“இரவு இறுதிக் காட்சி, வழக்கம் போல் சுசீலாவைப் புதைப்பதில் நிறைவு பெற்றது. இந்தியாவில் ‘ஹத யோகிகள்’ வழக்கமாக செய்யும் வித்தை தான் என்றாலும், சுசீலா யோகி அல்ல. சாதாரணப் பெண், ஆனால் உடல் வலுவும், மனத் துணிவும் கொண்ட பெண். வங்காளப் புலிகளை அடக்கி அவற்றுடன் விளையாடுவது, மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் எழுந்து வருவது, குதிரையேற்றம் என்று பல வித்தைகளை செய்பவர்.” என்று 1919ம் ஆண்டில் தி இந்து நாளிதழ் சுசீலாவைப் பற்றி எழுதி இருந்தது. வெற்றியின் உச்சத்தில் நின்று கொண்டு இருந்தார் சுசீலா சுந்தரி. இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண்.

1879ம் ஆண்டு வங்காளத்தின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒன்றான ராம்பாகன் அருகில் பிறந்தார். அந்தக் காலக்கட்டத்தில் “வீழ்ந்த பெண்களின் புகலிடமான” ராம்பாகனிலேயே வளர்ந்த சுசீலா, தி கிரேட் பெங்கால் சர்க்கஸில் பணி புரிந்த அபனிந்திர கிருஷ்ண பாசுவின் கண்களில் விழுந்தார். அவரது அசாத்திய திறமை கண்டு, அது வரை பெண்களின் பங்கேற்பு இல்லாத சர்க்கஸ் உலகில் புதிய முயற்சியாக, சுசீலாவை வேலைக்கு சேர்த்துக் கொண்டார் பெங்கால் சர்க்கஸின் உரிமையாளர் பிரியநாத் போஸ். ஜிம்னாஸ்டிக்சும், குதிரையேற்றமும், டிரபீசும் சுசீலாவுக்கு கற்றுத் தரப்பட்டன. நான்கு அடி ஆழத்தில் குழிவெட்டி அவரைப் புதைத்து, பத்து நிமிடங்களுக்குப் பின் வெளியேற்றிக் காண்பித்தனர்!

கொஞ்சம் கொஞ்சமாக வித்தைகள் கைக்கு வர, சர்க்கஸ் செல்லும் இடம் எல்லாம் சுசீலாவும் பயணித்தார். 1896ம் ஆண்டு ரேவா நாட்டு தர்பாரில் சர்க்கஸ் வித்தைகளை குழு காண்பிக்க, அதில் மயங்கிய மன்னர், தன் இரு புலிகளை பரிசாக வழங்கினார். போஸின் மனதில் புலிகளைக் கண்டதும் முதலில் தோன்றியவர்- சுசீலா தான்! லட்சுமி, நாராயணன் என்று பெயரிடப்பட்ட அந்தப் புலிகளுடன், சுசீலாவின் பயணம் துவங்கியது. மெதுவாக அந்த வங்காளப் புலிகளை அவற்றின் கூண்டுகளுக்குள் சென்று பழக்க ஆரம்பித்தார் சுசீலா.

கூடவே ஒரு சிங்கமும் சேர்ந்து கொள்ள, இரண்டு புலிகள் மற்றும் ஒரு சிங்கத்துடன் வித்தைகள் செய்ய கற்றுக் கொண்டார். அவற்றுக்கு உறும, நிற்க, உட்காரக் கற்றுத் தந்ததுடன், அவற்றின் வாய்களைப் பிளந்து கைகளை உள்ளே வைத்தும், அவற்றுடன் மல்யுத்தம் செய்தும் 1901ம் ஆண்டு முதல் வித்தை காட்டத் துவங்கினார். வங்காளமே வாய் பிளந்தது. நவம்பர் 21, 1901ம் தேதியிட்ட “தி இங்கிலிஷ்மேன்” நாளிதழில், “கைகளில் சாட்டையோ, அல்லது வேறு எந்த உபகரணமோ இல்லாமல் கூண்டுக்குள் நுழையும் சுசீலா, புலிகளுடன் மிக சாதாரணமாக விளையாடுவது பார்க்கவே அச்சமூட்டுவதாக உள்ளது”, என்று எழுதியது.

சும்பன், நிசும்பன் புலிகளுடன் சுசீலா சுந்தரி, wikipedia

04.01.1902 அன்று வெளிவந்த ‘முசுலிம் கிரோனிக்கில்’ எனும் நாளேடு இன்னும் ஒரு படி மேலே போய், “புடவை கட்டி, செருப்பு அணிந்து, வீடுகளுக்கு வெளியே எங்கும் தலைகாட்டாத மெல்லிய மனம் கொண்ட வங்காளப் பெண்களில் ஒருவர், இத்தனை துணிவுடன் ஆள்-தின்னும் புலிகளை வீட்டு நாய்களைப் போல் பாவித்து விளையாடுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது” என்று சுசீலா பற்றி எழுதியது.

அழகாகச் சென்று கொண்டிருந்த சுசீலாவின் வாழ்க்கையில் புயல், ஐரோப்பிய நாடக தயாரிப்பாளர் ஒருவர் மூலமாக வீசத் துவங்கியது. சர்க்கஸில் பிரபலமாகும் போதே, உடன் பணிபுரிந்த “கிழக்கத்திய நாடுகளின் ஹூடினி” என்று புகழப்பட்ட கணபதி என்ற சாகச வீரருடன் இணைத்து பேசப்பட்ட சுசீலா, ஐரோப்பிய கனவில் தயாரிப்பாளருடன் செல்ல போஸிடம் அனுமதி கேட்டார். ஏதோ தவறு என்று உள்ளுணர்வு சொல்ல, அனுமதி மறுத்தார் போஸ்.

சுசீலாவின் துணிவு இறுதியில் வெல்ல, தன் வாழ்நாள் முழுக்க ஈட்டிய பணத்துடன், ஐரோப்பிய தயாரிப்பாளரைத் தேடி சர்க்கஸில் இருந்து ஓட்டம் பிடித்தார். சிறிது நாள்கள் அவரது பணத்தை செலவழித்த அந்தத் தயாரிப்பாளரோ, பணம் கரைந்ததும், ஐரோப்பாவுக்கு சுசீலா அறியாமல் கப்பல் ஏறிவிட்டார். திணறிப் போனார் சுசீலா. வேறு வழி இன்றி மீண்டும் போஸைத் தேடி வந்தார். புலிகள், சிங்கத்தின் மேல் அமர்ந்து விளையாடிய சுசீலாவை, துர்க்கை அன்னையின் மறு உருவமாகப் பார்த்த வங்காளத்தின் பொது மக்கள், சுசீலாவின் இந்த முடிவுகளால் அவர்மீது கடும் கோபம் கொண்டனர். முக்கியமாக, வங்காளத்தின் இந்து அமைப்பினர் இவரது சர்க்கஸ் வித்தைகளை, தி கிரேட் பெங்கால் சர்க்கஸை புறக்கணிக்குமாறு பொது மக்களுக்கு வலியுறுத்தி வந்தனர்.

பிரமிடு அமைப்பு, வலது பக்கம் நடுவே சுசீலா, risingbengal.in, https://risingbengal.in/history-of-india/circus-daughter-sushila-sundari-and-lakshmi-narayan-play

தன் பெரும் பிரியத்துக்குரிய மாணவி வேலை இன்றி தெருவில் நிற்பதை தாங்கிக் கொள்ள முடியாத போஸ், மீண்டும் சுசீலாவைப் பணியில் அமர்த்தினார். ஆனால், முதலாளியான போஸினால் அத்தனை எளிதாக பணியாள் சுசீலாவின் துரோகத்தை மன்னிக்க முடியவில்லை. விளைவு- சுசீலா ஏற்கனவே வாங்கிய சம்பளத்தில் பாதி மட்டுமே தர ஒப்புக் கொண்டார். சிங்கப்பூர், பெனாங்கு, ஜாவா, பர்மா, சிலோன் என தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வருடம் ஒரு முறை பயணித்து சர்க்கஸ் நிகழ்த்தியது தி கிரேட் பெங்கால் சர்க்கஸ்.

ஒரு கட்டத்தில் புலிகளில் ஒன்று இறந்துவிட, ஃபார்ச்சூன் என்ற புலியை வாங்கினார் போஸ். அதிகம் பழக்கப் படாத ஃபார்ச்சூன், சுசீலாவை சர்க்கஸ் காட்சி ஒன்றின் போது கடுமையாகத் தாக்கிவிட, தன் மீதி வாழ்நாளை நடக்க இயலாமல், படுக்கையிலேயே கழித்தார் சுசீலா. அதில் இருந்து மீளாமலேயே, 1924ம் ஆண்டு தன் 45வது வயதில் மாண்டுபோனார் சுசீலா.

எந்த சிங்கம் புலிகள் மீது அதீத நம்பிக்கையும், அன்பும் வைத்து இருந்தாரோ, அவற்றின் மீதான அளவு கடந்த அன்பும், அசட்டையும் அவரது உயிரைக் குடித்து விட்டது. துணிவின் மறு உருவமாக, இன்றும் வங்காளத்தின் கதாநாயகியாக நினைவுகூரப் படுகிறார் சுசீலா சுந்தரி.

முந்தைய பகுதிகள் இங்கே:

கட்டுரையாளர்

நிவேதிதா லூயிஸ்

ஹெர் ஸ்டோரிஸின் துணை நிறுவனர் மற்றும் ஹெர் ஸ்டோரிஸ் இணைய இதழின் ஆசிரியர். இவர் சென்னையைச் சேர்ந்த வரலாற்றாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், தொல்லியல் ஆர்வலர், பயணக் காதலர்.