நம் வீடு யாருடையது? கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. நம் வீடு நம்முடையதுதான். சரி. இந்த ‘நம்’ என்பது நம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் உள்ளடக்கியதுதானே? நிச்சயமாக ஆம்.
பிறகு ஏன் வீட்டின் எல்லாப் பொருள்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அந்த வீட்டின் தலைவி மட்டுமே பொறுப்புடையவராகக் கருதப்படுகிறார்?
“இங்க வச்சிருந்த வாட்ச் எங்க?” , “வீடு ஏன் குப்பையா இருக்கு?” ,”புள்ள ஏன் ஒழுங்கா சாப்பிடல?” , “பாப்பாவுக்கு ஏன் திடீர்னு சளி புடிச்சுது?”, “ஏ.சி.யில காத்து ஏன் மெதுவா வருது?”, ” பெட்ஷீட் எங்கே இருக்கு?”, “போன வாரம் நான் போட்டிருந்த அந்த ப்ளூ ஷர்ட் எங்க?”, “தம்பி ஏன் மார்க் கம்மியா வாங்குறான்?”, “புள்ள ஸ்கூல்ல இருந்து வர்ற ஏன் இவ்ளோ நேரம் ஆகுது?” என எத்தனை எத்தனை கேள்விகளை மிக இயல்பாக ஒரு குடும்பத் தலைவியிடம் கேட்கிறோம்? அதற்கு அவர் மட்டுமே பொறுப்பா?
பெண்தானே வீட்டில் இருக்கிறார்? அதனால் அவரிடம் கேட்பதுதானே சரி என்பதுதான் பொதுவாகவே பலரும் யோசிப்பது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரியெனத் தெரியலாம். சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
மேலே கேட்ட எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ளவும் அந்த வேலைகளை உடனே சரிசெய்யவும் அந்தப் பெண்ணுக்கு மட்டும் சிறப்பு உடலுறுப்பு ஏதும் இருக்கிறதா என்ன? அவள் மூளையில் மட்டும் இவற்றை எல்லாம் கேட்டவுடன் கொடுப்பதற்கென தனியொரு ஃபைல் உள்ளதா? இரண்டுமே இல்லையல்லவா?
பிறகு எப்படி எல்லாவற்றுக்கும் அவர் மட்டும் பொறுப்புடையவராக ஆவார்?
உண்மையிலேயே வீட்டின் தூய்மை குறித்தும் குடும்பத்தின் பொறுப்பு குறித்தும் அக்கறை இருக்கிறவர்கள் ‘ஏன்?’, ‘ஏன்?’ எனக் கேள்விகளாகக் கேட்டு எதிரே இருப்பவரைத் திணற வைக்க மாட்டார்கள். மாறாக, தங்களால் இயன்ற வேலைகளைத் தாமே முன்வந்து செய்யத் தொடங்குவார்கள்.
சில கேள்விகளுக்குப் பதில் இல்லாதது தெரிந்தும் எழுப்பப்படுகிற அதிகாரக் குரல்கள், ஒருபோதும் ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை.
அவரவர் பொருளையும் செயலையும் அவரவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாதது இயலாமைதானே? நம்மால் நம் ஒருவரது பொருளை ஒழுங்காக வைத்துக்கொள்ள முடியாதபோது, பெண்ணால் மட்டும் எப்படி மூன்று, நான்கு பேரின் வேலையையும் பொருள்களையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது நியாயம்தானா?
அத்தனையையும் ஞாபகம் வைத்துக்கொண்டாலும் இன்னும் சிலவற்றை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். மாறாக, இவ்வளவையும் சமாளிப்பது சிரமம் என்பதை நாம் உணருவது இல்லையோ எனத் தோன்றுகிறது.
நம் மூளையைப் போலவே பெண்ணுக்கும் குறிப்பாக குடும்பத் தலைவிக்கும் ஒரு மூளைதான் உள்ளது. நமக்கு ஏற்படுவதுபோல் மறதியும் அயர்ச்சியும் அந்த மூளைக்குள் நிகழ்வதும் இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
பை தான் தாங்குகிறதே என உள்ளே வைக்கிற பொருள்களின் எடையைக் கூட்டக் கூட்ட பையின் கைப்பிடி அறுந்துதான் போகும். இது நமக்குமே பொருந்தும்.
“பொம்பளைங்களுக்கு வீட்டைத் தவிர வேற என்ன நெனப்பு. அதான அவங்க வேலை” என்று சொல்வோரிடம் வேலைகள் எல்லார்க்கும் பொதுவானதே என்பதை நீங்கள்தான் பேசத் தொடங்க வேண்டும்.
என் ஆண் நண்பர்கள் பலரும் காலையில் ஷட்டில் விளையாடவோ உடற்பயிற்சி செய்யவோ மைதானம் செல்கிறார்கள். நல்ல விஷயம். அவர்களுக்கும் பள்ளி செல்லும் வயதில் பிள்ளைகள் உண்டு. இதே பள்ளி வயதுக் குழந்தைகளைக் கொண்ட வேலைக்குச் செல்கிற பெண் தோழிகள் எவரும் காலையில் மைதானம் செல்லத் துணிவதில்லை. செல்ல நினைக்கிற எண்ணம் மனத்தில் தோன்றியதுமே ‘குடும்பப் பொறுப்பை விட்டு இப்படி எண்ணுவதே தவறு’ என்று பெண்களுக்கே தோன்றும் அளவுக்குத் தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஆரோக்கியமும் உடல்நலனும் எல்லார்க்கும் பொதுவானதெனில் ஏன் ஒருவருக்கு சாத்தியப்படுவது மற்றொருவருக்கு சாத்தியப்படுவதில்லை என்பதைச் சிந்திப்போம்.
காலை நேரத்து குடும்பத் தலைவியின் செயல்பாடுகளை ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு எண்ணிப்பாருங்கள். பம்பரத்தை ஒத்த சுறுசுறுப்போடு அவரது கால்களும் கைகளும் இயங்கிக்கொண்டு இருக்கும். இதற்கிடையே “அது எங்கே?”, “இது ஏன் இங்க இருக்கு?” போன்ற கேள்வி அம்புகள் அவளை மேலும் திணறடிக்கும். பல்வேறு வேலைகளையும் ஒரே நேரத்தில் சிந்திக்கும்போது குழம்பிப் போகிற அப்பெண், எதையோ எடுக்க ஃபிரிட்ஜ்ஜைத் திறந்து எதற்குத் திறந்தோம் என்பதையே மறந்து குழப்பத்தோடு நிற்கிற முகத்தை நீங்கள் கவனித்ததுண்டா? அப்பெண் பள்ளிப்பருவத்தில் கணிதத்தில் தொன்னூறும் நூறும்கூட மதிப்பெண்களாக பெற்றிருக்கக் கூடும்.
தான் சிறுவயதில் எவ்வளவு நினைவாற்றலோடு இருந்தவள். இன்று எப்படி எல்லாவற்றையும் மறந்து இயல்பு தொலைந்து நிற்கிறோம் என்பதை அந்த ஃபிரிட்ஜ் திறந்து மறந்த நேரத்தில் மனத்தில் தோன்றி மறையும்.
இதெல்லாம் மிகச் சிறிய விஷயம். எல்லாவற்றையும் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றலாம். குடும்பத்துக்காக காபியிலிருந்து தேநீருக்குத் தாவி, சப்பாத்திக்காக உப்புமாவை விட்டுக்கொடுத்து, பிடித்த கலவை சாதத்திலிருந்து தினம் ஒரு குழம்புக்கு மாறி, பலவற்றை விட்டு விட்டு, இன்று தனக்கு எது பிடிக்கும் என்பதையே மறந்த பெண்கள்தான் அதிகம். இதனை சிறிய விஷயம் என்று சொல்ல முடியுமா?
அப்பாக்களைவிட அம்மாக்களுக்கு வயது பெரும்பாலும் குறைவுதானே. எனினும் அம்மாக்களின் நெற்றிகளிலுள்ள சுருக்கங்கள் அதிகம். குடும்பத்துக்காக உடலளவில் உழைக்கிற அப்பாவின் உழைப்புக்கு ஊதியம் வருவதால், அது கண்களுக்குத் தெரிகிறது. அம்மாவின் உழைப்பு சற்றும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. தான் இந்த வீட்டில் வருமானம் ஈட்டாமல் சாப்பிடுகிறோம் என்கிற உணர்வு, காலங்காலமாக நம் அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கும் இருந்துகொண்டே வந்துள்ளது.
இப்போது காலம் மாறிவிட்டது. பெண்கள் எல்லாம் வீட்டில் வேலையே செய்வதில்லை என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. நாம் பார்க்கிற, நம்மைச் சுற்றி இருக்கிற ஒரு சிலரை வைத்து மட்டுமே ஒட்டுமொத்த பெண்களையும் அளவிடுவது சரியல்லவே.
உணவு ஆர்டர் செய்து சாப்பிடுகிற சூழல் எல்லாம் ஓரளவு நடுத்தர, அதற்கு சற்றே பொருளாதார அளவில் உயர்ந்துள்ள, தாமும் ஷிப்ட் நேர மாற்றத்தில் வேலைக்குப் போய் வருகிற பெண்களுக்குப் பொருந்தும். எந்தப் பெண்ணும் மூன்று வேளையும் வாரத்தின் ஏழு நாள்களும் வெளியே விதவிதமாய் ஆர்டர் செய்து உணவு உண்ண விரும்புவதில்லை.
இன்னும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஹோட்டலில் பத்து இட்லி வாங்குகிற காசுக்கு ஒரு பாக்கெட் மாவு வாங்கினால், நாலு பேர் சாப்பிடலாம் என்று கணக்கு போட்டு குடும்பத்தை நடத்துகிற பெண்களே அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டிலுள்ள கடுகு, மிளகு, சீரகம் தொடங்கி கரண்டி, தட்டு எண்ணிக்கை வரை அத்தனையும் கச்சிதமாகத் தெரியும். அதற்காக எல்லாவற்றையும் அவர்களையே நாடாமல் நாமும் சில வேலைகளைப் பகிரத் தொடங்குவோம்.
குடும்ப வேலைகளை மிக இயல்பாக சிரித்த முகம் மாறாது பகிர்ந்து செய்கிற ஆண்களும் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதே விழைவு.
தனக்கு வலிக்கிறது என்பதை வாய்விட்டு சொல்லப்பழகிய அம்மாக்கள் காலம் மாறி, தற்போது வலித்தால் மருந்து தேய்த்து விடுகிற கணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித ஆர்பரிப்புமின்றி மிக இயல்பாக அவற்றைச் செய்கின்றனர். அவர்களுக்கு அன்பின் வணக்கங்கள். பெரும்பான்மை ஆண்கள் வணக்கத்துக்குரியவர்களாக மாறிவிட்டால், எல்லா வீடுகளிலும் காதலும் அன்பும் கனிந்தினிக்கும்தானே?! காத்திருப்போம்.
படைப்பாளர்

பா. ப்ரீத்தி
தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
Nice to read.. thanks for sharing your thoughts..
எல்லா பெண்களின் மனதில் இருந்த வலிகள் ப்ரீத்தியின் வரிகளில் நன்றி. மாறுங்கள் ஆண்களே
This is exactly the kind of thoughtful content I love seeing. Thank you Preethi Thozhar.
Thank you, Thozhar. Keep on reading.