‘அகிலத்திரட்டு அம்மானையில் நசுறாணி என்று வழங்கப்படுவது கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பொ.ஆ.1739ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி வெண்ணீசன்’ என்று குறிப்பிடுகின்றது.
திருவிதாங்கூர் அரசுடன் நட்புறவு கொண்டு, பெயரளவில் மட்டும் திருவிதாங்கூர் அரசர்களை வெற்றுப் பொம்மையாக அரியணையில் இருத்திக்கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும், அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி வெண்ணீசன்’ என்றுதான் குறிப்பிடுகின்றது. சான்றுகளை பின்னால் காணலாம்.
நீசனுக்கு மகனாக வெண்ணீசனை சித்தரிப்பதற்கானக் காரணம், இருவருக்கும் இடையில் காணப்படும் கொள்கை ஒற்றுமையாக இருக்கலாம். பார்ப்பன வர்ணத்தார் (நீசன்) எவ்வாறு தமிழ்ச் சமுதாயத்தில் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்களோ, அதேபோல் ஆங்கிலேயர்களும் (வெண்ணீசன்), டச்சுக்காரர்களும் (வெண்ணீசன்) வியாபாரிகளாக நுழைந்து, பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்த்தி, தமது மதம் மற்றும் கலாச்சாரங்களை புகுத்தி திராவிட சமுதாயத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றவர்களே! இவ்விரு வெளிநாட்டவர்க்கும், பார்ப்பன வர்ணத்தாருக்கும் மக்களின் நலனில் அக்கறை இல்லை.
பார்ப்பன வர்ணத்தாரும் (நீசன்) தன்னை உயர்ந்தவனாக நிறுவி ஆட்சி, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதைக் கொள்கையாகக் கொண்டவன். வெண்ணீசன் என்ற வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் தங்களை உயர்ந்தவர்களாக நிறுவி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதைக் கொள்கையாகக் கொண்டவர்கள்.
நீசன், வெண்ணீசன் இருவருமே ‘எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’ என்ற பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான சர்வாதிகார ஆதிக்க வெறி கொண்டவர்கள். அதனால்தான் ‘நீசன் என்ற பாசிசவாதியின் விந்தில் உதித்த பாசிசவாதி வெண்ணீசன்’ என்று அகிலத்திரட்டு பதிவு செய்கிறது என்பது எனது எண்ணம்.
எது எவ்வாறாயினும், கொக்கு வாயில் நீசனின் விந்து, கொக்கு வயிற்றில் மனிதக் குழந்தை போன்ற கார்ட்டூன் கதைகளை விலக்கிவிட்டுப் பார்க்கும் போது, நீசன் என்பவன் பார்ப்பனர் என்பதும் வெண்ணீசன் என்பவன் நசுறாணி வெள்ளைக்காரன் என்பதும் நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்.
கடந்த அத்தியாயத்தில், விட்ட இடத்திலிருந்து நீசனின் கதையை தொடர்வோம்…
தவம் கலைந்து விட்டதால் தனது ஊரான திருவனந்தபுரத்துக்கே திரும்பி விடுகிறான் நீசன். அங்கு பத்மநாபராக இருக்கும் திருமாலிடம் தவம் கலைந்த விசயத்தையும் தனக்குப் பிள்ளை இல்லை என்ற குறையையும் சொல்லி அழுகிறான். சோதிடரை அழைத்து, ‘உனக்கு பிள்ளை பிறக்குமா?’ என்று அவனிடம் சோதிடம் கேள் என்கிறார் திருமால். நீசன் சோதிடரை அழைத்துக் கேட்க, சோதிடன், “நீ பெற்றாலும் உன் பிள்ளை உலகம் ஆளாது. உன் மருமகன்தான் வையகத்தை ஆள்வான்”, என்றான் சோதிடன். திருவனந்தபுரத்து அரசனான நீசன், தன் மருமகனுக்குப் பட்டம் சூட்டி தேசத்தை ஆட்சி செய்தான்.
இதில் ‘திருவனந்தபுரத்து அரசன்’ நீசன் என்ற குறிப்பும், மருமக்கதாய முறைப்படி திருவனந்தபுரத்து அரசனான நீசன் ஆட்சி செய்தான் என்ற தகவலும் நமக்குக் கிடைக்கின்றது.
‘தவசு நெறி அழிந்து மாநீசன்
அன்று அந்த நீசன் அனந்தபுரம் வந்தனனே’
‘பெற்றாலும் உன் மகவு பேருலகம் ஆளாது
மற்றோர் பெற்று உன் மருகன் ஆளுவான் வையகத்தை’1
ஆகிய அகிலத்திரட்டு வரிகள் மேற்சொன்ன இரு தகவல்களுக்கான சான்று.
வெண்ணீசனுக்கு திருவிதாங்கூர் அரசரைப் பற்றி ஒருவன் எடுத்துரைக்கும் காட்சியில்,
‘வேசை ஒரு தாதி விழி நுதலாள் தன் வயிற்றில்
பேசரிய ஒரு மதலை பிறந்தது காண்’ என்றும்,
‘மாயமுடன் தாசி மகன் தானும் சீமை தன்னை
ஞாயமில்லா வண்ணம் நாடாண்டு இருந்தனனே’2 என்றும் திருவிதாங்கூர் அரசனை இழிவாகச் சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை. இதில் ‘வேசை ஒரு தாதி’ என்பதும் ‘தாசி மகன்’ என்பதும் தரவாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்த பெண்களை இகழ்வதாக உள்ளது.
கதையின் தொடர்ச்சி
வெண்ணீசன் தனது செங்கோமட்டி உலகத்தில் வெள்ளி, பொன் போன்ற அதிக பொருட்களை சேர்த்து, படைகள் கூட்டி, ஆயுதங்கள் சேகரித்து ஆட்சி செய்து வந்தான். அவன் ஒரு வேதம் உருவாக்கினான். முன்பு நீசன் வைத்த முறையைப் போல, வெண்ணீசன் ஆண்டுக்குப் பன்னிரெண்டு மாதம் என்று தனக்கு ஏற்றாற்போல் வைத்தான் (இது ஆங்கில ஆண்டைக் குறிக்கிறது).
நீசன் உருவாக்கியது கொல்லம் ஆண்டு என்றும் வெண்ணீசன் உருவாக்கியது ஆங்கில ஆண்டு என்றும் பொருள் கொள்ளலாம்.
‘அவன்தான் ஒரு வேதம் ஆகமங்கள் தாம் பிரித்து
எவர்தான் எதிரி என்று எண்ணமுற்று மாநீசன்’ – அகிலத்திரட்டு அம்மானை.
இதில் சொல்லப்பட்டிருக்கும் ‘ஒரு வேதம்’ என்பது விவிலியம் என்கிற பைபிளைக் குறிக்கிறது.
‘அரி நமோ என்னும் அட்சரத்தை விட்டு அவனும்
வீரிஆயன் ஆதி என விளம்பினான் வையகத்தில்’ என்ற அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘வீரி ஆயன்’ என்பவரை ஆதிக் கடவுள் என்று நசுறாணி மார்க்கத்தை பின்பற்றும் வெண்ணீசன் பறைசாற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்தின் வேதம் பைபிள் ஆதிக் கடவுளாக குறிப்பிடும் யேசு கிறிஸ்துவை மக்கள் ‘ஆயன்’ என்றும் சொல்வதுண்டு. வெண்ணீசன் பற்றிய மற்றைய குறிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ‘வீரியாயன்’ என்ற சொல்லுக்கு ‘வீரியமான அல்லது வீரமான யேசு கிறிஸ்து’ என்ற பொருளே பொருத்தமாக உள்ளது.
இதே ‘ஆயன்’ என்ற வார்த்தை திருமாலைக் குறிக்கவும் அகிலத்திரட்டு அம்மானையில் பல இடங்களில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, வெண்ணீசன் ஏசு கிறிஸ்துவை(ஆயனை) ஆதி என்று வழங்கினான் என்பது நமக்கு கிடைக்கும் மற்றொரு தகவல்.
கதையின் தொடர்ச்சி
தான் உருவாக்கிய வேதத்தில் மக்களை சேர்க்க, வெண்ணீசன் பணம் மற்றும் பெண்களைக் கொடுத்து மயக்கினான். இது கிறிஸ்தவ மத மாற்றத்தைச் சாடுவதாக அமைந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு மதம் மாறிய நிகழ்வுகளைத்தான்,
‘அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணும் என்று
பணம் மாதைக் கொடுத்து பகட்டினான் மானிடரை’* என்றுரைக்கிறது அகிலத்திரட்டு.
கதையின் தொடர்ச்சி
வெண்ணீசன் திருவனந்தபுரத்தில் நீசன் அரசாளும் செய்தியையும் திருவனந்தபுரத்து வளங்களையும் அறிந்து, திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்துச் சென்றான். அச்சமயத்தில் திருமால் திருவனந்தபுரத்தில் ‘பத்மனாபராக’ இருந்ததால், நீசன் (திருவிதாங்கூர் அரசன்) போரில் வெண்ணீசனை (டச்சுப்படையை) வெற்றி கொண்டான்.
மொத்தத்தில், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வெளிநாட்டு வெள்ளைக்காரன் ஒருவன் திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்து, தோற்றுப் போனான் என்பது நமக்குk கிடைக்கும் செய்தி.
1739 முதல் 1743 வரை நிகழ்ந்த குளச்சல் போரில், டச்சுக்காரர்கள் தோற்று திருவிதாங்கூர் அரசு வென்ற வரலாறைக் கூறுவதாக அமைந்துள்ளது, மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானையின் கதை. இக்காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் மார்த்தாண்ட வர்மா(1729 – 1758). திருவிதாங்கூர் சமஸ்தானத்து வரலாறில் சிறந்த மன்னராகக் கருதப்படும் இவர், தனது மரணப்படுக்கையில், தனக்குப் பிறகு அரியணை ஏறப்போகும் தன் மருமகனுக்கு, கூறிய அறிவுரை, “ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் இருக்கும் நட்பு எவ்வித ஆபத்தான சூழலிலும் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும் மற்றும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவிலும், உதவியிலும் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்”, என்பதாகும்.1
ஆக, மார்த்தாண்ட வர்மாவின்(1729 – 1758) காலத்திலேயே திருவிதாங்கூர் அரசு ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமைக்குள் சென்று விட்டது என்பது தெளிவு.
கதையின் தொடர்ச்சி
நசுறாணி வெண்ணீசனை வென்ற திருவனந்தபுரத்து அரசன் ‘நீசன்’ ‘தன்னை வெல்ல யாரும் இல்லை’ என்ற கர்வத்துடன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அப்போது தனது அரண்மனைக்கு காவலர்களாக சாணார்* சாதி (நாடார்) மக்களை நியமித்து இருந்தான். ஒருநாள் இரவில் சாணார்* மெய்க்காப்பாளர்கள் தூங்கி விட்டனர். அப்போது, மன்னர் தூங்கிக் கொண்டிருக்கும் போது, மன்னரின் சொந்தக்காரர்கள் மன்னரை விஷவாயுவை சுவாசிக்கச் செய்து கொலை செய்து விட்டனர். இதனால் சாணார்* சாதியினர் மீது மன்னர் பெருங்கோபம் கொண்டார். அதனால் சாணார்* சாதி மக்களுக்கு அதிக வரிகளைப் போட்டு, கொடுமை செய்தார். அரசு அதிகாரிகள் சாணார்* சாதி மக்களை அடிமைகளாக நடத்தினார்கள்.
(கதையில் வரும் இந்தப் பகுதியைப் பற்றி தேவையான அளவுக்கு ஆராய்ந்து, முந்தைய அத்தியாயங்களில் விளக்கங்கள் பார்த்திருக்கிறோம். புதிதாக படிப்பவர்கள் முந்தைய அத்தியாயங்கள் (13 & 14) படிக்கவும்)
அகிலத்திரட்டு அம்மானை சொல்கின்ற நீசன் கதையின் இப்பகுதியில் வருகின்ற, 1729 – 1758 வரை ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா இயற்கையாக மரணம் அடைந்தவர்; அவர் கொலை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் அவர்ணர்கள் என்ற ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களும், அடிமை முறையாலும் வரிக்கொடுமையாலும் அவதிப்பட்டனர். தவிர, ‘சாணார் சாதியினர் மீதான அரசின் தனிப்பட்ட பழிவாங்கல்’ என்ற அகிலத்திரட்டின் கூற்றுக்கு முந்தைய அத்தியாயங்களில் தரவுகளுடன் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். எல்லா மக்களையும்போல் சாணார் மக்களும் திருவிதாங்கூர் அரசால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதே நிதர்சனம்.
இனி கதையை விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம்.
பத்மனாபராக இருக்கும் திருமால், சாணார் மக்கள் மீது சுமத்தப்பட்ட வரிச்சுமையினை விலக்கும் படியும், ஊழியம் என்ற கூலியில்லாத வேலை செய்யும் அடிமை முறையிலிருந்து சாணார் மக்களுக்கு விடுதலை அளிக்கும்படியும் திருவிதாங்கூர் அரசருக்கு புத்திமதி சொல்கிறார்.
(கதையின்படியும் நமது ஆய்வின் படியும், இந்நிகழ்வின் போது அரசராக இருந்தவர் ராம வர்மா(1758 – 1798) அல்லது பால ராம வர்மா என்னும் அவிட்டம் திருநாள்(1798 – 1811). ஏனென்றால் அகிலத்திரட்டின் கூற்றுப்படி, அரசருக்கு புத்தி சொல்பவர் முத்துக்குட்டி அல்ல, பத்மநாபராக இருக்கும் திருமால். இவையெல்லாம் முத்துக்குட்டி பிறப்பதற்கு முன்பே நடந்த நிகழ்வுகள் என்பதே அகிலத்திரட்டின் கூற்றாகும்).
அகிலத்திரட்டு அம்மானையில் திருமாலும் நீசனும் உரையாடும் இக்காட்சி, விரிவாகவும் வீரியமுள்ள வார்த்தைகளுடனும் சொல்லப்பட்டுள்ளது.
நீசனுக்கு திருமால் புத்திமதிகளாக உரைத்த அகிலத்திரட்டு அம்மானை வரிகள்:
‘கேளடா சூத்திரா உன் கிளையோடே மாளுதற்கு
வாளடா
சான்றோரை வம்பு செய்து வாறதுதான்
உன்றனக்கும் உன் கிளைக்கும் உள்ளோர்க்கும் நாள் தோறும்
என்றனுக்கும் நன்மை இன்பமுடன் செய்து வரும்
சாணாரை* நீயும் தடி முரண்டு செய்கிறது இன்
வாழ் நாளுக்கு இடறு வருமடா மாநீசா
சாதிதனில் உயர்ந்த சாணார்* அவர்களுக்கு
நீதியுடன் இறைகள் இல்லாமல் நீக்கி வைத்து
காளி வளர்த்து எடுத்த கண்மணிகள் ஆனோர்க்கு
ஊழியமும் தவிரு நீ உலகாள வேணும் என்றால்
அல்லாமல் சான்றோரை அந்நீதமாய் அடித்தால்
பொல்லாத நீசா புழுக்குழிக்கே நீ போவாய்
கற்புள்ள சாணாத்தி* கதறி உன்னை சாபமிட்டால்
தற்புடைய உன் கோட்டை தவிடு பொடி ஆகுமடா
சாணாத்தி* உன்னை சாங்கமாய் நிந்தித்தால்
வாழ் நாள் அழியுமடா உன்றன் வம்சங்கள் தான் முடியும்
தீத்தணலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைத்து உனை நிந்தித்தால்
கோட்டை இடியுமடா கோத்திரங்கள்தாம் முடியும்
நாட்டை முடிக்குமடா நல்ல சாணாத்தி* கற்பு
சேனை அழியுமடா உன் செல்வமது குன்றுமடா
வானம் இடிந்து உன் வம்சத்தை கொல்லுமடா
திடம் பெரிய சாணாத்தி* தினம் உன்னை நிந்தித்தால்
கடல் வந்து உன் சீமைதனை கட்டாய் அழிக்குமடா
ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்கள் இல்லை என்று
ஆக்கமுடன் பறைதான் அடித்து அவனிதான் அறிய
சொல்லாதே போனால் அரசாள மாட்டாய் நீ
நல்லான சான்றோர்க்கு நாட்டு இறை தவிர்த்து
இறை கூலி தானம் இட்டுக் கொடுத்து அவர்க்குத்
தறை மீதில் நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்
(வைக்காட்டால் = வைக்கா விட்டால்’ என்பதன் மருவல்)
குஞ்சரமும் உன்றனுட கொத்தளமும் தாம் இடிந்து
வஞ்சகமாய் உன்றனுக்கு வலிய கர்மம் சுற்றுமடா
கர்ம வியாதிகளாய்க் கண்ட மாலையுடனே
வர்மம் வந்து சிக்குமடா மாநீசா நீ கேளு
தெய்வச் சாணாத்தி* தினமும் உன்னை நிந்தித்தால்
பொய் வகையால் கர்ம போகத்தால் நீ மடிவாய்
என்று நாரணரும் ஏற்ற புத்தி சொல்லிடவே’
புத்திமதிகள்தான் என்றாலும் எச்சரிக்கும் தொனியில் அமைந்துள்ளன வரிகள்.
இதனைத் தொடர்ந்து அரசன் திருமாலுக்குச் சொன்ன பதிலும், ‘ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி’ என்ற ‘வெண்ணீசனின்’ வரலாறும், அடுத்தக் கட்டுரையில்…
தரவுகள்:
- THE TRAVANCORE STATE MANUAL, PART II, SATHASYATHILAKA T.K.VELU PILLAI B.A&BL, FIRST PUBLICATION 1940, PAGE NO: 350
- கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நீசனின் கதைக்கு தரவு: அகிலத்திரட்டு அம்மானை, மூலமும் உரையும், பாகம் ஒன்று, நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு: 2006, பக்கம் எண்: 264 முதல் 286 வரை மற்றும் பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்:107 முதல் 116 வரை.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
*அகிலத்திரட்டு அம்மானை சாணார் சாதி மக்களைப் பற்றிய நூல் என்பதாலும், நான் எழுதும் வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்த காலத்தில் நாடார் மக்கள் ‘சாணார்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டனர் என்பதாலும் அவ்வார்த்தையை எழுத வேண்டியுள்ளது. தவிர இவ்வார்த்தையை பயன்படுத்துவதில் எனக்கோ பதிப்பாசிரியருக்கோ எவ்வித விருப்பமும் இல்லை.