கேள்வி:
என் பெயர் சுரேஷ். நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். என் குழந்தைக்கு தடுப்பூசிகள் போடுவது அவசியமா? தேவையில்லை என்று ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறதே!
பதில்:
உலக அளவில் 24 /04/25 முதல் 30/04/25 வரை உலக தடுப்பூசிகள் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் கேள்வி மிகவும் சரியானது.
தடுப்பு ஊசிகளின் தாக்கம் வானமே எல்லை என்பதும் தடுப்பூசிகளை தள்ளி போட வேண்டாம் என்ற என்னுடைய இரு கட்டுரைகளும் இளம்பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. முதல் கட்டுரை ஒரு தன்னாட்சிக் கல்லூரியில் துணைப்பாடத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது என்பதும், தடுப்பூசிகளின் தேவையை பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதைக் குறிக்கும் அல்லவா!
1940, 1950, 1960 களில் பெரியம்மை என்ற கொள்ளை நோய் கிராமம் கிராமமாக தின்று தனது கோரப் பசியை போக்கிக் கொண்டது. தாத்தா, பாட்டிகள் இருந்தால் கேளுங்களேன்! பல கதைகளைச் சொல்லுவார்கள். பெரியம்மை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 1977-ல் அந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. பல குழந்தைகளை முடமாக்கிய இளம்பிள்ளை வாதம் (போலியோ) ஒழிக்கப்பட்டதும் தடுப்பூசிகளால் மட்டுமே! இந்த இரண்டு நோய்களை நாட்டை விட்டு துரத்தியது தடுப்பு மருந்துகள் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
குழந்தைகளைத் தாக்கிய ஆறு உயிர் கொல்லி நோய்கள் (Six Killer Diseases) என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நோய்களில் இளம்பிள்ளை வாதம் (Polio), வில்வாதம் (Tetanus) இரண்டும் இப்போது இல்லை, காச நோய் (TB), தொண்டை அடைப்பான் (Pertussis) மற்றும் தட்டம்மை (Measles) ஆகியவை வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டன. அப்படியே நோய் ஏற்பட்டாலும் இறப்பு ஏற்படுவதில்லை.
A,B வைரஸ் வகை மஞ்சள் காமாலைகள், டைபாய்டு, பாக்டீரியா வகை நிமோனியா ஆகியவையும் தடுப்பூசிகளால் வெகுவாகக் குறைந்திருக்கின்றன.

தடுப்பூசிகள் தேவையில்லை என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? அந்த சந்தேகங்களையும் அவற்றுக்கான பதில்களையும் இப்போது பார்க்கலாமா?
1.முற்காலத்தில் போடவில்லையே?
பதில்: கண்டுபிடிக்கப்படவில்லை. போடவில்லை. உபயோகத்திற்கு வந்த பின் கட்டாயப்படுத்திக் கூட போட்டு இருக்கிறார்கள்.
2. முற்காலத்தில் இவ்வளவு சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லை, சுகாதாரமற்ற காற்று, தண்ணீர், உணவு, மாறுபட்ட வாழ்க்கை முறை பாதிப்பு இல்லை. இப்போது ஒரு மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கிறோம். மாசு கலந்த உணவும், நீரும் உள்ளே செல்கிறது. குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?
பதில் : இயற்கையிலேயே தூசி, அழுக்கு, கிருமித் தொற்று இவற்றைக் குழந்தையின் உடல் சந்தித்தால் தானாக எதிர்ப்பு சக்தி ஏற்படும் என்பது ஒரு வாதம்! குழந்தைகளுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைவு .தாய்ப்பால் தருவதும் இக்காலத்தில் குறைவாகவே உள்ளது .உண்ணும் உணவிலும் தேவையான எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. 50 – 60 வருடத்திற்கு முன் குழந்தைகளுக்கு இருந்த எதிர்ப்பு சக்தி இப்போது இல்லை. ஆகவே இந்தக் காலத்தில் தடுப்பூசியின் அவசியம் அதிகரித்திருக்கிறது.
3. தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் நோய் வருகிறது என்று ஒரு செய்தி பரவி வருகிறதே?
பதில் : ஆட்டிசம் எதனால் வருகிறது என்று கண்டுபிடித்து அதனை தடுக்க, தீவிரத்தைக் குறைக்க மருந்து ஆராய்ச்சியாளர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது அனாவசியமாக MMR ஊசி மேல் ஏன் பழியை போட வேண்டும்?
4. போலியோ சொட்டு மருந்து போடுவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று பயமுறுத்துகிறார்களே?
பதில்: போலியோ சொட்டு மருந்து சுமார் 70 வருடத்திற்கு மேலாக புழக்கத்தில் இருக்கிறது. நமது ஆண்கள் எல்லோரும் மலடாகி விட்டார்களா என்ன?
அது மட்டுமல்ல, தாளம்மை (Mumps- பொன்னுக்கு வீங்கி) என்பது ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இது உடல் உடலின் பல பாகங்களை தாக்கக் கூடியது. இளம் வயதில் தாளம்மை ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஆணுக்கு விதைப்பை அழற்சி(Orchitis) ஏற்பட்டு மலட்டுத்தன்மை வரலாம். ஐந்து வயதிற்குள் இரண்டு முறை MMR ஊசி போடுவதால் இந்த நோயைத் தவிர்க்கலாமே!
5.தடுப்பு ஊசிகள் போடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறதே என்று பயமாக இருக்கிறது.
பதில்: உங்கள் பயம் நியாயமானதே! ஆனால் அவை என்ன பக்க விளைவுகள் தெரியுமா? ஊசி போட்டால் காய்ச்சல், ஊசி போட்ட இடத்தில் வீக்கம், வலி இருக்கும். இதனால் குழந்தை அழுது கொண்டு, விளையாடாமல் களைப்பாக இருக்கும். இவையெல்லாம் ஓரிரு நாட்கள் தானே! ஊசி போடாமல் விட்டு, அதனால் அந்த குழந்தைக்குத் தொற்று நோய் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம் அல்லவா! நோயுள்ள குழந்தை மற்ற குழந்தைகளுக்கும் நோயைப் பரப்புகிறது என்பதுதான் உண்மை!
6. தடுப்பூசி போட்டாலும் சில சமயம் அந்த நோய் வருகிறதே!
பதில் : இது உண்மைதான். எந்த தடுப்பு ஊசியும் 100% பாதுகாப்பு தருவதில்லை. உதாரணமாக வீட்டில் ஒருவருக்கு தாளம்மை ஏற்பட்டால் தடுப்பூசி போட்ட குழந்தைக்கும் அது பரவ வாய்ப்பு உள்ளது. ஒரே வீட்டில் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் (Residential Close Contact) இப்படி ஏற்படுகிறது. ஆனால் தடுப்பூசி போட்டு பாதுகாக்கப்பட்ட குழந்தைக்கு நோயின் தீவிரம், பின் விளைவுகள், நோயுற்ற நாட்கள் எல்லாமே குறைவுதான். நோய் லேசாக வந்துவிட்டு சீக்கிரமே குணமாகிவிடும். நமக்கு இதுதானே தேவை!
7. தடுப்பு ஊசிகள் விலை அதிகமாக உள்ளன! செலவு செய்வது தேவையில்லை
பதில்: தடுப்பு ஊசி போடுவது ஒரு முதலீடு. எப்படி? இது குழந்தைகளின் நல்வாழ்விற்கான முதலீடு! Investment for the Future Health of the Child .குழந்தைக்கு சொத்து. ஆமாம்! குழந்தையின் ஆரோக்கியம் என்ற சொத்து சேர்த்து வைக்க ஆசை இல்லையா?
போர் நடக்கும் நாடுகளில் கூட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கிறார்களே! இது தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவில்லையா?
தொற்று நோய்களைத் தவிர்க்க தடுப்பு ஊசிகளைத் தவிர வேறு வழி இல்லை! நோய் வந்து குழந்தை கஷ்டப்பட்டு, பெற்றோர் மன உளைச்சல் அடைந்து, சிகிச்சைக்கு அதிக செலவு செய்து மருத்துவமனைகளுக்கு அலைவதை விட தடுப்பூசி போடுவது சாலச் சிறந்த செயல்.
Prevention is always better than cure – அல்லவா!
எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது ஒரு சமூகத்தின் கூட்டு எதிர்ப்ப்சக்தி அதிகமாக இருக்கும். ஆகவே தடுப்பூசி போடுவது நாம் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் நல்லது.
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணி மகளிருக்கும் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில விலை அதிகமான ஊசிகளை குழந்தையின் நல்வாழ்விற்கான முதலீடாக நினைத்து திட்டமிட்டு சேமித்து உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனையுடன் போட்டுக் கொள்ளலாம்.
வருமுன் காப்போம் தம்பி சுரேஷ்!
கேள்வி:
என் மகனுக்கு 16 வயது. ஹாஸ்டலுக்குப் போகும் முன் தடுப்பூசிகள் ஏதாவது போடணுமா?

பதில்:
உலக தடுப்பூசி வாரத்திற்கும், கல்வி ஆண்டு துவங்கும் சமயத்திற்கும் பொருத்தமான கேள்வி! பல தடுப்பு ஊசிகள் 5 – 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத்தான். அவை தானாக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் ஊக்குவிக்கும். 16- 18 வயது வரையிலும்கூட, ஏன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கூட தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
வளர் இளம் பருவத்தில் ஏற்படும் உணவு மாறுதல்களால் நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். அறையைப் பகிர்ந்து கொள்வது, உணவுக் கூடத்தில் நெருங்கி உட்காருவது போன்றவற்றால் விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு நோய் நோய்கள் தொற்றுவது எளிது. எனவே குழந்தைப் பருவத்தில் விடுபட்ட சில தடுப்பூசிகளை விடுதிக்குப் போவதற்கு முன் அளித்து விட வேண்டும். உதாரணமாக A,B வகை மஞ்சள் காமாலைகள், டைபாய்டு, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சின்னம்மை (Chicken Pox) போன்றவை இதில் அடங்கும்.
எம் எம் ஆர்(MMR) என்பது தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மை ஆகிய மூன்றையும் குறிப்பது. இந்த நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுபவை. ஒரே அறையில் இருப்பவர்களுக்கு மிக எளிதில் மூச்சுக்காற்று மூலம் பரவும் தன்மை உள்ளவை. எனவே இவற்றை தடுக்க ஊக்குவிப்பு தவணை(Booster Dose) தடுப்பூசி தேவை.

16 வயதில் தொண்டை அடைப்பான் மற்றும் வில்வாதம் ஆகியவற்றுக்கான ஒரு ஊக்குவிப்பு தவணை அரசு தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதுவும் கட்டாயம்.
விடுதிக்கு அனுப்பும் முன்பு குழந்தைப் பருவ தடுப்பூசி அட்டவணையை எடுத்துக் கொண்டு உங்கள் குழந்தை மருத்துவரிடம் கலந்தாலோசிக்க உடனடியாக டோக்கன் போடுங்கள். கிளம்பியாச்சா?
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.