‘வாயாடி’, ‘வீம்பு பிடித்தவள்’, ‘ராங்கிக்காரி’ என்று ஈஸ்வரிக்கு இந்த ஊரில் நிறைய பட்டப்பெயர்கள் உண்டு. ஆனால் இந்த ஊருக்கு குணசேகரனை திருமணம் செய்து கொண்டு வந்த புதிதில் எல்லோரையும் போல அவளும் சாதாரண பெண்ணாகத்தான் வந்தாள். வாய் பேசத் தெரியாத அப்பாவியாக.
அப்படி இருந்தவளைக் கொட்டிக்கொட்டி குளவியாக்கியது என்னவோ திருமண வாழ்க்கை கொடுத்த மோசமான அனுபவங்கள்தான்.
குணசேகரனின் தந்தை குடித்துக் குடித்து குடல் வெந்து படுத்த படுக்கையாகிவிட்டார். வீட்டுப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்த குணசேகரனின் அம்மா கஜலக்ஷ்மிக்கு, அப்போதைக்கு அவசரமாக ஒரு வேலைக்காரி தேவைப்பட்டாள்.
அதற்காக அரங்கேற்றப்பட்டதுதான் குணசேகரன் ஈஸ்வரியின் திருமணம். ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் மட்டும்தான் அவளுக்கு கொடுக்கபட்டன. பின்னர் மாடுகளைக் கவனித்துக் கொள்வது, தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது, டீக்கடை வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வது என்று மெதுமெதுவாக அத்தனை வேலைகளும் அவள் தலையில் வந்து விழுந்தன.
குணா பெயின்ட் அடிக்கும் வேலைக்குப் போகிறான் என்றுதான் பெயர். ஆனால் வருமானம் என்று ஒன்றும் கைக்கு வராது. வாரா வாரம் சினிமாவிற்கு மட்டும் வம்படியாக அவளை இழுத்து கொண்டுச் செல்வான்.
வேலை செய்து ஓய்ந்து போயிருக்கும் ஈஸ்வரி களைப்பில் பாதிப் படத்திலேயே உறங்கிவிடுவாள். குணசேகரன்தான் அவளை எழுப்பி அழைத்து வருவான்.
“ஏன்டி படத்துக்கு கூட்டிட்டு வந்தா இப்படித் தூங்கி வழிஞ்சுட்டு இருக்க…? உன்னைய போய் படத்துக்கு கூட்டியாந்தேன் பாரு. என்னைய சொல்லணும்” என்று வழி முழுதும் திட்டிக் கொண்டு வந்தாலும், ஈஸ்வரி ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசியதில்லை.
இந்த நிலையில் வீட்டிற்கு வரும் வழியில் யாராவது குடிகார நண்பர்களைப் பார்த்துவிட்டால் போதும். அவளை அங்கேயே விட்டுவிட்டுக் குடிக்க அவர்களுடன் சென்றுவிடுவான்.
அந்த இருட்டில் நடுநடுங்கிக் கொண்டு தனியாக வீடு வந்து சேர்ந்தவள் ஓர் ஆதங்கத்தில், “ஏன் தனியா விட்டுட்டுப் போனீங்க?” என்று கேட்டுவிட்டாள். அன்று அவன் அவளை கன்னாபின்னாவென்று அறைந்து கீழே தள்ளிவிட்டான். அதனால் உண்டான காயம் இன்றும் அவள் நெற்றியில் வடுவாக உள்ளது. அதன்பிறகு அவள் சத்தமாக மூச்சுக்கூட விடுவதில்லை.
இப்படியான நிலையில்தான் அவள் கருத்தரித்தாள். அதன் பிறகு அவள் வாழ்க்கையில் எல்லாம் மாறிவிடும் என்று கற்பனை உலகத்தில் மிதந்தாள். ஆனால் அவளின் எதிர்பார்ப்புகள் அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தன.
ஒரு பக்கம் ஓய்வில்லாமல் வேலை என்றால் மறுபக்கம் குமட்டல், சோர்வு என்று உடல் உபாதைகள் வேறு. இப்படித் தினம் தினம் அவள் தன் உடலுடனும் வீட்டு வேலைகளுடன் அவள் போராடி வேண்டியிருந்தது. இதனால் ஐந்து மாதத்திற்குப் பிறகும் கருத்தரித்ததே தெரியாத அளவுக்கு அவள் உடல் மெலிந்து ஒடுங்கிப் போயிருந்தது.

அவள் அம்மா வீட்டில் அவளுக்கு அன்பும் கவனிப்பும் கிடைத்ததுதான். ஆனால் ஆதரவு? அப்பா இல்லாத வீடு. மூன்று சகோதரிகள். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாள். அதற்கு மேல் அங்கே அவளால் தங்கி இருக்கவும் முடியாது.
சுகாதார நிலையத்தில் அவள் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கூறி மருந்து ஏற்றி அனுப்பினாலும் பயனேதும் இல்லை. அவளுக்கு எட்டு மாதம் இருக்கும் போது, “ஒரு நல்ல படம் வந்திருக்கு. வா போய் பார்த்துட்டு வரலாம்” என்று குணா வம்பு செய்தான்.
“இல்லங்க… இந்த மாதிரி நேரத்துல வேண்டாங்க” என்று அவள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை.
“புள்ளதாச்சியை போய் இந்நேத்துல படத்துக்கு கூட்டிட்டு போணும்னு சொல்லிட்டு இருக்க. அறிவிருக்காடா உனக்கு” என்ற அவன் அம்மாவின் அதட்டலையும் அவன் மதிக்கவில்லை. பிடிவாதமாக அவளை அழைத்துச் சென்றான். ஈஸ்வரிக்கு வேறு வழி இருக்கவில்லை. அவனுடன் கிளம்பிச் சென்றவள், “தனியா எங்கேயும் என்னை விட்டுட்டு போயிடாதீங்க” என்று முன்ஜாக்கிரதையாக சொல்லியும் வைத்தாள்.
“எப்படி இந்த மாதிரி நேரத்துல உன்னைய விட்டுட்டு போவேன்” என்று அக்கறையாகச் சொன்னவன், இடைவேளைக்குப் பிறகு எங்கே போனான் என்றே தெரியவில்லை.
‘இந்த ஆளு எவன் கூடயாவது குடிக்க போயிட்டானா? சை! இந்த ஆளை நம்பி வந்திருக்கவே கூடாது’ என்று தலையிலடித்து கொண்ட ஈஸ்வரி வேறு வழியின்றி அங்கிருந்து தனியாகக் கிளம்பினாள்.
ஆட்டோ பிடித்துச் செல்லக்கூட அவள் கையில் காசு இல்லை. தாரை தாரையாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நடந்தாள். சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஏதேதோ விசித்திரமான சத்தங்கள் அவளைப் பின்தொடர்ந்து வருவது போன்ற பிரமை வேறு.
‘கர்ப்பமான பொம்பளைங்கள இரத்தக்காட்டேரி துரத்துமாம். வயித்துல இருக்க குழந்தையை காவு வாங்கிடுமாம்’ என்று எப்போதோ எங்கேயோ கேட்ட கதைகள் எல்லாம் அவள் மண்டைக்குள் ஓடின.
விறுவிறுவென்று வேக எட்டுபோட்டு நடந்தவள் பதற்றத்தில் கல்லில் இடித்துத் தடுமாறி அப்படியே குப்புற விழுந்துவிட்டாள்.
உயிரை உருக்கிப் போடும் வலி. வேறு எப்போதும் இது போன்ற ஒரு வலியை அவள் அனுபவித்ததே இல்லை.
அவளின் நாடி நரம்புகளினூடே அந்த வலி பாய்ந்ததில், “ஐயோ… அம்ம்ம்மா…” என்று ஈஸ்வரி அலறித் துடித்தாள்.
சத்தம் கேட்டு ஓடி வந்த சிலர் அவளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அரை மயக்க நிலையில் இருந்தவள், அந்த வலிகளிலிருந்து ஒருவாறு மீண்டு கண் விழித்தாள்.
அவள் அம்மாவும் சகோதரிகளும் அருகே நின்றிருந்தனர். ஆனால் அவள் கண்களோ தன் குழந்தையைத்தான் தேடின.
அருகே குழந்தை இல்லை என்று அறிந்த கணம், “எங்கம்மா என் குழந்தை? அய்யோ! என் குழந்தை செத்து போச்சா” என்று ஈஸ்வரி அந்த மருத்துவமனையே அதிருமளவுக்குக் கத்தி கதறினாள்.
“அழாதமா… அழாத… உன் குழந்தைக்கு ஒன்னும் இல்ல. நல்லா இருக்கா” என்று அம்மாவின் சமாதானங்கள் எதையும் அவள் ஏற்கவில்லை.
“அப்போ எங்கே என் புள்ள, என் புள்ள உசுரோட இருந்தா என் பக்கத்துலதானே இருக்கணும். எங்கே என் புள்ள?” என்று ஆர்ப்பாட்டம் செய்தாள்.
அங்கிருந்த ஆயம்மா, “உன் புள்ள நல்லா இருக்குத்தா. குறை பிரசவங்குறதால உள்ள மூச்சுக் குழாய் எல்லாம் போட்டு வைச்சு இருக்காங்க” என்ற போதுதான் அவள் கொஞ்சமாக அமைதியானாள்.
ஆனாலும் குழந்தையைப் பார்த்தாக வேண்டுமென்று அவ்வப்போது அடம்பிடித்தாள். குழந்தை சீரான உடல்நிலையில் இல்லை என்பதால் தாயைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை.
‘இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆளுதானே!’ என்று குணாவின் மீது வெறியேறியது. அவனைக் கொன்று போட்டாலும் தகும் என்று தோன்றியது. ஆனால் நினைத்ததை எல்லாம் செய்துவிட நம்மால் முடிவதில்லையே.
ஆடி அசைந்து அடுத்த நாள் காலை குழந்தையைப் பார்க்க குணசேகரனும் அவன் அம்மாவும் வந்தனர். “நம்ம குலசாமிதான் புள்ளைய காப்பாத்தி கொடுத்திருக்கு” என்று சொல்லி திருநீறு பொட்டலத்தை கையில் கொடுத்தார் கஜலக்ஷ்மி.
அத்துடன் போயிருந்தால் பரவாயில்லை. சினிமாவிற்குச் சென்றது அவளுடைய தவறுதான் என்று சொல்லி மொத்தத் தப்பையும் அவள் பக்கம் திருப்பிவிட்டார்.
“அவளுக்குத்தான் பொறுப்பு இருந்திருக்கணும்; அவளுக்குத்தான் அறிவு இருந்திருக்கணும்” என்று திரும்ப திரும்பச் சொன்னார். உடன் வந்த உறவினர் கூட்டமும் அதே வார்த்தைகளை அச்சு பிசகாமல் உரைத்தனர்.
இதில் தன்னுடைய தவறு என்னவென்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே மனவுளைச்சலில் இருந்தவளை, இந்த வார்த்தைகள் எல்லாம் இன்னும் அதிகமாகப் பாதித்தன. தான் பெற்ற குழந்தையை உயிருடன் பார்த்துவிட முடியுமா என்று மறுபுறம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது அவள் தாயுள்ளம்.
குழந்தையை கையில் வாங்கிய கணத்தில் அப்படியொரு ஆசுவாசம். ஆனால் மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட குழந்தையைக் கண்ட போது நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது போன்றதொரு வலி.
அந்த நொடி தான்தான் தவறு செய்துவிட்டோமோ என்று அவள் மனமே கூட அவளை நிந்தித்தது. குற்றவுணர்வில் தள்ளியது. ஆனால் இது போன்ற எந்த உணர்வுமே இல்லாமல் அப்பா என்ற உறவு முறையுடன் வந்து நின்றான் குணா.
அந்த நொடி பீரிட்டு எழுந்த சீற்றத்துடன், “என் புள்ளைய தொடாத” என்று தடுத்துவிட்டாள். யார் என்ன சொல்லியும் பிடிவாதமாகக் குழந்தையை அவனிடம் கொடுக்க மறுத்தாள்.
“பெத்த அப்பனகிட்ட புள்ளய கொடுக்க மாட்டுறா, இப்படி எல்லாம் எந்த ஊர்லயாச்சும் நடக்குமா?” என்று கஜலக்ஷ்மி கூப்பாடு போட்டார்.
“என்ன ஈஸ்வரி பேசுற நீ. இதெல்லாம் தப்பு. புள்ளைய கொடு” என்று அவள் அம்மாவே அவளுக்கு எதிராக பேசினார். எதற்கும் அவள் மசியவில்லை.
அன்றுதான் ஈஸ்வரியின் குரல் உயர்ந்தது. அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். ஆனால் அவளின் வைரிக்கயம் சில மாதங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. அவள் வாழ்ந்த வளர்ந்த தாய்வீடே அவளுக்கு அந்நியமானது
“தங்கச்சிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு” என்று ஆரம்பித்த அவள் அம்மா, பேசிப் பேசி அவளை அங்கிருந்து அனுப்பும் வேலைகளைச் செய்தார்.
சுவரில் அடித்த பந்துபோல மீண்டும் அவள் கணவன் வீட்டிற்குத் திரும்பினாள். அதாவது துரத்தப்பட்டாள். இம்முறை அதே அப்பாவி ஈஸ்வரியாக அல்ல.
நடுநிசியில் சாலையில் கையில் காசில்லாமல் நின்றதையும், அன்று அவள் அனுபவித்த வலியையும் என்றுமே அவளால் மறந்துவிட முடியாது. இனி ஒருபோதும் துணைக்கு யாரையும் எதிர்பார்க்கக் கூடாது என்று அப்போதே முடிவு செய்தாள்.
அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். இம்முறை வேலைக்காரியாக இல்லாமல் அதிகாரமாக வீட்டின் பொறுப்புகளைக் கையகப்படுத்திக் கொண்டாள்.

குணசேகரன் குடித்துவிட்டு வந்தால், அவன் வரும் நேரங்களில் பாத்திரங்களை எல்லாம் காலி செய்து மொத்தமாகக் கழுவி வைத்துவிடுவாள்.
“ம்மா எனக்கு சோறு கூட போட மாட்டுறாமா” என்று குணசேகரன் அம்மாவிடம் புகார் வாசிக்க, “அதுக்கு நான் என்னாடா பண்றது. நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு” என்று கஜலக்ஷ்மி ஒருவாறு நிலைமையைப் புரிந்து சாமர்த்தியமாக ஒதுங்கிவிட்டார்.
ஏனெனில் பால் விற்று வரும் காசு, டீ கடை வியாபாரத்தில் வரும் வரவு செலவு எதையும் அவள் யார் கண்ணிலும் காட்டுவதில்லை.
குடிக்கக் காசில்லை என்று கவலைப்பட்ட நிலை போய், ஒரு வாய் சாப்பாடு கிடைக்காதா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான் குணசேகரன். ஈஸ்வரியை மிரட்டிப் பார்த்தான். அடிக்கப் பாய்ந்தான். எதுவும் வேலைக்காகவில்லை.
இரண்டு மூன்று முறை அவன் மண்டை வீங்கியதுதான் மிச்சம்.
இறுதி அஸ்திரமாக, “பசிக்குதுடி… ஏதாவது குடுடி” என்று இரங்கி வரவும்தான், போனால் போகிறதென்று மிஞ்சியுள்ள பழைய சாதத்தை அவனுக்குப் போட்டாள்.
“இந்த மாதிரி அநியாயம் எங்கேயாவது நடக்குமா?” என்று தன் வீட்டில் நடப்பதை கஜலக்ஷ்மி ஊர் முழுக்க புலம்பித் தீர்த்தார். அவரால் முடிந்தது அதுதான்.
“புருஷன்காரனுக்கே சோறு போட மாட்டுறியாமே, இப்படி எல்லாம் பண்ணலாமா?” என்று சிலர் அவள் கடை வாசலில் வந்து நின்று பஞ்சாயத்து வைத்தனர்.
அவள் கொஞ்சமும் அசரவில்லை. “ஏன் நீ வேணா அந்த ஆளை இட்டுனு போய் சோறு போடேன். நான் என்ன வேணானா சொல்றேன்” என்று பதிலுக்குப் பதில் கொடுக்க, ‘இந்த வாயாடி கூட மனுஷன் பேசுவானா?’ என்று அதன் பிறகு யாரும் அவளை எதுவும் கேட்டுக் கொண்டு வருவதில்லை. கேட்டாலும் அவர்களை அவள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
‘வாயாடி’ என்று ஊர் மக்கள் என்னதான் அவளை நிந்தித்தாலும், வியாபாரம் என்று வந்துவிட்டால் ஈஸ்வரி ‘கெட்டிக்காரி’ என்று கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.
கடந்த ஆறு ஆண்டில் அவள் இவ்விதமாகத் தன்னை பழக்கிக் கொண்டாள். இன்னும் கேட்டால், செதுக்கிக் கொண்டாள்.
ஆனால் அப்படியான ஈஸ்வரிக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அது அவள் மகள் நிகாவல்லி. சாதாரண சளியைக் கூட நிகாவின் உடல் தாங்காது. அவளைச் சீரான உடல் நிலையுடன் கவனித்துக் கொள்வதே ஈஸ்வரிக்குப் பெரும்பாடு.
ஆனால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளவே கூடாது என்று அவளின் தீர்மானத்திற்கு நிகாவல்லி மட்டுமே காரணமில்லை.
முதல் பிரசவம் அவளுக்குள் ஏற்படுத்திய தாக்கம். அது கொடுத்த மரண வலி. உடலால் மட்டும் அல்ல. மனதாலும் ஆழமாகக் காயப்பட்டிருந்த ஈஸ்வரியால் இன்னும் அதிலிருந்து முழுவதுமாக மீண்டு வர முடியவில்லை என்பதுதான் உண்மை.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.