ஷூ லேஸை இறுகக் கட்டிக்கொண்டு, ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்று பின்னணி இசையுடன் ஓடுவதோ அல்லது ‘சிறகுகள் முளைத்து நான் போகிறேன்’ என்று வாக்கிங்கிற்குக் கிளம்பிப் போவதோ, பெரும்பாலான பெண்களுக்குத் திரையில் மட்டுமே சாத்தியம். குடும்பம், சமூகக் கட்டுப்பாடுகள் என்று அனைத்தும் சேர்ந்து, பெண்களின் காலடிகளைக் கட்டிக்கொண்டு நகரவிட மறுக்கின்றன. தனக்கான ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது என்பது எத்தனை பெண்களுக்குச் சாத்தியம்? தன் உடலுக்கும் மனதுக்கும் உரிய அக்கறை செலுத்த முயலும் பெண்கள் எதிர்கொள்வது விமர்சனமும் குற்றவுணர்வுமே.
சமையல், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, முதியோர்களைக் கவனிப்பது என தினசரி வேலைகள் நிறைந்திருக்கும் காலை வேளையில் பெண்களால் உடற்பயிற்சியை நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த வேலைகளுக்குப் பின் சோர்வடைந்து, ஓய்வெடுத்து முடிக்கும்போது, மாலைக்கான வழக்கமான வேலைகள் வரிசைகட்டி நிற்கும். இந்த வாழ்க்கை முறை, பெண்களிடத்தில் பல உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளின் படி, 15-49 வயதுள்ள பெண்களில் 41.5% பேர் அதிக உடல் எடை அல்லது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு போன்ற பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். பாலி சிஸ்டிக் ஓவரி, சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்னைகள், இந்தியப் பெண்களிடத்தில் கூடிக்கொண்டே போகின்றன. இவை அனைத்தும் வராமல் தடுப்பதற்கும், வந்தபின்னும் சுறுசுறுப்பாக தினசரி வாழ்வை எதிர்கொள்ளவும் தீர்வாக இருக்கும் உடற்பயிற்சிகளைப் பெண்களைச் செய்யவிடாமல் தடுப்பது எது?
‘ஏன் உடற்பயிற்சி செய்யவில்லை?’ என்கிற கேள்விக்குப் பெரும்பாலான பெண்களின் பதில் ‘நேரம் இல்லை’ என்பதே. நம்மிடம் எல்லாவற்றிற்கும் நேரம் உள்ளது; நாம் எதற்கு முன்னுரிமை தருகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது. நமது சமூகத்தில் பெண்களின் உடை மீது நிலவும் கட்டுப்பாடுகள் அவர்களை உடற்பயிற்சிக்கெனத் தனிப்பட்ட முறையில் உடுத்துவதைத் தடுக்கின்றன. ஜாகிங் போவதற்காக ட்ராக்ஸ் அணியும் அம்மாக்களை ஊக்குவிக்கும் சமூகமாக நாம் இன்னும் வளரவில்லை. இத்தகைய உடையுடன் தெருவில் இறங்கி நடக்கும்போது, என்னென்ன விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவருமோ என்கிற எண்ணமே பெண்களை வீட்டுக்குள் முடக்கி விடுகிறது. குடும்பத்தினரின் புரிதலும் ஊக்கமும் இருந்தால், இந்தக் கட்டுப்பாட்டைக் கடந்து பெண்கள் தங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும்.
தெருவைக் கடந்து சென்றால், பூங்காக்கள் அல்லது விளையாட்டு மைதானங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதை வித்தியாசமாகப் பார்க்கும் கண்கள் அடுத்த சவால். இந்தப் பார்வைகளுக்குப் பயந்தே பூங்காக்களுக்குச் செல்லும் பெண்களும்கூட வெறும் வாக்கிங்குடன் நிறுத்திக் கொள்கின்றனர். பெண்கள் பொது பூங்காக்களில் சுதந்திரமாக உடற்பயிற்சி செய்யும் சூழலைத் தரும் சமூகமாக நாம் வளர்ச்சியடையும் போதுதான் நம்மை நாகரிகமான சமூகம் என்று கூறிக்கொள்ள முடியும்.
பெண்கள் எதிர்கொள்ளும் அடுத்த சவால், உடற்பயிற்சிக்கென சரியான ஷூ வாங்குவதற்காகக்கூடப் பிறரது ஆதரவை வேண்டி நிற்கும் நிலை. ஜிம், யோகா வகுப்புகளுக்கான கட்டணச் செலவு குடும்பங்களில் தேவையற்ற ஒரு சுமையாகவேக் கருதப்படுகிறது. பொருளாதாரச் சுயச் சார்புடைய பெண்களுக்கு இந்த நிலை இல்லை என்றாலும், எதற்கு முன்னுரிமை தருவது என்று வரும்போது பெண்களின் உடற்பயிற்சிக்கான செலவு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் அமைச்சகம் 2020இல் வெளியிட்ட ஆய்வொன்றில், 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியப் பெண்களில் 29% மட்டுமே உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள், ஆனால் ஆண்கள் 51% என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தனை தடைகளைக் கடந்து உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கும் பெண்களுக்கு, “குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது கூர்மாசன உத்காடாசனம்; அது முதுகெலும்புக்கு நல்லது”, “முறுக்கிப் பிழிந்து துணி துவைப்பது த்வதராஸனமாகும்; இது கை நரம்புகளுக்குப் பயனுள்ளது”, “குடத்தை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு நடப்பது தாதஷ்ணா பாஷ்ம பங்கி; இது இடுப்புக்கு நல்லது” என்று பாபா பட வசனத்தைப் போல, வாயில் வந்ததை அடித்து விடுவது அல்லது வாட்ஸப் ஃபார்வேர்டுகள் அனுப்புவது போன்ற சில்மிஷங்கள் ஆண் ஆதிக்கத்தின் நவீனக் கூறுகள். ஏன் இத்தனை பலன்களைத் தரும் அத்தனை யோகாசனங்களையும் ஆண்கள் செய்வதில்லை?
குடும்பப் பராமரிப்பு வேலைகள் அனைத்தும் பெண்களின் உடல்நலனுக்கு நல்லது என்றால், கடந்த தலைமுறையில் வீட்டு வேலைகளுக்குத் தங்கள் உடலுழைப்பை அதிகமாகக் கொடுத்த பெண்கள், இன்று சிறந்த உடல்நலத்துடன் இருக்க வேண்டுமல்லவா? ஆனால், இப்போது அறுபது வயதிற்கு மேற்பட்டப் பெண்களைப் பாருங்கள்; அவர்களால் காலை மடக்கி தரையில் உட்கார முடியவில்லை, படி ஏற முடியவில்லை. பெரும்பாலும் உடல்நலக் குறைபாடுகளும் வலிகளும்தான் அவர்களின் வாழ்க்கையை நிறைத்துள்ளன.
உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் நன்மை தருவது. இது பணிச்சுமை, மன அழுத்தம், சோர்வு போன்ற உணர்ச்சி அடிப்படையிலான சிக்கல்களில் இருந்து பெண்களை விடுவித்து, மன உறுதியையும், மன நிம்மதியையும் தரக்கூடியது. பெண்கள் தங்கள் நாள் முழுவதும் சந்திக்கும் பல்வேறு மன அழுத்தங்களைச் சமாளிக்க, உடற்பயிற்சி ஒர் இயற்கையான, எதிர்வினையற்ற தீர்வாக அமைகிறது. பெண்களின் சீரான மனநலத்திற்கான முதல் படி தொடர்ச்சியான உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி மட்டுமே. நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களின் மெனோபாஸ் பிரச்னைகளுக்கு, சீரான உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றையே மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
பெரு நிறுவனங்கள், பெண்களின் உடல் மற்றும் மனநலத்தை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உடற்பயிற்சி செலவுகளுக்கான தொகையை ஏற்றுக்கொள்ளுதல், (fitness reimbursements), வெல்னஸ் பிரேக் எனப்படும் உடல்நலம் சார்ந்த சிறு இடைவேளைகள், நடைப்பயிற்சி கூட்டங்கள் (walking meetings) போன்றவற்றைத் திட்டமிடலாம். இத்தகைய முயற்சிகள் வேலைகளுக்கிடையே பெண்களின் மனநிலையைச் சமநிலையில் வைத்திருக்க உதவும்.
நம்மிடம் எத்தனையோ வாட்ஸப் குழுக்கள் உள்ளன, உடற்பயிற்சிக்கென்று ஆர்வமுள்ளவர்கள் இணைந்து வாட்ஸப் குழுக்களை உருவாக்கி, தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்யலாம். குடும்பத்தினரின் ஆதரவுடன், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்கினால், பெண்களின் உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். ஆரம்பத்தில் இவை எல்லாம் சாதாரண மாற்றங்கள் போலத் தோன்றினாலும், தொடர்ச்சியாகச் செய்யும் பழக்கம் உருவாகும் போது, அதனால் ஏற்படும் நன்மைகள் மிகப் அதிகமானது.
பெண்கள் தங்கள் உடல் மற்றும் மனநலத்துக்காக சிறிது நேரம் ஒதுக்க விரும்பும் போது, அதற்காகக் குடும்பத்தினரின் புரிதலும், ஒத்துழைப்பும் மிகவும் தேவையானது. ’இது என்னுடைய நேரம்’ என்பதைக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டும். குடும்பமும் பெண்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை மதிக்க வேண்டும். கணவர், பிள்ளைகள் என அனைவரும் அந்த நேரத்தில் அவர்களுக்கு வேறு பொறுப்புகளை வழங்காமல், முழு ஆதரவுடன் இருக்கும்போது பெண்களும் குற்றவுணர்வில்லாமல், மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சியில் ஈடுபட முடியும். தங்களுக்காக எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு நேரம், அவர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஒரு பெரிய முதலீடு என்பதைக் குடும்பமே உணர வேண்டும்.
’என்ன சொன்னாலும் எரிந்து விழுகிறார்கள்’ என்று அம்மாவைப் பற்றி புகார் கூறும் பிள்ளைகளும், ’மனைவியுடன் அமைதியாகப் பேச முடியவில்லை, எதற்கெடுத்தாலும் எடக்கு மடக்கு’ என்று குறை கூறும் கணவர்களும், முதலில் செய்ய வேண்டியது; உங்கள் வீட்டுப் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்யும் நேரத்தை வழங்கி, அதற்காக அவர்களை ஊக்குவிப்பதே.
தன்னை நேசிக்க அரை மணிநேரம் எடுத்துக்கொள்வது சுயநலமல்ல; அது சுய மரியாதை. பெண்கள் தங்கள் உடலையும் மனதையும் பராமரிக்க இடமளிக்கும் சமூகமாக நாம் வளர வேண்டும். ஆரோக்கியமான சமூகத்திற்கு, ஆரோக்கியமான பெண்கள் தேவை என்பதைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு பெண்ணும் தன்னையே முக்கியமாக எண்ணி, நாள்தோறும் சிறிதளவு நேரம் உடற்பயிற்சிக்கென ஒதுக்க ஆரம்பிக்க வேண்டும். இன்றிலிருந்து நடக்க ஆரம்பித்தால், நாளை ஓடிக்கொண்டே இருக்க முடியும்.
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.