கேளடா, மானிடவா – 5

அது ஆண்கள் பெண்கள் இணைந்து படிக்கும் ஒரு தனியார் கல்லூரி. நான் அறிமுகவுரையும் தோழி சிறப்புரையும் ஆற்றப் போயிருந்தோம். உரை முடிந்து, கலந்துரையாடல். பேச்சு காதல், காதல் முறிவு, ஆசிட் வீச்சு பற்றித் திரும்பியது.

minimal line heart background with text space

காதல் தோல்வியில் தற்கொலை, காதலை மறுத்த பெண்ணின் மேல் அல்லது காதலித்து பிறகு காதல் முறிவு செய்யும் பெண்ணின் மேல் வன்முறை நிகழ்த்துவது பற்றிப் பேசுகையில்…
‘ஏன் அவள் போனால் என்ன? விருப்பமில்லாத ஒரு பெண்ணை வற்புறுத்துவது விட, இன்னொரு நமக்குச் சரியான பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்யலாமே’ என்றதற்கு, ‘நாலைந்து வருடம் கஷ்டப்பட்டு ஒரு பெண்ணை ‘கரெக்ட்’ பண்றோம்; அதெப்படி அவளை அப்படியே விடுவது? அவள் எப்படி எங்களை ‘அம்போ’ என்று விட்டு விட்டுப் போகலாம்? அவ தப்புக்கு சரியான தண்டனை தர வேண்டாமா, அதனால்தான் ‘ஆசிட்’ அடிக்கிறோம்’ என்று ஒரு மாணவர், அப்படியே இளைஞர்களின் கண்ணோட்டத்தை மனம் திறந்தார்.|

‘நீங்கள் கேட்ட காலேஜில் இடம் கிடைக்க வில்லை, என்ன செய்தீர்கள்?’

‘பரீட்சையில் ஃபெயிலாகிறீர்கள். என்ன செய்வீர்கள்?’

‘நீங்கள் ஆசையாகக் கேட்ட பைக் அம்மா அப்பா வாங்கித் தரவில்லை. என்ன செய்வீர்கள்?’

‘நீங்கள் ஓட்டு போட்டு உட்கார வைக்கிறீர்களே, அரசியல்வாதி; அவர் தன் கடமை தவறினால் என்ன செய்கிறீர்கள்?’

வேற காலேஜில் இடம் தேடினீர்கள்; மறுபடி பரீட்சை எழுதினீர்கள்; அம்மா அப்பாவிடம், அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கையில் திரும்பவும் கேட்பீர்கள்; அடுத்த தேர்தலில் அதே அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போடமாட்டீர்கள் அல்லது போராட்டத்தை முன்னெடுப்பீர்கள்…



ஏன் ஒரு பெண் காதலை மறுத்ததும், வன்முறையை நிகழ்த்துகிறீர்கள்? காதலித்து பின் ஏதோ ஒரு காரணத்திற்காக மறுத்ததும்
ஆசிட் அடிக்கிறீர்கள்???
இது சரிதானா?

கனத்த மௌனம்…


சிறு வயதிலிருந்தே, நமது பிள்ளைகள் தோல்விகளை எவ்வாறு கையாள வேண்டும் எனப் பழக்கப்படுத்தப் படவில்லை. எதிலும் வெற்றியடைந்தே தீர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும்; வெளிப்படுத்தப்படுகிற காதலை, எதிராளியின் மனம் நோகாமல் எப்படி மறுக்க வேண்டும் அல்லது ஏற்க வேண்டும்; பின்னும் அந்த உறவை மரியாதை குறையாமல் எப்படிப் பேண வேண்டும்; எதையும் யாரும் கற்றுத் தரவில்லை, தானாகவும் இல்லை, சமூக ஊடகமோ முற்றிலும் எதிராகச் செயல்படுகிறது.

நட்பைப் போலவே, காதலை அணுகும் முறை வேண்டும். காதலைச் சொல்ல, கடிதத்தைவிடச் சிறந்த முறை எதுவாக இருக்க முடியும்? ஆனால், கடிதம் கொடுத்தால், செருப்பாலடிக்கச் சொல்கிறது சினிமா. மூஞ்சியில் எச்சில் துப்பச் சொல்கிறது. பதிலுக்கு இவன்களை கையைப் பிடித்து இழுக்கச் சொல்கிறது. அறையச் சொல்கிறது. எந்தப் படத்திலாவது, இதற்கு மாற்றாக, இதுவரை ஏதாவது காட்சி இருக்கிறதா?

படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், படிக்காதவர்களும் இவற்றை எல்லாம் இவ்விதம் தப்பிதமாகக் கற்றுக் கொள்வது சினிமா எனும் சமூக ஊடகங்களிலிருந்துதானே?!

அவற்றைச் சரி செய்யாமல், இவற்றை எப்படி சரியாக்க முடியும்?

இந்தியர்கள், பெண்களைத் தெய்வம் என்று சொல்கிறார்கள்; தெய்வங்களைக் கால் அமுக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களை விளக்குமாறு வைத்துப் பெருக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களைச் சமைக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களைத் துவைக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களை அடிக்கிறார்கள்; தெய்வங்களை ‘வன்புணர்வு’ம் செய்கிறார்கள். இவை எல்லாம்தான் ஆகச் சிறந்த முரண்கள்!!!

பொதுவாக நாம் எல்லாருமே – நமக்கு நாமே முரணாக வெளிப்படுகின்ற விஷயங்களைப் பார்ப்போம். நாம் நமக்குள்ளாகவே சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக முன்னுக்குப் பின் முரணாக இருந்தால், எப்படி எதையும் சீர் செய்ய முடியும்?

நாம் நமது தவறுகளை எல்லாம் சரி’ செய்வதற்கு முன்னால், சரிகளை எல்லாம் இன்னும் சரியாகச் செய்தாலே போதுமானது.

செய்ய வேண்டியவை என்னென்ன?

  • குழந்தைகளிடம் இந்த வயதில் இதைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்போம்; எந்த வயதில் தெரிந்து கொள்ள வேண்டும்; எப்படித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்லாமல் விட்டுவிடுவோம்; நம் குழந்தை இதை இதை அறிய எது சரியான பருவம், அதை நாம்தான் வரையறுக்க வேண்டும்.
  • இந்த வயதில் காதலிக்கக் கூடாது என்றால் எந்த வயதில் காதலிக்கலாம் என்ற வரையறையைத் தெளிவாகத் தர வேண்டும்.
  • காதலிக்க மறுத்த பெண்ணை ஆசிட் அடிக்கக் கூடாது என்கிறோம். அப்படியானால் தோல்வியை எப்படி எதிர்கொள்வது என்பதை சின்ன வயதிலிருந்தே கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
  • பெண்களை இடிக்கக் கூடாது, மார்பைப் பார்த்துப் பேசுவது இழிவு என்கிறோம். எனில், கண்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே பழக்கி இருக்க வேண்டும். பெண் என்பவள் வெறும் பாலியல் உறுப்புகளல்ல, சக உயிர் என்கிற மரியாதையுடன் பார்க்க, சமூகத்தின் ஒவ்வொருவரும் கற்றிருக்க வேண்டும்.
  • கடற்கரையில், பஸ் ஸ்டாண்டில், ரயிலில் காதலிக்கக் கூடாது என்றால், எங்கு எப்போது காதலர்கள் காதலிக்க வேண்டும் என்கிற முறைமையைச் சொல்ல வேண்டும்.
  • பொதுவில், தெருவில், மரத்தடியில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்றால், ஒவ்வொரு சாலையிலும் மிதமான இடைவெளியில் தரமான சுத்தமான கழிவறைகள் வேண்டும்.
  • இங்கு குப்பை கொட்டக் கூடாது என்றால், குப்பை கொட்டுவதற்கான வசதி எங்கு செய்யப்பட்டுள்ளது, குப்பை கூடை வைக்கப்பட்ட விவரங்கள் வேண்டும்.
  • சிகரெட் பிடிக்கக் கூடாது என்று அரசு சொல்கிறது, சமூக நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்; ஆனால், அதைத் தயாரித்து கடைகளில் எங்கும் கிடைக்கும்படி விற்றுக்கொண்டிருக்கிறோம்.
  • குடிக்கக் கூடாது என்கிறோம்; அரசே மதுவை விற்பனை செய்கிறது. குடித்து விட்டு வண்டியோட்டக் கூடாது என்கிறோம். மதுக் கடைகளுக்கு வரும் மக்கள் எப்படி வருவார்கள், எப்படி போவார்கள் என்பதை சிந்திக்க மறுக்கிறோம்.
  • வேகமாக வண்டி ஓட்டக் கூடாது என்கிறோம். எந்தளவு வேகத்தில் ஓட்ட வேண்டுமோ அந்தளவு வாகனங்களின் வேகத்தை, வாகனங்கள் தயாரிக்கும்போதே இந்திய ஜனத்தொகைக்கேற்ப இந்தியத் திருநாட்டின் சாலைகளின் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு, இந்திய மன இயல்புகளுக்குத் தக்கவாறு, இவ்வளவு வேகம் போதுமானது என்று வடிவமைத்துவிட்டாலே போதுமே…
  • லேஸ், பாக்கெட் ஃபுட், ஃபாஸ்ட் புட் உணவுகள் தவறென்றால், அவை தடை செய்யப்பட வேண்டும்; சரியான சத்தான உணவுகள் அதிகம் கிடைக்க வேண்டும்.
  • போதை மருந்துகள் கூடாதென்றால், அதன் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும். இல்லை நாங்கள் எல்லாம் விற்போம்; மக்கள்தான் அறிவுடன் அறவுணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களுக்கான அறிவும் கல்வியும் மருத்துவமும் தடை இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • ஒரே ஒரு வருடம் ஊழலாகக் கிடைக்கும் காசை எல்லாம், மக்களால் கிடைத்த காசை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்தாலே போதும்; மேற்சொன்ன மக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட முடியும்.
  • பெண்கள், குழந்தைகளுக்கு வீடும் பாதுகாப்பில்லை, வெளியும் பாதுகாப்பில்லை எனில், ஆண் குழந்தைகளைச் சரியாக வளர்த்த வேண்டும். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தரும் கவனங்களையும் ஜாக்கிரதை உணர்ச்சிகளையும் போல இரு மடங்கு கவனம் ஆண் குழந்தை வளர்ப்பில் தரப்பட வேண்டும்.
  • பொதுவாக வீட்டை விடவும் அதிகமாகப் பொது வெளியிலேயே திரிய பழக்கப்படுகிற ஆண் பிள்ளைகளுக்கு, பப்ளிக் மேனர்ஸ் என்கிற பொது நடத்தை கற்பிக்கப் படாததாலேயே, மற்றவர்கள் அதிகமான பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது. 5, 6 வயதிலிருந்து பையன்களை வெளியே விளையாட, கடைக்குப் போக, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு என வெளியே அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பப்படும் பையன்கள் எத்தனை பேர் ‘பொது நடத்தை’ கற்பிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறார்கள்? வீட்டில் தொல்லை பண்ணாமல், வெளியே போனால் சரி, என்கிற மனப்பான்மையோடுதான் பெரும்பாலும் அனுப்பப் படுகிறார்கள். வீட்டை விடவும் வெளியில் பொது ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையுடன் வளர்த்தப்பட வேண்டும்.
  • இந்த கொரானா காலத்தில் கூட, பெருந்தொற்று உயிரையே போக்கக்கூடும் என்கிற நிலையில் கூட, பொது வெளியில் வரிசையில், மிதமான இடைவெளிவிட வேண்டும் என்கிற நிலையில் கூட, இடித்துத் தள்ளிக்கொண்டு போவது, பள்ளிக் காலத்திலிருந்தே, யாரும் பொது நடத்தைகளைக் கற்காததைத்தான் காட்டுகிறது.
  • இதையேதான் பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்திலும், பொதுவெளிக்கு வரும் அறிமுகம் இல்லாத எந்தப் பெண்களையும், பேருந்திலும் ரயிலிலும் இடித்துத் தள்ளிக்கொண்டு போனதும் காட்டுகிறது.
  • ஆண்கள், பெண்களையும் குழந்தைகளையும் வெறும் உறுப்பாக மட்டும் பார்க்கக் கூடாது; அது தவறு என்றால், பெண்களை வெறும் உறுப்புகளாக மட்டுமே சித்தரிக்கின்ற அத்தனையும் சரி செய்யப்பட வேண்டும்; அல்லது பெண்கள் சகவுயிர்கள் என்கிற மரியாதையுடன் அன்பாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.
  • பெண்களை மோசமாகவே சித்தரிக்கும் அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத, யூடியூபில் கொட்டிக் கிடக்கும் எண்ணிலா காணொலிகள்… இந்தக் காணொலிகளை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாதா?
    நடிகர் விஜயிடம் விழா மேடையில் ஒரு பெண் தப்பிதமாக நடந்து கொள்ள, ஒரு மணிநேரத்தில், ஒரே ஒரு மணி நேரத்தில் அந்த வீடியோ அழிக்கப்பட்டது. இது மட்டும் எப்படி முடிந்தது? இது முடிகிறது எனில், எல்லாமே முடியும்தானே? ஏன் இன்னும் முடியாமலிருக்கிறது? யார் காரணம்?

    இதை இன்னொரு வகையாகவும் சரி செய்யலாம். இருளைப் போக்க ஒளியை ஏற்றுவது போல, எண்ணிலடங்கா தீய காணொலிகளை, சரியான காணொலிகளை அதிகமாக்குவதன் மூலமும் போக்கலாம்.

எதையும் கேள்வி கேள்!

படைப்பாளரின் முந்தைய கட்டுரை

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.