கல்லூரி வளாகம் மிக மிக அழகாகவும், பெரியதாகவும் இருந்தது. ஒன்பது மணிக்கெல்லாம் கல்லூரிக்குச் சென்று விட்டோம். புதுமுக (பியூசி) வகுப்புகள் எல்லாம் முதல் மாடியிலிருந்தன. வராண்டாவில் நின்று கொண்டு சிலர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர்.

நானும் மூன்றாவது பெஞ்சில் நோட்டையும் பாக்ஸையும் வைத்துவிட்டு வெளியே வந்து வேடிக்கை பார்க்கும்போது தெரிந்த கடல், பரவசத்தை ஊட்டியது. உவரி சென்றபோது ஒன்றிரண்டு முறை கடலைப் பார்த்ததோடு சரி. மற்றபடி கடலுக்கும் எனக்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. எனவே இங்கு பார்த்ததும் வியப்பாக இருந்தது. அதன்பின் நாள்தோறும் கடலைப் பார்த்து விட்டுத்தான் வகுப்புக்குள் நுழைவேன் (பிஎஸ்சி வேதியியல் வகுப்பில் சேர்ந்த பின்னும் அதே தளத்தில்தான் வகுப்புகள் நடந்தன. புதுமுக வகுப்பறைகள் பிஎஸ்சி வகுப்பறைகளாக மாறி இருந்தன). 

10 மணிக்கு ஒலிபெருக்கியில் வழிபாடு நடந்தது; மிகவும் புதிதாக இருந்தது. ஒலிபெருக்கியிலேயே பி யு சி மாணவிகளைக் கீழே அரங்கத்திற்கு (ஆடிட்டோரியம்) முன் வரச் சொன்னார்கள். மாணவிகள் ஐநூறு பேருக்கும் மேலே இருந்தோம். இரண்டு கணக்கு, இரண்டு அறிவியல், ஒரு வரலாறு, ஒரு வணிகவியல் என மொத்தம் ஆறு பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிலும் ஏறக்குறைய எண்பத்தைந்து மாணவிகள் இருந்தனர். வரலாறு மற்றும் வணிகவியல் பிரிவுகளில் அதைவிடவும் கூடுதல். 

தமிழ்த்துறை பேராசிரியர் ஒருவர் எங்களுக்குக் கல்லூரியைச் சுற்றிக் காட்டினார். கல்லூரி வாசலுக்குள் நுழைந்த உடன் வலப்பக்கம் பாதுகாப்பாளர் (செக்யூரிட்டி) அறை; இடப் பக்கம் வங்கி. இரு பக்கங்களிலும் வளைவான சாலை. அவற்றில் அழகழகான வயலட் நிற உன்னி பூ அல்லது கம்மல் பூச் செடிகள். இந்தச் செடிகள் எங்கள் ஊர்க்காடுகளில் மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ், சிகப்பு வண்ணங்களில்  இருக்கும். அவை பெரிய புதராக வேலிகளில் வளரும். ‘இவை சிறியதாக இருக்கின்றனவே?’ என்று நினைத்துக் கொண்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால்  குட்டை இன உன்னிச் செடிகளை அப்போதே வளர்த்துள்ளார்கள் என்பது வியப்பூட்டுவதாக உள்ளது. நடுவில் வட்ட வடிவில் அழகான கம்பி வேலி போட்டு, நிறைய ரோஜா மற்றும் குரோட்டன்ஸ் செடிகள்.

கல்லூரி, கிழக்குப் பார்த்து இருந்தது. கல்லூரி கட்டடங்கள் ப வடிவத்தைச் சரித்துப் போட்டது போல இருந்தன. எல்லாமே முதல் மாடிகொண்ட கட்டிடங்கள். முகப்பு சற்று உள்வளைந்து குழி ஆடி போல இருந்தது. அதில் St Mary’s College என்று எழுதி இருந்தது. அதன் கீழ் ஒரு திறந்த வாசல்; பத்து அடிகள் இருக்கலாம். வலது பக்கம் கல்லூரி முதல்வர் அறை; அதைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நீண்ட கட்டடம். அதனை ஒட்டி வரிசையாக நிற்கும் நெட்டிலிங்க மரங்கள்.

இடப்பக்கம்  வரவேற்பு அறை (parlour). அதனை அடுத்து  அலுவலகம் . திறந்த வாசலைத் தாண்டி உள்ளே வந்தால் இடப்பக்கம் மேற்கு நோக்கி நீண்ட கட்டிடங்கள். வலப்பக்கம் வடக்கும் மேற்குமாக ட வடிவத்தில் கட்டடங்கள். இதில் மேற்குப் பக்கமாகச் சென்ற கட்டிடத்தில் நடுவில் திறந்த வெளி கலையரங்கம்; அங்கே கல்லூரி ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா எல்லாம் நடக்கும். அதையடுத்து மாடியில் பெரிய கலையரங்கம் (closed auditorium) ஏறத்தாழ ஆயிரம் பேருக்கு மேல் அமரலாம்; அவ்வளவு பெரியது. எல்லாவிதக் கல்லூரி விழாக்கள், கூட்டங்கள், தேர்வுகள் எல்லாம் அங்கு தான் நடக்கும்.

வாசலைக் கடந்ததும் வாசலுக்கு நேரே ‘லோட்டஸ் மாதா’. தூய வெண்மை நிறத்தில் இரு கைகளை விரித்தபடி குனிந்த தலையுடன் அன்னை. அந்த அன்னை குனிந்தபடி இருந்தாலும் அவளுடைய கருணை வெள்ளம் நம்மை நோக்கி வருவது போல இருக்கும். அந்த அன்னையின் திருவுருவம், ஒரு சிறு தாமரைக் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் இன்னொரு வியப்பு என்னவென்றால் தாமரைப் பூக்கள் பூத்திருந்தன. எங்கள் ஊர்ப் பக்கங்களில் தாமரை மலர்களே பார்க்க இயலாது. அவ்வாறு இருக்கும்போது அங்கே தாமரை மலர்களைப் பார்ப்பது என்பது, மிகுந்த வியப்பாக இருந்தது.

அதன் வலப்பக்கம் நூலகம். அதன் முன் பெரிய மலர்த் தோட்டம் அதில் பல பல வித்தியாசமான செடிகள். உண்மையில் அருள்சகோதரிகள், செடிகள், மரங்களைப் பராமரிக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது.

நூலகம் மிகவும் பெரியதாக இருந்தது. ஏராளமான புத்தகங்கள், பத்திரிகைகள்; மாடியிலும் ஏராளமான புத்தகங்களுடன் இரண்டு பெரிய மேசைகள். ஒரு மேஜையில் ஆறு பேர் உட்கார்ந்து படிக்கலாம்; மரக் கைப்பிடிகள், மரப்படிகள் என்று எல்லாமே மரவேலைப்பாடுகளோடு பளபளவென்று இருந்தன. அதை அடுத்து ஒரு சிறு பூந்தோட்டம். அதில் சிற்றாலயம் (chapel) நோக்கி இருக்கும் ஒரு சூசையப்பர் சொரூபம்.

லோட்டஸ் மாதாவிற்குப் பின்னால் எத்தல் ஹார்வி விடுதி (பழைய விடுதி) அதன் வாசல் அடைபட்டே இருந்ததற்கான அடையாளம் இருந்தது. தாள்ப்பூக்கள்  கொத்து கொத்தாகப் பூத்து வாசலை மறைத்திருந்தன. பாதை வழியே வலது பக்கம் திரும்பினால் அந்த விடுதிக்கு இன்னொரு வாசல் இருந்தது. அங்கு நடுவில் சிற்றாலயம்; அதற்கு இடது பக்கம் பழைய விடுதி, வலது பக்கம் எங்களது புது விடுதி (new hostel). சிற்றாலயத்தின் பின்னால் அருள் சகோதரிகளின் மடம்.

புதிய விடுதியின்  நீளக் கட்டடங்களுக்கு இடையே ஒரு பாதை (மாடி இடைவெளியின்றி தொடர்ச்சியாக இருந்தது); அந்தப் பாதை வழியே சென்றால், பெரிய விளையாட்டு வளாகம். அங்கே ஓர் உள் விளையாட்டு அரங்கம். அதில் டேபிள் டென்னிஸ் மைதானம். தூரத்தில் பெரிய சுற்றுச் சுவர் தெரிந்தது. இது கல்லூரியின் ஒரு எல்லை. விளையாட்டு மைதானத்தில் வறட்சியைத் தாங்கும் மரங்கள் ஒரு வரிசை வைக்கப்பட்டிருந்தன.

புதிய விடுதியின் முன்னால் இரண்டு ஊஞ்சல்கள். அதை ஒட்டி இரண்டு அறைகளில் மயில்கள் வளர்க்கப்பட்டன. மயில்களைப் பார்ப்பதும் வியப்பாக இருந்தது. முன்பு மயில்களை வேட்டையாடத் தடை இல்லை. எனவே மயில்களைக் காடுகளில் காண்பதே அரிதாக இருக்கும். மயில் நடமாட்டம் இருந்தாலே வேட்டையாடி விடுவார்கள். அருள்சகோதரிகள் மடத்தைத் தாண்டிப் போனால் கல்லூரியின் பின் வாசல் சிறியதாக இருக்கும். அதன் பின் சந்தன மாரியம்மன் கோவில் தெரு. இவ்வாறு கல்லூரியின் உள்கட்டமைப்பு மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது.

நாங்கள் அவரவருக்கான வகுப்புகளுக்கு வந்தோம். ஒரு சில பேராசிரியர்கள் வந்தார்கள். எல்லா வகுப்புகளிலும் அறிமுகப் படலமே  நடந்தது. சில வகுப்புகளில் யாரெல்லாம் நானூற்றுக்கு மேலே மதிப்பெண் என்று கேட்டார்கள். எண்பத்து நான்கு பேரில் நானும் இன்னொரு பெண்ணும் (சந்திரகனி) நானூறுக்குமேல் மதிப்பெண்கள் எடுத்திருந்தோம். மிகவும் பெருமையாக இருந்தது. இவ்வாறு முதல் நாள் வகுப்புகள் முடிவடைந்தன. 

நான் பின்னாட்களில் பின்பக்கம் படிப்பதற்குத் தனியாகச் செல்லும் போது அங்கே ஒரு கோபுரத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அது சுற்றுச்சுவருக்கு வெளியே மக்களுக்குத் தெரியும்படி இருந்தது. ஆனால் கல்லூரி வளாகத்திற்குள் முன்னால் இருந்து பார்த்தால் தெரியாது. ஏனென்றால், அது திறந்தவெளி அரங்கத்தின் பின்பக்கம் அமைந்திருந்தது. கட்டடங்கள் மாடியின்றி இருந்தால் முன்பக்கம் இருந்து பார்த்தால் தெரியும். கல்லூரியின் அடையாளமாக விளங்கும் அந்த மாதா சொரூபம் இருப்பது நிறைய மாணவிகளுக்குத் தெரியாது. அருகில், ஒரு சிறிய  தாவரவியல் பூங்காவும், விலங்கியல் செய்முறை வகுப்புகளுக்காக எலி, தவளை, கரப்பான் பூச்சி போன்றவை வளர்க்கும் இடமும் இருந்தன.

கல்லூரி கட்டிடங்கள்; வலப்பக்கம் கெமிஸ்ட்ரி பிளாக். 24.4.2022 அன்று எனது மகளின் திருமண வரவேற்பு அன்று எடுத்த புகைப்படம். எனது பள்ளித் தோழி ஜாக்குலின், பவுலா, நான் மற்றும் சகாயராணி.

படைப்பாளர்

பொ. ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.