திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள். எழுந்து உட்கார்ந்தும் படபடப்பு அடங்கவில்லை. மின்விசிறி மெதுவாகச் சுழல்வது போல் இருந்தது. பக்கத்தில் செம்பில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து மேலெல்லாம் வழிய வழிய வாயில் ஊற்றிக் கொண்டாள். நீர் அவளது மார்புகளை நனைத்துக் கொண்டு இறங்கியது. தாகம் அடங்கியதும் சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.

விடிவிளக்கைப் பொருத்திக் கொண்டு மணியைப் பார்த்தாள். இரண்டரை என்றது. அவள் மீண்டும் கனவை அசை போட்டாள். கறுத்த குதிரை மீது அமர்ந்து தலைமயிர் பறக்க சவாரி செய்து கொண்டிருக்கும்போது, ஒரு மரக்கிளையில் இருந்து தொங்கிய சிறு மலைப்பாம்பு ஒன்று அவள்மீது விழுந்து தழுவியது. அவளது உடலெங்கும் நழுவிக் கொண்டு இறங்கியது. இதனால் குதிரை மிரண்டு பள்ளத்தாக்கில் பாய்ந்து, கிருபா பிடிமானமின்றி ஆடைகள் நெகிழ, தலைகுப்புற விழுந்தாள். பள்ளத்தில் விழுந்ததாக நினைத்து கட்டிலில் இருந்து விழுந்திருக்கிறாள்.

ஆனாலும் அவள் மீது இன்னும் பாம்பு ஊறுவது போலவே இருந்தது. எழுந்து நின்று புடவையை அவிழ்த்து உதறினாள். உடலெங்கும் சிலிர்த்ததில் ஒரு வினோத உணர்ச்சி அவளைக் கவ்வியது.

முப்பத்தி ஐந்து வயதாகி பேரிளம் பெண்ணாக மிளிர்ந்து கொண்டிருந்தாள் கிருபா. இருபத்தி ஐந்து வயதில் நாகராஜனைத் திருமணம் செய்து கொண்டாள். குழந்தைகள் இல்லாத இரண்டு வருடத் திருமண வாழ்வில் வைரஸ் காய்ச்சலுக்கு அவனைப் பறிகொடுத்து திகைத்து நின்றவளை, அண்ணன் ஜெயந்தன் அரவணைத்துக் கொண்டான்.

மூன்று வருடங்கள் கழித்து அவன் ராகினியைத் திருமணம் செய்து கொண்டான். ராகினி, கிருபாவைவிட இரண்டு வயது சின்னவள். அவளை ‘அக்கா’ என்று அழைத்து, பாசமாக நடந்து கொண்டாள்.

கிருபாவிற்கு சமீப காலங்களில் ஏனோ கோபம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அர்த்தமற்ற கோபங்கள். சீறி விழுந்து கொண்டிருந்தாள். சத்தமாகப் பேச மாட்டாள். ஆனால் அப்போது அவள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் கடினமாக, எதிராளியின் மனதை உடைக்க வல்லதாக இருந்தன. ராகினியின் மனம் அடிக்கடி உடைந்து கொண்டிருந்தது.

“ஏங்க… கிருபாக்கா சில்லு சில்லுனு பேசறாங்க. எதுவும் கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறாங்க. இப்பக்கூட ‘சாப்பிட வாங்கக்கா’ன்னு கூப்ட்டேன். ‘உனக்கென்ன போய் நல்லா சாப்பிடு. எந் தலையெழுத்து வீணாக் கிடக்குறேன்’னு சொல்லிட்டு அழுவுறாங்க. நான் ஒண்ணும் பேசலை…” ராகினி ஆதங்கத்துடன் ஆரம்பித்து அழுகையுடன் முடித்தாள். ஜெயந்தன் பதில் பேசாமல் இருந்தான்.

ஜெயந்தனின் மகள் நவ்யா மெல்லப் புரண்டு படுத்தாள். மூன்று வயதாகிறது அவளுக்கு. அடுத்த வருடம் பள்ளிக்குப் போகத் தொடங்கி விடுவாள். காலையில் எழுந்ததில் இருந்து அத்தை வேண்டும் அவளுக்கு. கழிவறை கொண்டு விட, பல்துலக்கி விட, குளிக்க வைக்க, சாப்பிடும்போது என்று கிருபாவின் முந்தானையில் தொங்கிக் கொண்டே அலைவாள். இரவும் அத்தையின் அணைப்பில் படுத்துக் கொண்டே கதைகள் கேட்டபடி உறங்கிப் போவாள். கிருபாவுக்கு வீட்டு வேலைகள்தான் பொழுது போக்கு. ராகினியும் வீட்டில்தான் இருந்தாள். இருவரும் சேர்ந்துதான் வேலை செய்வார்கள். சிரிப்பும், பேச்சுமாக இருந்த வீட்டில் இப்போதெல்லாம் அமைதியோ அமைதி.

கிருபா நேரங்கெட்ட நேரத்தில் அழுவதும், கோபமாய் இருப்பதும் அவர்களுக்குப் புதிது. அந்த நேரங்களில் நவ்யா கூட அத்தையிடம் வர அஞ்சிக் கொண்டு நிற்பாள்.

கிருபா மீண்டும் படுத்தாள். தூக்கம் வருவேனா என்றது. மெல்லப் புரண்டாள். உடம்பை முறுக்கிக் கொண்டாள். அடிவயிற்றைப் பிசைவது போல ஒரு உணர்வு எழுந்தது. ஓவென்று கத்த வேண்டும் போல் இருந்தது. கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டாள். ஏனோ கோபம் கோபமாக வந்தது. உதட்டை இறுகக் கடித்துக் கொண்டதில் லேசாக இரத்தம் கசிந்தது. மெல்ல அதைச் சுவைத்துப் பார்த்தாள். புளித்தது. உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொண்டாள். யாரையாவது முடியைப் பிடித்து உலுக்க வேண்டும் போல் ஆவேசம் எழுந்தது. அடுத்த அறையில் நிம்மதியாகத் தூங்குபவர்களை நினைத்து மெலிதாய் பொறாமை எழுந்தது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டு தூங்க முயன்றாள்.

காலையில் எழுந்தபோது விடிந்து வெகுநேரமாகியிருந்தது. அதிக நேரம் தூங்கிய குற்றவுணர்வுடன் எழுந்து அவசரமாகக் குளிக்கச் சென்றாள். குளிர்ந்த நீரை தலையில் ஊற்றும் போது அவளது உணர்வுகள் கொஞ்சம் சாந்தப்பட்டது போல் தோன்றியது. மேலிருந்து வழிந்த நீர் அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்தியது. சேலையைச் சுற்றிக் கொண்டு தலையைத் துவட்டியவாறே சமையலறைக்குள் நுழைந்தாள்.

“குளிச்சிட்டீங்களாக்கா..? இந்தாங்க காஃபி. உங்களுக்கு சர்க்கரை தூக்கலாப் போட்டுக் கலந்திருக்கேன்…” ராகினி டம்ளரை நீட்டினாள். நுரையோடு காஃபி மணமாக இருந்தது. வாங்கும் போது பார்வை தற்செயலாக ராகினியின் கழுத்துப் பக்கம் சென்றது. கழுத்தில் அங்கங்கே சிவந்த திட்டுகள் இருந்தன. அதுவரை காணாமல் போயிருந்த ஆங்காரம் தலைக்கு ஏறியது. காஃபியை அப்படியே சிங்க்கில் கொட்டிக் கவிழ்த்தாள். ராகினி அதிர்ந்து போய் நின்றிருந்தாள். டம்ளரை வீசிவிட்டு கொல்லைப்புறம் போனாள் கிருபா. ராகினி கண்ணீரோடு ஜெயந்தனிடம் ஓடினாள்.

ஜெயந்தன் மெதுவாக கொல்லைப் பக்கம் போனான். கிணற்றுக்குப் பக்கத்தில் கிடந்த துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து கொண்டிருந்தாள் கிருபா. முதுகு மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அழுது கொண்டிருக்கிறாள் போல என்று எண்ணமிட்டவாறே சத்தமில்லாமல் திரும்பிப் போனான்.

“கேட்டீங்களா அவங்க கிட்ட..? நான் ஒண்ணுமே சொல்லலங்க. காஃபி குடிங்கக்கான்னு தான் குடுத்தேன். ஏன் கோபமா இருக்காங்க?..” ஜெயந்தன் யோசனையாக வெளியே போனான்.

நவ்யா எழுந்து வந்து அத்தையைத் தேடியது. ராகினி பால் டம்ளரைக் கொடுத்தாள். “வேந்தாம் போ. அத்த எங்க..?” மிழற்றியது.

“அத்தை குடுத்தாத்தான் குடிப்பியா..?” ராகினி டம்ளரைப் பட்டென்று கீழே வைத்தாள். பால் துளிகள் சிதறின. நவ்யா திடுக்கிட்டது.

அப்போது உள்ளே வந்த ஜெயந்தன், ” குழந்தைகிட்ட எதுக்குடி கோவத்தைக் காட்டுறே..? அவளுக்கு என்ன தெரியும்..? என்றவாறே பால் டம்ளரையும் நவ்யாவையும் தூக்கிக் கொண்டான்.

டம்ளரை குழந்தையின் வாயருகில் கொண்டு போனான். உதட்டைப் பிதுக்கியவாறே தட்டிவிட்டது. “ஏய்..குடிக்கிறியா இல்லையா..?” உறுமினான். அது வீறிட்டது.

கொல்லையில் இருந்து வேகமாக உள்ளே வந்த கிருபாவைப் பார்த்துத் தாவினாள் குழந்தை. அவளை வாங்கிக் கொண்டு பால் டம்ளரையும் பிடுங்கிக் கொண்டு அறைக்குள் போய்விட்டாள் கிருபா. பத்து நிமிடம் கழித்து உள்ளே நவ்யா சிரிக்கும் சத்தம் கேட்டது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஜெயந்தன் ஒரு பெருமூச்சோடு வெளியே போய்விட்டான்.

இரண்டு நாள்கள் கழிந்தன. அது ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமையின் பின்காலைப் பொழுது. ஜெயந்தன் வாசலில் இருந்த பெஞ்சில் அன்றைய பத்திரிக்கையை வாசித்துக் கொண்டே அரைத் தூக்கத்தில் கண் செருகிக் கிடந்தான். தலையணை நழுவிக் கிடந்தது. வாய் லேசாகப் பிளந்திருக்க, நல்ல உறக்கம். உள்ளே கிருபா அறையில் நவ்யாவுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். ராகினி மதிய சமையலுக்கான முகாந்திரத்தில் இருந்தாள்.

அப்போது பக்கத்து வீட்டில் இருந்த நாய் பிரவுனி பயங்கரமாகக் குலைத்தது. ஜெயந்தன் திடுக்கிட்டு எழுந்ததில் மார்பில் கவிழ்ந்து கிடந்த நாளிதழ் கீழே விழுந்தது. எழுந்தவன் வாயைத் துடைத்துக் கொண்டு எரிச்சலாக நிமிர்ந்தான். ராகினி வெளியே வந்தாள்.

“மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு அழிச்சாட்டியத்தை. இதை இங்க கட்டி வெச்சு நம்ம உசுரை வாங்குறாங்க. இது ஏன் இப்படி குடலே வெளில வர்ற மாதிரி குலைச்சுத் தொலைக்குது…” நாளிதழைப் பொறுக்கி அடுக்கினான்.

“அதைக் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அவங்க வாங்கிட்டு வந்தாங்க. முதல்ல இருந்த இடத்தில் அதோட ஜோடியோட இருந்துச்சாம். இவங்க ஒன்னு மட்டும் போதும்னு இதை மாத்திரம் வாங்கிட்டு வந்துட்டாங்களாம். சாப்பிட வாரத்தில் நாலு நாளு சிக்கன் தர்றாங்க. தினமும் குடிக்கப் பால். அப்புறம் என்ன? நல்லா சாப்பிட்டு, விளையாடிட்டு தூங்க வேண்டியது தானே..?” ராகினி பெஞ்சில் உட்கார்ந்தாள்.

“ம்.. அது மட்டும் போதுமா..? நீ ஒரு விஷயம் யோசிச்சியா..? உன்னை இப்படித் தனியா வெச்சு, வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் குடுத்தா சந்தோஷமா இருப்பியா..?”

“அய்யய்யோ… உங்களை, நவ்யா குட்டியை எல்லாம் பாக்காம என்னால ஒருநாள்கூட இருக்க முடியாது சாமி. தங்கத்தையே குடுத்தாலும் நான் உங்களை விட்டுட்டு இருக்க மாட்டேன்ப்பா…” என்றாள் ராகினி. அப்போதே அவனிடமிருந்து அவளைப் பிரித்து அழைத்துச் சென்று விடுவார்கள் போல் தலையை அவசர அவசரமாக அசைத்தாள்.

ஜெயந்தன் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தான். அவனுக்கு ஏதோ புரிந்தாற்போல இருந்தது.

“உ… உனக்கு… உனக்கு புரியுதா..?” ஜெயந்தனுக்கு குரல் அடைத்துக் கொண்டது.

“என்ன புரியுதாங்கிறீங்க..?” குழப்பமாகக் கேட்டாள் ராகினி.

“இப்ப நீ சொன்னது… உனக்கு புரியலையா ராகி..? நல்லா யோசிச்சு சொல்லு…” ராகினி தலையைச் சாய்த்து யோசித்துப் பார்த்தாள்.

“பசி, தாகம், தூக்கம் மாதிரி எல்லா உணர்வுகளும் எல்லாருக்கும் இயல்புதானே..? அதை ஒருத்தருக்கு மறுக்குறதுக்கு நாம யாரு..?”

“என்ன சொல்றீங்க..?”

“வெறும் சோறும், தங்குறதுக்கு இடமும் மட்டும் கொடுத்தாப் போதுமா..?” என்றவனைப் புரியாமல் பார்த்தாள் ராகினி.

“கிருபாவுக்கு வயசு முப்பத்தஞ்சுதான் ஆகுது…” ஜெயந்தன் தரையைப் பார்த்தான். ராகினி புரிந்து கொண்டாள். முகம் குன்றிப் போனது.

“நான் இதையெல்லாம் யோசிக்கவே இல்லைங்க. உங்களுக்குப் புரியலைன்னா பரவாயில்ல. நான் பொண்ணு. அவுங்க மனசு எனக்குப் புரியலையே? இதையெல்லாம் வெளிப்படையா பேச முடியுமா அவுங்களால? ச்ச… என்ன பொண்ணு நான்? இதைக்கூடப் புரிஞ்சிக்காம? எங்க தூரத்து உறவு செந்தில் அண்ணனும் கொரோனால மனைவிய இழந்துட்டு தவிச்சுட்டு இருக்காரே. அவருகிட்ட பேசிப் பார்க்கலாமா..?” என்றாள் மெதுவாக.

“அதுக்கு முன்னாடி கிருபா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்ல..?” “அக்காகிட்ட நான் பேசறேன்…” ராகினி உடனே உள்ளே போனாள்.

ஜெயகாந்தன் நகத்தைக் கடித்துக் கொண்டு பதினைந்து நிமிடங்களை அவஸ்தையாய்க் கழித்தான். உள்ளிருந்து இருவரும் வந்தார்கள். கிருபாவின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததும் ஜெயந்தனும் புன்னகைத்தான்.

***

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.