- ஒற்று எந்தெந்த சொற்களுக்கு போடவேண்டும், எங்கு போடக் கூடாது?
- எந்தெந்த என்ற சொல் பெயரெச்சமாக இருப்பின் போடக்கூடாது.
- சொற்களுக்கு என்னும் சொல்லுக்கு அடுத்து க,ச,த,ப வந்தால் ஒற்று இட வேண்டும் (சொற்களுக்குப் போட வேண்டும்).
- எங்கு என்னும் வினாச்சொல்லின் பின் க,ச,த,ப வந்தால் ஒற்று மிகும்.
- எங்குப் போடக்கூடாது.
- அங்கு, இங்கு என்னும் சொற்களையும் சேர்த்துக் கொள்க
2. கள் விகுதி எங்கு தேவையின்றி பயன்படுத்துகிறோம்?
சான்றுகள் சில தருகிறேன்.
முக்கனி (முக்கனிகள் – தவறு)
அறுசுவை
முத்தமிழ்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
மூவேந்தர்
இவைகளின் பக்கத்தில் கள் சேர்க்கக் கூடாது. அதேபோல் இரண்டு மலர்கள் என எழுதவும் கூடாது. இருமலர் என்பது சரியானது.
3. மற்றும் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தக் கூடாதா?
மற்றும் என்ற சொல்லுக்குப் பதிலாக ‘உம்’ விகுதியைப் பயன்படுத்தலாம்.
4. எங்கெங்கு அரைப்புள்ளி பயன்படுத்த வேண்டும்?
- ஒரே கருத்தைப் பல முற்றுத் தொடர்களால் கூறும்போதும்
- காரணம், விளைவு இரண்டையும் கூறும்போதும்
- இரு பொருளை ஒப்பிட்டுக் கூறும்போதும்
- ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் கூறும்போதும் அரைப்புள்ளி இட வேண்டும்.
5. “ஆயிரம் கப்பல்கள்” – என்று எழுதுவது சரியா?
- ஆயிரம் கப்பல் என எழுதினால் போதும்.
- ஆயிரம் என எண்ணடை வந்ததால் கப்பல்கள் என எழுதத் தேவையில்லை. கப்பல்கள் ஆயிரம் வந்தன என வேண்டுமானால் எழுதலாம்.
6. “அசோகர் அவர்கள்” என்று எழுதுவது சரியா?
அசோகர் என எழுதினால் போதும். அவர்கள் தேவையில்லை.
கேள்வி பதில் பகுதி – பதில்கள் தருபவர்

முனைவர் கு.சுந்தரமூர்த்தி
சென்னைப் புதுக்கல்லூரித் முதுகலைத் தமிழாய்வுத் துறையில்
உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆய்வு நெறியாளர் ஆவார்.
மிகவும் பயனுள்ள பகுதி