ஒரு மேடைப் பேச்சாளர் எப்படி உறவுகளைப் பலப்படுத்துவார்? அதன் மூலம் வன்முறைகளை எப்படித் தடுக்க வழி சொல்வார்? இவற்றைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வன்முறைகளைத் தீர்க்க முனையும் பல தலைவர்களிடம், “உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்?” என்று கேட்டால், பலருக்குச் சின்ன வயதில் அவர்களுக்கே அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவரும். வெளியே சொல்ல தைரியம் வராமல் மனதிற்குள்ளேயே அசை போட்டு, ஒரு வழியாகத் தன் மீது தவறு இல்லை என்பதை உணர்ந்து பேச வந்திருக்கிறார்கள்.

ஒரு வழிப்போக்கர் கூட்டத்திற்கு உரையாற்ற வந்தவரிடம், “உங்களுக்கு ஏன் இந்த அளவு அக்கறையும் தீவிரமும்?” என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: “நான் கல்லூரியில் இளங்கலை படித்துக்கொண்டிருக்கும் போது வன்புணர்வுக்கு ஆளானேன். அப்போது பலரும் இதைத் தடுத்து நிறுத்த முடியும் என்றிருந்தும், தனக்கு ஏதாவது ஆகுமோ என்று கவலைப்பட்டு பார்வையாளராகச் சென்றுவிட்டார்கள். காவல்நிலையத்தில் வழக்கு என்று வந்தால் சாட்சியாளராக அலைய வேண்டி இருக்குமோ, நேரம் விரயமாகுமோ என்கிற கவலைகள். தனக்குக் காவலர்களால், வன்புணர்வாளர்களால் ஏதேனும் நேருமோ என்று அஞ்சி சென்றுவிட்டார்கள். அந்தக் கொடுமையில் இருந்து மீள எனக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டது. அந்தத் துன்பம் இன்னொருவருக்கு நேரக் கூடாது என்பதற்காக நான் இதில் ஈடுபடுகிறேன்” என்று சொல்லும்போது, அவரின் தீவிரம் ஒரு நம்பகத்தன்மையைக் கொண்டுவருகிறது.

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் – பச்சைப் புள்ளி உத்தியின் (Green Dot Strategy) வண்ணத்துப்பூச்சி விளைவு. ஒரு வண்ணத்துப்பூச்சி தன் சிறகடிப்பால் தொலைதூரத்தில் புயலைக்கூட உருவாக்கலாம் என்பது போல, நமது சிறிய செயல்கள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஒவ்வொரு வன்முறைச் சூழலிலும் (சிவப்புப் புள்ளிகள்) பார்வையாளர்களின் சிறு தலையீடுகளும் (பச்சைப் புள்ளிகள்) பெரும் பாதிப்புகளைத் தடுக்கும் வல்லமை கொண்டவை.

இன்னோர் உதாரணம்: ஒரு தன்னார்வலர், தான் பார்த்த, கேட்ட அனுபவங்களைக் கூறலாம். உதாரணமாக, ஒரு கல்லூரி விடுதி மேற்பார்வையாளர் பேசும்போது, “நான் கல்லூரி வளாகத்தில் பல வருடங்களாகப் பணிபுரிகிறேன். இதுவரை பல மாணவிகளைப் பார்த்திருக்கிறேன் – உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் பார்ப்பேன். மாணவிகள் ஒரு விழாவில் பானங்களை ஆண் நண்பர்களோடு அருந்தும்போது கவனமாக இருக்க வேண்டும். தங்கள் கோப்பைகளைக் கீழே வைத்து கவனக்குறைவாக இருந்தால், யாரேனும் அதில் போதை மருந்துகளைக் கலக்க வாய்ப்பு இருக்கலாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பெண்ணின் பழச்சாறில் அவளறியாமல் போதை மருந்து கலக்கப்பட்டு, அவள் வன்புணர்வுக்கு ஆளான நிகழ்வை அறிவேன்” என்று சொல்லும்போது, அதில் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.

“இதில் எனக்கு இன்னும் அதிக ஆர்வம் இருப்பதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய மகளுக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. மிகுந்த பாதுகாப்போடு வளர்த்ததாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுடைய 16வது பிறந்த நாளன்று அவளுக்குப் பாலியல் சீண்டல்கள் நடந்தன. என்னதான் இது குறித்த விழிப்புணர்வும் புரிதல்களும் இருந்தாலும், சில அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடிவதில்லை. அதனால் நான் இன்னும் அதிதீவிரமாக வன்முறைகளைத் தவிர்க்க விரும்புகிறேன்.” இப்படி ஒரு பேச்சாளர் முற்றிலும் விலகாமல் பிரச்சினையைத் தொட்டுப் பேசினால், கேட்கும் மக்களுக்கும் அதில் ஒரு ஈடுபாடு உருவாகும்.

பச்சைப் புள்ளி உத்தியின் அடிப்படையில், ஒவ்வொரு தனிநபரும் வன்முறையைத் தடுக்கும் பச்சைப் புள்ளியாக மாற முடியும். இது தனிப்பட்ட நேரடி தலையீடுகள், திசைதிருப்பும் செயல்கள், அல்லது மற்றவர்களை அணுகி உதவி கேட்பது போன்ற எளிய செயல்களாக இருக்கலாம். இந்தச் சிறிய செயல்கள்கூட வன்முறைச் சூழலை (சிவப்புப் புள்ளிகளை) மாற்றிவிடும் ஆற்றல் கொண்டவை.

வழிப்போக்கர்கள் வன்முறையை, “இப்படித்தான் தடுக்க வேண்டும், இதில் வரும் இடையூறுகளை இப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்” என்று சொல்வதால் மட்டும் மக்கள் அதைக் கேட்டு நடக்கப் போவதில்லை. பேசுபவர்களும் அதில் ஓர் அங்கமாகி, அவர்களின் உண்மையான அனுபவங்களைப் பகிரும்போதுதான் ஆர்வமும் அர்ப்பணிப்பும் அதிகரிக்கிறது. நம்பகத்தன்மையும் ஏற்படுகிறது. ஏதேனும் இடையூறுகள் வந்தால், “இவர் சமாளித்ததைப் போல நம்மாலும் முடியும்” என்கிற ஊக்கமும் பிறக்கிறது. இதுவே பச்சைப் புள்ளி உத்தியின் மையக் கருத்து – வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு போல சிறிய செயல்களும் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

ஒவ்வொரு வன்முறை நிகழ்வின்போதும், நாம் அதைவிட்டு விலகாமல், அதை நம் நிகழ்வாக நோக்கும்போது வன்முறைகள் நிகழ்வது குறையும். காஷ்மீரில் நடந்த வன்முறைக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களைப் போல, அத்தகைய தீவிரவாதத் தாக்குதல்கள் இனி நடக்காத வண்ணம் தடுக்க என்ன செய்ய வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும். நம் ஒவ்வொருவரின் சிறிய தலையீடுகளும் – பச்சைப் புள்ளிகளாகப் பரவி பெரும் வன்முறைகளைத் தடுக்கும் சக்தி கொண்டவை.

ஒரு வழி: எல்லோரையும் ஒரு கணம் நம் உறவினராக நினைப்பது. அந்தக் கூட்டத்தில் இருக்கும் பெண் நம் மகள், மருமகள், சகோதரி அல்லது அன்னை என்று மனக்கண் முன்னே உருவகித்தல். அல்லது ஆண் நம் மகன், சகோதரன், அண்ணன் அல்லது தந்தை என்று உருவகித்தல். இந்தத் தாக்குதலால் உயிரிழக்க அல்லது கைகால்கள் இழக்க நேர்ந்தால், அவர்கள் வாழ்க்கை எப்படி மாறும் என்று யோசித்து, பின்விளைவுகளைச் சிந்தித்தால் எப்படி மாறும்? இந்தச் சிந்தனை பச்சைப் புள்ளி உத்தியின் முக்கிய அங்கம் – உணர்வுபூர்வமான இணைப்பு மூலம் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு கருதி தாமதப்படுத்தும் சிறு செயலைப் போலவே, சின்ன சின்ன வன்முறைகளாவது இதனால் தடுக்கப்படும். தீவிரவாத இயக்கங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு நடக்கும் பெரிய விளைவுகள் வேண்டுமானால் அரங்கேறும்.

இன்னும் ஒரு வழி இருக்கிறது: நாம் வழிப்போக்கர்களாக வன்முறை நிகழ்வைப் பல காரணங்கள் காட்டித் தடுக்காமல் கடந்து சென்றுவிடலாம். நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை. ஆனால் அதேபோல, ஒரு வன்முறையில் நாமோ நம் மகளோ மகனோ சிக்கியிருக்கும்போது, பார்க்கிற யாரோ ஒருவர் அதைத் தன் சுயபாதுகாப்பு, சுயநலம் கருதித் தடுக்காமல் சென்று, நமக்குப் பேரிழப்பு நிகழ்ந்தால், நமக்கு எப்படி இருக்கும் என்று ஒரே ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு எப்படித் தொலைதூரத்தில் புயலை உருவாக்க முடியுமோ, அதைப்போலவே நம் ஒவ்வொருவரின் சிறிய, ஆனால் துணிவான செயல்கள் – பச்சைப் புள்ளிகள் – வன்முறை என்கிற சிவப்புப் புள்ளிகளைத் தடுக்கும் சக்தி கொண்டவை. சிலரின் வாழ்நாள் துயரங்களைத் தடுக்க முடியும் என்றால், அதற்காக நாம் சில சின்ன தடைகளைத் தாண்டுவதில் தவறே இல்லை என்று புரியும். நம் ஒவ்வொரு சிறு செயலும் பச்சைப் புள்ளியாகப் பரவி, ஒரு வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க வழிவகுக்கும்.

(தொடரும்)

படைப்பாளர்:

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.