‘நாங்கள் இரவைப் பற்றி பயப்படுவதில்லை – ஆண்கள் இந்த இரவை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிய விதத்தை பற்றித்தான் பயப்படுகிறோம்.’ – ஆட்ரே லார்ட்
மேற்கு ஆப்பிரிக்கப் பாரம்பரியக் கதைகளில், குறிப்பாக கானா, நைஜீரியா மற்றும் மாலியின் சில பகுதிகளில், ‘இரவு’ வெறும் ஓய்வு நேரமாக மட்டும் கருதப்படாமல் , சக்தி, மர்மம் மற்றும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாட்டுப்புற மரபுகள் ‘இரவு நடைப்பயணிகள்’ என்று அழைக்கப்படும் பெண்களைப் பெரிதும் கௌரவித்தன. இந்த ‘இரவு நடைப்பயணிகள்’ – மூலிகைகள் மற்றும் வேர்களைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்ட பெண்கள். இந்தப் பெண்கள் இரவில் மருத்துவத் தாவரங்களைச் சேகரித்தனர். இரவில் மக்களைப் பாதுகாக்க அமைதியாக ரோந்துப்பணி செய்த கிராமத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்பட்டனர்.
இன்றைய தொழில்நுட்ப உலகம், பாரம்பரியத்துக்கு எதிராகப் பெண்களை, ‘வீட்டிலேயே இரு’, ‘பாதுகாப்பாக இரு’ என்று அறிவுறுத்துகிறது.
சூரியன் மறையும் போது ஏன் ஆண் பெண் விதிகள் மட்டும் மாறுகின்றன. இரவு, ஆண்களுக்கு விடுதலை உணர்வையும் பெண்களுக்குப் பத்ற்றத்தையும் கண்ணுக்குப் புலப்படாத எல்லைகளையும் தருவது எதனால்? ‘நீ ஏன் இரவில் வெளியே தனியாகச் செல்கிறாய்?’ எனும் கேள்வி வரும்போதெல்லாம், ‘நிலவு ஓர் ஆண்மகனுக்கு மட்டும்தான் விளக்கா? தெருவிளக்கு எனக்கு மட்டும் பிரகாசிக்காதா?’, என்று அப்பட்டமாகக் கேட்கத் தோன்றும். ‘இரவின் அமைதியும் இருளின் நேர்மையும் பெண்களுக்குப் பிடித்துப் போயிருக்கும்… அதனால் தான்!’ என்று கேட்டவரின் மூக்கை உடைக்கத் தோன்றும்.
ஹெர் ஸ்டோரிஸின் இரவு உலா
“பெண்கள் பங்கேற்கும் இரவு உலா, முப்பத்தைந்து பெண்கள் செல்ல ஒரு ஏசி பேருந்து வேண்டும்” என்றவுடன் ஏன், எதற்கு, உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று ட்ராவல் ஏஜென்சிகள் மறுத்துவிட, கடைசியில் ஒருவர் மட்டும் கைகொடுக்க, ‘ஆரம்பமே களைகட்டுகிறதே’ என்று தொடங்கிய பயணம்.
பெசன்ட் நகர் தலப்பாக்கட்டியின் முன் அமர்ந்திருந்த போது, பால் புதுமையினர் தோழர்கள் இருவர், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். ‘உண்ண ஏதாவது தாருங்கள்’ என்றவுடன், தோழர் ஒருவர் கொண்டுவந்த பொறி உருண்டையை அவர்களுக்கு கொடுக்க, ‘எங்கே செல்கிறீர்கள்?’ என்று அவர்கள் எங்களை கேட்டார்கள்.
‘பெண்கள் மட்டும் செல்லும் இரவு உலா’ என்று தோழர் கீதா சொல்ல, ‘உங்களுக்கு பயமா இல்லையா?’ என்று அவர்கள் வினவினர். ‘எதற்கு பயம்?’ என்று தோழர் பதிலளிக்க, ‘நைஸ்’ என்று மகிழ்ச்சியில் எங்களை வாழ்த்தி இரவு உலாவைத் தொடங்கி வைத்தார்கள்.
இரவுப் பயணம் ஆண்களுக்கு மட்டுமேயான சிறப்புச் சலுகையாகவே இருந்திருக்கிறது . பெண்கள் எல்லா நேரங்களிலும் சுதந்திரமாகவும் நம்பிக்கையுடனும் நடமாடக்கூடிய முற்போக்கான சமூகம் இன்னும் நமக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. பெண்கள் வேலை, கல்வி என்று இரவில் வெளியே செல்வதையே தடுக்கும் இந்த சமூகத்திடம் ‘இரவு உலா’ என்று அனுமதி கேட்டுத்தான் பாருங்களேன். மனதிற்குள், ‘இவளுக்குச் சீக்கிரம் ஒரு பாயாசத்தை போடவேண்டும்’ என்று அவர்கள் மனக்குரல் உங்களுக்குச் சத்தமாகவே கேட்கும்.
பயணிக்கும் தோழர் ஒருவரின் பிறந்த நாளை, 11.00 மணிக்கு எலியட் கடற்கரையில் எங்கள் கைப்பேசி டார்ச்சுக்களை ஒளிரவிட்டு, கேக் வெட்டி, கொண்டாடினோம். மகிழ்ச்சியாக இருந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் கர்னல் ஜான்ஸ்டோன் நேப்பியரின் மனைவி இசபெல்லா நேப்பியர், 17 வருடத் திருமண வாழ்க்கையை எலியட்டுடன் மகிழ்ச்சியாக வாழத் துறந்தார் என்கிற செய்தியுடன், பேருந்துக்குள் அடியெடுத்து வைத்தோம்.
நிலா அது வானத்து மேலே!
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். ஒவ்வொருவரும் தங்கள் இரவு உலாவின் நோக்கத்தைப் பல பரிமாணங்களில் பகிர்ந்துகொண்டனர். இரவின் திரையை விடுதலையாக உணர்ந்து உணர்ச்சிவசப்பட்டு சில தோழர்கள் பேசியது, கண்கலங்க வைத்தது. கனத்த மனதோடு அமைதியாக நாங்கள் அமர்ந்திருந்த நேரம், பேருந்தில் திடீரென ஒரு பாடல். பாடல் ஆரம்பித்ததும் உள்ளிருந்து ஒரு குதூகலம் பற்றிக்கொண்டது.
பேருந்தில் ‘நிலா அது வானத்து மேல’ பாட்டுக்கு ஆடிக் களைத்து, தண்ணீர் குடிக்கும்போது இரவு 11.30 மணி. நொச்சிக்குப்பம் லூப் சாலையை வந்தடைந்தோம். நிலாவும் இருந்தது, ஓடமும் இருந்தது…
சாலையில் வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. சாலையோரத்தில் முழுக்க முழுக்க பெண்கள் நடத்தும் சிற்றுண்டிக் கடைகள். மசாலா பொரி, வாழைக்காய் பஜ்ஜி, சுக்கு டீயின் கமகம வாசனை பின்னி எடுத்தது. கடற்கரையில் வட்டமாக நின்று ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு, ‘ரிங்கா ரிங்கா ரோஸெஸ்’ விளையாடினோம். எங்கள் அருகில் உலகத்தையே மறந்து குடிபோதையில் இருந்த ஆறு தோழர்களின் மகிழ்ச்சியை கெடுத்தது மட்டுமில்லாமல், எங்கள் குழுவை ஒரு புகைப்படம் எடுத்து தர கேட்டது சிறப்பு!

இரவு 12.00 மணி, அரை மணிநேரத்திற்கு அரசியல் பேசினோம். எல்லோருக்குமான இரவு ஏன் பெண்களுக்கு எட்டாக்கனியாக இன்றும் இருக்கிறது என்று சுட சுட சுக்குக்காபியுடன் விவாதித்தோம். கண்ணகியைப் பற்றி பேசினோம், திராவிடத்தை பற்றிப் பேசினோம், இந்தியப் பெண்களின் அரசியல் பங்களிப்பு குறைவாக உள்ளதைப் பற்றி விவாதித்தோம். ஆக்கப்பூர்வமான விவாதம் அது. டீக்கடை பெஞ்சில் பெண்கள் அமர்ந்து அரசியல் பேசுவதை நினைத்துப்பார்த்து நெகிழ்ந்து போனேன்!
புதிதாக கட்டப்பட்ட நொச்சிக்குப்பம் குடியிருப்பில் வெக்கை தாங்கமுடியாமல் கடற்கரை மணலின் மீது பாயை போட்டு படுத்துறங்கிக் கொண்டிருந்த மீனவ தோழர் தோழியரை கண்டு மனம் கொஞ்சம் ஏங்கிற்று.
எங்களுக்குத் தடுக்கப்பட்டிருந்த இரவை சிறிது சிறிதாகக் கைப்பற்றிக்கொண்டிருந்தோம்.
மூன்று மணி பிரியாணி

சரியாக இரவு 1.15 மணிக்கு கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்துக்கு (urban square) வந்து நின்றது பேருந்து. ஒரு பாதுகாப்புக்காக, கை வளையலை வீட்டிலேயே கழற்றிவைத்துவிட்டு வந்திருக்கலாமோ என்று ஒரு பதைபதைப்புடன் பேருந்திலிருந்து இறங்கிய எனக்கு, கிட்டத்தட்ட இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. குடும்பம் குடும்பமாக வரிசையில் நின்றுகொண்டு (நான்கு வயது சிறுவர் சிறுமியிலிருந்து எழுபது வயது தாத்தா பாட்டி வரை) உணவு வாங்கி கொண்டு, ஒரு கட்டுக்கட்டிக்கொண்டிருந்தனர். பிரியாணி, பர்கர், பேல்பூரி, ஐஸ் கிரீம் என்று சரமாரியான உணவுகள். ஒரு முதியவர் தன் பேத்திக்கு ஐஸ்கிரீம் ஊட்டிக்கொண்டிருந்த காட்சி என்னை நெகிழவைத்தது. உட்காரக்கூட இடமில்லாமல், நின்றுகொண்டே சுண்டல் மசாலாவை தின்றுவிட்டு அடுத்த இலக்கிற்குத் தயாரானோம்.
சிங்காரச் சென்னை உண்மையில் சிங்காரமாகவே தெரிந்தது. ஒன்றேகால் மணிக்குப் பிரியாணி எப்படி மக்களுக்குச் செரிக்கும் என்று வியந்து கேட்டுக்கொண்டிருந்தேன். “மூணு மணி பிரியாணி கடையில் சாப்பிட்டதில்லையா?” என்று ஒரு தோழர் பெரும் வியப்புடன் கேட்டார்.
இரவு 2.00 மணிக்கு மௌண்ட்ரோடு புஹாரி முன் கலவரம் போல் இருந்தது. எட்டிப்பார்த்தால் பன் பட்டர் ஜாமுக்கு அடித்து கொண்டிருந்த மக்கள் கூட்டம்… அடுத்து கேசினோ திரையரங்கிலிருந்து வெளியே வந்த திரளான கூட்டம். இந்த ஊரில்தான் நாமும் இருக்கிறோமா என்று அசந்துதான் போனேன்!

காசிமேட்டுக் காத்தடிக்குது!
வைகறை 2.45 மணி, பேருந்திலிருந்து இறங்கியதும் உப்புக் காற்றில் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் உழைப்பின் மணத்தை நுகர முடிந்தது. காசிமேடு மீன் சந்தை. நாமெல்லாம் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும்போது, நமக்கான தேவைகளுக்காக ஒரு சமூகம் அயராது உழைத்துக்கொண்டிருப்பதை என் கண்களால் கண்டது நெகிழ்ச்சியடையச் செய்தது. அதிசயித்து அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். ஒரு நாள் தூக்கத்தைத் தொலைப்பதற்கே கண்ணீர் விடும் நம்மை சுற்றி ஒரு சமூகமே தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருந்ததைக் கண்கூடாகப் பார்த்தேன்.

தங்கள் தேவைகளுக்காக அடுத்தவரின் உழைப்பு, தூக்கம் என்று எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டிருந்த இன்னொரு சமூகத்தின் பிரதிபலிப்பாக என்னை உணர்ந்து நொந்துதான் போனேன்.
“முதல் போணி நீதான்! எடுத்துகின்னு போ!” என்று ஒரு கிலோ கடம்பா மீனை அள்ளிக்கொடுத்தார் ஒருவர்.
கணீர் குரலுடன் நூற்றுக்கணக்கில் ‘தைரியலட்சுமிகளை’ சந்தித்ததில் அத்தனை மகிழ்ச்சி. ஒரு கிலோ கடம்பா மீனை குறைந்த விலைக்கு வாங்கியது கூடுதல் மகிழ்வு.
பூ வாசம் புறப்படும் பெண்ணே
விடியற்காலை 4.00 மணி, இரவு உலா முடியும் இடம். பூக்களாக, தியாக தீபங்களாக இருக்கும் பெண்களை நினைவுப்படுத்த கோயம்பேடு பூ சந்தைக்கு சென்றோம் (உங்கள் மைண்ட்வாய்ஸ் எனக்கு நன்றாக கேட்கிறது!).
நெத்திலியின் வாசனையிலிருந்து நித்தியமல்லியின் வாசனையை நுகர என் மூக்கு தயார்படுத்திக்கொண்டது. சந்தை முழுக்க பூக்களின் நறுமணம்! பூக்களும் ஓய்வெடுக்கவில்லை; பூக்காரர்களும் ஓய்வெடுக்கவில்லை!

அதிகாலை 2 மணி இருளில் பூக்கள் நிரப்பப்பட்ட லாரிகள் இந்த சந்தை வளாகத்திற்கு வருகின்றன. அதிகாலை 1 மணிக்கே பூ விற்பனையாளர்கள் எழுந்துதயாராகிறார்கள். விடியற்காலை 5 மணிக்குச் சந்தைக்குள் திரளாகக் குவிகிறார்கள் வாடிக்கையாளர்கள். மல்லிகை மற்றும் ரோஜாக்களாலான அழகான ஜடைகள், நான்கு அடி உயர மாலைகள் என மணப் பெண்களையும் கோவில் தெய்வங்களையும் அலங்கரிக்கத் தயாராகின்றன.
ஒரு பெரிய பாத்திரம் நிறைய இனிப்பு, கார குழிப்பணியாரங்களுடன் உட்கார்ந்திருந்த அறுபது வயது அம்மா ஒருவர் எங்களைக் கவர்ந்துவிட்டார். நடுநிசி ஒரு மணிக்கு எழுந்து, சுடச்சுட குழிப்பணியாரங்களை ஊற்றி, வண்டியில் ஏற்றிக்கொண்டு கோயம்பேடு பூ சந்தைக்கு வந்து, அங்கு வேலை செய்பவர்களின் பசிக்கு உணவளிக்கும் அந்த மனம், எவ்வளவு பாராட்டுதலுக்கும் தகும். அவர் ஈட்டும் பணத்தில் அவரின் பேரக்குழந்தைகளைப் படிக்க வைப்பதாகப் பெருமையுடன் சொன்னார்.

இந்த இரவு ஒரு அறியப்படாத, அறிந்தும் சுயநல மனங்களால் எளிதில் புறக்கணிக்கப்படுகின்ற உழைக்கும் வர்க்கத்தைக் கொண்டாடும் இரவாக அமைந்தது. இந்த கொண்டாட்ட இரவை என் வாழ்வில் மறக்க முடியாது.
இந்த ஒட்டுமொத்த பட்டாளத்தை மேய்த்து, பேருந்தில் எங்கள் தூக்க கலக்கத்தையும் பொருட்படுத்தாது, நாங்கள் இரவு உலா சென்ற அத்தனை இடங்களின் வரலாறையும் எங்களுக்கு பொறுமையாக விளக்கிய நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கும், ஹெர் ஸ்டோரிஸுக்கும் கோடான கோடி நன்றிகள்! உலகம் நம்மை முழுமையாகப் பாதுகாப்பாக உணர வைக்கும் வரை காத்திருந்தால், நம்மில் பலர் ஒருபோதும் நகரவோ, வளரவோ, புதிதாக எதிலும் அடியெடுத்து வைக்கவோ மாட்டோம்.
உலகம் நம்மை ‘வீட்டிலேயே இரு, பாதுகாப்பாக இரு’ என்று சொன்னாலும்கூட, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
நமக்கான இரவை மீட்டெடுப்போம் தோழர்களே!
படங்கள்: கோகிலா, கீதா
படைப்பாளர்

சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறது.