நீதிமன்றக் காட்சிகள் அடங்கிய கதைகள் சிலவற்றின் பலம், இரண்டு நியாயங்களுக்கு இடையே இருக்கும் கிரே ஏரியாவாக இருக்கும். மிஸஸ். சாட்டர்ஜி வெர்ஸஸ் நார்வே படமும் அப்படித்தான். இந்திய பாணி குழந்தை வளர்ப்பு முறைக்கும் வெளிநாட்டுச் சட்டங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை.
2011ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்ட கதை இது. நார்வே, ஸ்டாவேன்ஜரில் தன் கணவருடன் வசித்த கொல்கத்தா பெண்ணான சகாரிகா சக்ரபர்த்தியின் குழந்தையை நார்வே குழந்தை நல அமைப்பு எடுத்துச் சென்றுவிட்டது. தன் குழந்தையை மீட்க சகாரிகா நடத்திய சட்டப்போராட்டம்தான் படத்தின் கதை. சட்ட விதிகள் அவருக்குச் சாதகமாக இல்லாதபோதும் இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடி, மீடியாவின் பார்வையைப் பெற்று சமரச முடிவுக்கு வருகிறார். அதோடு முடிந்துபோகாமல் இந்தியாவிலும் வழக்கு தொடர்கிறது. தாய்ப்பாசம் முடிவில் வெல்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ராணி முகர்ஜி தன் கெரியரில் பெருமைப்படக் கூடிய நடிப்பைக் கொடுத்த படமாக இது இருக்கிறது. அழுது அடம்பிடிக்கும் குழந்தையை நாலு சாத்து சாத்தி, “மூச்… வாயிலிருந்து சத்தம் வரக்கூடாது. அமைதியா உக்காரு” என்று அந்தக் காலத்தில் நம் பெற்றோர் மிரட்டுவார்களில்லையா. அது மாதிரி புளிய விளார் ஒன்றை ஒடித்து எடுத்துக்கொண்டு திரைக்குள்ளே குதித்து ராணி முகர்ஜியை அடிக்கத் தூண்டும் அளவுக்கான நடிப்பு. மொத்த படத்தையும் அவரே தாங்கிப்பிடிக்கிறார்.
குழந்தைக்குக் கையால் சாப்பாடு ஊட்டுகிறார். இரவில் தனியறையில் படுக்கவைக்காமல் தன்னுடனே படுக்க வைத்துக்கொள்கிறார். இவை போன்ற இந்திய கலாசார பழக்கங்கள் குழந்தையைப் பறித்துச் செல்லக் காரணம் என தாயின் தரப்பில் கூறப்படுகிறது. நார்வே பல இன, மத, நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் நாடு. இங்கே இந்தியரல்லாத மக்களும் கூட ஊட்டிவிட்டு, பக்கத்தில் படுக்கவைக்கும் வழக்கம் கொண்டுள்ளனர் என்கிறது நார்வே. குழந்தைகளின் உரிமை மதிக்கப்டவில்லை என்றாலோ, அடித்தோ திட்டியோ துன்புறுத்தினாலோ, உணவளித்துப் பராமரிக்காமல், வாழத் தகுதியில்லாத இடத்தில் இருந்தாலோ மட்டும்தான் நாங்கள் நடடிக்கை எடுப்போம் என்கிறார்கள் நார்வே குழந்தைகள் நல அமைப்பினர்.
இந்தத் திரைப்படத்தில் காட்டுவது போல உண்மையிலே நடந்திருக்குமானால் தாயின் மீது தவறிருக்கவே வாய்ப்புகள் அதிகம். அரசு அநியாயமாக குழந்தையை எடுத்துச் சென்றதாகவே வைத்துக் கொண்டாலும் சட்டப்படிதான் நியாயம் பெற முடியும். ஆனால் பின்விளைவுகளை யோசிக்காமல், யாராலும் கட்டுப்படுத்த இயலாதபடி மீண்டும் மீண்டும் சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கி குழந்தையை மீட்க முயல்கிறார் தாய். புடிச்சி ஜெயிலில் போடாமல் போக விட்டதே நார்வே அரசின் பெருந்தன்மை என்கிற அளவுக்கு இருக்கின்றன தாயின் செயல்கள்.
நார்வே குழந்தைகள் நல அமைப்பு, பெற்றோரிடம் குழந்தைகளைப் பிடுங்கி விற்பனை செய்கிறது என்கிற குற்றச்சாட்டை வைக்கிறது திரைப்படம். இதை உறுதிசெய்யும் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால் நியாயமற்ற முறையில் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன என்பதை பிபிசி போன்ற பல செய்தி நிறுவனங்களின் கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் உச்சமாக, குழந்தைகளைப் பிரிக்கக் காரணமாக இருக்கும் சைக்யாட்ரிஸ்ட் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சுமார் ஈராண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லட்சக்கணக்கான வீடியோக்களிலும் ஆயிரக்கணக்கான படங்களிலும் குழந்தைகள் பாலியல் வன்முறை, பாலுறவுப் படங்கள் இருந்ததே காரணம். இப்படிப்பட்டவரின் அறிவுறுத்தலின்படியே சுமார் 75 குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நார்வே குழந்தை நல அமைப்பு இவரைப் பற்றிக் கருத்து சொல்ல மறுக்கிறது.
ஒரு குற்றவாளி வேலை செய்தார் என்பதற்காக ஒட்டு மொத்த அமைப்பையே குறை கூற முடியாதுதான். ஆனால், இந்தியத் தாயான சகரிகா மட்டுமன்றி ஏகப்பட்ட பெற்றோர் நார்வே அரசுக்கு எதிராக ஆண்டுக்கணக்கில் சட்டப்போராட்டம் நடத்துகின்றனர். எனவே, நார்வே குழந்தைகள் அமைப்பில் முறைகேடுகள் நடக்கின்றன என்பது உண்மைதான்.
ஐநா மதிப்பீட்டின்படி குழந்தைகள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நாடுகளில் பட்டியலில் நார்வேயும் ஒன்று. ஆசிய நாடுகளில் ஐம்பது வயதைக் கடந்தாலும் பெற்றோருக்குப் பிள்ளைதான் என்று சொல்லி, உரிமையைப் பறிக்க அஞ்சுவதே இல்லை. குழந்தைகளுக்கு உரிமைகள் உள்ளன என்று ஒப்புக்கொள்வதே சில நாடுகள்தாம். அதிலும் நார்வே போன்ற மிகச் சில நாடுகளே குழந்தைகளின் உரிமைகளைத் தங்கள் நாட்டுச் சட்டத்தில் சேர்த்திருக்கின்றன.

தனி மனிதராக இயங்கக் கற்றுக்கொடுக்காமலே குழந்தையை வளர்க்கும் இந்திய வளர்ப்புமுறையை பண்பாடு எனச் சொல்லி நியாயப்படுத்தவே முடியாது. அந்தத் தவறு, குழந்தையைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பதன் மூலம் சரி செய்யக்கூடியதல்ல. நார்வே ஒப்புக்கொள்ளும் குழந்தைகள் நலச் சட்டமும் குழந்தையின் விருப்பத்தை உரிமை என்றே சொல்கிறது.
திரைப்படத்தில் வருவதுபோலவே இதன் ஊற்றுக்கண், குழந்தை வளர்ப்பை பெண்ணின் கடமையாக மட்டுமே கருதும் போக்குதான். ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவை என்பார்கள். மொத்தமாக அந்த எல்லா வேலையும் அம்மாவின் தலையில் கட்டிவிட்டு அதை ரொமான்டிசைஸ் செய்கிறோம். இந்திய அம்மாக்கள் மட்டுமின்றி ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதுவே நிலை.
ஆண்கள் குடும்பப் பொறுப்புகளில் பங்கெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டே பெண்கள் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். கெடுவாய்ப்பாகக் குடும்பம், பொருளாதாரம் என இரட்டைச் சுமையை பெண்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகிவிட்டது. அலுவலகப் பணிச்சுமையினால் சில நாள்களில் சமைக்காமலோ, துணி துவைக்காமலோ விட்டுவிடுவதுபோல குழந்தையைப் பராமரிக்கால் விடவே முடியாது. குழந்தை பிறந்தால் மூன்று விதமான வேலைகளைச் சமாளிக்க வேண்டும் அல்லது தன் பொருளாதார உரிமையை விட்டுக்கொடுத்து வேலைக்குச் செல்வதை நிறுத்தவேண்டும். பெரும்பாலான ஆசிய நாடுகளில் இதுதான் பெண்களின் நிலை. போன தலைமுறை வரைக்கும்.
நானும் பணம் சம்பாதிக்கிறேன், நீயும் வீட்டு வேலை செய், குழந்தை வளர்ப்பில் பங்கெடு என்கிற உத்தி கைகொடுக்காததை உணர்ந்த பெண்கள் மொத்தமாக கல்யாணம், குழந்தை என்பதையே கைவிடுகிறார்கள். வேலையையும் பொருளாதார உரிமையும் தன் கனவையும் விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள். பெண்களின் கனவு கல்யாணமும் குடும்பமும் என்பதை மாற்றி எழுதுகிறார்கள். தொழிலதிபர், பெருநிறுவனங்களின் உயர் அதிகாரி போன்ற பொருளாதார இலக்கு மட்டுமின்றி, கொஞ்சமாகப் பணம் சம்பாதித்து உலகைச் சுற்றிப் பயணம் செய்வது போன்ற வழக்கத்துக்கு மாறான எல்லா கனவுகளையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
சும்மா ரீல்ஸ் பார்த்து சொல்லப்படும் கருத்தல்ல இது. பல்வேறு ஆசிய நாடுகளில் இதுதான் உண்மை நிலை. தென் கொரியாவில் சுமார் பத்தாண்டுகளாகச் சரிந்துகொண்டே இருக்கும் குழந்தைப் பிறப்பு விகிதத் தரவுகளே சாட்சி. கடந்தாண்டுதான் இந்தச் சரிவு நின்று 0.03 சதவிகிதம் உயர்ந்துள்ளது. காதலித்து, ஒன்றாக வாழ்ந்து, கல்யாணம் குழந்தை மட்டும் வேண்டாம் என இருந்தவர்களிடையே, கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அந்த 0.03 சதவிகித உயர்வு. அதோடு தென்கொரிய அரசு பல்வேறு சலுகைகள் அறிவித்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க மெனக்கெடுகிறது. 2025ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை இதற்கெனச் செலவிட இருக்கிறார்கள். சீனாலும் குழந்தைப் பிறப்பு விகிதம் சரிய ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் தமிழ்நாடு போன்ற கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் சரிவு இருக்கிறது. பெண்கல்வியில் கவனம் செலுத்தாத மாநிலங்களில் தொடர்ந்து பிறப்பு விகிதம் உயரத்தான் செய்கிறது.

அப்படிப்பட்டோர் இருக்கும்வரை அம்மாவிடம் இருந்து குழந்தையைப் பறிக்கும் இந்தத் திரைப்படம் நன்றாகவே ஓடும். கஸ்டடி வரம் கேட்டு வந்தேன் காளியம்மா என்று ஒரு பாட்டு மட்டும் சேர்த்தால் போதும். அப்படியே சூப்பர் ஹிட் தமிழ்ப்படமாகவும் மாற்றிடலாம்.
ஃபிலிம் ஃபேர், ஸீ சினி அவார்ட்ஸ், இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி அவார்ட்ஸ் எனப் பல இந்திய விருதுகளை வென்றுள்ளது படம். இந்தியாவில், இப்படி ஓர் அம்மா சென்டிமென்ட் படத்துக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம். எனினும் மற்ற ஆசிய நாடுகளின் புதிய கலாசாரம் இங்கும் பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு சில இந்திய மாநிலங்களில் அது ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
மிஸஸ் சாட்டர்ஜி வெர்ஸஸ் நார்வே திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.
டிரைலர்
இந்தியாவில் வெளியான செய்தி
https://www.ndtv.com/india-news/indian-couples-children-taken-away-by-norway-authorities-567345
சிறைத்தண்டனை பெற்ற சைக்யாட்ரிஸ்ட் பற்றிய செய்தி
https://www.bbc.com/news/world-europe-45637040
நார்வே ஸ்கேன்டல் பற்றிய விரிவான பிபிசி கட்டுரை
https://www.bbc.co.uk/news/resources/idt-sh/norways_hidden_scandal
படம் வெளியான பிறகு நார்வே அரசு கொடுத்த அறிக்கை
குழந்தைகளின் உரிமைகள்
கிழக்காசிய பிறப்பு சதவிகிதம்
படைப்பாளர்
கோகிலா

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.