூழ்கலாம்.

ஒரு சில நாட்கள் சில உதவிகளைச் செய்தாலும் அதைத்தான் நான் செய்து விட்டேனே எல்லாவற்றையுமா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் உண்டு.

இதென்ன இப்படிக் கூறிவிட்டீர்கள், எங்கள் வீட்டில் அப்பாக்கள் தான் பெரும்பாலான வேலைகளைச் செய்கின்றோம் என்றால், ஒருவரே எல்லாவற்றையும் சிரமப்பட்டு செய்ய வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்துகிறேன். அம்மாக்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே.

இல்லை இல்லை எங்கள் வீட்டில் இணைந்தேதான் எல்லா வேலைகளையும் செய்கிறோம் என்றால் மகிழ்ச்சி.

இங்கே நான் குறிப்பிட விரும்புவது பெரும்பான்மையினரின் சூழல்.

மழை மேகமாய்

உருமாறவா உன் வாசல்

வந்து உயிா் தூவவா மனம்

வீசிடும் மலராகவா உன்

கூந்தல் மீது தினம் பூக்கவா

கண்ணாக கருத்தாக உனைக்

காப்பேன் உயிராக

காதலிக்கும் போதும் நிச்சயத்திற்குப் பின்பும் கண்ணுக்குள்ளே உன்னை வைப்பேன் கண்ணம்மா என்கிறார்களே, குழந்தைப் பிறந்த பிறகு அவள் கஷ்டப்படும் போது உடன் நிற்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?

இன்றைய சமூகத்தில் அதிக உடல் உழைப்பு இல்லாத தொழிலில்தான் ஆண்களும் பெண்களும் ஈடுபடுகின்றோம். அந்தக் காலத்தில் ஆண்கள் வெளியில் சென்று உழைத்து விட்டு வருவார்கள். அதனால் பெண்கள் மட்டும் வீட்டு வேலைகளைச் செய்திருக்கலாம். இப்போது அப்படி இல்லையே… வீட்டு வேலைகளிலும் குழந்தை வளர்ப்பிலும் இருவரும் அவரவருக்கு முடிந்தவற்றைச் செய்தால் இருவரின் உடல்நிலையும் மனநிலையும் நன்றாக இருக்கும். செய்ய முடியவில்லை எனினும் அவர்கள் சிரமங்களைப் புரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்.

அம்மாவின் பொறுப்பு மட்டும்தான், அதை நான் செய்யவே மாட்டேன் என்று ஒதுங்கிவிட்டால் கஷ்டம் ஒருவரை மட்டும் சேர்கிறது.

ஏற்கெனவே குழந்தை பிறப்பிற்குப் பின் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிரமத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆண்கள் துணையாக இருந்தால் குழந்தை வளர்ப்பில் இருக்கும் சவால்களைச் சந்திப்பது எளிதாக இருக்குமே!

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.