“ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா.
அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு எதுக்கு இந்தக் கர்மத்தை எல்லாம் போட்டு விடுற, இது உள்ள காத்து போவுமா? நான் எல்லாம் என் பேரப்புள்ளைங்களுக்கே இதெல்லாம் போட்டு விட்டதில்ல” என்றார்.
“இல்ல பெரிம்மா. ஒத்தாசைக்கு ஒரு ஆயாவை போட்டிருக்கோமா? அது மூத்திரத் துணி எல்லாம் ஒழுங்கா தோய்ச்சு போட மாட்டேங்குது. வயசானது வேற, அதான்…” என்று இழுக்க, “புள்ள ஒடம்புக்கு ஆவாத போயிடுச்சுனா நீதான்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு அலையணும். உங்க அம்மா இருந்திருந்தா இதெல்லாம் சொல்ல மாட்டாளா? உன் நல்லதுக்குதானே சொல்றேன்”என்று கூற, அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
“அப்பப்பதான் போடுறோம். எப்பவும் எல்லாம் இல்ல” என்ற போதும் அவர் விடவில்லை. அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “ஐயோ மறந்தே போயிட்டேன். இருங்க டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று எழுந்து கொண்டாள் ரேகா.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா, நீயே பச்ச ஒடம்புக்காரி”
“இருக்கட்டும் பெரிம்மா. டீதான எம்புட்டு நேரமாவ போகுது. தோ போட்டுன்னு வந்துடுறேன்”
“சக்கரையே போடாத ரேகா. டாக்டர் சொல்லிட்டாரு. சக்கரை சேர்த்துக்கவே கூடாதுன்னு” என்றார்.
“சரிங்க பெரியம்மா” என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு வந்து நின்ற ரேகாவிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது. வந்ததிலிருந்து, ‘பொம்பள புள்ளையா பொறந்துச்சு? ஆப்பரேஷன் பண்ணிட்டியா’ என்று ஆயிரம் கேள்விகள். கூடவே நிறைய அறிவுரைகள்.
‘எப்படா கிளம்புவாங்க’ என்று புலம்பியபடி அடுப்பைப் பற்ற வைத்து பாலை காய்ச்சி தேநீர் போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.
சரியாக அதேசமயம், “எல்லாம் துவைச்சு போட்டேமா. கிளம்புறேன்” என்று வீட்டு வேலை செய்யும் பாட்டி வந்து நின்றார்.
‘அதுக்குள்ளயா’ என்று ரேகா பின்புறம் எட்டிப் பார்க்க, துணிகள் எல்லாம் கொடியில் காய்ந்து கொண்டிருந்தது.
‘என்னத்த தோச்சு போடுதோ’ என்று மனதில் நினைத்துக் கொண்டாலும், “இருங்க பாட்டி காசு எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே நடந்தாள்.
அதற்குள் பெரியம்மா பாட்டியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைக்க ஆரம்பித்துவிட்டார். அவ்வளவுதான். பாட்டிக்குச் சுர்ரென்று ஏறிவிட்டது.
பணத்துடன் வந்து நின்ற ரேகாவிடம், “இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதும்மா. இனிமே நான் வரமாட்டேன். நீ வேற யாரன்னா பார்த்துக்கோ” என்று சொல்லி பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார்.
அதிர்ச்சியான ரேகா, “பாட்டி… பாட்டி… அப்படி எல்லாம் சொல்லாதீங்க. பெரியம்மா ஏதோ தெரியாம பேசிட்டாங்க. அதெல்லாம் பெருசா எடுக்காதீங்க” என்று கெஞ்சவும் அவர் மனம் கொஞ்சம் இறங்கியது.
“உனக்காக பார்க்குறேன்” என்று சொல்ல, அவளுக்கு அப்பாடா என்று இருந்தது.
“நாளைக்கு கண்டிப்பா வந்துடுவீங்க இல்ல?” என்று சந்தேகமாக கேட்க, “அதெல்லாம் வந்துடுவேன். நீ ஒன்னும் கவலைப்படாத” என்றார்.
அவள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வீட்டுப்பக்கம் திரும்ப, அங்கே பெரியம்மா முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
“நம்மகிட்ட காசு வாங்கி வயித்த கழுவுது. அதுவே இவ்வளவு சவடால் பன்னுதுனா நமக்கு எவ்வளவு இருக்கும். இல்ல தெரியாமதான் கேட்குறேன், நீ எதுக்கு அந்த கெழவிக்கிட்ட கெஞ்சிட்டு இருக்க? அது உன்கிட்ட வேலை செய்யுதா இல்ல நீ அதுக்கிட்ட வேலை செய்றியா?” என்று கத்தவும், ‘ஆமா நாளைக்கு என் வூட்டு வேலை எல்லாம் இந்த ம்மா வந்து செய்யுமாமா’ என்று மனதில் நினைத்தாலும் ரேகா வெளிப்படையாக எதுவும் கேட்கவில்லை.
“நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஆனா அது சில வேலை எல்லாம் ஒழுங்கா செய்யலன்னாலும் புள்ளைக்கு தலைக்கு ஊத்தி விடுறது எல்லாம் நல்லா கண்ணும் கருத்துமா செய்யும். அதுவும் இல்லாம இப்போதைக்கு எனக்கு ஒத்தாசைக்கு யார் இருக்கா? ஒரு வேளை அம்மா இருந்திருந்தா இந்தத் தொல்லையே இல்ல”என்று சொல்லி ரேகா கண்ணீர் பெருக்கினாள்.
“அது ஏன் அப்படி சொல்ற..? உனக்கு அண்ணங்காரன் இருக்கானுல்ல? அவன் வூட்டுல போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வா. அவன் பொண்டாட்டி உன்னைய பார்த்துக்க மாட்டாளா?”
‘ஆமாமா புள்ள பொறந்து இத்தனை நாளு ஆச்சு. ஒரு நாள்கூட வந்து எட்டிப் பார்க்கல. ஏன் நாங்க சொல்லலனாலும் யாராச்சும் சொந்தக்காரவுங்க சொல்லாமலா இருப்பாங்க?’ என்று மனதிற்குள் பொங்கிய ஆதங்கத்தை எல்லாம் அப்படியே அடக்கி கொண்ட ரேகா, “அண்ணி வேலைக்கு போறாங்க. நான் போய் அங்க உக்காந்துக்கிட்டா சரியா வராது பெரியம்மா. அதுவும் இல்லாம என் வூட்டுகாரரும் மலரும் என்ன பண்ணுவாங்க? மலருக்கு வேற ஸ்கூல காலாண்டு பரிட்சை நடக்குது” என்று சமாளித்து வைத்தாள்.
“என்னவோ போ… உன் நல்லதுக்குதான் சொல்றேன்” என்று சொன்னவர், பிறகு அது பற்றி எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
‘நான் உதவிக்கு வருகிறேன்… செய்கிறேன்’ இது போன்ற வார்த்தைகள் ஒன்றும் அவர் வாயிலிருந்து வரவும் இல்லை. எங்கே மேலே பேசினால் அப்படி ஏதாவது கேட்டுவிடப் போகிறாளோ என்று பயந்துதான் அவரும் வெகு ஜாக்கிரதையாக அந்த உரையாடலை அங்கேயே நிறுத்திக் கொண்டார்.
ஒரு வழியாக அவர் கிளம்பி விட, ‘ஊஊ… எப்பா’ என்று ஓய்வாக அமர்ந்த ரேகாவிற்கு, பெரியம்மா சொன்னதை எல்லாம் கேட்டு நாளை பாட்டி வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பதற்றம் தொற்றி கொண்டது.
‘கடவுளே அப்புறம் நம்மதான் எல்லாமே செய்யணும்… ஒரு மாசத்துக்கு தாக்கு பிடிச்சுக்கிட்டா அப்புறம் நானே பார்த்துக்குவேன்’
இப்படியாக யோசித்துக் கொண்டே அழுது கொண்டிருந்த குழந்தைக்குப் பாலை கொடுத்துத் தூங்க வைத்தாள். அவளுக்கும் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.
அப்படியே குழந்தையின் அருகே அவளும் படுத்துறங்கிவிட, ‘டம் டம் டம்’ என்று எங்கேயோ தூரத்திலிருந்து ஒரு சத்தம். அந்தச் சத்தம் என்னவென்று புரிந்து கண்விழித்த போது, “ரேகா ரேகா” என்று யோகேஸ்வரனின் குரல் ஒலித்தது.
‘அய்யோ… மாமா’ என்று அவசரமாக எழுந்து வந்து கதவைத் திறந்தவள், “படுத்தேனா… நல்லா தூங்கிட்டேன் மாமா” என்றாள்.
“பரவாயில்ல விடு” என்று அவன் எடுத்து வந்த பைகளை ஓரமாக வைத்தான்.
“காய்கறி, புள்ளைக்கு மருந்து சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று சட்டையை மாற்றினான்.
படுக்கையில் குழந்தை சிணுங்கியதை கண்டு, “ஒய் அம்மு… முழிச்சிட்டியா, விளையாடுறியா?” என்று மகளை தூக்கிக் கொஞ்சிக் கொண்டே வந்தான்.
“அதுக்குள்ள முழிச்சிட்டாளா?” என்றபடி ரேகா அவன் வாங்கி வந்த பொருள்களைப் பிரித்து வைத்தாள்.
“ஆமா மலரு எங்க? விளையாட போயிருக்காளா?” என்று யோகேஷ் கேட்கவும்தான் ரேகாவிற்கு நினைவு வந்தது.
“இல்ல மாமா, அவ இன்னும் ஸ்கூல இருந்தே வரல”
“இன்னுமாடி வரல? ஏன்டி… புள்ள வரலன்னு கூட தெரியாமதான் தூங்கிட்டு இருந்தியா?”
“இல்ல மாமா. இந்நேரத்துக்கு அவ வந்துருவா”
“என்னடி ஆர அமர வந்துருவான்னு சொல்லிட்டு இருக்க. சரி சரி நீ புள்ளைய புடி. நான் எதுக்கும் ஸ்கூல் வரைக்கும் போய் பார்த்துட்டு வரேன்” என்று கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு விரைந்தான்.
ரேகா குழந்தையை தூக்கி வைத்து கொண்டு வாசலிலேயே காத்திருந்தாள்.
திரும்பி வந்த யோகேஷ், “ஸ்கூல இல்லடி, இங்கேயும் வரலயா” என்று கேட்டான். அந்த நொடியே ரேகா, “அய்யய்யோ புள்ள ஸ்கூல இல்லையா? பொம்பள புள்ளையாச்சே” என்று கூப்பாடு போட்டபடி அழ ஆரம்பித்துவிட்டாள்.
“ஏய் ஏய் அழாதடி… நான் போய் பார்க்குறேன். இங்கதான் எங்காயாச்சும் பக்கத்துல இருப்பா” என்று மனைவிக்குச் சமாதானம் கூறிவிட்டு வாசலைத் தாண்டியவனுக்கு எங்கே தேடுவது என்று ஒன்றும் புரியவில்லை.
பள்ளிக்கூடம் வரும் வழியெல்லாம் விசாரித்துவிட்டான். ஆனால் யாருமே அவள் சென்றதைப் பார்க்கவில்லை. ஒரு வேளை வீட்டிற்கு வந்திருப்பாளோ என்று நினைத்து வந்தால், இங்கேயும் இல்லை.
நடுத்தெருவில் நின்று கொண்டு எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் யோகேஷ் குழம்பி நின்ற சமயத்தில், “வூட்டுல சொல்லாம வர்றது என்ன பழக்கம். அம்மா அப்பா தேட மாட்டாங்க?” என்று ஈஸ்வரியின் அதட்டல் கேட்டது.
சத்தம் வந்த திசையில் திரும்ப, அங்கே ஈஸ்வரி கை பிடித்து மலரை அழைத்து வந்தாள். யோகேஷிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது.
“மலரு…” என்று அவன் அழைக்க, “அப்ப்ப்பா…” என்று அவள் ஓடி வந்தாள். அப்படியே மகளை வாரி அணைத்துக் கொண்ட யோகேஷ், “சொல்லாம கொல்லாம எங்கே போன நீ, அம்மா உன்னை காணோம்னு அழுதுட்டு இருக்கா” என்றான்.
“இல்ல ப்பா. நிகாத்தான் புதுசா பொறந்த கன்னுக்குட்டிய காட்டுறனு கூட்டின்னு வந்தாபா. நம்ம பாப்பா மாறி குட்டியா இல்ல, ஆனா அழகா இருக்கு” என்று நடந்ததை விவரித்தாள்.
மகளும் அப்பாவும் பேசி கொண்டிருந்த காட்சியை வாஞ்சையுடன் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரியின் புறம் யோகேஷின் கவனம் திரும்பியது. ஒரு நொடி தடுமாறியவள், அடுத்த கணமே முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு உள்ளே வந்தாள்.
அங்கே உடை மாற்றிக் கொண்டிருந்த மகளிடம், “இனிமே அந்த பொண்ண வூட்டு பக்கம் கூட்டியாந்தனா அவ்வளவுதான் உனக்கு” என்று கண்டிப்பாகக் கூற, “ஏம்மா அப்படி சொல்ற. அவ என் பிரண்டும்மா” என்றாள் நிகா.
“பிரண்டு எல்லாம் ஸ்கூலோட. வூட்டுபக்கம் எல்லாம் வர கூடாது” என்று கறாராகச் சொன்ன ஈஸ்வரி மகளுக்குக் குடிக்கத் தேநீர் எடுத்து வந்து வைத்தாள். அதனைக் குடித்து முடித்ததும் மகளின் தலையை வாரி பின்னிக் கொண்டிருக்க, “ம்மா நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்று நிகா தயக்கமாக இழுத்தாள்.
“என்னடி?”
“மலரு அம்மா வயித்துல குட்டி பாப்பா இருந்த மாதிரி உன் வயித்துலயும் பாப்பா இருக்குமாம்மா” என்று கேட்டுவிட, ஈஸ்வரிக்குத் தூக்கிவாரி போட்டது. அந்த கேள்வி ஏதேதோ பழைய நினைவுகளை கிளறிவிட்டது. அவள் கைகள் பின்னுவதை நிறுத்திவிட்டன.
“ம்மா… என்னம்மா..?” என்ற மகளின் அழைப்பில் ஈஸ்வரி அதிரடியாக உலுக்கப்பட்டாள். அந்த நொடியே அவள் பின்னலை அழுத்தமாக இழுத்துக் கட்டவும், “ஆ வலிக்குதும்மா…” என்று நிகா அலறினாள்.
“இனிமே இந்த மாதிரி ஏதாவது விவஸ்த்தை இல்லாம பேசுனா சூடு வைச்சு புடுவேன், போய் புஸ்தகத்தை எடுத்து வைச்சு படி” என்று ஈஸ்வரி அதட்டல் போட, நிகா கப்சிப்பென்று புத்தகப் பையை எடுத்து வைத்துக் கொண்டாள். அவள் வீட்டுப்பாடம் எழுதவும், ஈஸ்வரி மாட்டு தொழுவத்தின் பக்கம் ஒதுங்கினாள். அடிவயிற்றிலிருந்து ஒரு வலி கிளம்பி அவளின் உடல் முழுவதும் பரவியது. அப்படியே கால்களை மடித்துத் தரையில் சரிந்து விட்டவள், முகத்தை மூடிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.