நலம், நலம்தானே தோழமைகளே?

சுய நேசத்தின் 3 அம்சங்களான…

  1. தன்னை அப்படியே ஏற்றுக்கொள்வது
  2. எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது
  3. சுய பராமரிப்பு வழிகள் ஆகியவற்றைச் சென்ற அத்தியாயங்களில் பேசினோம். இந்த அத்தியாத்தில் மிகவும் சுவாரசியமான அம்சமான சுய பிரகடனம் (Self Talk) பற்றிப் பார்ப்போம்.

நாம் அடிக்கடி சிறிய வயதில் கேட்ட ஒரு கதையை நினைவுகூர்வோம்.

ஒரு வழிபோக்கன், ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்கு நடுவில் இருந்த காட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்தான். உச்சி வெயில், தாகம், பசி என்று களைத்தும் அலுத்தும் இருந்தான். வழியில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்ததும் சிறிது நேரம் நிழலில் அமர்ந்து களைப்பைப் போக்கினான். களைப்பு தீர்ந்ததும் பசியும் தாகமும் வாட்டியது. அவன் மிகவும் ஆசையாக இப்போது குடிக்க நீர் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினான். என்ன ஆச்சரியம் அவன் முன் வழிய வழிய நீர் நிரம்பிய குவளை தோன்றியது. முதலில் பயந்தவன் பின்னர் தாகம் உந்த நீரைக் குடித்தான். ஆஹா என் உயிரைக் காத்த அமிர்தத்திற்கு இணையான நீரைத் தந்த கடவுளுக்கு நன்றி என்றவாறே, பசிக்கு ஏதுவாக ஏதாவது உணவிருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். அவன் ஆச்சரியப்படுமளவிற்கு விதவிதமான உணவுவகைகள் தோன்றின. வயிறு நிரம்ப உண்டவன் இத்தனை தந்த கடவுளுக்கு நன்றி, அப்படியே ஒரு நல்ல கட்டில் கிடைத்தால் சுகமாகச் சிறிது தூங்கலாம் என நினைத்தான். அவன் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறே நல்ல பஞ்சணை தோன்றியது. அதில் படுத்து சுகமாகத் தூங்கினான். தூங்கி எழுந்ததும் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. தானிருப்பதோ ஒரு காடு, ஏதேனும் கொடிய மிருகம் வந்து தன்னைத் தின்றுவிட்டால் என்ன செய்வது என்று பயந்தான். என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். அவன் அமர்ந்திருந்தது கற்பக விருட்சம் என்கிற மரத்தின் கீழ். அதனடியில் அமர்ந்து என்ன ஆசைப்பட்டாலும் நடக்குமாம். அதுதான் அவனுக்கும் நடந்தது. எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்று அந்தக் கதை முடியும்.

சிறிய வயதில் என் பாட்டி அடிக்கடி சொல்வார், வானத்தில் ததாஸ்து தேவர்கள் ததாஸ்து ததாஸ்து என்று வாழ்த்திக்கொண்டே பறப்பார்கள். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள். அப்போது நீ என்ன நினைத்தாலும், பேசினாலும் அப்படியே நடக்கும். எப்போதும் நல்லதே நினைக்க, பேச வேண்டும் என்பார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் நம் எல்லோரிடமும் ஒரு பிரத்யேக கற்பக விருட்சம், ததாஸ்து தேவர்கள் உண்டு. நம் ஆசை எதுவோ அதை நிறைவேற்றும் நம் ஆழ்மனமே அந்தக் கற்பக விருட்சமும், ததாஸ்து தேவர்களும்.

அப்படியென்றால் நம் பேச்சிலும், எண்ணத்திலும் நாம் எத்தனை கவனமாக இருக்க வேண்டும்?

நாம் நிறைய நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து ரசித்திருப்போம். அந்த நேரத்தில் அது சிரிப்பை வரவழைத்தாலும், அந்தக் காட்சியை சிறிது ஆராய்ந்து பார்த்தால் அதில் ஒன்று அந்த நடிகர் தன்னைப் பற்றி நக்கலாகவோ, தன் தகுதியைக் குறைத்தோ பேசி இருப்பார் அல்லது இன்னொருவரை அப்படிப் பேசி இருப்பார்.

நாமும் மிகவும் ரசித்த அந்த டயலாக்கைப் பலமுறை நாம் பேசும் போது நகைச்சுவையாக உபயோகப்படுத்தி இருப்போம். ஆனால், நம் ஆழ்மனதிற்கு நகைச்சுவை உணர்வெல்லாம் கிடையாது. அது ஒரு ஜீபூம்பா பூதத்தைப் போல நம் ஆசையை, நம் கட்டளையை நிறைவேற்றுவதற்காக நம் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வோர் உணர்ச்சியையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருக்கும்.

இன்னொன்றைக் கவனித்துப் பார்த்தால், நாம் பார்க்கும் திரைப்படத்திலோ அல்லது படிக்கும் கதையிலோ வரும் சோகமோ, கோபமோ இயல்பாகவே நம்மைப் பாதிக்கும். நம் உணர்ச்சிகளும் அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும். ஆனால் அதே படத்தில் / கதையில் வரும் மகிழ்ச்சி நம்மிடம் முழுமையாகப் பிரதிபலிக்காது. நம் உணர்வுகளையும் பெரிதாக பாதிக்காது. ஆனால் நம் உணர்வுகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஆழ்மனமோ நாம் சோகமாக இருந்தால் மேன்மேலும் சோகம் தரும் நிகழ்வுகளை நமக்குப் பரிசளிக்கும். எந்த உணர்வில் இருக்கிறோமோ அதுதான் நம் விருப்பம் என மறுபடியும் மறுபடியும் அதையே பரிசளிக்கும். இது பரிசா என்றால், ஆம் பரிசுதான், நாம் கேட்டதுதானே கிடைத்திருக்கிறதே, பின் பரிசில்லாமல் என்ன?

மனிதனுக்கு கோபம், சோகம், விரக்தி போன்ற எல்லா எதிர்மறை உணர்வுகளும் இயல்பாக, ஆழமாக வரும். ஆனால் மகிழ்ச்சி, பரவசம், நன்றி உணர்வு போன்ற நேர்மறை உணர்வுகள் அத்தனை இயல்பாகவோ, ஆழமாகவோ வருவதில்லை. இந்த உணர்வுகளை நாம் இயல்பாகவும், ஆழமாகவும் பிரதிபலிக்கும் போது, நம் வாழ்விலும் மகிழ்ச்சி, பரவசம், நன்றி போன்ற  உணர்வை உணர வைக்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். அதாவது நம் ஆழ்மனது நமக்குப் பரிசளிக்கும்.

ஆழ்மனம் இன்னும் விரியும்…

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.