கேள்வி:

TV -யில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் எனது 8 வயது மகள் கலந்து கொள்ள வீட்டில் எதிர்ப்பு! குழந்தையின் சிறப்பான எதிர்காலம் பற்றி நான் யோசிக்கிறேன். ஏன் தடுக்க வேண்டும்?

பதில்

மெய்ம்மைக் காட்சி அல்லது உண்மைக் காட்சி என்று ரியாலிட்டி ஷோவைத் தமிழ்ப் படுத்தலாம் என்று நினைக்கிறேன். நான் உங்கள் வீட்டில் எதிர்ப்பவர்களுடன் திடமான கூட்டணி வைத்துக் கொள்வேன். “இவர்களெல்லாம் நரைத்த தலை பெரிசுகள்! இதில் கிடைக்கும் புகழ் மழையும், பாராட்டுக்களும் எவ்வளவு பெரிது என்று இவர்களுக்கு எப்படி புரிய போகிறது” என்று நீங்கள் மனதுக்குள் புலம்புவது என் காதில் கேட்டு விட்டதே!

முதல் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் குழந்தைகள் சாதாரணமாக தெரிகிறார்கள். அதன் பிறகு லெவல் ஏற ஏற அவர்களிடத்தில் பதட்டமும், பயமும், எதிர்பார்ப்பும் நிரந்தரமாக குடிகொண்டு விடுகின்றன. நடுவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்களுடைய முக பாவங்கள் மாறுகின்றன. எதிர்பார்த்தது கிடைத்தவுடன்  ஜிகினா மழையிலும், ஒளி மழை வெள்ளத்திலும், புகழ் போதையிலும் மூழ்கடிக்கப்படுகிறார்கள். அதையே தொடர்ந்து எதிர்பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். இந்தப் புகழ் நிலைக்க வேண்டுமானால் நிறைய வாய்ப்புகள், அதீத உழைப்பு எல்லாம் தேவை! ஒரு சமயத்தில் புகழின் உச்சியில் இருந்தவர்கள் சில மாதங்களிலே காணாமல் போய்விடுகிறார்கள். ஏனென்று யாருக்கும்  புரிவதில்லை.

ஓரங்கட்டப்படும் நிலை  வந்தால், அதை அவர்களால் தாங்க  முடியாது. மனச்சிதைவு, சமூகத்தின் மேல் வெறுப்பு, சமூகத்தில் இருந்து விலகுவது, தற்கொலை எண்ணம் என்று இது பிற்காலம் வரை தொடர்கிறது.

உணர்வுகள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அந்த உணர்வுகளின் கொந்தளிப்பை அவர்களால் சமாளிக்க முடியாது. நிகழ்ச்சி நடுவர்களின் தலை அசைவையும், புன் சிரிப்பையும் எதிர்நோக்கி இருக்கும் போது அவர்களுடைய ஒரு சிறு பார்வை கூட குழந்தையை காயப்படுத்தி விடும். அது அவர்களின் மனதில் நீண்ட கால புண்ணாக மாறிவிடும்.

பெற்றோர்களும் இந்த உண்மை நிகழ்ச்சிகளில்  தங்களை மாதக்கணக்கில் ஈடுபடுத்திக் கொள்வதைப் பார்க்கும் போது, இதெல்லாம் தேவையா என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. பணியை விட்டு, இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு, குழந்தைகளுடன் கடுமையான பயிற்சிகளுக்குச் செல்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன உபாதைகளைப் பார்க்கிறார்கள். இருந்தாலும் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது.

பெற்றோர்கள், தங்களுக்கு கிடைக்காத இந்த மாதிரியான வாய்ப்புகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது தவறல்ல! ஆனால் இந்த நிகழ்வுகள் மற்ற சமூக ஊடகங்களில் வெளியிட்டு மற்றவர்களின் கருத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்கள் அவற்றுக்கு தேவையற்ற முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள். அது Shared Parenting என்று குறிப்பிடப்படுகிறது.  அதாவது தன்னுடைய குழந்தையின் வெற்றியை அனைவரும் புகழவேண்டும் என்று எதிர்பார்ப்பது. தன் குழந்தையைப் பற்றி தான் பெருமைப்படுவதுபோலவே மற்றவரும் பெருமைப்பட்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. பெற்றோர் அதனை கண்டறிந்து குழந்தை அதனை வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைக்கு உதவ வேண்டும். இது மிகவும் நிதானமாக நடக்கவேண்டும். குழந்தைக்கு பிடித்த நேரத்தில் அவனுக்கு பிடித்த விதமாக அமைய வேண்டும். கலையை பயில்வதில் குழந்தை உறுதியான தொடர்ந்த ஈடுபாட்டைக் காட்ட வேண்டும். அவன் அதனை ரசித்து மன அமைதியுடன் மேற்கொள்ள வேண்டும். இதனைக் கட்டாயமாக்கி அவனது விருப்பத்தை வீணடித்து விடக்  கூடாது.

இது போன்ற நிகழ்ச்சிகளால் குழந்தைக்கு ஒரு சில நன்மைகள் ஏற்பட்டாலும், மற்றவர்களுடன் எப்போதும் ஒப்பிடுவது, இன்னும் திறமையை உயர்த்திக் கொள்ள எல்லோரிடமும் இருந்து அழுத்தம், மற்ற விளையாட்டுக்களும் பொழுதுபோக்குகளும் குறைவது, நண்பர்களுடன், உடன்பிறந்தோர்களுடன் நேரம் செலவிட முடியாத நிலை போன்ற காரணங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தான் அதிகம். இந்த நிகழ்ச்சிகள் நடுவர்கள், பார்வையாளர்கள், பெற்றோர் ஆகியோரின்  கருத்துகள், குழந்தையின் சுய மதிப்பையும் (Self Esteem) தன்னம்பிக்கையும் குறைப்பதாக கேரளா அரசின் குழந்தைகள் நலக் குழுமம் தெரிவித்து இருக்கிறது.

Shared Parenting என்பதற்கு நாமாக ஒரு புது பொருள் கொள்ளலாம். தாய், தந்தையருக்கு இடையே மட்டும், எல்லா கோணங்களிலும், எல்லா பொறுப்புகளையும்  பகிர்ந்து கொள்வதாக அது இருக்கட்டும். வெளி ஆட்களை உள்ளே கொண்டு வந்து அவர்களுடன் பகிர்ந்து பெற்றோர் என்ற மிக உயர்ந்த நிலையைத் தாழ்த்த வேண்டாம் அல்லவா!

கேள்வி

எனது ஒரு மாதம் ஆன குழந்தைக்கு பிறக்கும் போதே கீழ்த் தாடையில் ஒரு பல் உள்ளது! என்ன செய்ய வேண்டும்?

பதில்

“பல்லுடன் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டச்  சொல்லுடன் விளங்குவான்” என்ற ஒரு நம்பிக்கையும், அதற்கு நேர் மாறாக குடும்பத்தையே சீறிக் கிழித்து விடுவான் என்பதும்  நாடுகளிடையே, சமூகங்களுடையே நிலவும் சில நம்பிக்கைகள். அறிவியல் ரீதியாக அப்படி எதுவும் இல்லை. சில பற்கள் முந்திரிக்கொட்டை போல் பொறுமை இல்லாமல் முந்திக் கொள்கின்றன.

சில சமயம் அவை சீக்கிரம் முளைக்கும் பால் பற்களாக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு அது விழுந்த பிறகு பால் பற்கள் 6-7 மாதங்களில் முறைப்படி வெளிவரும்.

இந்தப் பல் குழந்தைக்கு இப்போது தேவையில்லை. இது குழந்தையின் மேல் உதடு, நாக்கு, ஈறு ஆகியவற்றை காயப்படுத்தி விடலாம். குழந்தை கைகளை வாயில் வைக்கும் போது விரல்கள், நகங்களில் காயம் ஏற்படலாம்.

குழந்தை தன் ஈறுகளால் தாயின் மார்பகத்தின் முன்பக்கம் உள்ள ஏரியோலா (Areola) என்ற கருத்த பகுதியை கவ்விப் பிடித்து அழுத்தம் கொடுத்து சப்பி பாலை உறிஞ்சிக் குடிக்கிறது. இந்தப் பற்களால் தாயின் மார்பகம் காயப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். தாய்ப்பால் ஊட்டும்  காலகட்டத்தில் மார்பகத்தோல், அடி திசுக்கள் மிகவும் மென்மையாக இருக்கும். இவை காயப்படுவதும், புண்ணாவதும் மிகவும் எளிது.

குழந்தை பாலூட்டும் போது இந்தப் பல் கழன்று குழந்தையின் வயிற்றுக்குள் சென்றுவிடலாம். இதனால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் புரையேறி மூச்சுப்பாதைக்குள் சென்று விட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

குழந்தையை குளிக்க வைக்கும் போது ஈறுகளையும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அப்போது இந்த பல் நிலையாக இருக்கிறதா, ஆடுகிறதா என்று கவனிக்க வேண்டும். வேர் பிடிப்பின்றி ஆடிக்கொண்டு இருந்தால், சுத்தமான ஒரு துணியால் பல்லை அழுத்தி பிடித்து எடுத்து விடலாம். ஆடவில்லை  எனில் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அந்தப் பல் நன்கு வேர் பிடித்து முந்திக் கொண்டு முளைத்த பால் பல்லாக இருந்தால் எடுத்து விட மாட்டார்கள். வேர்ப்பிடிப்பின்றி இருந்தால் சில நாட்களுக்குப் பிறகு தானாகவே ஆட ஆரம்பிக்கும். அப்போது நீக்கிவிடலாம்.

இந்த பற்களை நீக்கினால் அடுத்த  2-இரண்டு செட் பற்களும் சரியாக முளைக்குமா? பேச்சுத்திறன் பாதிக்குமா? என்ற கவலைகள் ஏதும் தேவையில்லை. எல்லாம் வளர்ச்சி பருவத்தில் தானாக நடக்கும்.

பல குழந்தைகளுக்கு பிறப்பிலேயே உள்ள பற்கள் தானாக விழுந்து விடும். அதுவரை தாய் கவனமாக இருக்க வேண்டும்.

பாப்பாவிற்காக பல் டாக்டரைப் பார்க்க பாட்டியுடன்  கிளம்பியாச்சா?

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.