7 ஏப்ரல் 1919 / ஜூலை 15, 1919 (விக்கி) என இரண்டு பிறந்த நாள்கள் ராஜம்மாள் தேவதாசுக்கு குறிப்பிடப்படுகின்றன. அது போலவே திருவண்ணாமலை அருகே உள்ள செங்கத்தில் பிறந்தார் என்கிறது விக்கி. அவர் நிறுவிய அவினாசிலிங்கம் பல்கலைக்கழக தளமும் அதையே சொல்கிறது.

7 ஏப்ரல் 1919 தெற்கு கள்ளிகுளத்தில் ராஜம்மாள் பிறந்தார் என்கின்றன சில நூல்கள். அவரது குடும்பத்தினரும் அதையே சொல்கிறார்கள். அதனால் இதுதான் சரியான தகவலாக இருக்குமென நினைக்கிறேன். ‘எப்படி வட ஆற்காடு மாவட்டம் என வந்தது எனத் தெரியவில்லை. பலரும் தங்கள் நூலில் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்’ எனக் கேட்டதற்கு, கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்  பணியாற்றி வரும் அவரின் உறவினர் புகழ் பெற்ற பெருமாள், “அவர்கள் அப்பா திருப்பத்தூரில் ஒரு தோப்பை வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வந்தார். ஆகையால் ராஜம்மாள் தேவதாஸ் பிறந்தது வட ஆற்காடு என்று தவறுதலாகத் தெரிவித்து இருக்கலாம்”, என்கிறார். ராஜம்மாளின் அப்பா பெயரான  ‘புகழ் பெற்ற பெருமாள்’ என்கிற பெயரைத்தான் இவருக்கு வைத்திருக்கிறார்கள்.

சொர்ணம்மாள், பிறந்த வீட்டிற்குப் பேறுகாலத்திற்குக் கள்ளிகுளம் வந்திருக்க வேண்டும் என்பதே என் புரிதல். 

இந்திய சத்துணவு சொஸைட்டி அமைப்பு, born in Kallikulam in Tirunelveli District of Tamil Nadu, எனக் குறிப்பிடுகிறது.

ராஜம்மாளுடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். மூத்த மகளாகப் பிறந்ததால், அம்மாவாகவே இளமையிலிருந்து வாழ்ந்திருக்கிறார். தந்தை காட்டு இலாகா அதிகாரி. அடிக்கடி பணி மாறுதல் ஏற்பட்டதால் மகளின் கல்வி தடைப்படக் கூடாது என்பதற்காகத் திருச்சி அனைத்துப் புனிதர் பள்ளியில் (All Saints Girls Middle School in Trichy) தங்கிப் படிக்கும் விதமாகச் சேர்த்திருக்கிறார். 

ராஜம்மாள் மற்றும் அவரின் உடன்பிறந்தோர், உயர்நிலைக் கல்வியைச் சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த் விக் (Northwick Girls Higher Secondary School) பள்ளியில் படித்திருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் தந்தையார் நோய்வாய்ப்பட்டுவிட்டதால், மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதனால், தாய்மாமன் திரு. எட்வர்ட் தேவதாசுடன் திருமணம் (1935) நடைபெற்றது. அப்போது ராஜம்மாளின் வயது பதினாறு. மேற்படிப்பிற்கு அப்பாவும், கணவரும் கொடுத்த உத்தரவாதத்தால் இத்திருமணம் நிறைவேறியிருக்கிறது. 15 பெப்ரவரி 1936, தந்தையார் இறந்திருக்கிறார். தந்தையார் இறந்த சில மாதங்களில், ராஜம்மாள் பள்ளிப்படிப்பை முதல் மதிப்பெண்ணுடன் முடித்திருக்கிறார். 1939இல் மகன் மோகன் பிறந்திருக்கிறார். அப்போது திரு. தேவதாஸ் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். 

ராஜம்மாள், கணவரின் மற்றும் அம்மாவின்  உறுதுணையுடன், சென்னை ராணி மேரி கல்லூரியில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த  ‘ஹோம் சயின்ஸ்’ பாடப்பிரிவில் சேர்ந்து படித்து 1944 ஆம் ஆண்டில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். இதனால், ‘சென்னைப் (மதராஸ்) பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயின்ஸ் பட்டதாரி’ என்ற சிறப்பைப் பெறுகிறார். பின் அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அது விடுதலைப் போராட்டக் காலம். ராஜம்மாள், காந்தியைப் பின்பற்றிக் கதராடை அணியத் தொடங்கியிருக்கிறார். இறுதிவரை எளிமையான கதர் ஆடைகளை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

பின் அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் (Ohio State University) மனையியல் படித்திருக்கிறார். உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் (Food and Nutrition) எம்.எஸ்.சி மற்றும் மனையியலில் (Home Science Education) (எம்.ஏ) பட்டங்கள் பெற்றார். ஊட்டச்சத்து மற்றும் உயிர் வேதியியல் (Nutrition & Bio-Chemistry) துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதனால் மனையில் துறையில் முனைவர் பட்டம் பெற்ற (1950ஆம் ஆண்டு) முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் பெறுகிறார். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் பணி கிடைத்திருக்கிறது. 

1946 முதல் 1949 வரை சென்னை மாகாண கல்வி அமைச்சராகப் பணியாற்றிய ஐயா அவினாசிலிங்கம், தனது பெயரில் ஒரு  மனையியல் கல்லூரியை 1957ஆம் ஆண்டு தொடங்கினார். ராஜம்மாள், மத்திய அரசின் பணியிலிருந்து விலகி கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார். அது பிற்காலத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு உயர்ந்தது. அதன் துணை வேந்தர், வேந்தர் என இவரும் உயர்ந்திருக்கிறார். இவரே இந்தியாவின் முதல் பல்கலைக்கழகப் பெண் வேந்தர்.  இறக்கும் வரை அதன் நிர்வாக அறங்காவலராகவும் இருந்திருக்கிறார்.  அவரை அனைவரும் ‘அம்மா’ என்றே அங்கு அழைப்பார்கள்.

உலக உணவு மாநாட்டின் (World Food Conference) துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். 1987 முதல் 1991 வரை இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவராக இருந்த அவர், பத்ம ஸ்ரீ உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பல முனைவர் பட்டங்கள் அவரைத் தேடி வந்துள்ளன. மனையியல் கல்விக்கான பாடநூல் முதற்கொண்டு பல நூல்களை, கட்டுரைகளை எழுதிக் குவித்திருக்கிறார். அவினாசிலிங்கம் அவர்கள் குறித்தும் நூல் எழுதியுள்ளார். 

இவைபோக, பள்ளி நிறுவுவது, அதில் சமச்சீர் உணவு வழங்குவது போன்ற பல செயல்களையும் இணைந்தே செய்துள்ளார். அதற்காகப் பல ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சி தான் மதிய உணவுத் திட்டம், எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டமாக உருப்பெற்றிருக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கருவுற்ற தாய்மார்களுக்கும், சமச்சீரான சத்துணவு வழங்கப்படுவதன் தொடக்கப்புள்ளியாக அவர் இருந்திருக்கிறார். எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினராக ‘அம்மா’ ஜெயலலிதா இருந்ததால், இருவருக்கிடையில் சிறந்த நட்பு இறுதிவரை இருந்திருக்கிறது. 

மக்களுக்காக உழைத்த ராஜம்மாள், தமது 83ஆம் வயதில் மார்ச் 17, 2002 அன்று ஆஸ்திரேலியா சிட்னியில் தன் மகன் இல்லத்தில் காலமானார். அவரது உடலை இந்தியா கொண்டு வந்து செங்கம் ஊரில் தான் கணவர் மற்றும் அம்மா அருகில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.

கல்வியின் ஊற்று என்ற சொர்ணம்மாள் குறித்த கட்டுரையைப் படித்த ஆதவன் வெ என்பவர், “திரு பாக்யநாதன் வனத்துறை அலுவலராக பணிபுரிந்த போது எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டில்தான் குடியிருந்தார். அவர்களுடன் இருந்த நாட்களை அப்பா வெங்கடாசலம், அப்பாவினுடைய சகோதரி ஊத்தாம்பாள் அவ்வப்போது நினைவு கூறுவார்கள். அவர்கள் சொன்ன சின்னச் சின்ன நிகழ்வுகள் எல்லாம் இந்தக் கட்டுரை படிக்கும் போது நினைவிற்கு வந்தது. ராஜம்மாள் தேவதாஸ் அவர்களை அடக்கம் செய்யும்போது அப்பாவுடன் சென்று அஞ்சலி செலுத்தியது நினைவிற்கு வருகிறது. எங்கள் தாய் தந்தையரைப் போன்றே இன்றும் நினைவில் வைத்து வணங்குகின்றேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ராஜம்மாள் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் விருது வழங்கி வருகிறது. 

ராஜம்மாள் தேவதாஸ் அவர்களின் மகன் மருத்துவர் மோகன், தனது மூத்த மாமா ராஜதுரை மைக்கிளின் மூத்த பெண்ணைத் திருமணம் செய்தார். அவர் 2019ஆம் ஆண்டு இறந்து, பெற்றோர் அருகில் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.

இன்றுகூட ஒரு பெண் வெளிநாட்டிற்குச் சென்று, அதுவும் குழந்தை பிறந்தபின் சென்று படிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. குழந்தை என்பது மாபெரும் பொறுப்பு. அதைத் தான் ஏற்றுக் கொண்டு, அம்மாவை வெளிநாடு அனுப்பிவைத்த கணவர் மற்றும் உறவினர்கள் குறித்து நினைத்துப் பார்த்தால் மலைப்பாகவே இருக்கிறது. இப்போது விமானத்தில் ஒரு நாள் பயணம் என்பதே எங்களுக்கெல்லாம் மலைப்பாக உள்ளது. இந்தியாவில் சுங்க அதிகாரி. “Have a nice journey” எனச் சொன்னால் உள்ளத்திற்குள் ‘நைஸாம் நைஸ். எங்கள் சிரமம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’ எனத் தோன்றும். அப்போது  கப்பலில்தான் மாதக்கணக்கில் சென்றிருக்க வேண்டும். ‘உலகம் சுற்றும் தமிழன்’ நூல் 1940களின் தொடக்கத்தில் ஏ.கே. செட்டியார் செய்த பயணத்தில் இவ்வாறான கப்பல் பயணம், அதில் உள்ள சிரமங்கள்  குறித்துச் சொல்கிறார். 40களின் பிற்பகுதியில் அம்மா சென்றிருக்கிறார். பெண்கள் இவ்வாறு பயணப்படுவது என்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல.

பண்பாடு, உணவுப் பழக்கம் என அனைத்தும் புதிது. இப்பொழுது நமது உணவுப் பொருள்கள் அமெரிக்காவில் பரவலாகக் கிடைக்கின்றன. ஆனாலும் பல சிரமங்கள் உள்ளதாக நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். அப்போதெல்லாம் எந்த வாய்ப்பும் இருந்திருக்காது. தொலைப்பேசி வசதி பெரிதாக கிடையாது. கடிதப் போக்குவரத்துகூட இந்த அளவிற்கு இருக்காது.  மகனைப் பிரிந்து இவ்வாறு ஒரு அம்மா வாழ்ந்ததெல்லாம் தவம்தான். 

சிறுவன் மோகனை வளர்ப்பதில் அம்மா, கணவருடன் இணைந்து, சகோதரிகளும் உதவியிருக்கிறார்கள். முன்பு, இவர் சகோதரிகளுக்கு அம்மாவாக  வாழ்ந்திருக்கிறார். பிற்காலத்தில் சகோதரிகள் மகனுக்கு அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்கள் குடும்பத்தின் கட்டமைப்பின் சிறப்பை உணர்த்துகிறது. அதுதான் கல்வி என்னும் சிறகை விரித்து கடல் தாண்டிச் செல்ல வைத்திருக்கிறது. இன்றும் அந்தக் கட்டமைப்பு அவர்களின் வழித்தோன்றல்களிடம் இருப்பது வியப்புதான். 

ராஜம்மாள் தேவதாஸ் அவர்களின் புகைப்படத்தை அவர் பிறந்த ஊரில் குழந்தைகள் சத்துணவு சாப்பிடும் இடத்தில் வைக்க வேண்டாமா? ஊட்டச்சத்து மையத்தில் வைக்க வேண்டாமா? அவர் யார் எனச் சொல்லித் தந்திருக்க வேண்டாமா? தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கிவைத்த காமராஜ் பள்ளிக்கு மேற்கே சில வீடுகள் தாண்டிப் பிறந்தவர் அவர். அதைக் கடந்து போகும் பெரும்பாலானோருக்கு இவர் குறித்துத் தெரியாது. ஊர் மக்கள் இது குறித்துப் பரிசீலனை செய்யலாம். 


படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.