சிரிய உள்நாட்டுப் போர் ஆட்டங்காண வைத்தவற்றில் சாரா, யுஸ்ராவின் வாழ்க்கையும் அடங்கும். ‘எங்கள் வீட்டில் இதற்கெல்லாம் அனுமதிக்கமாட்டார்கள்’ எனச் சொல்லும் பெண்களிடையே, தம் இலக்கை அடைய எல்லை தாண்டிய பெண்களைப் பற்றிய கதை, ‘ஸ்விம்மர்ஸ்’ திரைப்படம்.
2010ஆம் ஆண்டு அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக அரபு நாடுகளில் தொடங்கிய தொடர் போராட்டங்களை அரபு வசந்தம் என்பர். பல ஆட்சிகள் கவிழ்ந்தன. துனிசியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா என ஒவ்வொரு நாடாகப் பரவி சிரியாவுக்கும் வந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராகவும் அந்நாட்டில் ஓர் அலை இருந்தது. சிறுவர்கள் சிலர் தங்கள் பள்ளிக்கூடச் சுவரில், ‘அடுத்தது நீங்கள்தான் மருத்துவரே’ என்று கோட்டோவியங்கள் வரைந்து வைத்தனர். அசாத் மருத்துவம் படித்தவர். அவரைக் குறிப்பிட்டு எழுதிய சிறுவர்களைச் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறுவர்களை அடித்துத் துன்புறுத்திக் கடுமையாக நடத்தியது. பொதுமக்களிடையே இன்னும் கோபத்தைத் தூண்டி, கலவரத்தை முடுக்கியது. மற்ற நாடுகளில் அதிகார மாற்றமோ, அல்லது அடக்குமுறையால் கட்டுக்குள் கொண்டுவந்தோ முடிவுக்கு வந்த அரபு வசந்தம், சிரியாவில் நீண்ட கால உள்நாட்டுப்போராக மாறியது. ரஷ்யா, அமெரிக்கா, ஈராக் என ஆளுக்கோர் அணியை ஆதரித்து, அண்மையில் 2024ஆம் ஆண்டு அசாத் பதவியிறங்கும் வரைக்கும் இந்த யுத்தம் தொடர்ந்தது. மக்களாட்சி மலர இன்னும் பல்லாண்டு சிரிய மக்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.
சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் தொடங்குகிறது ஸ்விம்மர்ஸ் திரைப்படம். உள்நாட்டுப் போரில் சிதைந்து கொண்டிருந்த சிரியாவில் தம்முடைய ஒலிம்பிக் கனவும் சிதைவதைத் தடுக்க முயல்கிறார்கள் மர்டினி சகோதரிகள். சட்ட விரோத வழியில் ஜெர்மனி போய்விடத் துணிகிறார்கள். அங்கே, பெண்கள், குழந்தைகளின் அகதி விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படச் சாத்தியங்கள் அதிகம். பதினெட்டு வயதுக்குக் குறைவானவர் என்றால், ‘என் குடும்பத்தையும் என்னோடு சேர்த்து வையுங்கள்’ என்று விண்ணப்பிக்க முடியும். யுஸ்ரா மர்டினி, பதினெட்டு வயதை எட்ட இன்னும் ஓர் ஆண்டு இருந்ததால், தன் அக்கா சாரா மர்டினி உடன், துணைக்கு உறவுக்காரப் பையனும் வர, ஆபத்தான வழியில் ஜெர்மனி நோக்கிப் பயணம் செய்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தப்பித்து ஐரோப்பா வரும் மக்கள் ஏகப்பட்ட வழிகளை கண்டறிந்து வைத்திருக்கிறார்கள். பரவலாகப் பயன்படுத்தப்படும் வழி பால்கன் வழி (மலைத்தொடர்) என்றழைக்கப்படுகிறது. சிரியாவில் இருந்து துருக்கி போவது எளிது. சுற்றுலாப் பயணி விசா இருந்தாலே போதும். பக்கத்து நாடுதானே. அங்கிருந்து மத்தியத் தரைக்கடல் வழியாக லெஸ்பாஸ் செல்ல சுமார் ஒரு மணி நேர ஆபத்தான கடல் பயணம். கிரீஸின் இந்தக் குட்டித் தீவுக்கு வந்தபிறகு சுமார் 25 நாள்கள் பயணம் செய்து ஜெர்மனியை அடைவார்கள். முறையற்ற வழி என்பதால் எதற்கும் உத்திரவாதம் கிடையாது. பணம் கொடுத்து ஏமாந்தாலும், போனது போனதுதான். பாலியல் தொந்தரவு, உயிராபத்து போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். காவல்துறையினரிடம் மாட்டினால், எந்த நாட்டில் இருந்து வந்தோமோ அங்கேயே திருப்பி அனுப்பிடுவார்கள்.
யுஸ்ராவும் சாராவும் இந்தப் பயணத்தில் உச்சபட்ச ஆபத்தை எதிர்கொண்டது லெஸ்பாஸ் நோக்கிக் காற்றடைத்த படகில் சென்றபோது. எண்மர் செல்லக்கூடிய படகில் அதைப்போல இரு மடங்கு ஆள்களை ஏற்றி கடலில் அனுப்பி வைத்துக் காணாமல் போனான் பணம் வாங்கிய ஏஜெண்ட். நடுவழியில் பழுதாகி மூழ்கத் தொடங்கிய படகில் இருந்து சகோதரிகள் கடலில் குதித்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் கரை தெரியாத நிலையில், கரையேறுவோமா எனத் தெரியாது நீந்தினர். காவல்படையினர் கண்ணில்பட்டால் மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்பவேண்டிவரும். எப்படியோ நல்வாய்ப்பாக படகோடு இணையாக நீந்திக் கரையேறினார்கள்.
இச்சகோதரிகளைப் போல எழுபது லட்சம் பேர் இந்த வழியில் வெளியேறியதாக ஐநா கணக்கு சொல்கிறது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு நடந்த கலவரங்களினால் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாயினர். மூன்று வயதுச் சிறுவன்அய்லான் குர்தி கடலில் விழுந்து மாண்டதும் அவன் உடல் பொம்மையைப் போல கவிழ்ந்து கிடந்த நிலையில் கரையொதுங்கியதும் நம்மால் மறக்கக்கூடிய காட்சியல்ல. ஐரோப்பிய நாடுகள் மனமிரங்கி அகதிகளை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னாலும் ஒரு கட்டத்தில் முடியாது என்றே மறுத்தன. ஜெர்மனி மட்டும் அகதி விண்ணப்பங்களைப் பரிசீலிப்போம் என்றது. எனவேதான் பெரும்பாலானோர் ஜெர்மனியை நோக்கிச் சென்றனர்.

கடலில் குதித்துக் கரையேறிய இவர்கள் ஒரு விழுக்காடுதான் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் சாலி எல் ஹொசைனி. இந்தப் பெண்மணி எகிப்து, வேல்ஸ் பின்னணி கொண்டவர். பிறந்தது ஐக்கிய ராஜ்ஜியத்தின் வேல்ஸில், வளர்ந்தது எகிப்தில். கல்லூரிப் படிப்பு இங்கிலாந்தில்தான் என்றாலும் படித்தது அரபியும் மத்திய கிழக்கும் பற்றித்தான். தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் எனப் படிப்படியாக கலைத்துறையில் சாதித்தவர். செய்த வேலை அனைத்துமே அனைத்துலக விருது அங்கீகாரங்களைக் குவித்தவை.
“சாரா, யுஸ்ரா சகோதரிகளின் கதை ஒரு விழுக்காடு அகதிகளின் கதைதான். கரையேறிவிட்ட அவர்கள் வாழ்வை மட்டுமே சொல்லி, மற்றவர்களின் வாழ்வைக் குறைத்துக் காட்டவிரும்பவில்லை. மீதம் இருக்கும் 99 விழுக்காடு அகதிகளின் வாழ்வையும் காட்டினால்தான் படத்தை எடுக்கும் நோக்கத்துக்கு நியாயம் சேர்த்ததாக இருக்கும்” என்று சொல்கிறார் சாலி.
குழுவோடு ஏகன் கடலில் இறங்கிய நாளில் அவர்கள் ஒவ்வொருவருமே அகதிகளின் ஆபத்து நிறைந்த பயணத்தை சில நாள்களேனும் உணர முடிந்தது. கடினமான காலநிலையில் பாதுகாப்பு அம்சங்களுடன் கடலில் இருப்பதே சவாலாக இருக்கையில் ஏதுமின்றி வந்தவர்களில் பலர் கரையேறாமல் போனதில் வியப்பேதும் இல்லை. தூரத்தில் நிஜமாகவே கடலைக் கடந்து செல்ல முயலும் அகதிகளையும் கடலோரக் காவல்படையும் பார்த்தார்கள். லெபனான் நாட்டைச்சேர்ந்த இருவர் இந்த நீச்சல் சகோதரிகளின் பாத்திரங்களில் நடித்தார்கள். அகதிகளின் பின்னணியை நன்கு அறிந்தவர்கள் என்பதால் நடிப்பிலும் எதிரொலித்தது.
யுஸ்ரா தன் நீச்சல் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு அகதிகளுக்கான சிறப்புப் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார். 45 பேரில் 42ஆவது இடம்பிடித்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அவர் கனவு நிறைவேறியது. அது கொடுத்த வெளிச்சத்தில் அவருடைய அப்பா, அம்மா, இளைய சகோதரியும் அடுத்தாண்டு ஜெர்மனி வர அனுமதி கிடைத்தது. அடுத்த ஒலிம்பிக்கில் சிரியா சார்பில் கலந்துகொள்ளத் தேர்வு பெற்றும், அகதி அணியிலேயே தொடர்ந்தார்.

சாரா தன்னுடைய நீச்சல் பயிற்சியைத் தொடர விரும்பாமல் அகதிகளுக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றத் தொடங்கினார். லெஸ்பாஸ் தீவுக்கு வந்து சேரும் மக்களுக்கு உதவினார். முறையற்ற வழியில் அகதிகள் பயணம் செய்ய உதவினார் என்று இவர்மேல் வழக்கும் இருக்கிறது. அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் இருபதாண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். அம்னெஸ்டி அமைப்பு, அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்கு இது என்கிறது.
இயக்குநர் சொன்னபடியே கடைத்தேறா அகதிகளின் கதைகளையும் பேசும் படமாகவே இப்படம் இருக்கிறது. மேலும் பல ஸ்டீரியோடைப் எண்ணங்களையும் உடைக்க முயல்கிறது. படம் தொடங்கிய சில நிமிடங்கள் பார்ட்டி, கொண்டாட்டக் களங்களிலேயே காட்சிகள் நகர்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் எல்லாருமே ஹிஜாப் அணிந்து, கல்வி பயிலாத, சோற்றுக்கு வழியில்லாத பின்னணி கொண்டவர்கள் என்பது பொதுவான எண்ணம். கல்வி, கலை, விளையாட்டு எனப் பல தளங்களில் திறமைகள் கொண்ட, நம்மைப் போன்ற இயல்பு வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் என்பதைப் பதிவு செய்கிறது படம்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால், தான் விரும்பும் தன் தாய்நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய வலியோடு, வந்து சேர்ந்த இடத்தில் தன்மானத்தைச் சோதிக்கும் அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள். வசதி வாய்ப்புகளுக்காக ஓடி வருபவர்களென அவமானப்படுத்தப் படுகிறார்கள். இவற்றை மீறித் தங்கள் வாழ்வைச் சிறப்பாக அமைத்துக் கொண்டு தாம் வாழும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்களிக்கிறார்கள் இந்த அகதிகள். அதற்கு வாய்ப்பே கிடைக்காமல் அகதி முகாம்களிலேயே கழியும் வாழ்வும் சிலருக்கு வாய்க்கிறது. வழி தவறிப் போவதும் நடக்கிறது.
வெற்றி பெறுவோரின் கதைகள் உத்வேகம் அளிப்பதாக இருப்பது உண்மை. கேமரூனைச் சேர்ந்த சின்டி நகம்பா, தன் பதினொரு வயதில் சிறுமியாக, அகதியாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் உள்ளே நுழைந்தாள். கையில் அடையாளச் சான்றுகள் ஏதும் இல்லையென்பதால் தடுப்புக் காவலில் அகதிகள் முகாமில் அவள் வாழ்வு கடந்தது. பதினெட்டு வயதில் தன்பாலீர்ப்பு குணத்துடன் இருக்கும் என்னை கேமரூன் அனுப்பினால் உயிருக்கு ஆபத்து என்று மன்றாடியதில் லண்டனிலேயே தங்கிட அனுமதி கிடைத்தது. குத்துச் சண்டையில் ஆர்வம் உள்ள சின்டி, 2024இல் தன் அகதி அடையாளத்துடன் அகதி ஒலிம்பிக் அணியில் இடம்பிடித்துப் போட்டியிட்டார். வெண்கலம் வென்றார். முதன் முதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற அகதி என்ற பெருமையைப் பெற்றார். ஒருவேளை அவருக்குக் குடியுரிமை கொடுத்திருந்தால், இங்கிலாந்து ஒலிம்பிக் பதக்கக் கணக்கில் ஒன்று ஏறியிருக்கும்.
அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. பொருளாதாரம் தொடங்கி பண்பாடு வரைக்கும் பல இடர்கள் அகதிகளால் ஏற்படுகின்றன. எனினும் அகதிகளை மனிதநேயத்துடன் அணுகுவதே சரியான பண்பு. அதில் உள்ள நியாயத்தைப் பலர் புரிந்துகொள்வதில்லை. இலங்கையில் இருந்து வந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக அகதி அடையாளத்துடனே வசிக்கும் மக்களைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளத் தடுப்பது புரிதலற்ற தன்மைதான். அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு வழங்கிவிடுகிறது, ஆனால் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது. குடியுரிமை கொடுக்க வலியுறுத்தும் பல நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் அவர்கள் நிலைமாறவில்லை.
யுஸ்ரா, சின்டி போன்ற பெண்களின் கதைகள் அகதிகளின் வாழ்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகின்றன. அதைச் சரியான கோணத்தில் படமெடுத்த சாலி போன்ற பெண்களும் தேவைப்படுகிறார்கள்.
“உங்கள் பிளே லிஸ்டில் என்னென்ன பாடல்கள் இருந்தன?” முதல் சந்திப்பிலேயே சாலி, மர்டினி சகோதரிகளிடம் கேட்ட கேள்வி இது. அந்தப் புரிதல், படம் முழுக்க காட்டப்படும் கஷ்டங்களைத் தாண்டியும் ஒரு நேர்மறைத் தன்மையைக் கொடுத்திருக்கிறது. மனிதகுலம் கரையேற அந்த நம்பிக்கை தேவைப்படுகிறது. நெட்பிளிக்ஸில் இருக்கிறது படம்.
முன்னோட்டம்
சிறுவன் தொடங்கி வைத்த உள்நாட்டுப்போர்
மூன்று வயதுச் சிறுவன் அலன் குர்தி இறப்பு சம்பவத்தில் தப்பிய அவனுடைய தந்தையின் கோரிக்கை
ஜெர்மனி அகதிகளைப் பரிசீலிக்க முடிவெடுத்த செய்தி
https://www.bbc.com/news/world-europe-34231905
அரபு வசந்தம்
https://www.aljazeera.com/news/2020/12/17/what-is-the-arab-spring-and-how-did-it-start
ஐரோப்பியாவுக்கு வரும் அகதிகளில் வழியும் வறலாறும் சுருக்கமாக
https://borderviolence.eu/introduction-to-context
இயக்குநர் சாலி எல் ஹொசைனி
https://saylescreen.com/clients/sally-el-hosaini
https://en.wikipedia.org/wiki/Sally_El_Hosaini
ஐநா சொல்லும் அகதிக்கணக்கு
https://www.unrefugees.org/news/syria-refugee-crisis-explained
அகதி அணியைச் சேர்ந்த பெண் வென்ற வெண்கலம்
படைப்பாளர்
கோகிலா

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.