இந்தக் கட்டுரை எழுதத் தொடங்குமுன், கட்டைக்கூத்து என்றால், காலில் மரக்கட்டை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் என்றே நினைத்தேன். அது கொக்கிலிக்கட்டை ஆட்டமாம். கொக்கு கால் ஆட்டம் என்பது மருவி கொக்கிலிக்கட்டை ஆட்டம் என ஆகியிருக்கிறது.

கட்டைக்கூத்து, தெருக்கூத்து போன்ற  நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. எடை குறைவான கல்யாண முருங்கை மரத்திலான அணிகலன்கள் மற்றும் ஆபரணங்களை இவர்கள் அணிவதால் இக்கூத்து கட்டைக் கூத்து என்று அழைக்கப்படுகிறது எனத் தெரியவரும்போது வியப்பாகவே இருந்தது. ஐம்பெருங் காப்பியங்கள் அணிகலன்களின் பெயரைத் தாங்கி நிற்பது போல, இந்தக் கலையும் அணிகலன்கள் கொண்டு அழைக்கப் படுவது வியப்பே! 

இந்தப் பெயர் மக்கள் வைத்த பெயர் தான். கட்டைக் கூத்து என அவர்கள் அழைத்துத் தான் குருகுலம் வைக்கும் போது அதையே பெயராக வைத்ததாக பொ. ராஜகோபால், பேசும் தலைமை நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறார். இவரது தாத்தா ஒரு கலைஞர். தந்தை பொன்னுசாமி வாத்தியார் பிரபல கூற்றுக்கலைஞர். அவர்களது அடியொற்றி இவரும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கூத்துக் கலையில் உலா வருகிறார்.

ஒவ்வொரு கலைக்கும் ஒரு வடிவம் நடைமுறை உண்டு. கட்டைக் கூத்தில் விருத்தம் பாடி, திரை பிடித்து, திரைக்குள் முதலில் துதிப்பாட்டு, இரண்டாவது துதி விருத்தம்,  மூன்றாவது திரை விலகும்போது சின்ன ஒரு பாட்டு. பிறகு பாட்டு எனக் கூத்து தொடங்குகிறது. 

கட்டைக்கூத்துக் கலையில் ஈடுபட்டு வரும் பெண் கலைஞர் திலகவதியின் அம்மா பெயர் பரிமளா. அப்பா பெயர் பழனி. அப்பா, தென்னாட்டு நாரையூர் கூத்து என்று சொல்லக்கூடிய மேடை நாடக கலைஞர். அம்மா, தங்கள் ஐந்து பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசி. பிறந்த ஊர், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் மேட்டு முள்ளுவாடி என்ற சிற்றூர். செப்டம்பர் 13, 1990 இல் நான்கு தங்கைகளுக்கு மூத்த அக்காவாகப் பிறந்தவர் திலகவதி.

இவரின் குடும்பத்தினர் கூத்து நடத்துவதையே தொழிலாகக் கொண்டவர்கள். தாத்தா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா என அனைவரும் இணைந்து தான் இந்த ‘தென்னாட்டு நாரையர் கூத்து’ என்ற கூத்தை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். 

“என்னுடைய குரு உயர்திருவாளர் ராஜகோபால் ஐயா, கூத்துக் கலையைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்தார். அதன்படி, என்னுடைய சித்தப்பா முனுசாமி தான் ஆசிரியர். இந்த பயிற்சி எங்கள் கிராமத்தில் மூன்று மாத காலம் நடைபெற்றது. என் பெரியப்பா பிள்ளைகள் இருவர் அதிலிருந்தார்கள். நானும் அதில் சேர்ந்து இந்த கலையை கற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு வயது பதினொன்று” என்கிறார் திலகவதி.

பெண்கள் ஏன் இந்தக் கலையினுள் வரவில்லை எனக் கேட்டதற்கு, அந்தக் காலகட்டத்தில், கட்டைக் கூத்துக் கலையில் மட்டுமல்ல எந்த நாட்டுப்புறக் கலைகளிலுமே பெண்கள் பெரிய அளவில் சேர்க்கப் படவில்லை. என் குரு ராஜகோபால் ஐயா முயற்சியில் எங்களுக்கு முன்பே சில மேடை நாடகப் பெண் கலைஞர்களைக் கட்டைக்கூத்துக் கலைஞர்களாக உருவாக்க முயற்சி செய்தார். பயிற்சிகள் பல கொடுத்தும், ஐயாவின் முயற்சி வீணானது. காரணம்…ம்… பெண்களின் இடைநிற்றல்களுக்கு என்னென்ன காரணங்கள் உண்டோ அனைத்தும் இங்கும் உண்டு” என்கிறார்.

ராஜகோபால் உதவியால் முனுசாமியிடம் பயிற்சி பெற்ற திலகவதி குழுவினர், ஒரு நாள் ராஜகோபால் அவர்கள் முன் கூத்து நடத்திக் காட்டியிருக்கிறார்கள். அதன்பிறகு, அவர் மீண்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். திலகவதி குழுவினர்களையும் இணைத்து குருகுலம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். குருகுலத்தில், இருபத்தொரு மாணவர்களில் மூவர் மட்டுமே பெண்கள். அவர்களுள் திலகவதியும் ஒருவர். பெண்கள் வயதிற்கு வந்ததும் திருமணம் என்ற உளநிலையில் வாழும் ஊர் அது. ‘வயதிற்கு வந்தபின், மேடையில் ஏறுவதைக் குடும்பம் விரும்புவதில்லை. நீச்சமா (தவறாக) நினைப்பார்கள்’ என்கிறார். அதனால் ஒரு காலகட்டத்தில் இவர் மட்டும் தனியாகப் பயிற்சி பெறும் பெண் எனத் தனித்து விடப்படுகிறார்.

இந்தக் காலகட்டத்தில் சிறுமி திலகவதிக்கு, குருகுலத்தில் கிடைத்த, தரமான உணவு; சீருடை; வெளிநாட்டவருடன் பழகும் வாய்ப்பு போன்றவை மேல் தான் நாட்டம் இருந்திருக்கிறது. கட்டைக்கூத்து என்பது இரண்டாம் இடம் தான் என்ற நிலையில்தான் இருந்திருக்கிறார். டைல்ஸ் போட்ட வீடு என்பதையே மலைப்பாகச் சொல்கிறார். ராஜகோபால் மற்றும் அவரது நெதர்லாந்து மனைவி அன்னா எம்டே இருவரையும் இவர் தாத்தா, பாட்டி என்றே குறிப்பிடுகிறார். அவ்வளவு அன்பை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். ‘அப்பா அம்மா நினைவே வராத அளவிற்கு எங்களை நடத்தினார்கள்’ என்கிறார். புதிதாகத் தோன்றிய உறவு, ‘தாத்தா பாட்டி’யாக நம் உள்ளத்தில் நிறைந்திருப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியானால் அவர்கள் எத்தனை அன்பை அள்ளி வழங்குகிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம். 

திலகவதியும் ‘வயதிற்கு’ வந்தபின் வெளியேறும் சூழ்நிலை உருவானதால், ராஜகோபால், அன்னா எம்டே இருவரும் வருத்தமடைந்திருக்கிறார்கள். இதனால் திலகவதி மேலும் கல்வியைத் தொடர நினைத்திருக்கிறார். அதன்பிறகு இயல்பிலேயே கலையின் மீது நாட்டம் வந்துவிட்டது. திறமையும் இணைந்து இருந்ததால்,  திலகவதி 2010 ஆம் ஆண்டு அக்குருகுலத்தின் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். இத்தனையும் உறவினர் எதிர்ப்பையும் மீறித்தான் நடந்துள்ளன என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ராஜகோபால், காலையில் பள்ளிப்பாடம் என்றால், மாலையில் ஆர்மோனியம், மிருதங்கம், முகவீணை, தாளம், பாட்டு, ஒப்பனை, வசனம், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, அவற்றைத் தைக்கும் தையல் கலை, கணினி வகுப்புகள் எனப் பல பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். திலகவதியும் அனைத்தும் கற்றுப் பட்டம் பெற்றிருக்கிறார்.  இவ்வாறாக முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞராக உருவாகியிருக்கிறார். ‘மற்றவர்களுக்காக, நாம் பெற்ற குழந்தையை நாமே சந்தேகப்படக் கூடாது’ என்று எண்ணிப் பெற்றோர் பரிமளா மற்றும் பழனி பாண்டு இருவரும் அவர்கள் கொடுத்த ஆதரவுதான் இதைச் சாத்தியப்படுத்தியது என்கிறார் திலகவதி.

பார்த்து ஆடுவது; கேட்டு ஆடுவது என உள்வாங்கிப் பாடுவது; அவரவர் திறமைகளை வளர்த்துக் கொள்வது என்பதெல்லாம் அவரவர் தனித்திறமை. தனித்துவமான அடவுகள் ஒவ்வொருவருக்குமென உண்டு என்கிறார் ராஜகோபால். மணிக்கணக்கில் இரவு முழுவதும் நின்று களைப்படையாமல் ஆடுவது என்பது இந்தக் கலைஞர்களுக்கே இருக்கும் சிறப்பு. இயல்பாக இருக்கும் முகத்திற்கும் ஒப்பனை செய்தபின் இருக்கும் முகத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. நடிப்புத் திறமை அவர்களின் உணர்வுகள், உடல்மொழி போன்றவற்றை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.

திலகவதிக்குப் பின் நிறையப் பெண்கள் முன் வந்து கட்டைக்கூத்து கலையை கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். திலகவதி, பட்டம் பெற்ற பிறகு, ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியிருக்கிறார். அவரது படைப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் போராட்டங்கள், விழிப்புணர்வு போன்றவை குறித்து உள்ளன. மாற்றுத் திறனாளி/ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். 

திலகவதி 2014 இல் ஸ்ரீ கிருஷ்ணா கட்டைக்கூத்து குழுவை இணைந்து நிறுவினார். இது பெண்களும் ஆண்களும் இணைந்து இருக்கும் ஒரே கட்டைக்கூத்து குழு. மேலும் கட்டைக்கூத்து கலையைப் பற்றிய பயிற்சிப் பட்டறைகள் (workshops) நடத்தி வருகிறார். ‘குறைந்தபட்சம் வளரும் குழந்தைகள், பிறர் கண்ணைப் பார்த்துப் பேசுமளவிற்குத் துணிவை உருவாக்கினால் போதும். அனைவரும் தெருக்கூத்து கலைஞராக மாறவேண்டியது இல்லை. வெற்றி தோல்வியைப் பற்றிச் சிந்திக்காமல், ஒரு செயலில் இறங்கினால், அது குறைந்தபட்சம் அனுபவத்தையாவது உங்களுக்குத் தரும்’ என்கிறார். 

அரியான் முஸ்கின் தியேட்டர் டி ஷோலே (Arian Mushkin theater) அப்படி என்று சொல்லக்கூடிய ஒரு மிகப்பெரிய தியேட்டரில் மூன்று மாத காலம் பயிற்சி எடுத்திருக்கிறார். பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

கட்டைக்கூத்து தொடர்பாக மூன்று முறை பிரான்ஸ் சென்றிருக்கிறார். மலேசியா, யூ கே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பயணப்பட்டிருக்கிறார். இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறார். 

கூத்து அழிந்து வருகிறது என்று பலர் கூறுகின்றனர். ஆனால், கிராமங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஊரில் இன்று கட்ட கட்டையா, டிராமா கூத்தா எனக் கேட்பார்களாம். மூன்று நாள்கள் நடக்கும் அம்மன் திருவிழாவில், முதல் நாள் காப்புக் கட்டுவார்கள். இரண்டாவது நாள் அம்மன் வீதி உலா வரும்போது, ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நிற்கும். அந்த நேரத்தில் ஒரு ஆண் வேடமிட்டவர், ஒரு பெண் வேடமிட்டவர், ஒரு மிருதங்க காரர் ஒரு வாத்தியம் என நால்வர் இணைந்து நடத்தும் கூத்து தான் தெருக்கூத்து என அவர் கொடுக்கும் விளக்கம் அனைத்தும் எனக்குப் புதிய தகவலாகவே இருந்தன. கட்டைக்கூத்து நடத்தக் குறைந்தது பதினைந்து பேர் வேண்டும் என்கிறார். வாத்தியங்கள் அவ்வளவு பயன்படுத்துகிறார்கள். இருவர் பின்னால் இருந்து தாளம் பாடுவார்கள் என்கிறார். மகாபாரதக் கதைகளை வாழ்வியலுடன், அன்றைய நிகழ்வுகளுடன் இணைத்துக் கொடுப்பதாகக் கூறுகிறார்.

எந்த ஊர் சென்றாலும் ஆண்கள் எங்கள் குழுவின் பெண்களைப் பாதுகாக்கின்றனர் என நம்பிக்கையை விதைக்கிறார். கலை என்பதே எப்போதும் நேர்மையானது தான். ஆனால் இந்த ஆணாதிக்கம் அதைத் தன் கைவசப்படுத்தியிருக்கிறது. எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகள் உண்டு என்றாலும் இத்துறையில் சீண்டல்கள், இளக்காரப் பார்வைகள் போன்றவற்றை எல்லாம் கூடுதலாகப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்பதைத் திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறார். கண்ணியமான ஆண்களும் நிறைய உண்டு. அவர்கள் மூலம் நல்ல நல்ல உதவிகள் கிடைக்கின்றன என்பதையும் இணைத்தே தான் பதிவு செய்கிறார். 

“எதுவாக இருந்தாலும் நம் கையில் உள்ளதை நாம் உணர வேண்டும். இருப்பதை வைத்து அதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். கடனுக்கு அடிமையாகாமல் இருப்பது; வரும் வருமானத்தில் குடும்பத்தை நகர்த்துவது போன்றவை கலைஞர்கள் வாழ்வை இன்னமும் மேல்நிலைக்குக் கொண்டு வரும். ஆனாலும் கலைஞர்கள் முன்னுக்கு வர வேண்டுமென்றால், வருமானம்; அதுவும் நிலையான வருமானம் என்பது எல்லோரையும் போல் கலைஞர்களுக்கும் உறுதி செய்யப்படவேண்டும்” என்கிறார்.

“சில முக்கிய நிகழ்வுகளுக்குக் கட்டைக்கூத்தை மேடையற்ற வேண்டும். நானும் முயற்சி செய்து வருகின்றேன். அரசும் அதை முன்னெடுக்க வேண்டும்” என்கிறார். 

தொடக்கக் கால திரைப்படங்களில் கூத்து என்பது ஒரு பத்து நிமிடம் வந்தது. பின் அதுவே விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த நாடகமானது. அப்படி, கட்டைக் கூத்தை, திரைப்படத்தில் ஒரு காட்சியில் வரும் வகை செய்ய இயலுமா? எனக் கேட்டதற்கு, “முன்பெல்லாம் நாடக கலைஞர்களே திரைப்பட நடிகர்களாக மாறினார்கள். அவர்களுக்கு எங்களின் வலி கொஞ்சமாவது தெரியும். இப்பொழுது திரைப்பட நடிகர்கள் ஏதாவது ஒரு கூத்து ஆடிவிட்டால் நானும் கூத்துக் கலைஞர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். சிலர் மட்டும் ஒரு ஐந்து நிமிடம்  திரைப்படத்தில் காட்ட முயல்கிறார்கள். அது போதுமானது அல்ல. நானும் தொடர்ந்து எதாவது செய்ய இயலுமா என முயல்கிறேன்” என்கிறார்.

எனக்கும் அது உண்மை என்றே தோன்றியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், கூத்துக் கலைஞன் என்றால், “எங்களால் உங்களைப் போல் நடிக்க இயலாது இந்த சுருதியில் பாட இயலாது. நீங்களெல்லாம் மகான் என்பார்கள். ஆனால் அவர்களுக்கான, அப்படிப்பட்ட திறமை படைத்தவர்களுக்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது? எங்காவது வாய்ப்பு கிடைக்கிறதா என்றால்? இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நான் இந்தக் கட்டுரை எழுதவெனக் காணொளிகள் பலவற்றைத் தேடினேன். எந்த கூத்து கலை என்றாலும் அது எதோ ஒரு பொது வெளியில், கோவிலில் இலவசமாகப் பார்க்கும் இடத்தில்தான் நடத்தப் படுவதாகத் தெரிகிறதே தவிர, காசு கொடுத்துப் பார்க்கும் அரங்குகளில் நடத்துவதாகத் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் நிகழலாம். விதிவிலக்குகள் விதியாகாது.

என் உள்ளத்தில் தோன்றியது; அது தவறாகவும் இருக்கலாம். இந்தவகை நாட்டுப்புறக் கலைக்கான கதைகள் எல்லாம் (நான் காணொளியில் தான் பார்த்தேன்) பழைய கதைகளைப் பாடல் வடிவில் கொடுப்பது போன்றே உள்ளன. உரையாடல் பகுதி என்பது குறைவு. அதில்தான் புதிய அன்றாட வாழ்வு குறித்த செய்திகள் பெரும்பாலும் நகைச்சுவையாக வருகின்றன. பொதுவெளியில் நடப்பதால் ஒளி ஒலி வடிவம் தரமாக இல்லை. அதனால் அடுத்த தளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்லும்போது சலிப்பு உருவாகலாம். கலைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இப்படியான கலைகள் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும். 

அரசு தான் முதலில் இவ்வகைக் கலைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கதைக்கருவைக் கொடுத்தால் கூத்துக் கலைஞர்கள் புதுப் புது கதை வடிவத்தை உருவாக்குவார்கள். சந்தை இருந்தால் தானே செய்ய இயலும்! புதுக் கதைகளை யாராவது கேட்டால் தானே அவர்களும் உருவாக்குவார்கள்! அதைத் தொடர்ந்து தனியாரும் உள்ளே வருவார்கள். அரங்குகள் அவர்களுக்கும் கிடைக்கும். கலை அடுத்த கட்டத்திற்கு நகரும். 

கால்மணி நேரம் ஒரு இடத்தில் நம்மால் யாரையும் உட்கார வைக்க இயலவில்லை; ஆனால் இவர்கள் மணிக்கணக்கில் எட்டு பத்து மணிநேரம் உட்கார வைக்கிறார்கள். அந்த மாதிரியான பார்வையாளர்களைத் தக்கவைக்க அரசும், கலைத்துறையும்  இவர்களுடன் பயணிக்க வேண்டும். நடக்குமா? பார்ப்போம்!

இத்துடன் சாதனை படைக்கும் சாமானியரில் முதல் பாகம் நிறைவு பெறுகிறது. விரைவில் இரண்டாம் பாகம்.

காணொளி காட்சிகள்:

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.