UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பெண் ஓவியம்

“தெருக்களில் வியாபாரம் செய்யும் பெண்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சேலையை வரிந்து கட்டுவது தொடங்கி பொது இடங்களில் தனக்கான இடத்தை லாவகமாக எடுத்துக் கொள்வது வரை என அவர்களிடம் உள்ள இயல்பான துணிவு, எதையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கண்டு வியக்கிறேன். அதிலும் முதிய பெண்கள் காலை நீட்டியும், ‘அசால்ட்டாகவும்’ அமர்வதை ரசிக்கிறேன். ‘பெண் பார்வையில்’ அவர்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.”

திகைப்பு

தொலைக்காட்சியை இயக்கி பென் டிரைவை செருகினாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்பைத் திறந்தாள். புட்ட பொம்மா பாட்டை ஓட விட்டு, வீட்டின் கதவு சாளரங்களை அடைத்தாள். வசிப்பறையின் மையத்தில் நின்றபடி அந்தப் பாட்டுக்கு ஆனந்தமாகக் கூத்தாடினாள். இது தான் அசைவு, அடவு என்றெல்லாம் இல்லாமல் மனம் போல கை கால்களை வளைத்து நெளித்து, குதித்து சரி ஆட்டம் ஆடினாள். பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அதே பாடல். நான்கைந்து முறை ஆடியதில் வியர்த்து கொட்டியது. வேகவேகமாக மூச்சு வெளியேறியது. பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற மிதப்பில் இருந்தது செண்பகத்தின் உள்ளம்.