அன்னம் ஒன்று தூதாய்ப் போகும் இலக்கியத்துக் காதல் என்ற பாடலில் வருவது போல, மனித வரலாற்றில் பலவிதமாக அஞ்சல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. புறாக்கள் இவற்றுக்கென்றே பழக்கப் படுத்தப்பட்டுள்ளன. குதிரை வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அரசு  ஒரு சட்டம் இயற்றினால், அதை செய்தித்துறை, அரசின் அனைத்துப் பகுதிக்கும் கொண்டு செல்லும்வரை அவை நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்ற முறை இருந்து இருக்கிறது. பறை அடித்து மனிதர்கள் ஊர் தோறும் சென்று தகவல்களைப் பரப்பியிருக்கிறார்கள். அஞ்சல்களை ஓடிச்சென்று கொடுத்த ஓட்டக்காரர்கள் (dak runners) இருந்திருக்கிறார்கள்.

லண்டன் நகரம், அரசு மற்றும் நீதிமன்றத்தின் சார்பாகச் செய்திகளை அனுப்புவதற்குக் குதிரைகளைப் பயன்படுத்தியது. 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் லண்டனில் சாலைகளின் தொடக்கத்தில் தனித்தனி அஞ்சல் இல்லங்கள் இருந்து இருக்கின்றன. ஜெனரல் லெட்டர் ஆஃபீஸ் (the General Letter Office) 1829 – 1910 ஆண்டுகளுக்கிடையில் லண்டனுக்கான தலைமை அஞ்சல் அலுவலகமாக இருந்து இருக்கிறது. 

27 மார்ச் 1680 அன்று, லண்டனில் ஆங்கில வணிகரான வில்லியம் டோக்வ்ரா (William Dockwra) மற்றும் அவரது பங்குதாரர் ராபர்ட் முர்ரே (Robert Murray) இருவரும் இணைந்து, லண்டன் பென்னி போஸ்ட்டை (London Penny Post/  LPP) நிறுவினர். இது லண்டன் நகருக்குள் மட்டும் செயல்பட்ட ஒரு அமைப்பு. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப் பட்டுள்ளது. அஞ்சலை அனுப்பும் இடம், நேரம், கட்டணம், முன்பணம் செலுத்தப்பட்டதைக் குறிக்க என கை முத்திரைகள் (hand stamps) பயன்படுத்தப் பட்டுள்ளன. பென்னி போஸ்ட், 13 டிசம்பர்1680 வெளியிட்ட போஸ்ட்மார்க் உலகின் முதல் அஞ்சல் முத்திரை எனக் கருதப்படுகிறது.

[http://www.stampcommunity.org/topic.asp?whichpage=1&TOPIC_ID=7831&#66160 The Stamp Community Forum]

ரோலண்ட் ஹில், விரிவான தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு, அஞ்சல் அலுவலகச் சீர்திருத்தம் குறித்த தனது வரையறையை அளித்தார். எடையின் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் அஞ்சல்தலைகள் வெளியிடலாம் என்ற ஹில்லின் யோசனைகள் விரைவில் நடைமுறைக்கு வந்தன. பென்னி பிளாக் (Penny Black) என்ற அஞ்சல்தலை மே 1, 1840 அன்று வெளியிடப்பட்டது, ஆனால் மே 6 1840 அன்று தானம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது. இது விக்டோரியா அரசியின் படம் பொறித்த அஞ்சல் தலை. இவர், 1837ஆம் ஆண்டு முதல் 1876 மே 1 ஆம் நாள் வரை (இறக்கும் வரை) சுமார் 63 ஆண்டுகள் அரசியாக இருந்தவர். இவ்வாறாக முதல் அஞ்சல் தலையில் ஒரு பெண் இடம் பெற்றிருக்கிறார்.

இன்றைய இந்திய நிலப்பரப்பில் போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எனப் பலரும் ஆட்சி செய்தாலும், பெரும்பாலான இடங்கள் ஆங்கிலேயராலேயே ஆட்சி செய்யப்பட்டது. டச்சுக்காரர்கள் அஞ்சல் தலைகள் வெளியிட்டார்களா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நெதர் இண்டீஸ் என அஞ்சல் தலைகள் உள்ளன. 1864ஆம் ஆண்டு தான் இத்தகைய அஞ்சல் தலைகள் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு டச்சுக் குடியேற்றப் பகுதியும் இல்லை. இந்தோனேசியா நாட்டின் அஞ்சல் தலைகளின் வரிசையில்தான் இவற்றை அஞ்சல் தலை பட்டியல் (Catalog) வகைப்படுத்தியுள்ளது. 

பள்ளியில் படிக்கும்போது வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டுபிடித்தார்,  கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று படிக்கும்போது அதன் பொருள் எனக்கு விளங்கவே இல்லை. ஏதோ வேறு ஒரு உலகத்தைக் கண்டு பிடித்தது போன்ற மாயையை எனக்கு அது ஏற்படுத்தி இருந்தது. உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் போவதற்கான புதுப் பாதையைக் கண்டு பிடித்ததைத்தான் ஐரோப்பியர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் இந்தியாவுடன், வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். மதுரை, புகார் முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். இந்தத் தொடர்பு, பொ.ஆ. ஏழாம் நூற்றாண்டு வரையில் இருந்து வந்தது. ஏழாம் நூற்றாண்டில், அரேபியர் எகிப்து, பாரசீகம் முதலிய நாடுகளைக் கைப்பற்றி, கடல் வழியையும் தரை வழியையும் கைப்பற்றிக் கொண்டனர். இந்தியப் பொருள்களை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்தனர். அவர்கள் இந்தியாவில் வாங்கிய பொருட்களை அரபிக்கடல் வழியாகச் செங்கடல் சென்று, அங்கிருந்து தரை வழியாக சூயஸ், கெய்ரோ, அலெக்ஸாண்டிரியா நகரங்களின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போய், விற்றனர்.

இவ்வாறு சில நூற்றாண்டுகள் கழிந்தன. போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கிடையே இந்தியா வருவதற்கான புது வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் போட்டி வந்தது. 

1493ஆம் ஆண்டில், போப் ஆறாம் அலெக்சாண்டர் (Alexander VI) ஆணை ஒன்றை (papal bull) வெளியிட்டார். Papal bulls என்பது, போப் வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆணை. இது ஸ்பெயினுக்கு வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் குடியேற்றங்கள் வைத்துக் கொள்ள முழு உரிமையையும் வழங்கியது. இதற்கு போர்த்துகீசியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் டோர்டெசில்லாஸ் உடன்படிக்கை, ஸ்பெயினில் உள்ள டோர்டெசில்லாஸில் 7 ஜூன் 1494 இல் கையெழுத்திடப்பட்டது. இதன்படி ஐரோப்பாவிற்கு வெளியே புதிதாக பாதை கண்டுபிடிக்கப்பட்ட நிலங்களை போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினின் அரசுகள் மனமொத்துப் பிரித்துக் கொண்டன. இதைப் பின்பற்றி, போர்த்துகீசியரான வாஸ்கோடகாமா இந்தியா வந்தார். 

வணிகம் செய்யச் சென்ற இடங்களில் எல்லாம் ஐரோப்பியர் எப்படி குடியேற்றங்கள் அமைத்தார்கள், மிக அதிகமான எண்ணிக்கை கொண்ட உள்ளூர் மக்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கினார்கள் என்பது விந்தையான ஒன்று தான். புதிய இடத்தின் மொழிகளைக் கற்று அல்லது கற்றுக் கொடுத்து என மிகவும் லாவகமாக உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். அருகாமை அரசுகள் ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுத்துத்தான் பெரும்பாலான இடங்களை ஐரோப்பியர் கைப்பற்றியிருக்கிறார்கள். இங்கிருந்து தங்கள் நாடுகளுக்கு செய்தியனுப்ப அவர்களுக்கு புதிய தகவல் பரிமாற்ற வழிகள் தேவைப்பட்டன. அப்படித்தான் அஞ்சல் முறை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் பரவலாக்கம் பெற்றது.

அஞ்சல் தலை சேகரிப்பு 

அஞ்சல் தலை சேகரிப்பு என்பது கடந்த நூற்றாண்டு மாணவர்களின் பெரிய பொழுதுபோக்காக இருந்தது. ஒருவர், தன்னிடம் உபரியாக இருக்கும் அஞ்சல்தலைகளை நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வார். இப்படித்தான் எங்கள் வழக்கம் இருந்தது. தீவிரமாகச் சேமிப்பவர்கள், நிறையப் பணம் கொடுத்து வாங்குவதுமுண்டு. இப்போது பெரிய அளவில் மாணவர்களிடம் அஞ்சல் தலை சேகரிக்கும் வழக்கம் இல்லை.

நான் எனது பள்ளிப்பருவத்தில் தொடங்கி இன்றுவரை சேமித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் இதற்கென பல குழுக்கள் இயங்குகின்றன. அவ்வப்போது கண்காட்சிகள் நடக்கும்.

எங்கள் ஊரான பெல்மான்டில் கொரோனா காலம் வரை ஒரு குழு சிறப்பாகச் செயல்பட்டது. அனைவரும் என்னிலும் வயதில் மூத்தவர்கள். மிகவும் அன்பானவர்கள். பல அஞ்சல் தலைகளை எனக்குக் கொடுத்தார்கள்.  

எங்கள் குழுவின் தலைவராக ரிச்சர்ட் கோல்மன் (Richard Coleman) இருந்தார். ஜனவரி மாத கூட்டத்திற்கு அவர் வரவில்லை. மறுநாள்தான் அவர் இறந்த செய்தியைச் செய்தித் தாளில் பார்த்தேன். பின் ஒரே ஒரு கூட்டம் நடைபெற்றது. அதன் பின் கொரோனா வர, இப்போது அக்கூட்டம் நடைபெறுவதில்லை. ரிச்சர்ட், இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டவர். ஜப்பானில் குண்டு போடப்பட்டபோது, அதன் அருகிலிருந்த ஊரில்தான் இருந்திருக்கிறார். ஹிரோஷிமாவா நாகசாகியா என சரியாகத் தெரியவில்லை. விறகுகள் சேகரிக்கும் சிவில் துறையில் இருந்திருக்கிறார். அவரது அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வார். அப்போதே அவருக்கு வயது 95+. ஆனாலும் தொடர்ந்து அஞ்சல்தலை சேகரிப்பில் ஈடுபட்டார். இறப்பதற்கு ஒரு மாதம் முன் சந்தித்தோம். அப்போதும் பகலில் தோட்டவேலை சிறிதும், ஸ்டாம்ப் வேலை சிறிதும் செய்து வந்தார். அவரின் மனைவி எல்லா இடங்களுக்கும் அவரைக் கொண்டு வந்து விடுவார். மகன் மிகவும் ஆதரவாக இருந்தார். அவ்வப்போது மனைவியைப் புகழ்வார். எப்படி மணமுறிவு எல்லாம் செய்ய முடியும்? என கேட்பார். அப்படியெல்லாம் மனிதனால் வாழ இயலுமா? என்பார்.

அஞ்சல்தலைகள் பல வரலாறைச் சொல்கின்றன. அவற்றைத் தேட வைக்கின்றன. இந்த அஞ்சல் தலைகளை, எந்த நபருக்கு, எந்த பொருளுக்கு,  எந்த இடத்திற்கு, எந்த அரசு வெளியிட்டிருக்கிறது எனச் சிறிது பார்த்தால் ஓராயிரம் அரசியல் நமக்குப் புலப்படும். நான் ஏறக்குறைய 43 ஆண்டுகளாக சேகரித்துவரும் அஞ்சல்தலைகளைக் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.