இந்த மருமக்கள்தாயம் என்ற சம்மந்தம் முறையினை உருவாக்கியது நம்பூதிரி பிராமணர்களே ஆவர்! நம்பூதிரி பிராமணர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் தாங்கள் கொண்ட நெருக்கத்தை பயன்படுத்தி, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொடிய வழக்கத்தை நடைமுறைப்படுத்தினர்.
அதை நடைமுறைக்குக் கொண்டுவர கேரளோற்பத்தி, கேரள மகாத்மியம் போன்ற இந்துத்துவ இதிகாச நூல்களை நம்பூதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்கிறார் திரு.எல். மூர். இதன் மூலம் திருமணம் ஆகாத மற்றும் திருமணம் ஆன நம்பூதிரிகள், தங்களின் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள, சமுதாயத்துக்குத் தலைமறைவாகக் குறுக்கு வழியைத் தேட வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. நம்பூதிரி பிராமணர்கள் உருவாக்கிய மருமக்கதாயம் முறைப்படி, நம்பூதிரிபிராமணர் சாதிக் குடும்பத்தில் மூத்த ஆண்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள உரிமையுள்ளவர்கள். நம்பூதிரி பிராமணர் குடும்பத்து இளைய ஆண்களும் நாயர் சாதி ஆண்களும் தரவாட்டின் நாயர் பெண்களுடன் உறவு கொள்ளலாம். தவிர, தங்களுக்கென்று ஒரு கல்யாணம் செய்து கொள்ளவோ, தனக்கென சொந்தமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவோ நம்பூதிரி பிராமணர் குடும்பத்து இளைய ஆண்களுக்கும் நாயர் ஆண்களுக்கும் உரிமை இல்லை.9*
நாயர் பட்டாளம் என்ற போர்ப்படையில் நாட்டுக்காகப் போரிடுகின்ற நாயர் சாதி ஆண்களுக்கு போர்க்களத்தில் போரிடும் போது, ‘தனக்கென்று ஒரு மனைவி, குடும்பம் இருக்கிறதே’ என்ற பாசமும் கவலையும் ஏற்பட்டு விட்டால், அவனால் போரில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதற்காக இத்தகைய ஏற்பாடாம்.
இந்த குடும்ப அமைப்பை உறுதி செய்ய முனைந்த திருவிதாங்கூர் அரசர்கள் நாயர் பெண்களுக்கு, கல்யாணத்தின்போது, பெரிய வீடும், உணவுக்கான நிலங்களும் கொடுத்தார்கள். இந்த வீடுகள்தான் தரவாடு என்றழைக்கப்பட்டன.10*
மேற்சொன்னவாறு நடைபெறும் திருமணத்திற்குப் பிறகு, தரவாட்டைச் சார்ந்த நாயர் சாதிப் பெண்களுடன் முதன் முதலில் உறவு கொள்ளும் உரிமை, நம்பூதிரிப் பிராமணர்களுடையது என்று கருதப்பட்டது. நம்பூதிரி பிராமணர்களுடன் தரவாட்டுப் பெண்கள் கொள்ளும் இத்தகைய உறவை நாயர் சாதி ஆண்களும் ஆணாதிக்கமேறிய பெண்களும் பெருமையாகக் கருதி வந்தனர். அந்த மணப்பெண்ணும் அவளுடைய கன்னித்தன்மையும் தெய்வத்துக்கு முதலில் படையல் ஆக வேண்டும் என்பதற்காகவே, நம்பூதிரி பிராமணருடன் மணமகளுக்கு இந்தச் சடங்கு செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார் ஹாமில்டன்.11*
ஜனவரி 2, 1961 ஆம் ஆண்டு வெளிவந்த ஆர்கனைசர் பத்திரிகையின் ஐந்தாம் பக்கத்தில், RSS ராஷ்டிரிய சுயம்சேவா சங்கத்தின் தலைவரான கோல்வால்கர் எழுதி, இது குறித்து ‘HINDU EXPERIMENTS IN CROSS BREEDING’ என்ற தலைப்பின் கீழ் வந்த கட்டுரை, நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் தகவலை உண்மைதான் என்று உறுதி செய்கிறது.

நம் முன்னோர்கள் எல்லாரும் மூடர்கள் அல்ல. இன்றைக்கும் விஞ்ஞானிகள் கலப்பின இனப்பெருக்கம் என்பதை விலங்குகளில் மட்டுமே செய்து பார்க்கிறார்கள். ஆனால் மனிதர்கள் மீது இது போன்ற கலப்பின ஆராய்ச்சிகளை செய்து பார்க்கும் துணிச்சல் இன்றைய விஞ்ஞான ஆய்வாளர்களிடம் கூட இல்லை. ஒருவேளை மனிதர்களிடம் இது போன்ற கலப்பு ஏற்பட்டால் அது காமத்தின் விளைவாக நடக்கின்றதே அன்றி, விஞ்ஞான ஆய்வுகளால் மனிதர்களிடம் கலப்பு நிகழ்த்தப்படுவதில்லை.
நம் முன்னோர்கள் இந்தத் துறையில் செய்த ஆராய்ச்சிகளைக் காண்போம். வடக்கிலிருந்து சென்று கேரளாவில் வாழ்ந்த நம்பூதிரி பிராமணர்கள் இனக்கலப்பின் மூலமாக மனித இனத்தின் மேம்பட்ட இனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு நம்பூதிரி பிராமணர் குடும்பத்தின் மூத்த மகன் சத்திரிய, வைஷிய, சூத்திர வர்ணத்து பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விதி இருந்தது. மிகுந்த துணிச்சலுடன் வகுக்கப்பட்ட இன்னொரு சட்டம் என்னவென்றால், கேரளத்தின் எந்தவொரு வகுப்பையும் சார்ந்த பெண்ணும், தனது முதல் குழந்தையை நம்பூதிரி பிராமணர் ஒருவரை தந்தையாகக் கொண்டே பெற்றுக் கொள்ள வேண்டும், அதன் பிறகே அப்பெண்கள் தங்கள் கணவனுக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறான முறையற்ற வாழ்க்கை முறையை, தன் முன்னோர்களின் பெருமையாகப் பேசும் கோல்வால்கர் உருவாக்கிய ராஷ்டிரிய சுயம்சேவா சங்கத்தையும் (RSS), அதன் கொள்கைகளையும் புனிதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இளம் தலைமுறையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.
ஆக, கோல்வால்கர் கூற்றுப்படி திருவிதாங்கூரின் அனைத்துப் பெண்களும் திருமணத்துக்குப் பிறகு தனது முதல் உறவை நம்பூதிரி பிராமண ஆண்களுடன்தான் வைத்துக் கொள்ளவேண்டும். அது மட்டும் அல்ல, தன் முதல் குழந்தையையும் நம்பூதிரி பிராமண ஆண்களுக்குத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது, பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரின் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சட்டம்.
இச்சட்டத்தின்படி, தரவாட்டில் வசிக்கும் நாயர் பெண்கள் மட்டுமல்ல, திருவிதாங்கூர் அரச வம்சத்துப் பெண்களும் தங்களின் முதல் குழந்தையை நம்பூதிரி பிராமணர்கள் மூலம்தான் பெற்றுக் கொள்ள முடியும்.12*
இவ்வாறான சம்மந்த மணஉறவு முறையை ராஜராஜச் சோழன் காலத்து ‘தளிச்சேரி தேவதாசிகள்’ முறையோடு ஒப்பிடுகிறார் எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கிருஷ்ணவேல்.T.S. அவரது இந்த ஒப்பீட்டை மறுப்பதற்கில்லை.
எனக்கோ மஹாபாரதத்தின் பாஞ்சாலி கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. “நாயர்கள் தங்களுக்குப் பொதுவான மனைவியரை உடையவராக உள்ளனர். இவர்களில் ஒருவன் இத்தகைய பொது மனைவியரின் இல்லத்துக்கு செல்லும் போது, தன்னுடைய வாள் மற்றும் கேடயத்தை வீட்டு வாசலில் வைத்து விட்டுச் செல்வான். அவன் அந்த வீட்டு வாசலில் வாள் மற்றும் கேடயத்தைப் பார்க்கும் மற்ற கணவன்மார்கள் அந்த வீட்டுக்குள் செல்ல துணிவதில்லை”, என்ற பதினாறாம் நூற்றாண்டின் சீசர் பிரடரிக் எழுதிய குறிப்பைப் படித்த போது, திரௌபதியுடன் யுதிஷ்டிரன் தனித்திருக்கும்போது, அவர்களின் அறைக்குள் நுழைந்ததற்காக அர்ஜுனன், தண்டனையாக வனவாசம் சென்ற நிகழ்வே எனக்கு நினைவுக்கு வந்தது.
தரவாட்டின் தலைவன் காரணவான் என்று அழைக்கப்பட்டான். மருமக்கதாய வழக்கப்படி, தரவாட்டின் தலைவன் மறைந்த பிறகு, தலைவனின் மருமகன் (சகோதரியின் மகன்) தரவாட்டுக்கு தலைவனாவான். அது போலவே திருவிதாங்கூரின் அரச வம்சத்துப் பெண் வயிற்றில் பிறக்கும் முதல் குழந்தைக்கே அரசுரிமை வழங்கப்பட்டது (அரசனின் சகோதரியின் குழந்தை என்றாலும் கல்யாண விதி சம்மந்த முறைதானே! அதாவது அரச வம்சத்துப் பெண்ணுக்கு நம்பூதிரியின் மூலம் பிறக்கும் குழந்தைதானே அரசனாகிறான். அல்லவா?!).
எனில் அவ்வரசனின் தகப்பன் பிராமண நம்பூதிரியாகவே இருப்பார் அல்லவா? எனில் ‘நீசன் அந்தணராகப் பிறப்பான்’ என்று ஈசர் அகிலத்திரட்டில் கொடுத்த வரம் ஒத்துப் போகிறதல்லவா?
எனவே நீசன் என்னும் திருவிதாங்கூர் அரசர்(கள்) பிறப்பால் பிராமணத் தந்தையின் வாரிசு(கள்) என்பதற்கு கோல்வால்கர் 1961 ஆம் ஆண்டிலேயே சான்று தந்துவிட்டார்.
நம்பூதிரி பிராமண ஆண்களுக்கு தரவாட்டின் நாயர் பெண்கள் மூலம் பிறந்த குழந்தைகள், நாயர்களாகவே சமுதாயத்தில் அடையாளப் படுத்தப்பட்டார்களே அன்றி, நம்பூதிரி பிராமணர் என்று அடையாளப்படுத்தப் படவில்லை. மாறாக தான் சம்மந்தம் வைத்துக்கொண்ட நாயர் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தொடுவதையும் நம்பூதிரிகள் தீட்டாகக் கருதுவார்களாம்.13* ஆக, இத்தகைய குழந்தைகளின் பிறப்பு மறைக்கப்பட்டது.
அவன் நாயர் தாயின் வயிற்றில் பிறந்ததற்காகத்தான், ஹிரண்யகர்ப்ப யாகம் செய்து தோஷம் கழித்தார்களா? என்று எனக்குள் கேள்வி பிறக்கின்றது.
நாயர் மற்றும் நம்பூதிரிகளின் முரண்பட்ட உறவு
நாயர் பெண்களை தங்கள் இச்சைக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட நம்பூதிரிகள் நாயர் சாதியினரை நடத்திய விதம் பற்றி அறிய வேண்டியதும் அவசியம் என நினைக்கிறேன்.
நாயர் ஒருவன் நம்பூதிரியிடம் பேசும் பொழுது தன்னைக் காலடிமை எனக் கூறிக் கொள்வான். தன்னுடைய அரிசியினைக் குறுனை என்றும் ரூபாயினைச் செப்புக் காசு என்றும் வீட்டினைச் சாணக்குழி என்றும் கூறிக்கொள்ள வேண்டிய நாயர், நம்பூதிரியினுடைய அரிசியினைப் பச்சரிசி எனவும் நம்பூதிரியின் செப்புக்காசை ரூபாய் எனவும் வீட்டை இல்லம் அல்லது மனையெனவும் கூறக் கடமைப்பட்டவன். நாயர் தன்னுடைய துணியைக் கிழிசல் அல்லது சிலந்திக் கூடு என்றுதான் கூறிக் கொள்ள வேண்டும். நம்பூதிரியினுடைய துணியையோ வெள்ளாடை எனக் கூற வேண்டும். தான் குளிப்பதைத் தண்ணீரில் விழுந்து புரளுதல் எனக் கூறும் நாயர், நம்பூதிரியின் குளியலை நீராடுதல் எனக் கூறக் கடமைப்பட்டவன். தான் உண்பதையும் குடிப்பதையும் உணவு எடுப்பதாகவோ கழுநீர் தண்ணீர் குடிப்பதாகவோ கூறும் நாயர் நம்பூதிரி அமிர்தம் பருகிவிட்டாரா எனக் கேட்கக் கடமைப்பட்டவன். தான் தூங்குவதைக் கட்டையைக் கிடத்துவதாகக் கூறும் நாயர், நம்பூதிரியின் தூக்கத்தைக் கண் மூடுதல் என்றோ ராசா ஓய்வெடுத்தல் என்றோ கூறக் கடமைப்பட்டவன்.
தன் சாவினைக் காட்டிற்குப் போய் விழுதல் எனக் கூறும் நாயர், நம்பூதிரியின் சாவினை நெருப்பில் புகுதல் என்று கூறக் கடமைப்பட்டவன். நம்பூதிரியின் முகம் மழிக்கப்படுவதாக சொல்லக் கூடாதாம். மாறாக அம்பட்டனால் அவன் மயிர் வெட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். நம்பூதிரியின் கோபத்தை ‘ஏனோ திருப்தியில்லை’ என்றுதான் கூற வேண்டும். நம்பூதிரி கோபப்படுகிறார் என்றுகூட நாயர் கூறக் கூடாது. நாயர் பல் துலக்குவது போல நம்பூதிரி பல் துலக்குவதில்லையாம். மாறாக அவன் தன் உயர்ந்த முத்துக்களைக் சுத்தம் செய்வானாம். நம்பூதிரி சிரிப்பதில்லை ; வாய் முத்துக்களைக் காட்டுவான்.14*
கடவுளின் சேவகன் என்ற போர்வையில், தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்வதன் வாயிலாக மற்றவரை தாழ்த்தும் பார்ப்பனியத்தை அப்பட்டமாக நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள் நம்பூதிரி பிராமணர்கள். நாயர் பெண்கள் வீட்டில் இருக்கும் போது மேலாடையின்றி, மெல்லிய நூலிழையினாலான வெள்ளைச் சேலை ஒன்றினை இடையில் உடுத்தி இருப்பார்கள். வீட்டிலிருந்து வெளியே வரும் போது, மார்பையும் தோளையும் மூடும்படியாக, ஒரு சேலைத்துணியை அணிந்து கொள்வர். பார்ப்பனியம் என்ற அயோக்கியத்தனத்தின் உச்சமாக, நாயர் பெண்கள் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் முன்னால் வரும்போது, தங்களின் மார்பை மறைத்திருக்கும் மேலாடையை விலக்கி விட்டு, பணிவுடன் நிற்க வேண்டும் என்ற விதியையும் சட்டமாக்கியிருக்கிறார்கள்.15*
அதாவது, நாயர் பெண்கள் வெளியே வரும்போது மார்பை மூடும் துணியை உடுத்திக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட சாதி பெண்கள் (18 சாதி மக்கள்) வெளியே வரும் போதும் மார்பை மறைக்காமல் வரவேண்டும். இதுதான் சட்டம். நாயர் பெண்களைப் போல், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் வெளியே வரும் போது, மார்பை மறைக்கும் ஆடையை உடுத்தியதற்காகத்தான் நாயர் ஆண்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மடத்தனத்தை என்னவென்று சொல்வது?
தன்னை ஒடுக்கிக் கொண்டிருக்கும் நம்பூதிரி முதலான ஆதிக்க சாதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழாமல், யாரோ ஒரு ஒடுக்கப்பட்ட பெண் ஜாக்கெட் அணிந்ததால் தன் சாதியின் அந்தஸ்து பாழ்பட்டு விட்டதே, என்று துடிக்கும் இடைநிலை சாதியினரின் இந்த உளவியலை என்னவென்று சொல்வது?
சமீபத்தில் நான் திருவிதாங்கூர் அரசர்களுக்கு எதிராகக் கட்டுரை எழுதுவதாகச் சொல்லி தோழி ஒருத்தி, என்னிடம் மிகவும் கோபித்துக் கொண்டாள். அவள் ராசாக்கமார் பரம்பரை என்பது எனக்கு அவள் என்னிடம் கோபித்துக் கொள்ளும் போதுதான் தெரியும். தன் சாதியினரைவிட, நாடார் முதலான சாதியினர் இப்போது மிகவும் நாகரீகமாகவே வாழ்கின்றனர் என்று அவள் சொன்னது பாராட்டா வருத்தமா என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. அவள் பிராமண வர்ணத்தார் மீது கொண்டுள்ள மரியாதைதான் எனக்கு இன்னும் வேடிக்கையாக இருந்தது.
பிராமண வர்ணத்தார் அனைவரும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது என் நோக்கமல்ல! எந்த வர்ணத்தாராக இருந்தாலும் வரலாற்றில் தம் முன்னோர்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இதைத் தொடர்ந்து நீசனின் கதையாக அகிலத்திரட்டு அம்மானைக் கூறும் புராணப் புரட்டு கலந்த கதையை பார்ப்போம்.
ஈசர் நீசனைப் படைத்தார். நீசனின் வரவால் உலகில் கெடுதல்கள் பல நிகழ்ந்தன. நீசன் அரசாண்டு கொண்டிருந்தான். நாடு செழிப்பாக இருந்தது. ஆனால் நீசனுக்குக் குழந்தை இல்லை. அதனால் நீசன் திருமாலிடம் தனக்குக் குழந்தை ஒன்றினைத் தரும்படி வேண்டினான். திருமால் நீசனிடம் காசிக்குச் சென்றுத் தவமிருந்தால் குழந்தை பிறக்கும் என்றார். நீசன் காசிக்குச் சென்று தவமிருந்தான். அப்போது முனி ஒருவர் தன் மனைவியுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட நீசனின் இந்திரியம் (விந்து) நீரில் விழுந்தது. அதைக் கொக்கு ஒன்று விழுங்க, கொக்குக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அவனை அகிலத்திரட்டு அம்மானை வெண்ணீசன் என்று வர்ணிக்கின்றது. புனல்ரிஷி என்ற மாமுனிவன் கொக்குக்கு பிறந்த குழந்தையை எடுத்து வளர்த்தான். கப்பல் ஏறுகின்ற தொழிலும் சுருக்குக் கப்பல் ஏறுகின்ற தொழிலும், வெள்ளி, தங்கம், முத்து போன்றவை விளைகின்ற இடங்களை கண்டறிகின்ற தொழிலையும் புனல்ரிஷி முனிவன் வெண்ணீசனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
செங்கோமட்டி என்ற நாட்டை சேர்ந்த நசுறாணி இனத்து பெண்கள் இரண்டு பேரை வெண்ணீசனுக்கு மணமுடித்து வைத்தான்.
‘செங்கோமட்டியான தேச நசுறாணிகளில்
பெண்கள் இரண்டு பேரைப் போய் மணம் முகித்து
இருத்தினான் மாமுனிவன் ஏற்ற செங்கோமட்டியில்
பருத்த வெள்ளை நீசன் பண்பாக அங்கிருக்க’
- அகிலத்திரட்டு அம்மானை 16*
மேற்சொன்ன வரிகளில், வெண்ணீசன் நசுறாணி இனத்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டு நசுறாணி மார்க்கத்தைப் பின்பற்றியதாகக் கூறுகிறது அகிலத்திரட்டு அம்மானை. நசுறாணி என்பது கேரள நாட்டு சிரியன் கிறிஸ்தவர்களைக் குறிக்கும் சொல். ஆக, வெண்ணீசன் என்பவன் சிரியன் கிறிஸ்தவப் பெண்களை மணந்து கொண்டு சிரியன் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவன் என்பது உறுதியாகிறது.
கப்பல் ஏறுகின்ற தொழிலும், முத்து, தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருள்களை உலகெங்கிலும் தேடி சேகரிக்கின்ற தொழிலும் கற்றுத் தேர்ந்தவன் வெண்ணீசன். இதை, உலகெங்கிலும், இந்தியாவிலும் உள்ள தங்கம், வெள்ளி, முத்து போன்றவற்றை தேடித்தேடி சேகரித்த ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் போன்ற வெளிநாட்டவர்களின் வரலாற்றோடு பொருத்திப் பார்க்க நினைக்கிறேன்.
எனவே வெண்ணீசன் என்றால் வெள்ளை நிறம் கொண்ட, சிரியன் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வெள்ளைக்காரனைக் குறிக்கிறது என்பது தெளிவு.
நீசன் என்னும் அந்தணனுக்கு மகனாக வெண்ணீசன் என்னும் வெள்ளைக்காரனை சித்தரிக்கிறது அகிலத்திரட்டு. ஏன்? பதில் அடுத்த கட்டுரையில்…
சான்றுகள்
9. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 318,320,327,328,329,335 & தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், T.S.கிருஷ்ணவேல், மூன்றாம் பதிப்பு: 2021, தமிழ்நூல் மன்றம் வெளியீடு, பக்கம் எண்: 51,52.
10. தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், T.S.கிருஷ்ணவேல், மூன்றாம் பதிப்பு: 2021, தமிழ்நூல் மன்றம் வெளியீடு, பக்கம் எண்: 53. & தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 319
11. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 333.
12. தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், T.S.கிருஷ்ணவேல், மூன்றாம் பதிப்பு: 2021, தமிழ்நூல் மன்றம் வெளியீடு, பக்கம் எண்: 54, 55, 56.
13. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 310.
14. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 235.
15. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 367,368.
16. அகிலத்திரட்டு அம்மானை, மூலமும் உரையும், பாகம் 1, நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு: 2006, பக்கம் எண்: 266.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.