The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் தாரணி எழுதிய கட்டுரை இது.
“சீதை 14 வருசம் வனவாசம் போனாங்க… ஆனா… உங்க மும்மாயா 22 வருசம் வனவாசம் போனாங்க” என்று அம்மா சோற்றை ஊட்டியபடி கூறியதும், தாரணி அம்மா முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள். முனியம்மா என்னும் பெயரை எப்பொழுதும் மும்மாயா என்றுதான் அவள் சொல்வாள். அப்படிச் சொல்வதுதான் அவளுக்கும் பிடித்திருந்தது.
“ஏம்மா… ஆயாவுக்கு என்ன ஆச்சி..?” என்று தாரணி கேட்டதும் நிலாச்சோறோடு அவள் வேர்பிடித்து வளர்ந்த ஊரின் கதையை, தாயின் கதையைப் படையலிட்டாள் தாரணி அம்மா.
“மும்மாயாக்குத் தாம்பரத்துலதான் கல்யாணம் ஆச்சு. படிப்பு என்னவோ முதல் பாரம் வரைக்கும்தான். எந்தப் புத்தகம் கிடைச்சாலும் வரிவிடாம படிப்பாங்க. அவங்க நெத்தில செந்தூரம் எப்பவும் இருக்கும். பாகவதம், திருப்பாவை, திருவெம்பாவைனா ரொம்ப இஷ்டம். முப்பது பாசுரமும் மனப்பாடம். ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ன்னு அவங்க பாட ஆரம்பிச்சா, கேட்டுக்கிட்டே இருக்கலாம். அவ்ளோ இனிமையா பாடுவாங்க”, என்று கூறி நிறுத்தினாள் தாரணி அம்மா.
“அப்பறம் என்னதாம்மா பிரச்சன. ஆயா ஏன் வனவாசம் போனாங்கன்னு சொன்ன?”
தாரணியின் கேள்வி அவள் அம்மாவைப் பழைய நினைவுகளுக்குள் தள்ளியது. சோற்றை ஊட்டியபடிக் கூறத் தொடங்கினாள்.
“சோத்துக்குக் குறையில்லாத குடும்பம். ஆனாலும் ஒரு குறை. கல்யாணம் ஆகி அஞ்சு வருசம் ஆகியும் புள்ள ஏதும் பொறக்கல. வரிசையா அஞ்சு குழந்தைங்க வயித்துலேயே கலைஞ்சிடுச்சு… செய்யாத பூச இல்ல. கும்பிடாத சாமி இல்ல…
ஒரு நாளு அவங்க வழக்கம்போல காலையில சாமிக்கு விளக்கு ஏத்தும் போது, அப்பாவோட அம்மா ஊரான சொரத்தூரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்த சொந்தக்காரங்க ஒருத்தவங்க மேல சாமி வந்திருச்சி. அவங்க ஓங்கி ஒரு அறைவிட்டதும், ஆயாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கிப் போயிடுச்சி.
‘ஆத்தா… நீ யாரு… நான் உனக்கு என்ன குற வெச்சேன்?’னு அழுதுக்கிட்டே கேட்டிருக்காங்க.
‘நான்தான்டி பூவாத்தா வந்திருக்கேன். கல்யாணம் ஆகி என்ன வந்து பாத்தியா நீ… வா, நான் இருக்கும் உன்னுடைய புருஷனுடைய ஊருக்கு வா… உனக்குப் புத்திர பாக்கியம் கொடுக்கிறேன்’ன்னு சொல்லி மயங்கி விழுந்துட்டாங்க. ஆயா அப்பவே முடிவு செஞ்சுட்டாங்க. சொரத்தூருக்கு உடனே கிளம்பணும்.
தாத்தா அப்ப அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக இருந்தார். ஆயா நடந்ததைத் தாத்தாவிடம் சொன்னாங்க. உடனே சொரத்தூர் போகணும்னாங்க.
‘அங்க வீடுவாசல் எதுவும் இல்ல. நிலம் மட்டும்தான் இருக்கு. திடீர்னு போனா எப்படி? அதுவும் இல்லாம இப்ப மெட்ராஸ்ல போஸ்டிங். நான் எப்படி சொரத்தூர் வருவேன்’ என்று தாத்தா மறுத்தார். யாரையும் எதிர்பாக்காத மும்மாயா, தன்னுடைய முடிவில் உறுதியா இருந்தாங்க. அதுவரைக்கும் அவுங்களுக்கு பயன்பட்ட ஐந்து ஆறு பசு மாடுகளை கிடைத்த பணத்திற்கு ஒன்றும்பாதியுமாய் வித்தாங்க. தனியாகவே ஊருக்குப் புறப்பட்டாங்க.”
“தனியாகவா சொரத்தூருக்கு போனாங்க மும்மாயா..? அப்புறம் என்ன ஆச்சுமா…?” என்று தாரணி கேட்க, சங்கீதா கதையைத் தொடர்ந்தாள்.
“அங்க தாத்தாவுக்கு ஒரு நிலம் இருந்துச்சு. அது அவங்க அப்பா அவரோட அம்மாவைக் கட்டும்போது அவங்க பேர்ல வாங்குன நிலம். தாம்பரம் வரும்போது அத 300 ரூபாய்க்கு மேல்வீட்டு மணியக்காரிடம் அடமானம் போட்டுருந்தாங்க. இருபது வருசம் ஆயிட்டதால, அது மூழ்க கெடந்துச்சு.
மணியக்காரு ரொம்ப நல்லவரு. மும்மாயா போய் நின்னவுடனே எல்லாத்தையும் விசாரிச்சாரு. ‘ஒரு பொம்பளயா இருந்தும் இவ்ளோ தைரியமா வந்திருக்க. சரி கொஞ்சநாள் டைம் தரேன். அந்த இடமும் வெறும் கரம்பாதான் கிடக்கு. அதுல எனக்கு ஒரு பயனும் இல்ல. அம்மா தந்த முந்நூறு ரூவாய வாங்கிக்கிட்டு வட்டியோட தொள்ளாயிரம் ரூவா ஆகுது. இன்னும் அறுநூறு ரூவா கொடுத்துட்டுச் சீக்கிரமா மூட்டுக்க’ன்னு சொல்லிட்டார்.
பக்கத்துல ஒரு இடத்துல அஞ்சு ரூபா தர வாடகைக்குப் போனாங்க. கொட்டா போட்டாங்க. தங்க வீடு கிடச்சிடுச்சி. வருமானத்துக்கு, நிலத்த மீட்கிறதுக்கு என்னவழி? தாம்பரத்துல இட்லி சுட்டு விக்கிறத பாத்திருந்ததால ஒரு பெரிய உரல்ல மாவு அரைச்சு, இட்லி சுட்டு விற்கும் முடிவை எடுத்தாங்க. ஆனால் ஊர்ல கொஞ்சபேர்தான் இருந்தாங்க. அவங்க யாரும் இட்லிய வாங்க விரும்பல. ஆனா இட்லிய வித்தாகணும்.
பணத்த சேத்தாகணும்னு ஆயா முடிவெடுத்து, அதை ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த காலனிக்குப் போய் இட்லி விக்க ஆரம்பிச்சாங்க. காலனில இருந்தவங்க, இட்லியை வாங்கத் தொடங்கினாங்க. காசு சேர ஆரம்பிச்சது.
ஊர்ல யாரும் காலனிக்குள்ள போகவே மாட்டாங்க. சரிசமமா பழக மாட்டாங்க. அது அசிங்கம்னு நினைச்சாங்க. காலனி ஆளுங்ககிட்ட காசுகூட வாங்க மாட்டாங்களாம். ஆனா உன் ஆயா அங்கதான் போய் இட்லி வித்து பணம் சேர்த்தாங்க. அதனால ஊர்ல எல்லாரும் அவங்க எப்படிக் காலனில போய் இட்லி வித்துக் காசு வாங்கலாம்னு அவுங்களை ஒதுக்கிட்டாங்க.“
“அய்யய்யோ… அப்பறம் என்னாச்சும்மா?” தாரணி பதறியபடி கேட்டாள். அம்மா சிரித்தபடி தொடர்ந்தாள்.
“ஊர்க்காரங்க இருக்காங்க. அவங்க பாத்துப்பாங்கன்னு நெனச்சி ஊரவிட்டுத் தனியா தைரியமா வந்தவங்க. இப்ப அந்த ஊரே விலக்கி வெச்சிடுச்சி. பிரம்மந்தான் அப்படி எழுதியிருக்கணும்னு ஆயா அடிக்கடி சொல்லுவா. எதப்பத்தியும் ஆயா கவலப்படல. ஆறுமாசத்துல அறுநூறு ரூவா சேர்ந்திடுச்சி. நிலத்த மூட்டுட்டா.
தாத்தாவுக்கு மனசு கேக்கல. ஆயாவ தனியா அந்த ஊர்ல வாழ விட்டுட்டமேன்னு சொல்லித் திண்டிவனத்துக்கு வேலையை மாத்திக்கிட்டு வந்துட்டாரு. ஆனாலும் அவரால ஒரு ஒத்தாசையும் அவங்களுக்கு இல்ல. ரெண்டு நாளைக்கு ஒருமுற வருவாரு. நைட்டு தங்குவாரு. போய்டுவாரு. அவ்வளவுதான்.
நிலத்தை மீட்டதும் காலனிய சேர்ந்தவங்களே அம்மா மேல இரக்கப்பட்டு அவங்க கையில இருந்த சோளம், கம்பு, எள்ளுன்னு கொஞ்சம் தானிய விதைகள கொடுத்தாங்க. நிலத்துல மாட்டவச்சு உழ வசதி இல்லாததால, தினமும் களக்கொத்தியைக் கையில வச்சிக் கொத்திக்கொத்தி, மண்வெட்டில மண்ணக் கிளறிகிளறி, தானியத்த கொஞ்சமா வயல்ல உழுது போட்டாங்க, ஆயா.
மண்வளம் நல்லா இருந்ததால, மழையும் அளவா பெஞ்சதால சீக்கிரமாவே எல்லாம் நல்லா உசரமா காடுபோல வளர்ந்துடுச்சு. அதப்பார்த்த ஊர்க்காரங்க எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். விளைஞ்ச பயிர அறுவடை செய்ய காலனிக்காரங்களே உதவி செஞ்சாங்க. ஆனா எல்லாத்தையும் கொட்டறதுக்கு, களமடிக்கறதுக்கு இடம் இல்லாம போச்சு.”
“ஏன்… யாரும் களம் தரலயாம்மா..? ஆயா என்ன பண்ணாங்க?” தாரணி கவலையாகக் கேட்டாள்.
“ஆமா… எங்கோயிருந்து வந்த மெட்ராஸ்காரி எப்படி இங்க வந்து இப்படி வளரலாம்னு பொறாமைதான். தானியத்த காயப்போட யாரும் களத்த வாடகைக்குத் தரல. ‘சுடுகாட்லபோய் போட்டுக்க’ன்னு ஒருமாதிரி கேவலமா பேச ஆரம்பிச்சாங்க.
மும்மாயாவுக்கு வைராக்கியம் அதிகமாச்சி. நம்ம நிலத்துக்கும் பின்னாடி இருக்கிற சுடுகாட்டு நிலத்துக்கும் இடையில இருக்கிற நிலத்த களமா மாத்திப் பயன்படுத்தினாங்க. அப்புறம் ஊர்ல எல்லாரும் ஆயா கிட்டயே வேலைக்கு வர ஆரம்பிச்சாங்க. வாங்கன ஒரு பசுமாடு போட்ட எல்லா கன்னும் பொட்டதான். பாலும் பணமும் கொட்ட ஆரம்பிச்சது. அண்ணன், அக்கா, நானு மூனுபேர் பொறந்தோம். நிலம மாறிச்சி. திரும்ப எல்லாரும் மும்மாயாகிட்ட பேச ஆரம்பிச்சாங்க. அவங்க தைரியம் ஊர்க்காரங்களுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் ஒரு பிரமிப்ப கொடுத்துட்டே இருந்துச்சி” என்று மும்மாயாவின் கதையை முடித்தாள்.
“அங்கேயே இருந்திருக்கலாமே. அப்போ ஏம்மா சென்னைக்கு வந்துட்டீங்க?” என்று கேட்டாள் தாரணி.
“மும்மாயாவுக்கு அடிக்கடி வலிப்பு வரும். அது ஒரு தனிக்கத. அங்க மருத்துவ வசதி இல்ல. அதான் மறுபடியும் இங்க வந்துட்டோம். வீட்டில எப்பலாம் தாத்தாக்கும் பாட்டிக்கும் சண்டை வருதோ அப்பெல்லாம் சீதைக்கு 14 வருஷம்னான்னு ஆரம்பிச்சிடுவாங்க! உன்னோட ஆயா என்னைக்குமே அவங்க முடிவுல உறுதியா இருப்பாங்க. அந்தக் காலத்துல ஆம்பளைங்க சொல்றத மட்டும்தான் கேட்கணும்னு இல்லாம சுய புத்தியுடன் இருந்தாங்க” என கதையோடு சோற்றையும் ஊட்டி முடித்தாள்.
“ஓ… அதனாலதான் நீயும் மும்மாயா மாதிரியே இருக்கியாமா?” என்று தாரணி கூறிச் சிரிக்க, அம்மாவின் முகத்தில் பிரகாசம்.
படைப்பாளர்

ச.சு. தாரணி
வயது – 16, கிழக்குத் தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளியில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு . உடன் பிறந்தவர் ஓர் அக்கா. பெயர் அருள்மொழி.
எனக்கு ஓவியம், கதைகேட்டலில் விருப்பம் அதிகம். அம்மாக்களின் கதைகளைவிட ஆயாக்களின் கதைகள் சுவாரசியமானவை. பாட்டிக் கதைகளில் நான் தெரிந்து கொண்டது இதுதான். என் ஆயா குறித்து எழுத வேண்டும் என்பது கனவு. ஹெர் ஸ்டோரிஸ் அதற்கு வழிகாட்டியுள்ளது.
இது இவரின் முதல் முயற்சி.
அருமை வாழ்த்துகள்
வெகு இயல்பான, சுவாரஸ்யமான நடையோட்டம். தொடர்ந்து எழுத வேண்டும். மும்மாயாவின் வாயைக் கிண்டினால், கதைக்கருவிற்குப் பஞ்சமிருக்காது.
அருமையான கதை, நல்ல ஊக்கம் தரும் கதை
Superb Tharu
Good attempt
All the best dr
God bless u..
அருமை. தாரணி. முதல் முயற்சியிலேயே வென்றிருக்கிறாய். வட்டார வழக்கு நடை அழகாய் எழுதுகிறாய். வளர்க வளர்க.
(தள நிர்வாகிகளுக்கு ஒரு கேள்வி, ஏன் ஒரு கதையைக் கட்டுரை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்)