மலைக்கள்ளன் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பெரும் வசூலைப் பெற்ற இப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ்த் திரைப்படம். ஆறு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்) வெளியான முதல் இந்தியத் திரைப்படம்.

இந்த ‘ராபின் ஹூட்’ பாணிக் கதையை நாமக்கல் கவிஞர் எழுதி இருக்கிறார். கலைஞர் வசனம் எழுதி இருக்கிறார். அரசியலில் இருவரும் எதிர்துருவத்தில் வாழ்ந்தவர்கள். நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர். 1930இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் வேதாரணியப் போராட்டத்தை முன்னின்று நடத்தி சிறை சென்றவர். பிற்காலத்தில், ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ என்ற பதவியைப் பெற்றவர். அவர் இல்லம் அரசு சார்பில் நினைவில்லமாக்கப்  பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகக் கட்டிடத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தக்கதை ஐம்பதுகளின் முற்பகுதியில் உயர்நிலைப் பள்ளித் துணைப்பாடமாக இருந்திருக்கிறது. தமிழில் வெளிவந்த, ராபின்ஹூட் பாணித் திரைப்படங்களின் முன்னோடித் திரைப்படம் இது.  

பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் தயாரித்த 

மலைக்கள்ளன் நாமக்கல் கவிஞர் இயற்றியது 

வசனம் மு. கருணாநிதி

நடிகர்கள்

எம்.ஜி. ராமச்சந்திரன் மலைக்கள்ளன் குமாரவீரன், அப்துல் ரஹீம்

ஸ்ரீராம் வீரராஜன் 

டி.எஸ். துரைராஜ் ஏட் கருப்பையா

டி. பாலசுப்ரமணியம் சொக்கேச முதலியார் 

எம்.ஜி. சக்கரபாணி சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்

ஈ.ஆர். சகாதேவன் காத்தவராயன் 

வி.எம். ஏழுமலை சடையன் 

எஸ்.எம். திருப்பதி சாமி குட்டிப்பட்டி ஜமீன்தார் 

கே. துரைசாமி வயோதிக மலைக்கள்ளன் 

எஸ்.எம். சுப்பையா டாக்டர் 

தாமஸ் & ராயப்பன் போலீஸ் ஜவான்கள் 

கன்னையா கண்ணப்பர் 

முருகேசன் பாண்டியன் 

சௌந்தரராஜன், வெள்ளிங்கிரி, கரீம், ஆறுமுகம்- மலைக்கள்ளனின் ஆட்கள் 

நடிகைகள் 

பி. பானுமதி பூங்கோதையாக 

பி.எஸ். ஞானம் காமாட்சி அம்மாள் 

சுரபி பாலசரஸ்வதி ஜானகி 

சந்தியா சின்னி 

சாந்தா செங்கமலம் 

சாயீ அல்லி 

சுப்புலட்சுமி வள்ளி

நடனம்

சாயீ & சுப்புலட்சுமி

பூங்கோதை, அப்பா மற்றும் அத்தையிடம் வளரும் இளம்பெண். வீரராகவன், பூங்கோதையைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் கொண்டவன் என்பதால், அவனை நம்பி வந்த ஜானகியை ஏமாற்ற நினைப்பவன். 

காத்தவராயன், மலைக்கள்ளன் என இருவர் ஊரில் கொள்ளையடிப்பதாகக் காவல் நிலையத்தில் வழக்குகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்தக் காலகட்டத்தில் பூங்கோதையை காத்தவராயன் ஆள்கள் கடத்திச் செல்கிறார்கள். அவர்களிடமிருந்து மாறுவேடத்தில் வரும் எம் ஜி ஆர் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். மலைக்கு அந்தப்பக்கம் இருக்கும் தனது வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார். கயிற்றில் இரும்புக்கூடையில் அமர்ந்து செல்லும் வின்ச்சில் பயணம் செய்து மலையைக் கடக்கிறார்கள்.

அங்கு சென்றபின் தான் வயோதிக வேடத்தில் வந்த அவர்தான் மலைக்கள்ளன் எனப்  பூங்கோதைக்குத் தெரிகிறது. அவர் வாழும் இடத்தில் பெரிய அரசே உள்ளது. பள்ளி, தொழிற்சாலை என அனைத்தும் உள்ளன. இங்கேயே மலைக்கள்ளன்தான், பூங்கோதையின் அத்தை மகன் என்பதும் நமக்குத் தெரிந்து விடுகிறது.

மலைக்கள்ளன், காத்தவராயன் இருவரும் அந்தப்பகுதியில் வாழும் கொள்ளைக்காரர்கள் என அந்த ஊரில் பரவலாகச் செய்தி உள்ளது. 

பூங்கோதையைக் காவலர் தேடுகிறார்கள். மலைக்கள்ளன் பூங்கோதையைப் பாதுகாப்பாக வீடு கொண்டுவந்து சேர்க்கிறார். அதில் ஊருக்குள் வாழும் அப்துல் ரஹீம் என்பவரின் பங்கும் இருக்கிறது என்பதால், இப்போது அவர் மீதும் காவல்துறைக்குச் சந்தேகம் வருகிறது. ஒருவழியாக மலைக்கள்ளன் யார் என்பதை ரஹீம் சொல்கிறார். பெரிய மலைக்கள்ளனும், பூங்கோதை குடும்பத்திலிருந்து சென்றவர் தான். சின்ன மலைக்கள்ளன் மாமா மகன். மேலும் ஒரு அத்தையும் அங்கு இருக்கிறார்; குடும்பம் முழுவதும் இணைவதாகத் திரைப்படம் நிறைவு பெறுகிறது. ரஹீம் தான் குமர வீரன் எனச் சொல்லவும் வேண்டுமோ? 

நாமக்கல் கவிஞர் 1942 காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும்போது, சிறையிலிருந்து இந்தக் கதையை எழுதி இருக்கிறார். அதை ‘நமது வட்டாரத்திற்கு 50000 வார் பண்டுக்கு வசூல் செய்ய வேண்டும்’ என ஆர்டர். 

“என்னய்யா இது அநியாயம். எங்கோ சண்டை நடக்குது; நம்மிடம் பணம் கேட்கிறான்.” 

“அங்கே நடக்கும் சண்டை இங்கே வராமல் தடுப்பதற்காகத் தான் பணம்” என்று  உரையாடல் சொல்கிறது. இந்த காவல்நிலையம் காட்சியிலும் பின்னால் இருப்பது இங்கிலாந்து மன்னரின் படம்போலத்தான் உள்ளது.

“உலகத்தில் எல்லாவற்றிக்கும் இலக்கணம் இருக்கிறது; அவரது பிறப்பைப் பொறுத்தல்ல சிறப்பைப் பொறுத்து.” 

“தோட்டக்காரரிடம் கேட்டுகொண்டா வண்டு மலர் தேடி வரும்?” 

“கண்ணும் இமையும் கலந்து விட்டது.” 

“திருட்டுப்பயலுக்குக் குடுடா தேங்காப்பாலும் சோறும் னானாம். நல்லவனுக்குக்கு வீடு இல்லை. திருட்டுப்பயலுக்கு பங்களா வேறையா” 

இப்படிப் பல இடங்களில் கலைஞர், தனது முத்திரையைப் பதித்து இருக்கிறார்.

பாடல்கள் நாமக்கல் கவிஞர், ரா. பாலசுப்ரமணியம், (விக்கிபீடியா Ku. Ma. Balasubramaniam என்கிறது. ஆனால் திரைப்படத்தில்  ரா. பாலசுப்ரமணியம் எனத்தான் போடுகிறார்கள்). ராமையா தாஸ், மக்களன்பன் முதலானோர் எழுதியிருக்கிறார்கள். பாடல்களுக்கு, எஸ்.எம்.சுப்பையா இசை வடிவம் கொடுத்திருக்கிறார். 

நாமக்கல் கவிஞர் எழுதிய ‘தமிழன் என்றொரு இனம் உண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்’ பாடல், திரைப்படத்திற்கான எழுத்து போடும்போது வரும் ‘title song.’ 

தமிழன் என்றொரு இனம் உண்டு 

தனியே அவர்க்கொரு குணம் உண்டு 

அமிழ்தம் அவனது மொழியாகும் 

அன்பே அவனது வழியாகும்

 கலைகள் யாவினும் வல்லவனாம் 

கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

நிலைகொள் பற்பல அடையாளம் 

நின்றன இன்னும் உடையோனாம்

மானம் பெரிதென உயிர் விடுவான் 

மற்றவர்க்காக துயர்ப் படுவான்

தானம் வாங்கிடக் கூசிடுவான் 

தருவது மேலெனப் பேசிடுவான் 

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் 

சமரசம் நாட்டினில் கண்டவனாம்

நீதியும் உரிமையும் அந்நியர்க்கும் 

நிறை குறையாமல் பண்ணினவன்

தஞ்சை என். ராமையா தாஸ் அவர்கள் எழுதிய ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல்தான் எம் ஜி ஆர் அவர்களுக்குப் ‘புரட்சித்தலைவர்/ மக்கள் திலகம்’ போன்ற பட்டங்கள் கிடைப்பதற்கான பாடல்களில் முதல் பாடல் எனலாம். டி.எம். சௌந்தரராஜன் மக்கள் திலகத்திற்குப் பாடிய முதல் பாடலும் இதுதான். பிற்காலத்தில் இந்த இருவர் கூட்டணி கொடிகட்டிப் பறந்ததை நாம் அறிவோம். LKG  படத்தில் இப்பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. 

எத்தனை  காலந்தான் ஏமாற்றுவார் 

இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்.

சமயம்  பார்த்து  பல வகையிலும் 

கொள்ளை அடிக்கிறார்

பக்தனைப் போலவே 

பகல் வேஷம் காட்டி  

பாமர மக்களை வலையினில்  மாட்டி

தெருவெங்கும் பள்ளிகள்  கட்டுவோம்

கல்வி தெரியாத, பேர்களை 

இல்லாமல் செய்வோம்

கருத்தாக பல தொழில்  பயிலுவோம்

ஊரில் கஞ்சிக்கு இல்லை என்ற 

சொல்லினைப் போக்குவோம்

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்

அதில்  ஆன  கலைகளைச் 

சீராகப் பயில்வோம்.

கேளிக்கையாகவே  நாளினைப்  போக்கிட

கேள்வியும் ஞானமும் ஒன்றாகத்  திரட்டுவோம்.

பாவாடை தாவணி, தலையில் மொட்டு விரியாத பூச்சூடி என பானுமதி முதல் காட்சியிலேயே குதிரையில் வருகிறார். இப்படி அறிமுகமாகும் அவர், தனக்குப் பார்க்கும் மாப்பிள்ளைத் தனக்கும் பிடித்து இருக்க வேண்டும் என்கிறார். பல இடங்களிலும் துணிவாகப் பேசுகிறார். துணிவு, தன்னம்பிக்கை எல்லாம் பாவாடை தாவணி கட்டி இயல்பாக இருக்கும் பெண்ணிடமும் இருக்கும். குதிரையில் ஏற வேண்டுமென்றால், பாண்ட்தான் போடவேண்டும் எனக் காட்டாமல் இயல்பாக ஒரு பெண் இதையெல்லாம் செய்யலாம் எனச் சொல்வதாகவே தோன்றியது. 

அடுத்து வரும் பாடலும் நடனமும் அருமை. 

உன்னை அழைத்தது யாரோ

அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ

சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே

திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே

வட்ட வடிவ நிலாவிலே

ஒளி வந்து உலகினில் பாயுதே

அந்த அழகினை காணவே

நீ வந்து அமர்ந்திட்ட போதிலே

தலையில் வரிசையாக ரோஜாப்பூ சூடி வருகிறார். எப்போதும் தலை நிறைய பூ, பின்னலின் நடுப்பகுதியில் ஒரு பதக்கம், கீழே ஒரு குஞ்சான் என நேர்த்தியான அலங்காரத்தில்தான் வருகிறார். பல காட்சிகளில் இடதுபக்கம் மூக்குத்தி போட்டு இருக்கிறார். விதவிதமான அணிகலன்களில் குறிப்பாக விதவிதமான அட்டியல் எனப்படும், கழுத்தை ஒட்டிய அணிகலனுடன் பாவாடை தாவணியில் பவனி வருகிறார். 

வாசலில் நிற்கும் குதிரை வண்டி. குழாய் வைத்துப் புகைக்கும் வாய், சாண்ட்லியர்கள் கொண்ட பிரமாண்டமான வீட்டில் வாழும் ஒரு இஸ்லாமியராகத்தான் மக்கள் திலகத்தின் அறிமுகக் காட்சி இருக்கிறது. ‘நம்பில்க்கு நிம்பில்க்கு’த் தமிழ் பேசுகிறார். மாறுவேடம் என்பதைக் காட்ட முகத்தில் மச்சம் வேறு வைத்து இருக்கிறார். மூன்று விதமான கதாபாத்திரங்களில் வரும் அவரின் ஒப்பனை, நடிப்பு போன்றவை நன்கு மாறுபட்டு இருக்கின்றன. மச்சம்தான் வேறுபாடு என இல்லாத நடிப்பு. பிற்காலத்தில் அவரது மாறுபட்ட நடிப்பை இயக்குநர்கள் யாரும் சரியாக வாங்கவில்லை என்பது அவரது தொடக்ககாலத் திரைப்படங்கள் சொல்கின்றன. இந்தப்படத்திலும் மிகவும் நிறைவாகச் செய்து இருக்கிறார். காட்டில் புலி, கரடி சண்டை என அவரது சண்டையின் முத்திரையும் இருக்கிறது. 

வில்லுடன் ராமர், மாட்டுடன் குழலூதும் கிருஷ்ணர், அழகிய வேலைப்பாடு கொண்ட கதவுகள், திரைச்சீலை, பூந்தோட்டம் என வீடு பிரமாண்டமாகவே இருப்பதாகக் காட்டுகிறார்கள். 

வில்லனாக வரும் ஸ்ரீதர் இளம் வயது சல்மான்கான் போல இருக்கிறார்.  

மக்கள் திலகத்தின் மைல் கற்களில் இந்தத் திரைப்படம் குறிப்பிடத்தக்கத் திரைப்படம். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.