தூக்குத்தூக்கி 1954ஆம் ஆண்டு ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம். உடுமலை நாராயண கவியின் இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 1935 ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 1954 ஆம் ஆண்டுவெளிவந்த அந்த நாள் திரைப்படத்தில், ‘தூக்குத்தூக்கி’ நாடகம் குறித்து குறிப்பு வருகிறது. அதனால் அக்காலக்கட்டத்தில் பிரபலமான நாடகமாக இது இருந்திருக்க வேண்டும்.

அருணா பிலிம்ஸ் தயாரிப்பு தூக்கு தூக்கி

நடிகர்கள்

சிவாஜி கணேசன்

பாலையா

லலிதா

பத்மினி

ராகினி

சி.கே. சரஸ்வதி

எம்.எஸ்.எஸ். பாக்யம்

செல்லம்

வேணு பாய்

ஆர். பாலசுப்ரமணியம்

பி.பி. ரங்காச்சாரி

ஜி. முத்துகிருஷ்ணன்

டி.என். சிவதாணு

எஸ்.எஸ். சிவசூரியன்

பொன்னுசாமி பிள்ளை

வெங்கட்ராமன் 

வெங்கடாசலம்

லூஸ் ஆறுமுகம்

தக்ஷணாமூர்த்தி

ராமராஜ் 

பி. கல்யாணம்

வி.பி.எஸ். மணி

TK சம்பங்கி 

CP கிட்டான் 

வசனம் 

ஏ டி கே 

VN சம்பத் 

உடுமலை நாராயண கவி, தஞ்சை என். ராமையா தாஸ் மற்றும் ஏ. மருதகாசி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு, ஜி.ராமநாதன் இசையமைத்துள்ளார். டி.எம். சௌந்தரராஜன், VN சுந்தரம், ML வசந்தகுமாரி பி. லீலா, ஏ.பி. கோமளா  M. S. ராஜேஸ்வரி பின்னணி பாடியுள்ளார்கள்.  

சுந்தரபுரியின் மன்னன், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தத் தன் மூன்று மகன்களும் வணிகம் செய்து பணமீட்டி வரவேண்டும்; யார் சிறப்பாகச் செய்கிறாரோ அவருக்கே அரசுரிமை என்கிறார். சுந்தரங்கதன், அரசுரிமைக்காக இல்லாவிட்டாலும், நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தில் செல்கிறார். மற்ற இரு மகன்களும் இவருக்கு எதிராக இருக்கிறார்கள். 

இவ்வாறு, தந்தையின் கட்டளைப்படி பணமீட்டச் சென்ற சுந்தரங்கதன் வழியில் ஆராய்ச்சி மன்றம் போகிறார். அதாவது தத்துவங்களை ஆராய்ந்து மீண்டும் பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கும் அவை அது. 

கொண்டு வந்தால் தந்தை;
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்;
சீர் கொண்டு வந்தால் சகோதரி;
கொலையும் செய்வாள் பத்தினி;
உயிர் காப்பான் தோழன்.

இவ்வாறு ஒரு ஏடு கிடைக்கிறது. இது குறித்து சுந்தரங்கதன், அவர்களுடன் விவாதிக்கிறார். பின், இதை சோதனை செய்வதற்கு சுந்தரங்கதன் புறப்படுகிறார். தந்தையிடம் போய், செல்வம் எதுவும் தான் கொண்டு வரவில்லை என்கிறார். தந்தை “போ வெளியே” என்கிறார். அதையே தாயிடம் போய் சொல்லும் போது, “அதனாலென்ன? அப்பாவிற்குத் தெரியாமல் இங்கு இரு. அப்பா என்னைத் தண்டித்தாலும் ஆனந்தமாய் அனுபவிப்பேன்” என ஆறுதலாகப் பேசுகிறார். தங்கை வீட்டிற்குப் போய் நாள்கணக்கில் தங்கி, தங்கையிடம் அவமானப்படுகிறார்.

அடுத்து மனைவி இருக்கும் அவரின் ஊருக்குப் போகிறார். அங்குதான் இவரின் நண்பர் மதிவாணனும் இருக்கிறார். மனைவி, ஊரில் வாழும் சேட் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார். அதைத் தன் கணவனிடம் நண்பன் சொல்லிக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக,  நண்பர் தன்னைத் தவறாக பார்ப்பதாகச் சொல்கிறார். ஆனால் சந்தித்த நண்பன், மனைவி மீது பழி சுமத்தாமல், மனைவியை உன்னுடன் அழைத்துப் போனால் என்ன என அறிவுரை கூறுகிறார். இவர் திட்டவே, உண்மையைச் சொல்லிவிடுகிறார்.

சுந்தரங்கதன், தான் ஊருக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, அந்த சேட்டிடமே மாறுவேடத்தில் வேலைக்குச் சேருகிறார். உண்மை தெரிகிறது. இவர் மடிக்கும் பீடாவின் வடிவத்தைக் கொண்டு, வேலை செய்வது கணவர்தான் எனக் கண்டுபிடித்த மனைவி, கணவனைக் கொன்றுவிட ஆள் அனுப்புகிறாள். சுந்தரங்கதன் உள்ளே வரவும், கணவன், தன்னைக் கொல்ல வந்ததாக மன்னரான தந்தையிடம் சொல்ல, தந்தை, சுந்தரங்கதனைப் பிடிக்க ஆள் அனுப்புகிறார். அவரைப் பிடித்துக் கொடுப்பவர்க்குக்குப் பணம் கொடுப்பதாக அறிவிக்கிறார். இதனால் சுந்தரங்கதன், வேறு வேடத்தில் வேறு நாட்டுக்குப் போகிறார். சொன்னதைத் திருப்பி சொல்லுபவராக நடிக்கிறார். அந்த நாட்டு மன்னரின் மகள்களின் தூக்குத் தூக்கியாக (ஏடுகளைத் தூக்கிச் செல்லும் எடுபிடி) வேலை செய்கிறார். 

இளவரசி மாதவி, இவரைக் காதலிக்கிறார். ஒரு காலகட்டத்தில் இவர் மனநிலை சரியாகத்தான் இருக்கிறது என்பதையும், சுந்தரபுரியின் இளவரசன் என்றும் மன்னன் அறிந்து கொள்கிறார். இதனால், அவர் சுந்தரங்காதனைக் கைது செய்து, அவரது மனைவியின் நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். 

மதிவாணன் மற்றும் மனைவி பிரபாவின் உதவியாளர்கள்  நடந்ததைச் சொல்கிறார்கள். அதனால் மனைவி தவற்றை ஒப்புக்கொண்டு சுந்தரங்கன் மாதவியை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறி நஞ்சுண்டு இறந்து விடுகிறார். சுந்தரங்கன் மாதவியை மணக்கிறார். அவரின் தோழி, மதிவாணனை மணக்கிறார். 

உறவுகளுக்கான பொது விதியாக ஐந்து கருத்துக்களை வைத்து அவற்றின் மீது கதையை நகர்த்தி இருக்கிறார்கள். ஆனால் எந்த உறவிற்குமே பொது விதி என எதுவும் கிடையாது என்பதுதான் நாம் வாழ்வில் தெரிந்து கொள்ளும் பாடம். எந்த உறவும் புனிதமும் அல்ல; தவறானதும் அல்ல. 

இந்தத் திரைப்படத்தின்  உரையாடல் எண்பதுகளில் கூட பிரபலமாக இருந்தது. எங்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், திரு ஜேம்ஸ் அவர்கள் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர். அவ்வப்போது சினிமா கதைகள் சொல்லுவார். சொல்லுவார் என்றால் சும்மா எல்லாம் இல்லை; உரையாடல், பாடல் நடிப்பு என அனைத்தும் கொண்ட முழுத்திரைப்படம் ஓடுவது போலவே அவர் கதை சொல்லுவது இருக்கும். அதற்காக பாடம் சரியாக நடத்தமாட்டார் என்பது இல்லை. எனக்கு வரலாறு மீது ஆர்வம் வந்ததே அவரால்தான். அப்படி நடத்துவார். இந்தக்கதையும் சொல்லியிருக்கிறார். 

கொண்டு வந்தால் தந்தை;
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்;
சீர் கொண்டு வந்தால் சகோதரி;
கொலையும் செய்வாள் பத்தினி;
உயிர் காப்பான் தோழன்.

இது தான் அந்தப் பொதுவிதி. பொதுவாகவே, நம்மிடம் அம்மா செண்டிமெண்ட் கூடுதல். மனைவி என்றால் இளக்காரம்தான். கதைப்படி மனைவி அவ்வாறு இருப்பதால் பொருந்திப் போகிறது என்பதும் உண்மைதான். ஆனால், பலரும் சாடை சொல்லித் திட்டுவதற்கு இந்த உரையாடலைப் பயன்படுத்தியதுண்டு. பெண்களை நம்பாதே; ஒய்யாரக் கொண்டையும் தாழம் பூவுமாம் ,அதன் உள்ளே இருப்பது ஈறும் பேனுமாம் …. இப்படிப்  பல ‘தத்துவங்கள்’ கொண்ட பாடல்கள், உரையாடல்கள் உள்ள திரைப்படம் இது. சொல்லவா வேண்டும்?

“ஆனந்த… அறிவு கெட்டு தான் போனாரே” என்ற பாடலை, இந்தப் பெயர் கொண்டவர் வரும்போதெல்லாம் பாடிக் கோபம் கொள்ள வைத்த நிகழ்வுகளும் ஊரில் நடந்திருக்கின்றன.

‘சம்பாதிக்க முடியாத பிள்ளையை வெறுப்பது சமூகத்திற்கே கேடு. அம்மாதிரி மனப்பான்மை  பரவினால் உலகில் ஒற்றுமையும் அமைதியும் நிலவுமா? நிலவாது. ஆனால், சம்பாதிப்பது  ஆண் மகன் சித்தத்தோடு அமைந்துவிட்ட ஓர் அற்புத குணம். அற்ப குணம் என்று கூறினால் பொருந்தும்.’

‘அப்படியே வைத்துக்கொள். அந்தக் குணம் ஒரு யானை மாதிரி. அதை அறிவென்னும் அங்குசத்தால் அடக்க வேண்டும். அகற்ற முடியாது.’

‘நம்மைவிட மேலானவர்களே அந்த கீழான செயலைச் (சகோதரனைக் காட்டிக் கொடுப்பது) செய்து இருக்கிறார்கள். ‘

இப்படி பல கருத்துகள் இயல்பாகத் திரைப்படம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.

பாடல்கள் மிகவும் பிரபலமானவை. பாடுவதற்கு டி.எம். சௌந்தரராஜன் பரிந்துரைக்கப்பட்டபோது, சிவாஜி தயங்கி இருக்கிறார். சில பாடல்கள் பதிவு செய்யப்பட்டபின், தன் குரல் போலவே இருக்கிறது எனப் பாராட்டியும் இருக்கிறார். இந்தக் கூட்டணி, சில பத்தாண்டு காலம் கோலோச்சியது என்பது நாம் அறிந்தது தான். அதற்கு முதல் புள்ளி வைத்தத் திரைப்படம் ‘தூக்குத்தூக்கி’. 

வாரணம் ஆயிரம் பாடல் இரண்டு முறைத் திரைப்படத்தில் வருகின்றது. ஆனால் இசைத்தட்டில் கேட்டது போலத் தெரியவில்லை. 

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

மருதகாசி அவர்கள் எழுதிய பாடல். பாடியவர்கள், T. M. சௌந்தரராஜன், M. S. ராஜேஸ்வரி

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து

மின்னொளியே ஏன் மௌனம்?

வேறெதிலே உந்தன் கவனம்?

இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும்

இதய மில்லாதார் கவனம்!

இழந்ததனால் இந்த மௌனம்!

வண்ணச் சிலையே! வளர்பிறையே!

வந்த தறியேன் மனக் குறையேன்?

எண்ணம் வேம்பு! மொழி கரும்பு!

எனைப் பிரிந்த உம் மனம் இரும்பு!

கண்ணே போதும் சொல்லம்பு!

உனைக் கணமும் பிரியேன் எனை நம்பு!

உண்மையில் என் மேல் உமக்கன்பு!

உண்டென்றால் இல்லை இனி வம்பு!

கண்ணில் தவழுதே குறும்பு!

கனி மொழியே நீ எனை விரும்பு!

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து

கனிவுறும் காதல் ஜோதி!

காண் போமே பாதி பாதி!

ஏலம் ஏலம் என ஒரு பாடல் வருகிறது. அதுவும் அவ்வளவு பிரபலமான பாடல் இல்லை. நாயகன், சேட்டிடம் வேலையாளாக வரும்போது, துணி விற்கிறார். ஏலமுறை விற்பனைக்கான வரலாற்றுப் பதிவாக இந்தப் பாடல் இருக்கிறது. இப்படி எல்லாம் போடும் வழக்கம் எழுபதுகள்வரைகூட இருந்தது ஒவ்வொரு துணியாகத் தன உடலில் வைத்துக் காட்டி ஆடிப்பாடி நடிகர் திலகம் விற்கும் அழகு என்பதை அவரின் தனி முத்திரை என சொல்லலாம்.

ஏலம் ஏலம்

வாங்க வாங்க

ஆணும் பெண்ணை அழகு செய்வது 

ஆட ஆட மேலாட ஆட 

அடுத்தவர் பாத்து ஆசைப்படுவதும் 

ஆட ஆட பட்டாட ஆட 

மானம் காப்பதும் மதிப்பு கொடுப்பதும் 

புடவ புடவ -வேட்டி 

புடவ புடவ -இத 

வாங்கி உடுத்தி பரிச்ச பாரு தடவ தடவ 

ஒரு தடவ தடவ 

இதப்பாத்தீங்களா 

பப்பளப்பள பள பள பள 

பளீரெங்குது பார்- புடவ 

பளீரெங்குது பார் – இதப் 

பாட்டி கட்டினா குமரி போல 

நோட்டம் காட்டுப்பார். 

டப் டப்புனு போட்டடிச்சா 

சுருங்கிப் போகாது -சரிக

தண்ணிய விட்டு சாயம் வெளிய 

தாண்டிப் போகாது. 

இப்பொழுது இந்த ரகத்தில் 

ஒண்ணே ஒண்ணு தான் -இருப்பது 

இத எளிய விலைக்கு விடப்போறேன் 

வேணுமுன்னு தான் -உங்கள 

இதப்பாத்தீங்களா?

நாட்டியம் ஆடுகிற நட்சத்திரங்களெல்லாம்

நா ஜோக்கா போட்டுக்கிற அங்கி -சரக 

வெகு நாளைக்கு போகாது கசங்கி 

இது மாட்டுத்தோலு போலிருக்கும் 

மூட்டு போட்டு கட்டுகின்ற 

முகமதியர் கேத்த லுங்கி 

இந்நேரமேல்லாம் விட்டது பெரிசு 

இப்போ விடப்போறது சிறிசு 

மூக்குப்பொடி போடுகின்ற 

மூளையுள்ள ஆளுங்களுக்கு 

முக்கியமாய் வேணுமிந்த கைக்குட்டை -இது 

மூணு பணம் ஜோடி ஒண்ணு 

வேணுமுன்னா வாங்கிக்கோங்க 

மூட்டை கட்டப்போறேன் இனிமே உடமாட்டேன் -ஏலம் 

தஞ்சை என்.ராமையா தாஸ் அவர்கள் எழுதி டி எம் எஸ் ஐயா பாடிய பாடல் இது 

ஏறாத மலைதனிலே வெகு

ஜோரான கௌதாரி ரெண்டு

தாராளமாய் இங்கு வந்து

ததிக்கிநொத்தோம் தாளம்

.போடுதையா

கல்லான உங்கள் மனம்

கலங்கி நின்று ஏங்கையிலே

கண் கண்ட காளியம்மா

கருணை செய்வது எக்காலம்

போடு தாம்தமிக்கின

தந்தக் *கோனாரே

தீம் திமிக்கின இந்த கோனாரே

ஆனந்த *கோனாரே அறிவு

கெட்டுத்தான் போனாரே- போடு 

செக்கச் செவேரன செம்மறி ஆடுகள்

சிக்காரமாய் நடந்தது

வக்கனையாக பேசிக்கொண்டு

பழி வாங்கும் பூசாரியை

தேடுதடா

*இந்த சொற்கள் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ, பதிப்பகத்தாருக்கோ உடன்பாடில்லை, அந்த காலகட்டத்தில் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட சொல் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. இந்தப் பெயர் கொண்டவர் ஒருவர் இருந்திருக்கிறார். அவர் வரும்போதெல்லாம் இந்தப்பாடலைப் போட்டு அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பலர்.

பி.லீலா, ஏ.பி.கோமளா  மற்றும் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய 

அ.மருதகாசி அவர்களின் பாடல் 

சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலி எனும் உமையே -குமரியே

அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அமரி எனும் மாயே- மாயே
பகவதி நீயே அருள் புரிவாயே
பைரவி தாயே உன் பாதம் சரணமே
உன் பாதம் சரணமே

கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை – நாம்

கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம்

பெண்களை நம்பாதே கண்களே

பெண்களை நம்பாதே – வீண்

பெருமைகாட்டி சிறுமையாக்கும்-பெண்களை 

மண்கலம் போல மற்றவர் தொட்டால்

மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை – கெட்டு

வெண்கலம் போல எவர் தொட்டாலும்

விளக்கி எடுத்து விரும்பும் தன்மை-பெண்களை 

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் – அதன்

உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம் – இதை

மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்

மேன்மினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம்

கண்டவரோடு கண்ணால் பேசிக்

காமுறும் மாது இந்த பூமியின் மீது – கொண்ட

கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்

காரிகை ரூபத்தில் காணும் பிசாசு- பெண்களை 

சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு

தங்கநகை பகட்டு – வெள்ளித்

தாம்பாளந்தனில் தாம்பூலம் முதல்

தேங்காய் பழக் கொத்து கொண்டு

தெருவில் புறப்பட்டு

பிறர் மதித்திட வருவாள் – தெய்வப்

பேரால் எதையும் புரிவாள் – தன்னைப்

பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான்

திருப்பி அனுப்பும் பகட்டுச் சிரிப்பும்

உடுமலை நாராயண கவி அவர்கள் எழுதி, பி. லீலா, ஏ.பி. கோமளா, டி.எம். சௌந்தரராஜன் & வி.என். சுந்தரம் ஆகியோர் இணைந்து பாடிய பாடல் 

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

கொம்பேறித் தாவும் 

உருண்டையான உலகின் மீது

உயர்ந்தோர் சொன்ன உண்மை ஈது

உருவ அமைப்பைக் காணும் போது

ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு

பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்

தலையில் பேனும் ஈரும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்

நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓரு குலம்

உடுக்கும் உடைகள் படிப்பினாலும்

உள்ளபடி பேதமுண்டு

உண்மையில் வித்தியாசமில்லை

மாமா குரங்கு தாத்தா குரங்கு

பாப்பா குரங்கு நீதான் குரங்கு

எவ்ளோ நேக்கா கோத்துவிட்டு போயிட்டான்யா (சீனா தானா) நகைச்சுவையில், வடிவேலுவை ஒருவர், கடிக்கும் ஒருவரிடம் கோர்த்து விட்டு விடுவது போன்று, இந்தத் திரைப்படத்தில், கரடியின் முன்னங்கால்களைப் பிடித்துக் கொண்டு சமாளிக்கும் தம்பி, அண்ணன் வந்ததும், கோர்த்துவிட்டுப் போகிறார். 

தூக்கு தூக்கி வெளியான அன்றுதான் சிவாஜிக்கு கூண்டுக்கிளியும் வெளியானது. அப்படம் தோல்விப்படமாகவும், தூக்குத்தூக்கி மாபெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.