வாழ்க்கைப் பயணத்தில் நாம் நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்பம் வந்தால் ரசிக்கிறோம். துன்பம் வந்தால் சகித்துக் கொள்கிறோம். இந்தப் பயண காலத்தில் ஆயிரம் உறவுகள்; ஆயிரம் நினைவுகள். ஆயினும் மனதின் அடி ஆழத்தில் கல்லூரி கால நினைவுகள் இனிய சுனை நீர் போல தேங்கி நிற்கின்றது. அவ்வப்போது நம் நினைவில் சுரந்து நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

ஒவ்வொருவருக்கும் கல்லூரி காலம் என்பது பல பல வண்ண மலர்களை வாரி இறைக்கும் வசந்தகாலம் போன்றது. பற்பல மணங்களைச் சுமந்து வரும் சோலைத் தென்றல் போல் சுகமானது. இந்த வாசம் போட்டி, பொறாமை, சந்தோஷம், சச்சரவு அனைத்தும் கலந்தது. நமக்கு பொறுப்பு கிடையாது. ஆயினும் ஓரளவு பணமும் சுதந்திரமும் கிடைத்தது.

பள்ளிக்காலம் அப்படி அல்ல. பொறுப்பு கிடையாது எனினும் நாம் நமது தாய் தகப்பன் கட்டுப்பாட்டில்தான் இருந்தோம். மிகச் சரியான தேவைகளுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். அடி ஆழத்திலிருந்து இந்த கல்லூரி நினைவுகள் ஆர்டீசியன் ஊற்று போல பீறிட்டு வந்து உங்களை நனைக்க வருகின்றது. நனைந்து மகிழும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது கல்லூரி கால நினைவுகள் எனது சமகால தோழிகளாக இருந்தால் அந்த காலத்திற்கே கொண்டு சென்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். சமீப காலத்தில் எங்கள் கல்லூரியில் படித்தவராக இருந்தால், முன்பு இப்படி எல்லாம் நடந்ததா? முன்பும் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று அறியச் செய்யும். வேறு கல்லூரியில் படித்தவராக இருந்தால், ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லும். கல்லூரிக்கு செல்லாதவர்களாக இருந்தாலும்கூட கல்லூரி வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா என வியப்பில் ஆழ்த்தும். எனவே எங்கள் கல்லூரியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் இந்த சுவாரசியமான சம்பவங்களை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கல்லூரியில் முதல் நாள் எப்படி இருந்தது, கல்லூரியின் சிறப்புகள், நுண்கலை வார விழா (Fine arts week) , நான் படித்த வேதியியல் துறை, எனது பேராசிரியைகள், என்.எஸ்.எஸ்,என்.சி.சி, விளையாட்டுகள், கல்லூரி விழாக்கள், கல்விச் சுற்றுலா பற்றியும் விடுதி நடைமுறைகள், தோழிகள், உணவு, அங்கு சந்தித்த சிரமங்கள், அனுபவித்த கேளிக்கைகள், விழாக்கள் பற்றியும் எழுதப் போகிறேன்.

உள்ளூரிலேயே கல்லூரி இருந்தும் ஏன் புனித மரியன்னை கல்லூரியில் படிக்க நேர்ந்தது என்ற காரணத்தை என்னுடன் சேர்ந்து சற்றே திரும்பிப் பார்ப்போம். நான் எஸ்.எஸ்.எல்.சி.படித்தது 1977- 1978. அப்போதெல்லாம் முழு மதிப்பெண் போடும் வழக்கம் கிடையாது. ஐந்து மதிப்பெண் கேள்வி என்றால் புத்தகத்தில் இருப்பதை நன்றாக எழுதினால் மூன்றரை மதிப்பெண், கொஞ்சம் அதிகமாக எழுதினால் அதற்கு ஏற்ப நான்கு அல்லது நான்கரை மதிப்பெண். எங்களுக்கு எலக்டிவ் (Elective) கிடையாது. 500க்கு 400க்கு மேல் மதிப்பெண் பெற்றால் அது பெரிய விஷயம். நான் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று தீவிரமாகப் படித்து வந்தேன். மதிப்பெண் பட்டியல் வருகின்ற நாள் தித்திக் என்றிருந்தது. தேர்வு முடிவுகள் வந்து மூன்று அல்லது நான்கு நாள்கள் கழித்துதான் மதிப்பெண் பட்டியலை திருநெல்வேலியில் இருந்து பள்ளி சார்பில் வாங்கி வருவார்கள். இ

ப்போது போல் ஆன்லைனில் தெரிந்து கொள்ள இயலாது. மதிப்பெண் பார்க்க மாணவர்கள்தான் பள்ளிக்குச் செல்வார்கள். மாணவிகளுக்கு தந்தை அல்லது அண்ணன் போன்ற மூத்தோர் மதிப்பெண் பார்த்து வருவார்கள். மதிப்பெண் காகிதத்தில் எழுதி, கரும்பலகையில் ஒட்டப்பட்டு, வெளியே வைக்கப்பட்டிருக்கும். எனது தந்தை வெளிநாட்டில் இருந்ததால், என் மதிப்பெண் பார்த்து வர வீட்டில் யாரும் இல்லையே என்ற சின்ன வருத்தம் இருந்தது. ஆனால் மதிப்பெண் பட்டியல் பள்ளிக்கு வந்த சற்று நேரத்திலேயே என் மதிப்பெண் கிராமம் முழுக்க பரவி, என் காதுக்கும் வந்து சேர்ந்தது. ஆம், பள்ளியின் முதல் மதிப்பெண்ணாக, 414 மதிப்பெண் நான் பெற்றிருந்தேன். எனக்கு ஜிவ்வென்று பறப்பது போல் இருந்தது. ஊரே பாராட்டியது.

ஊரார் பலரும் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், நல்ல தரமான கல்லூரியில் சேர்க்கும்படி எனது அம்மாவிடம் கூறினர். அம்மா விசாரித்ததில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மிகச் சிறந்த கல்லூரிகளில் புனித மரியன்னை கல்லூரியும் ஒன்று என்று தெரியவர, அங்கே என்னை சேர்ப்பது என்று முடிவானது. அப்போது மதுரை மற்றும் அதன் தெற்கே அமைந்துள்ள கல்லூரிகள் எல்லாமே மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தன. கல்லூரிக்கு விண்ணப்பிக்க சான்றிதழ்களில் கையெழுத்து வாங்க பள்ளிக்குச் சென்றபோது, பெருமையாக இருந்தது. அதுவும் அறிவியல் மற்றும் சமூகவியலில் நான் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் என்று வேறு தலைமை ஆசிரியர் கூறினார்.

அப்போதிருந்த ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமப் பள்ளியைச் சேர்ந்தவள் இரு பாடங்களில் முதல் மதிப்பெண் பெறுவது பெரிய விஷயம்தான். அதற்கு காரணம் எங்கள் ஆசிரியர்கள்தான். அறிவியல் ஆசிரியர் திரு ஜோசப், சமூகவியல் ஆசிரியர் திரு மேக்னீஸ், இருவரும் புத்தகத்தில் இருப்பதையும் தாண்டி அதிகப்படியான தகவல்களைச் சொல்வார்கள். நான் அதை வீட்டிற்கு வந்ததும் வேறு நோட்டில் எழுதி வைத்துக் கொள்வேன். இதுவே நான் முதல் மதிப்பெண் வாங்கக் காரணம்.

புனித மரியன்னை கல்லூரியில் சேர எளிதாக இடம் கிடைத்தது. விடுதிக்குச் செல்ல பலவித பொருள்களை தயார் செய்ய வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் பள்ளியில் மட்டும்தான் சீருடை. கல்லூரியில் விருப்பமான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். பெரும்பாலும் பூப்போட்ட சீட்டி பாவாடை, அந்தப் பூவின் நிறத்தில் அரை தாவணி – ரவிக்கை; சிலர் பாவாடை நிறத்திலும் ரவிக்கை அணிவர். எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரையில் ஆங்கிலோ இந்தியன் மாணவிகளும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிலரும் மேக்சி, பேண்ட் துணியில் தைத்த நீள-குட்டை மிடி, ஆண்கள் சட்டை துணியில் தைத்த காலர் சிறியதாக வைத்த சட்டையும் அணிவர்.

இப்போது போல் செயற்கை இழைகள் தயாரிக்கும் ஆலைகள் அதிகமாக இல்லை. எனவே மற்ற பொருள்களை ஒப்பிடும்போது துணிமணிகள் விலை அதிகம்தான். நான் மொத்தம் 12 செட் அதாவது இரு வாரத்திற்கு ஒரு முறை (சனிக்கிழமை அரை நாள் வகுப்பு உண்டு )என்று ஆடைகளைத் தயார் பண்ணிக் கொண்டேன். சோப்பு, சீப்பு, கண்ணாடி என்று பலவித பொருள்கள்; பிளாஸ்டிக் பொருள்கள் வந்து சில காலமே ஆனதால், அவையும் விலை அதிகம். பிளாஸ்டிக்கில் ரோஜாப்பூ வண்ண வாளி, சிவப்பு வண்ண சதுர கூடை, ஏர் பேக்( Airbag) என்று சொல்லப்படும் தோளில் போடும் பை, (கருப்பு மெரூன் வண்ணங்களில் கட்டம் கட்டமாக தைக்கப்பட்டு இருக்கும்) தோள் பை (Handbag) இவையெல்லாம் விசேஷமான பொருள்கள்.

என் அம்மா ஆசிரியை பயிற்சிக்காக விடுதியில் இருந்து படித்ததால், சாப்பாடு மோசமாக இருக்கும் என்று அவல், ஓட்டு மாவு (ஓட்டு மாவு பற்றி பின்னர் கூறுகிறேன்), பொரிகடலை பொடி, கலகலா தயார் பண்ணித் தந்தார். புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய சூழல் பார்க்கப் போகிறோம் என்று ஒரு பக்கம் ஆவல் இருந்தாலும், குடும்பத்தை விட்டு விடுதிக்குச் செல்கிறோம் எப்படி இருக்குமோ என்ற கலக்கமும் கூடவே இருந்தது.

தொடரும்…

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.