ஜூலை மாதம் முதல் வாரத்தில் கல்லூரி திறந்தது. தேதி நினைவில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அவர் எனக்கு கருப்பு வண்ணத்தில் சூட்கேஸ் கொண்டு வந்திருந்தார். பெரும்பாலும் அப்போது தகரப் பெட்டிதான். ஒரு சிலரே சூட்கேஸ் வைத்திருந்தனர்.

எனது தோழி சாந்தவும் இந்தக் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அவள் எக்கனாமிக்ஸ் குரூப். நான் மேத்ஸ் குரூப். அவள் அப்பாவும் மலேசியாவில் இருந்தார். எனவே நான், எனது அம்மா, எனது அப்பா, சாந்தா, சாந்தாவின் அம்மா என ஐந்து பேரும்  கிளம்பிச் சென்றோம். அந்தக் காலத்தில் போக்குவரவு மிகுந்து சிரமமான விஷயம். ஒரு சில பேருந்துதான் உண்டு. எங்கள் ஊரில் இருந்து (கள்ளிகுளம்) வள்ளியூருக்குப் பேருந்து, அதன்பின் திருநெல்வேலி; திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி சென்று சேர்ந்தோம்.

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா வண்டிகளும் இருக்குமாம். ஆனால் நாங்கள் போன மாலை நேரத்தில் ஒரு சைக்கிள் ரிக்ஷா கூட இல்லை. மறுநாள் கல்லூரி திறப்பதால், சைக்கிள் ரிக்ஷாக்கள் பிஸியாக இருந்தன. வேறு வழியின்றி குதிரை வண்டியிலேயே செல்ல வேண்டியதாயிற்று. முதல் முறையாக குதிரை வண்டியில் செல்வது வித்தியாசமான அனுபவமாக இருந்தது (பழைய ஞாபகத்திற்காக நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் கோவில் வாசலில் இருந்து பேருந்து நிலையத்திற்கு குதிரை வண்டியில் நானும் என் கணவரும் சென்றோம்). அப்போது குதிரை வண்டி வாடகை இரண்டு ரூபாய்தான்; சைக்கிள் ரிக்ஷா மூன்று ரூபாய்.

அன்று பியுசி மாணவிகளுக்கு சேர்க்கை என்பதால் கல்லூரி வாசல் திறந்து இருந்தது. கல்லூரி மரம் செடி கொடிகளுடன் மிகவும் அழகாக இருந்தது.     

அவசரமாக விடுதிக்குச் செல்லும் மனப்பான்மையில் இருந்ததால் சரியாகக்  கவனிக்க இயலவில்லை. பெற்றோர் கல்லூரி அலுவலகம் வரையே அனுமதிக்கப்பட்டனர். எனது தந்தை வந்து சேர்க்கைக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாம் கட்டி இருந்தார்கள். இன்று ஏதோ சிறு கட்டணம் கட்டவேண்டியதிருந்தது. எனக்கு எப்போதும் கணக்கு எழுதும் வழக்கம் உண்டு. எனவே எனது டயரியில் கட்டணம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பியூசிக்கான சேர்க்கை மற்றும் விடுதிக் கட்டணம் – ரூ. 226
எங்கள் மூவருக்கும் போக்குவரத்து – ரூ. 40

நோட்டு மற்றும் புத்தகம் – ரூ. 72
ஜூலை (மூன்றுவாரச் செலவு) – ரூ. 78
ஆகஸ்ட் மாத செலவு – ரூ. 89

இப்படி எல்லா மாதச் செலவுகளும் குறித்துள்ளேன்.
பொதுவாக உணவுக் கட்டணம் 75 ரூபாய் வரும் (அப்போது ஹோட்டல் சாப்பாடு ஒரு ரூபாய் தான்). செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிறுவனக் கட்டணம் (establishment fees) – 40 ரூபாய் (ஒவ்வொரு தவணைக்கும்) தேர்வுக் கட்டணம் – 6 ரூபாய், பாடங்கள் – ரூ. 35; இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.

இரண்டு விடுதிகள் உண்டு. ஒன்று கத்தோலிக்கர் அல்லாத மாணவிகளுக்கு எத்தல் ஹார்வி ஹாஸ்டல். ஆனால் ஓல்ட் ஹாஸ்டல் என்றுதான் அழைத்தோம். எத்தல் ப்ரௌனி ஹார்வி(கணவர் பெயர்) 1907-லேயே மைக்ரோ பையாலஜி லேபில் (M B L) நுழைந்து சிறந்த சாதனை படைத்த- முக்கியமாகக் கடல் குச்சிகள் எனப்படும் மூரையைப் பற்றி ஆராய்ந்த- அமெரிக்கப் பெண்மணி.

https://sicb.burkclients.com/wp/?page_id=1101

கத்தோலிக்க மாணவிகளுக்கு நியூ ஹாஸ்டல். ஏனென்றால் கத்தோலிக்க மாணவிகள் தினமும் காலை ஐந்து முப்பது மணிக்கு எழும்பி ஜெபம் மற்றும் திருப்பலியில் கண்டிப்பாகக் கலந்து கொள்ளவேண்டும். மேலும் இந்த விடுதி சற்று சிறியது. சாமான் ளை விடுதி வரவேற்பறையில் வைத்து விட்டுக் காத்திருந்தோம். தரைத்தளம் முழுவதும் டிகிரி மாணவிகளுக்கு; முதல்  தளம் முழுவதும் பி யு சி மாணவிகளுக்கு. எனக்கு நான்காம் எண் அறையும் என் தோழிக்கு மூன்றாம் எண் அறையும் ஒதுக்கப்பட்டது (ஒரே ஊரைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே அறையை ஒதுக்கமாட்டார்கள்). 

அறை நல்ல காற்றோட்டத்துடன் விசாலமாக இருந்தது. ஆனால் ஐந்து பேருக்கு கொஞ்சம் நெருக்கடிதான். இரண்டு ஜன்னல்கள் வெளிப் பக்கமாகவும், ஒரு ஜன்னல் வராண்டா பக்கமாகவும் இருந்தன. ஏற்கனவே இரண்டு பேருக்கு அந்த அறை ஒதுக்கப்பட்டிருந்தது.  அவர்கள் வெளி ஜன்னல் ஓரம் இருந்த நார்க் கட்டில்களைப் பிடித்துக் கொண்டார்கள். நான் வராண்டா ஜன்னல் ஓரம் இருந்த கட்டிலைப் பிடித்துக் கொண்டேன். எனது கட்டில் அருகே ஜன்னலுக்கு கீழே இரண்டு தட்டுகள் வைத்த மூடி போடாத அலமாரி இருந்தது. ஒரு தட்டு கட்டிலின் மேலும், ஒரு தட்டு கட்டிலின் கீழுமாக இருந்தன. மேலும் அறையில் நான்கு தட்டுகள் கொண்ட மூடி போட்ட அலமாரி  ஒன்றும் இருந்தது. சூட்கேஸ், கூடை, ஏர்பேக், கைப்பை  என எல்லாவற்றையும் கட்டிலின் கீழ் வைத்துக் கொண்டேன்.

அதன்பின் சற்று நேரத்தில் இருவர் எனது அறைக்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் எனது உயிர்த் தோழிகளாக கடைசிவரை இருப்பார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது. வீட்டைப் பிரிந்து வந்ததாலும், புதுச் சூழ்நிலை என்பதாலும் சட்டென்று பேச முடியாமல் ஏதோ ஒரு மௌனம் எங்களுக்குள் இருந்தது.

எனக்கு இரவு உணவு அம்மா கொடுத்து விட்டிருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை; நான் விடுதிக்குச் செல்கிறேன் என்று வீட்டில் அன்று உளுந்தஞ் சோறு – மட்டன் குழம்பு அதையே இரவுக்கும் கொடுத்து விட்டிருந்தார்கள். நான் அதைச் சாப்பிட்டேன். மற்றவர்கள் ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட்டு இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பெயரும் ஊரும் தெரிந்து கொண்டோம்; அவ்வளவுதான். விடுதியில் முதல் நாள் இரவு தூக்கமும் விழிப்புமாகக் கழிந்தது. அனைவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். 

தொடரும்…

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.