The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் மீனா எழுதிய கட்டுரை இது.
பெரியார் திடல் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் சூழ்ந்த பெருங்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அப்பொழுது, ஒரு பெரும் காவல் படை திடலுக்குள் விரைந்தது. அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். ராமன், சீதை, இலக்குவனின் சிறிய உருவ பொம்மைகளைக் கண்டு ஆசுவாசம் அடைந்தனர். மணியம்மையார் இக்காட்சிகளை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார்.
போலீஸ் சென்ற பிறகு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து பிரம்மாண்ட பெரிய உருவப் பொம்மைகளைத் திடலின் நடுவே கொண்டு வந்தனர். 18 அடி உயர ராமன், 17 அடி உயர இலக்குவன், 16 அடி உயர சீதை ஆகியோரின் உருவப் பொம்மைகளைக் கண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். நெருப்பு அம்பை வில்லில் வைத்து ராமன் உருவப் பொம்மையை நோக்கி எய்தார் மணியம்மையார். அருகிலிருந்த மற்ற திராவிடத் தலைவர்களும் அங்கிருந்த உருவப் பொம்மைகளை நோக்கி நெருப்பு அம்புகளை எய்தனர். மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது.


கடும் எதிர்ப்பையும் மீறி, ராம லீலாவை எதிர்த்து முதன் முதலில் ராவண லீலையை, 1974ல் வெற்றிகரமாகத் நடத்தினார் திராவிடத் தலைவர் மணியம்மையார்.
இளம் வயதில் காந்திமதி என அழைக்கப்பட்ட மணியம்மையார், பின்னாளில் திராவிட இயக்கத் தலைவர் அண்ணல் தங்கோவால் ‘அரசியல் மணி’ எனப் பெயர் சூட்டப்பட்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னைவிட வயதில் குறைந்த மணியம்மையாரை ‘அன்னை’ என்றே அழைத்தார். ஆனால் தொண்டர்களுக்கோ அவர் அம்மையானார்.
மணியம்மையார் தனது 20ஆம் வயதில் திராவிட கழகத்தில் இணைந்து பணியாற்றினார். இவர் தமிழ் இலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றவர். இளம் வயது முதல் பல திராவிட மேடைகளில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அவரது சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளன. பிற்காலத்தில் விடுதலை இதழின் நிறுவனராகப் பொறுப்பேற்றார்.
1948ஆம் வருடம் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவரின் சிறைப் பயணம் தொடங்கியது. 1957ஆம் வருடம் சாதி எதிர்ப்பு மற்றும் உணவகங்களின் பெயர்ப் பலகையில் ‘பிராமினாள்’ எனும் பெயரை அகற்றக்கோரிய போராட்டத்தில் மீண்டும் சிறை சென்றார். விடுதலை இதழின் ஆசிரியரான இவர், 1958ஆம் ஆண்டு எழுதிய கட்டுரைக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை ராமசாமி மற்றும் மணல்மேடு வெள்ளைச்சாமி திருச்சி சிறைச்சாலையில் உயிர் நீத்தனர். சிறையில் அடக்கம் செய்யப்பட்ட அவர்களுடைய உடல்களைச் சிறைக்கு வெளியே முறையான வகையில் அடக்கம் செய்ய கடும் முயற்சிகள் மேற்கொண்டார். முதலமைச்சர் காமராஜர் மற்றும் அமைச்சர் பக்தவச்சலத்தை நேரில் சந்தித்து உடல்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார். அமைதியான முறையில் அத்தொண்டர்களின் உடல்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தார்.
எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகளை தணிக்கை செய்வதை கடுமையாக எதிர்த்தார். ஆயிரக்கணக்கான திராவிட இயக்கத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றனர். இப்படித் தொடர்ந்து போராட்டம் செய்தால் கட்சி தடை செய்யப்படும் என முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அதற்கு மணியம்மையார் “தடை செய்து கொள்ளுங்கள், கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு ஒரு கட்சியை நடத்துவதற்கு அவசியம்தான் என்ன?” எனக் கேட்டார்.
பெரியார் கொண்டு வந்த நல திட்டங்களை திறம்பட தொடர்ந்து செய்து வந்தார். மணியம்மையார் மிகவும் கண்டிப்பானவர் என அறியப்பட்டார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
இவர் பெரியாரின் மறைவிற்குப் பிறகு பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளையை நிறுவி, தன் சொத்துகளை அறக்கட்டளைக்கு மாற்றினார். அதன் மூலம் சமூகம் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை உருவாக்கினார்.
வைதீக முறையில் நடைபெரும் திருமணங்கள் படித்த பெண்களையும் வீட்டுக்குள் அடைத்து வைக்க வழிவகுக்கும் என அன்றே கணித்தார். பெண்கள் அரசியலிலும், பொது வாழ்க்கையிலும் பங்கேற்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இறை மறுப்பு, சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை ஆகியவற்றைத் தன் மூச்சாகக் கொண்டிருந்த மணியம்மையார், 1978 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
படைப்பாளர்

மீனா
சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இளநிலை வணிகவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உடையவர். பெண்ணியவாதி. சமூகப் பிரச்னைகள் மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்டவர். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.