கூண்டுக்கிளி, 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். விந்தன் அவர்கள் எழுதிய கதையை, டி.ஆர்.ராமண்ணா இயக்கித் தயாரித்து இருக்கிறார்.  தஞ்சை ராமையா தாஸ், விந்தன், கவி க மு ஷெரிஃப், மருதகாசி பாடல்களை எழுதியுள்ளனர். ‘சொல்ல வல்லயோ கிளியே’ என்ற பாரதியார் பாடலும் உள்ளது. ஆனால் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. 

கே.வி.மகாதேவன் இசையமைக்க, PA பெரியநாயகி, T M சௌந்தரராஜன், T V  ரத்தினம், V N சுந்தரம், ராதா, ஜெயலட்சுமி, ராணி பாடல்களைப் பாடியுள்ளார்கள். இப்படம் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இணைந்து நடித்த ஒரே திரைப்படம். வணிக ரீதியாக பெருவெற்றியை இப்படம் பெறவில்லை. 

எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், பி.எஸ்.சரோஜா நடிக்கும் என தான் எழுத்தே தொடங்குகிறது.

கே. சாரங்கபாணி

பிரென்ட் ராமசாமி

ஏழுமலை

ஈ.ஆர். சகாதேவன்

பொன்னுசாமி 

T K கல்யாணம் 

கோட்டபுளி ஜெயராம் 

லூஸ் ஆறுமுகம்

மூர்த்தி 

TK ராமராஜன் 

ஷண்முகம் 

கள்ளபார்ட் நடராஜன் 

ராஜகோபால் 

K பாலாஜி சிங்

சீனிவாசன் 

மாஸ்டர் மோகன் 

இப்படிப் பல பெயர்கள் வருகின்றன. பெண்கள் வரிசையில், 

குசலகுமாரி  

முத்துலட்சுமி

ஜி.சகுந்தலா

அங்கமுத்து

வேணு பாய் 

தனம் 

இந்திரா BSc 

நடனம் ராகினி 

என வருகிறது. ஒரு பட்டாதாரிப் பெண் நடிகர் என இந்த இந்திரா என்ற பெயர்தான் முதலில் பார்க்கிறேன்.

இத்திரைப்படத்தில், சிவாஜியைக் காதலிக்கும் சொக்கியாக வரும் குசலகுமாரிக்கு, பெரிய பெண்ணாக இதுவே முதல் திரைப்படம். பராசக்தி படத்தின் தொடக்கப் பாடலுக்கு இவர் ஆடினார். பின் அவ்வையார் படத்தில் குமாரி அவ்வையாராக நடித்தார்.

தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஜீவாவை, தங்கராஜ் வந்து காப்பாற்றுகிறார். இருவரும் ஏற்கனவே நண்பர்களாக இருந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் பார்க்கிறார்கள். தங்கராஜ் திருமணமானவர். ஒரு மகனும் இருக்கிறார். 

ஜீவா, தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தைச் சொல்கிறார். இவருக்கு மங்களா என்ற பெண்ணைப் பிடிக்கிறது. பெண்பார்க்கும் படலம் வரை அது போகிறது. பெண், அப்பா சொன்னால் சரி என மாப்பிள்ளையின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. அதற்குப் பின், மங்களா வீடு எதோ ஒரு காரணத்தால், வறுமைக்குத் தள்ளப்படுகிறது. இப்போது, ஜீவாவின் அப்பா திருமணத்திற்கு மறுக்கிறார். இதனால் சண்டை போட்டுவிட்டு, மங்களாவைத் தேடி வீட்டை விட்டு வெளியில் வந்த ஜீவாதான் இப்போது வாழ வழியில்லாமல், தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறான். 

ஜீவாவைத் தங்கராஜ் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். மங்களா தான் தங்கராஜின் மனைவி. மங்களாவைப் பார்த்த ஜீவா மயங்கி விடுகிறான். நாள்கள் செல்கின்றன, ஜீவாவையும் மங்களத்தையும் இணைத்து ஊர் பேசுகிறது. அதில் சண்டை போட்டு, தங்கராஜ் ஒருவரைக் கொன்று விட்டு, சிறை செல்கிறார். 

வீட்டின் வெளியே, அகலிகை கதையை ஒருவர் வாசிக்க, தான் ஏமாந்த இந்திரன் போலவும், தங்கராஜ் அகலிகையை மணந்த கௌதவ முனிவர் போலவும், ஜீவா உணருகிறான். எப்படியாவது மங்களாவைத் தனதாக்க வேண்டும் என அவனது உள்ளம் நினைக்கிறது. அதற்கு, அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவனும் தூபம் போடுகிறான்.

வீட்டின் அருகில் உணவுக்கடை நடத்தி வாழும் சொக்கி என்ற பெண் ஜீவாவை விரும்புகிறார். ஆனாலும் ஜீவாவின் எண்ணம் தடம் புரண்டு கொண்டே இருக்கிறது. அவன் மங்களாவிற்குத் தொடர் தொந்தரவு கொடுக்கிறான். மங்களா பிச்சை எடுக்கும் நிலை வரை போய் விடுகிறார். மங்களத்திடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த போது ஜீவாவின் கண் பார்வை போகிறது. தங்கராஜ் சிறையிலிருந்து வெளியில் வருகிறார். நடந்தது எல்லாம் தெரிகிறது. 

கண் தெரியாமலேயே ஜீவா, தண்டவாளம் வருகிறான். தொடக்கத்தில் சந்தித்த அதே இடத்தில் நண்பர்கள் சந்திக்கிறார்கள். எந்த தண்டவாளத்தில் சாகப் போய், தங்கராஜ் வந்து காப்பாற்றினாரோ! அதே தண்டவாளம். தங்கராஜ் ஜீவாவை அடித்து உதைக்கிறார். 

அங்கே வரும் சொக்கி, “என்ன தான் நண்பனாக இருந்தாலும், மனிதனைப் பாவம் செய்யத் தூண்டும் பெண்ணோடு வாழும் நீ, அவரை உன் வீட்டிற்கு வரவழைக்கலாமா? அவரை சமாதானம் செய்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல், உங்கள் வீட்டிற்கு அருகில் குடியிருக்க விடலாமா? உங்கள் மனைவியுடன் தாராளமாகப் பழகிவிட்டு விட்டு, உங்களைப் போல் கல்யாணம் என்ற வெள்ளத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டவரா அவர்? காதல் என்ற வெள்ளத்திலே உணர்ச்சி என்ற ஓட்டைப் படகிலே கண்ணை மூடிக்கொண்டு சவாரி செய்பவர் தானே அவர். அப்படிப்பட்டவரிடம் உங்கள் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஆறு மாத காலம் சிறைவாசம் செய்து விட்டு வந்தீர்களே… அதைவிடத் தவறு வேறு என்ன இருக்க முடியும்? உங்கள் மனைவி உங்களுக்காகவே இருக்கிறாரே அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதை விட்டு விட்டு” எனப் பாதிக்கப்பட்ட தங்கராஜிற்கே புத்தி சொல்லுவார். 

‘தன் தவற்றை உணர்ந்த எந்த மனிதனுக்கும் இந்த உலகத்தில் வாழ இடம் உண்டு’ என இரு ஜோடியும் இணைகிறது. ‘சுபம்’ எனப் படம் நிறைவுறுகிறது. 

கூண்டுக்கிளி தான் எம்.ஜி.ஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம். தனது தம்பியான இயக்குநராக இருந்த டி.ஆர்.ராமண்ணா அவர்களை வேறு கட்டத்திற்கு எடுத்துச் செல்ல டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் எடுத்த முயற்சி இது. ஆனால் திரைப்படம் வெற்றி பெறவில்லை. 

முதல் சந்திப்பிலேயே “உன் கதையிலே புத்திசாலித்தனம் இல்லாவிட்டாலும் புதுமை இருக்கிறது. இதுவரை நானும் எத்தனையோ கதைகளைக் கேட்டு இருக்கிறேன். அந்தக் கதைகளில் எல்லாம், தனக்குப் பிடித்த காதலனைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பெண்தான், கற்பை காப்பாற்றிக் கொள்ளக் கஷ்டப்படுவாள். நீயோ அவள் போனால் இன்னொருத்தி என்று நினைக்காமல், இத்தனை வருட காலம் உன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கஷ்டப்பட்டு இருக்கிறாய். ரொம்ப ஆச்சரியம்தான்.” எனத் தான் தங்கராஜ் ஜீவாவிடம் சொல்கிறார். தன் காதலி ஒருவரை மட்டுமே நினைத்து ஜீவா வாழ்கிறான் என தான் அவர் மனதில் பதிந்து இருக்கிறது. அந்தக் காதலி தன் மனைவிதான் என்பதும் அவருக்குக்குத் தெரியாது. இப்படி இருக்க சொக்கி, தங்கராஜைக் குறை சொல்வது அபத்தமாகவே தோன்றியது. தனக்காக அவரை மன்னிக்கச் சொல்லி இருந்தால் இதைவிடப் பொருத்தமாக இருந்து இருக்கும்.   

திருமணம் என்பதைக் கூண்டு எனவும், அதனுள் நுழையும் பெண்ணைக் கூண்டுக்கிளி என்றும் தான் விந்தன் உவமைப் படுத்தி இருக்கிறார். 

“நான் சுயமரியாதை என்னும் வாளால் வெட்டி வீழ்த்திவிட்டு உன்னுடன் நட்பு கொண்டேன்.”

“கடன்காரன் மகளுக்குக் கல்யாணம் நடக்கக் கூடாதா?”

“சொன்னதை நம்பும் அறியாப் பருவத்திலே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். என ஆயுள் முழுவதும் அதையே நினைவுபடுத்தி அடிமைபோல் நடத்தும் என் அப்பன். எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் கூட அந்த சதிகாரனுக்குக் கோபம் குதித்துக் கொண்டு வந்து விடுமே. அவனா அடித்த பிறகும் என்னை சும்மா விட்டு இருப்பான். இல்லை. என் அப்பனில்லை நீ” என தன் விருப்பத்தைத் திணிக்கும் அப்பாவைச் சாடுகிறான் ஜீவா.

“நாயைக் கொல்ல, அதற்கு மனநிலை சரியில்லை எனச் சொல்வது போலப் பெண்ணைக் கொல்ல அவள் வழுக்கி விழுந்தவள் எனச் சொல்வது”

“ஈசனும் இயற்கையும் ஒன்று தான்”

என எழுதிய விந்தன், பல இடங்களில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். 

நாயகி பி.எஸ். சரோஜா, இயக்குனரின் மனைவி. அவரின் பெயரையும் எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், பி.எஸ். சரோஜா நடிக்கும் என சேர்த்தே தான் போடுகிறார்கள்.

சிவாஜி ஏறக்குறைய வில்லனாக நடித்திருக்கிறார். எம் ஜி ஆர் தான் நாயகன் என்றாலும், இருவர் பெயரும் இணையாகப் போடப்பட்டாலும், எம் ஜி ஆர் வரும் நேரமென்பதே மிகவும் குறைவு. சிவாஜிதான் திரைப்படத்தின் முதுகெலும்பாய்த் திகழ்கிறார். முதலில் அவரது பாத்திரம் நேர்மறையாகத் தோன்றினாலும், போகப்போக எதிர்மையாவதால், நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்கே கூடுதல். 

ஜீவாவின் குணம் தெரிந்தும் அவரை காதலிக்கும் சொக்கி (குசலகுமாரி) தான் நாயகி போன்று ஆடல் பாடல் என வருகிறார். பி.எஸ். சரோஜா அவர்களுக்கோ ஒரே சோகம் சோகம் சோகம் தான்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.