ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் நஜிபுல்லா ஏப்ரல் 1992 வரை ஆட்சியில் இருந்தார். சோவியத் யூனியன் ஆக்கிரமிப்புப் போராட்டம் உடன்படிக்கையில் முடிந்ததால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு உதவிகளும் ஆதரவும் நிறுத்தப்பட்டது. நஜிபுல்லாவும் முஜாஹிதீன்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தினார்.

டாக்டர் நஜிபுல்லா Pic: tolonews

எனினும், ஆக்கிரமிப்புப் போர்களினாலும் அரசியல் சூழ்ச்சிகளினாலும் சபிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானினுள் ஒவ்வொரு நாளிலும் மோதலின் தீவிரம் அதிகரித்தது. ஆப்கானிஸ்தான் பழங்குடி, பல இன, பன்மொழி சமூகம் பிரிவினைவாதம், ராணுவப் பிழைகளால் போர் அராஜகத்தில் நழுவியது. நாடு போர்க்களங்களின் போராக மாறியது. அங்கு எல்லோரும் அனைவருக்கும் எதிராக இருந்தனர்.

ஆட்சியிலிருந்த ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA), சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பல பிரிவுகள், புதிதாகத் தோன்றிய போராளிக் குழுக்கள் அனைத்தும் சேர்ந்து தலைநகருக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாட்டின் பிற இடங்களிலும் கட்டுப்பாட்டிற்காகப் போராடின. இவற்றினிடையே ஐ.நா. சபையினதும் அண்டை நாடுகளினதும் மத்தியஸ்த முயற்சிகள் இருந்தபோதிலும், ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அதிகாரப் பகிர்வு குறித்த எந்தவோர் அரசியல் ஒப்பந்தங்களுக்கும் போதுமான ஆதரவை வெல்வது சாத்தியப்படவில்லை.

சர்வதேச சமூகத்தின் முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் அதிகாரப் பகிர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஓர் இடைக்கால அரசாங்கம் பல முஜாஹிதீன் குழுக்கள், வாட்டன் கட்சி, முன்னாள் கம்யூனிஸ்டுகளிடையே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், நஜிபுல்லாவின் அரசாங்கம் சிதைந்து போனதால் ஐ.நா திட்டத்தின்படி எல்லாம் சரியாக நடக்கவில்லை. அப்துல் ரஷித் தோஸ்தம் ஆட்சியைக் கைவிட்டு, கிளர்ச்சி ராணுவ அதிகாரிகளுடனும் சில முக்கிய கெரில்லா கட்சிகளின் தலைவர்களுடன் கூட்டணி அமைத்தார். மற்றொரு சக்திவாய்ந்த முஜாஹிதீன் தலைவர் அஹ்மத் ஷா மசூத் வடக்கு ஆப்கானிஸ்தானில் கூட்டணி அமைத்து நடுநிலை அரசாங்கத்தின் ஐ.நா. திட்டத்திற்கு அப்பால் சென்றார்.

அஹமது ஷா மசூத் Pic: thoughtco.com

முன்னர் நஜிபுல்லாவுடன் கூட்டணி வைத்திருந்த சில தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அஹமது ஷா மசூத்தின் படைகள் காபூலுக்குள் நுழைந்தன. மற்ற முஜாஹிதின் படைகளும் நகரத்திற்குள் நுழைந்து நிறுவனங்களையும் சுற்றுப்புறங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. நஜிபுல்லாவின் அரசாங்கத்திலிருந்து பல பிரிவுகள் மசூத்தின் படைகளில் சேர்ந்தன. மற்றவர்கள் மற்ற பிரிவுகளில் சேர்ந்தனர் அல்லது வெறுமனே தப்பி ஓடிவிட்டனர்.

மசூதின் படைகளுக்கும் குல்புதீன் ஹிக்மத்யரின் ஹிஸ்ப்-இ இஸ்லாமி படைகளுக்கும் இடையே கிட்டத்தட்ட உடனடியாக மோதல் தொடங்கியது. மசூதின் படைகள் தோஸ்தத்தின் ஜுன்பிஷ் தளபதிகளுடன் இணைந்து ஹிஸ்பி-இ இஸ்லாமி கோட்டைகளில் ராக்கெட்டுகளையும் பீரங்கிகளையும் ஏவியது. அதே நேரத்தில் ஹிஸ்ப்-இ இஸ்லாமி விமான நிலையம், மைக்ரோரேயன், அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகள், பாதுகாப்பு அமைச்சகம், காபூல் காவல்படை ஆகியவற்றைத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் மட்டும் ஹிஸ்பி-இ இஸ்லாமியின் ராக்கெட் தீப்பிடித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் 3,000 என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது ஓர் உதாரணம் மட்டுமே, நாளாந்தம் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.

மோதலில் பல்வேறு தரப்பினரின் கண்மூடித்தனமான ராக்கெட், குண்டுவீச்சு தாக்குதல்கள் பற்றிய பகுப்பாய்வுகளை உள்நாட்டு ஆய்வாளர்கள், கல்வியிலாளர்கள் சமூகம் சுயாதீனமாக மேற்கொண்டுள்ளது. ’ஆப்கானிஸ்தான் நீதி திட்டம்’ என்ற பெயரில் போர்க்குற்றங்களையும் காணாமலாக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் தகவல்களையும் சுயாதீன உள்நாட்டு ஆய்வாளர்கள் நேர்மையாகத் தொகுத்துள்ளார்கள். சுயாதீன ஆய்வாளர்கள் சண்டைகள் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று சாட்சியங்களையும் தப்பிப் பிழைத்து உயிர்வாழ்கின்றவர்களையும் நேரடியாகக் கண்டு தகவல்களைச் சேகரித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டிலும் ஒவ்வொரு மத அடிப்படைவாதக் குழுக்களும் மேற்கொண்ட மோதல்கள், அவர்கள் பயன்படுத்திய கனரக ஆயுதங்கள், காணாமலாக்கப்பட்டவர்கள், தூக்கிலிட்டும், துப்பாக்கியாலும் கொல்லப்பட்டவர்கள், கொள்ளை, பாலியல் வன்புணர்வுகள், கூட்டுப்பாலியல் தாக்குதல்களின் தகவல்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நேரடிச் சாட்சியங்கள் வழியாகப் பகுப்பாய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவை முழுமையற்றதல்ல என்பதே ஆப்கான் நீதி திட்ட சுயாதீன ஆய்வாளர்களின் கருத்து. இவ்வாறு நடந்த அநீதிகள் பற்றிய எந்த முறையான முறைப்பாடுகளும் இல்லை. இதுவரையில் எந்தவித வழக்குகளும் இடம்பெற்றதில்லை.

1992 ஏப்ரல் 26 அன்று, பாகிஸ்தானில் தலைவர்கள் பெஷாவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ஓர் இடைக்கால அரசாங்கத்தையும் தேர்தல்களுக்கான கால அட்டவணையையும் நிறுவியது. மசூத் பாதுகாப்பு அமைச்சரானார். இருப்பினும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அரசின் (ISA) அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முஜாஹிதின் கட்சிகள் ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொண்ட நேரத்தில் (ஈரான் ஆதரவு ஷியா கட்சிகள் விலக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து சில மோதல்களுக்குக் களம் அமைந்தது) தலைநகரிலும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டி பிரிவுகள் ஏற்கனவே ஒரு பிடியை நிறுவிவிட்டன. காபூலுக்கு வெளியே பிரிவுகள் தங்களைப் பிரதிபலித்தன. ஏனெனில் தளபதிகள் பிரதேசங்களைக் கைப்பற்றி, சோதனைச் சாவடிகளை நிறுவி, சட்டமாகச் செயல்பட்டனர்

விதிவிலக்காக சில நகர்ப்புறங்களில், குறிப்பாக ஹெராட், மசார்-ஐ ஷெரீப் ஆகிய பிரதேசங்களில் ஒரு செயல்படும் நிர்வாகம் பராமரிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அரசு காலத்தில் மசூத்தின் நோக்கம் அவருக்கு எதிராகப் போராடும் படைகளைத் தோற்கடிப்பதாகும் (இவை ஹிக்மத்யாரின் ஹிஸ்ப் இஸ்லாமியுடன் தொடங்கியது, பின்னர் ஷியா கட்சி ஹிஸ்ப்-ஐ வஹ்தத் அத்துடன் ஜெனரல் தோஸ்தத்தின் ஜுன்பிஷ்-மில்லி படைகளை உள்ளடக்கியது). மேலும் இதன் விரிவாக்கமும் ஒருங்கிணைத்தலும் காபூலுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ’இஸ்லாமிய அரசு’ கட்டுப்படுத்துகிறது. முதல் ஆண்டில், அவரது முக்கிய எதிரி ஹிஸ்ப்-இ இஸ்லாமி. அவரது ராக்கெட் தாக்குதல்கள் 1992 -1995க்கு இடையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதாக நகரத்தில் பணிபுரியும் மனிதாபிமான முகமைகள் தெரிவிக்கின்றன.

ஹிக்மத்யார் Pic: aa.com

இருப்பினும், ஹிக்மத்யார் இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமான ஒரே தலைவர் அல்ல. காபூலில் உள்ள ஒவ்வொரு முக்கிய ஆயுதப் பிரிவினரும் இந்தக் காலகட்டத்தில் காபூலின் தெருக்களில் நடந்த போர்களில் பயன்படுத்திய கனரக ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். மசூதின் படைகளும் ஜுன்பிஷ் உட்பட விமானங்களைக் கொண்டவர்கள், குறிப்பாக காபூலின் தெற்கிலும் மேற்குப் பகுதிகளிலும் போரின் வெவ்வேறு காலங்களில் குண்டு வீசினர். ஹிஸ்ப்-ஐ வஹ்தத் இத்திஹாத் – மசூத் உடனான போர்களில் கனரக பீரங்கிகளையும் பயன்படுத்தினர். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கண்மூடித்தனமானவை மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்புகளை விளைவித்தன. இவை போர் சட்டங்களின் கடுமையான மீறல்களைக் குறிக்கின்றன. ஏனெனில் அவை ’பொதுமக்கள் மத்தியில் பயங்கரத்தை பரப்புவதற்காக’ மேற்கொள்ளப்பட்டன. அல்லது அவை ’பொது மக்கள் வாழ் இழப்பை ஏற்படுத்தின.’

ஜூன் 1992இல், காபூலுக்கு மேற்கே பாக்மானைத் தலைமையிடமாகக் கொண்ட சயாஃப்பின் இத்திஹாத்-இ இஸ்லாமிக்கும் ஹிஸ்பி-ஐ வாஹ்தத்துக்குமிடையே மோதல் வெடித்தது. சண்டையின் போது, இத்திஹாத்தும் ஹிஸ்பி-ஐ வஹ்தத் படைகளும் போராளிகளையும் பொதுமக்களையும் கடத்திச் சென்றன. பலரைத் தூக்கிலிட்டன. மற்றவர்களை ’காணாமல் போகச்’ செய்தன.

ஜனாதிபதி ரப்பானி Pic: wikipedia

டிசம்பர் 1992இல், அப்போதைய ஜனாதிபதி ரப்பானி, அவரது பதவிக்காலம் ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டதால், அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க ஷூரா (சட்டசபை) கூட்டப்படுவதை ஒத்திவைத்தார். அதிகாரத்தின் மீது தொங்குவதற்கான ரப்பானியின் வெளிப்படையான முயற்சி, தோஸ்தம் – வஹ்தத் ஆகியோருக்கு எதிராக மசூதின் படைகளுக்கு இடையே புதிய சண்டையைத் தூண்டியது. இறுதியாக, டிசம்பர் இறுதியில், ரப்பானி தனது சொந்த கட்சியான ஜாமியத்-ஐ இஸ்லாமியால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு சூராவைக் கூட்டினார். அது அவரை டிசம்பர் 29 அன்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது. ஆனால், நாடு முழுவதிலுமிருந்து பிரதிநிதிகளுடன் ஒரு பாராளுமன்றத்தை நிறுவுவதற்கு ஒப்புக்கொண்டது. இது டோஸ்டம் உட்பட கூட்டணியின் பல உறுப்பினர்களின் ஆதரவைத் தற்காலிகமாக மீட்டெடுக்க ரப்பானிக்கு உதவியது.

ஆப்கானிஸ்தான் இப்போது ஒரு புதிய சண்டையில் மூழ்கியது. மீண்டும் ஒருமுறை வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு மற்றோர் ஒப்பந்தத்தை ஊக்குவிக்க கைகோக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியாவின் ஆசீர்வாதத்துடன், ‘இஸ்லாமாபாத்’ ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஒப்பந்தம் மார்ச் 7, 1993 அன்று கையெழுத்தானது. ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக ரப்பானி தொடர்வதை ஒப்புதல் அளித்தது. இது ஒப்பந்தத்தின் முரண்பாடு. அதாவது முன்னைய ஒப்பந்தத்தை மீறியவரிடமே மீண்டும் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. கூடுதலாக ஹெக்மத்யர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஒப்பந்தம் மீண்டும் அமைதியைக் கொண்டுவருவதையும் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டது.

ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானி அடுத்த பதினெட்டு மாதங்களுக்குத் தனது பதவியில் நீடிப்பார். குல்புதீன் ஹக்மத்யருக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. அனைத்து முஜாஹிதீன் குழுக்களுக்கிடையே போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டு ஒரு தேசிய ராணுவமும் உருவாக்கப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அனைத்து முயற்சிகளும் (பெஷாவர் ஒப்பந்தம், இஸ்லாமாபாத் பிரகடனம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அத்துடன் ஐ.நா.) எந்த நிரந்தர அமைதியையும் அளிக்கத் தவறிவிட்டது.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.