அனந்த காட்டின் கிலுகிலுப்பை தோப்பில் புலையர்* சாதிப் பெண்ணொருத்தி விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மரங்களின் நடுவே அழகான குழந்தை ஒன்றைக் கண்டாள். புலையர் குலப்பெண் அந்தக் குழந்தையை எடுத்து மாரோடு அணைத்தாள். குழந்தை புலையர் சாதிப் பெண்ணின் மாரில் பால் குடித்து சிரித்தது. அவள் குழந்தையை தரையில் விட்டாள். குழந்தை ஐந்து தலை நாகமாக மாறியது. அதைப் பார்த்து பயந்து ஓடிய புலையர் சாதிப்பெண், நடந்ததை தன் கணவனிடம் சொன்னாள். கணவனும் மனைவியும் அவ்விடம் சென்று பார்த்த போது சயனத்தில் இருக்கும் சிலை (படிமம்) ஒன்றைக் கண்டார்கள். அதன் பிறகு தினமும் அச்சிலைக்கு சிரட்டையில் (கொட்டாங்குச்சியில்) பாலும் சாதமும் வைத்து வணங்கினார்கள்.
அனந்தங்காட்டு அரசன் ஒரு கனவு கண்டான். அதில் பெருமாள் சயனத்தில் கிடப்பதையும் அவரைப் புலையர் சாதிப்பெண் வணங்குவதையும் கண்டான். உடனே, புலையர் சாதிப்பெண் வழிபட்ட படிமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அந்த இடத்தில் கோயில் ஒன்று கட்டினான். சயனப் படிமத்தை முதலில் வழிபட்ட புலையர் சாதிப்பெண்ணுக்கு வெகுமதியும் பயிர் செய்ய நிலமும் கொடுத்தான். புலையர் சாதிப்பெண்ணின் மாரில் பால் குடித்த கடவுள் தற்போது பத்மநாபசுவாமி என்னும் பெயரோடு திருவனந்தபுரத்தில் குடியிருக்கிறார்.

இக்கதை பத்மனாபசுவாமி கோயிலின் ஸ்தல வரலாறாக, செவிவழியாகக் கூறப்படும் கதையாகும். இக்கதையில் வரும் அனந்தங்காடு இப்போது திருவனந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது.
புலையர் சாதியினரின் நிலத்தில் விளைந்த நெல்லை பத்மநாபர் சுவாமி கோயிலின் நிறைச் சடங்குக்குக் கொண்டு செல்லும் வழக்கம் பல காலமாக இருந்தது. பின்னர், பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாகம் நம்பூதிரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு மாற்றப்பட்ட பல வழக்கங்களில் இதுவும் மாற்றப்பட்டது.1
ஆக மொத்தத்தில், புலையர் சாதியினர் வழிபட்ட கோயில் ஒன்றை திருவிதாங்கூர் அரசும் நம்பூதிரி பிராமணர்களும் சேர்ந்து ஆக்கிரமித்துள்ளனர்.
மேற்சொன்ன புலையர் சாதியுடன் தொடர்புடைய பத்மநாபரின் கதையும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. திருமால் நீசனுடைய இடமான அனந்தபுரம் சென்று பத்மநாபராக இருப்பதற்குச் செல்லும்போது, தேவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீசனுடைய இடத்திற்குச் செல்வதற்கான காரணமாகத் திருமால் உரைப்பது,
‘சான்றோர்க்கு உபகாரம்தான் செய்யும் முன்னாகப்
பொன்று கலி நீசனுக்குப் புத்தி சொல்ல வேண்டும்’2 என்பதாகும்.
அன்று அந்த நீசன் அவ்வூரில் எம்பெருமாள்
நீசனிடத்தில் நீலவண்ணர் வந்ததுதான்
தேசம் அறிய செச்சை புலச்சி கண்டு
ஒளித்தார் ஓர் இடத்தில் ஊர் தேசமும் அறிய
விளித்தாள் புலச்சி விதம் அறிந்து எல்லோரும்
நீசன் அறிந்து நெருங்க மணிமேடை வைத்து
வீசை முறுக்கி விசையாக அந்நீசன்
கோயில் சிவாலயங்கள் கொந்து கொந்தாய் உண்டாக்கி
பாவித்துப் பூசை பண்ண துணிந்தனனே
மேடைக்குக் கால்கள் மிகுத்தத் தங்கத்தால் இட்டு
வாடை கம கம என வாத்தியங்கள் நின்று அதிர
தீபம் புலச்சித் தீவட்டித்தான் கொடுக்க
பாவக் குடும்பத்தார் பண்ணினார் பூசைய்து
நம்பூரி வேதியர்கள் நாடி அகம் மகிழ்ந்து
பம்பை பரத்தை பகட்டுக் கைக்காட்டலொடு
நாடி அகம் மகிழ்ந்து நாள்தோறும் செய்து நிற்க’ 3
ஆகிய வரிகள், புலையர் சாதியினரோடு தொடர்புடைய பத்மனாபசுவாமி கோயிலின் வரலாற்றுக் கதையை சொல்லும் அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளாகும். அகிலத்திரட்டின் இவ்வரிகளிலிருந்து, மேலும் இரு தகவல் கிடைக்கின்றன.
- ‘திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் பூசைக்கு புலையர் சாதிப் பெண்கள் தீபம் ஏற்றிக் கொடுக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது’ என்ற தகவல் நமக்குக் கிடைக்கின்றது.
- ‘பம்பை பரத்தை பகட்டுக் கைக்காட்டலொடு’ என்ற வரி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் தேவதாசிகளின் ஆட்டம் வழக்கத்தில் இருந்த செய்தியையும் நமக்கு வழங்குகின்றது. தேவதாசிகளின் ‘கைக்காட்டல்’ என்ற ஆட்டம் பற்றி ‘பம்பைப் பரத்தை பகட்டு கைக்காட்டல் எல்லாம் எம்பரனுக்கு ஏற்ற இயல்பல்லா மாமுனியே’ என்ற அகிலத்திரட்டின் வரிகளின் பொருளை விளக்கும் போது, அத்தியாயம் 7ல் பார்த்திருக்கிறோம்.
அகிலத்திரட்டு அம்மானையில், நீசனிடம் திருமால் சாணார் சாதியினருக்காக எச்சரித்து உரையாடும் போது,
‘பின்னும் அந்தப் பூசை புனக்காரம் ஆனதெல்லாம்
பின்னும் கடைச்சாதி புலச்சிக்கை எச்சித்தீதான்’ என்று சொல்வதையும் இவ்விடத்தில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதாவது, ‘நான் ஏற்ற பூசை எல்லாம், சமூகத்தின் கடைநிலை சாதியாக இருக்கும் புலச்சி* தந்த எச்சில் நெருப்பு தான்’ என்று திருமால் கூறுகிறார்.
கதையின் தொடர்ச்சி
புத்திமதி என்ற பெயரில் திருமால் நீசனுக்கு செய்த எச்சரிக்கைக்கு பதிலாக நீசனின்(திருவிதாங்கூர் அரசரின்) பதிலாக அகிலத்திரட்டு அம்மானை கூறுவது பின்வருமாறு;
மாயவரே கேளும் வாய்த்த சான்றோர்களைத்தான்
ஆயரே நீரும் அபூர்வமாய்ச் சொன்னீரே
சாதிகளுக்குக் கீழான சாணார்கள் தங்களுக்கு
வீரியமாய் இத்தனையும் விவரித்துச் சொன்னீரே
சாணார்க்கு வைத்த தலைவீதமுள்ள இறை என்
வாழ்நாள் அழிந்திடினும் மாற்றி வைக்கப் போவதில்லை
என் சீவன் உள்ளளவும் ஏற்ற சாணார் தமக்கு
வம்பான ஊழியங்கள் மாற்றி நான் வைப்பதில்லை
நீர் தாமும் இந்த நிலை பெயர்ந்து சாணாரின்
ஊரானதிலே உறைந்து இருக்கப் போனாலும்
கேட்பதில்லை சாணாரின் கேள்வி நான் கேட்பதில்லை
தாழ்ப்பது அல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை
என்று அந்த நீசன் இத்தனையும் ஆயரோடு
அன்று உரைக்கப் பின்னும் அருளுவார் அச்சுதரும்’4
பொருள்
“சாணார்* சாதியினரை நீரும் அபூர்வமானவர்கள் என்று சொன்னீரே! சாதிகளிலேயே கீழான சாணார் சாதியினருக்கு வைத்த தலை வீதமுள்ள வரி(tax) என் வாழ்நாள் முடிந்தாலும் மாற்றி வைக்கப் போவதில்லை. இதில் குறிப்பிடப்படுகின்ற வரி(tax) ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட ‘தலைவரியை’ குறிப்பதாக அமைந்துள்ளது. என் உயிர் உள்ள வரை சாணார்களுக்கு, வம்பாக நான் செய்ய சொல்லும் ஊழியங்களை (கூலியில்லாத வேலைகளை) நான் மாற்றி வைக்கப் போவதில்லை. திருமாலான நீர் இங்கிருந்து இடம் பெயர்ந்து சாணார்களின் ஊரில் போய் இருந்தாலும் நான் கேட்க மாட்டேன். சாணார்களை தாழ்த்துவேனே அல்லாமல் சாணாரின் சங்கடங்களைக் கேட்க மாட்டேன்”, என்று நீசன் (திருவனந்தபுரத்து அரசன்) ஆயரோடு (திருமாலோடு) உரைக்க, அச்சுதர்(திருமால்) சொன்னார்… என்பது மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானை வரிகளின் பொருளாகும்.
இதில் திருமாலை ‘ஆயர்’ என்று வர்ணித்திருப்பதைக் கவனிக்க! மேலும் திருமால் பேசும்போது சாணார் சாதியை ‘ஆதிச்சாதி’, ‘முதல் சாதி’ என்று சொல்வதையும், நீசன்(திருவிதாங்கூர் அரசன்) பேசும்போது சாணார் சாதியை ‘கடைச்சாதி’ என்று சொல்வதையும் கவனிக்க!
கதையின் தொடர்ச்சி
மீண்டும் திருமால் நீசனிடம் சாணார்களுக்காக பரிந்து பேச, நீசன் பின்வருமாறு சொல்கிறான்;
‘மாலை காலை நேரம் மாயவனே உன்றனக்கு
சீலமுள்ள பூசை செய்து வருவதற்கு
நித்தம் ஒரு நூறு பொன் நினக்கு செலவும் உண்டே
அத்தனையும் கிட்டிடுமோ அவன் இறைகள் தாம் தடுத்தால்
அல்லாமல் என்றனக்கு ஆயிரத்து நூறு பொன்னும்
எல்லா திருப்பதிக்கும் என்றனுக்கும் வேணுமல்லோ’’5
பொருள்
“திருமாலே! காலையும் மாலையும் உனக்கு ஒழுக்கமான பூசைகள் செய்வதற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொன் செலவாகிறது. ஒடுக்கப்பட்ட மக்களிடம் வசூல் செய்யும் வரிகளை (taxes) தடுத்தால், உன் பூசைகளுக்கு ஆகும் செலவுக்கான பொன் கிடைக்குமா? அது மட்டுமில்லாமல், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லா திருப்பதிகளுக்கும் (கோயில்களுக்கும்) பூசை செலவுகள் செய்ய எனக்கு ஆயிரத்து நூற்றுக் கணக்கில் பொன் வேண்டுமல்லவா?”, என்று நீசன் (திருவிதாங்கூர் அரசன்) திருமாலிடம் கேட்கிறான், என்று சொல்கிறது அகிலத்திரட்டு.
அகிலத்திரட்டு அம்மானையின் மேற்சொன்ன வரிகளை (lines) பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தின் அரசியல் வரலாற்றோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.
“திருவிதாங்கூர் அரசு, கோயில் திருவிழாக்களுக்கு அதிகமான செலவு செய்ததால், அரசு கஜானாவில் ஏற்பட்ட தட்டுப்பாடும், மக்கள் மீது கொடுமையான வரிகளை விதித்ததற்கான காரணங்களில் ஒன்று”, என்று அத்தியாயம் 20ல் குறிப்பிட்டிருந்தேன். அதைத்தான் மேற்காணும் அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளும் (lines) சொல்கின்றன.
அடுத்து, நீசன் தொடர்ந்து சொல்கிறான்…
‘என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப்
பொன் பதினாயிரம் போடணுமே சம்பளங்கள்
இப்பொன்னுக்கு எல்லாம் யான் எங்கே போவேனடா
அப்பொன்னுக்கு எல்லாம் அவனை அடித்தல்லவோ
வேண்டித்தான் இத்தனையும் விதானிக்க வேணுமல்லோ’6
பொருள்
“என் சமஸ்தானத்தில் எனக்காக வேலை செய்கிறவர்களுக்கு ஒருவருக்கு பொன் பத்தாயிரம் என்று நான் சம்பளங்கள் தர வேண்டும் அல்லவா? இந்த பொன்னுக்கு நான் எங்கே போவேனடா? இந்த பொன்னுக்கு எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களை அடித்து துன்புறுத்தி வரிகளாக வசூல் செய்துதானே செலவுகளை செய்ய வேண்டும்?”, என்று நீசன்(திருவிதாங்கூர் அரசன்) திருமாலிடம் கேட்கிறார், என்று சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.
‘என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்கு’ என்று அகிலத்திரட்டில் சொல்லியிருப்பதில், ‘நாயர் படையில் வேலை செய்த படை வீரர்களையும், திருவிதாங்கூரின் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் படையில் வேலை செய்த படை வீரர்களையும்’ பொருத்திப் பார்த்தால், நாம் இதுவரை தொகுத்த வரலாற்றுப் பகுதிகளின் கோர்வையோடு கச்சிதமாகப் பொருந்தும். ஆக ஆதிக்க சாதி என்று தங்களை சொல்லிக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுக்கும், ஆங்கிலேயப் படைக்கும் கொடுக்க வேண்டிய சம்பளத் தொகைக்காக, ஒடுக்கப்பட்ட மக்களிடம் திருவிதாங்கூர் அரசு வரி வசூல் செய்தது என்ற வரலாற்றுக்கு அகிலத்திரட்டு அம்மானையும் சான்று பகர்கிறது.
மேற்சொன்ன அரசனின் (நீசனின்) கூற்றுக்கு கடவுள் (திருமால்) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்;
‘இத்தனையும் வேண்டி என்றனக்கு பூசையது
நித்தமும் நீ செய் எனவே நின்னோடே கேட்டேனோ
பூசை செய்தாய் நீயும் பிராமண நம்பூரிகளுக்குத்
தேசம் அறியாதோ செப்பாதோ சாட்சியது’7
என்று கடவுள் (திருமால்) நீசனிடம் கேட்கிறார், என்று சொல்கிறது அகிலத்திரட்டு.
பொருள்
“பொன் பணமென்று இத்தனையும் வேண்டி, எனக்கு தினமும் பூசை செய்யென்று நான் உன்னிடம் கேட்டேனா? நீ எனக்கா பூசை செய்தாய்? நீ பிராமண நம்பூதிரிகளுக்கு அல்லவா பூசை செய்தாய்? நாடு அறியாதா? நீ பிராமண நம்பூதிரிகளுக்கு பூசை செய்து சலுகைகள் செய்த காரியங்களுக்கு சாட்சி சொல்லதா?”, என்று திருமால் நீசனிடம் (திருவிதாங்கூர் அரசனிடம்) கேட்டார்.

மேற்சொன்ன வரிகளைப் படிக்கும் போது, பெரியார் பார்ப்பனீயத்தைச் சாடி உருவாக்கிய திராவிட சித்தாந்தத்தை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை.
பெரியார் என்னும் ஈ.வெ.ராமசாமி பார்ப்பனீயத்தையும் மக்களையும் பார்த்துக் கேட்டதும் இதே கேள்வியைத்தான்! “கடவுள் உங்களிடம், தனக்கு பொன்னும், பணமும், தின்பண்டங்களும், பூசை புனஸ்காரங்களும் வேண்டும் என்று கேட்டாரா?”, என்று பெரியார் கேட்டார். “நான் உன்னிடம் பொன்னும் பணமும் பூசையும் கேட்டேனா?” என்று கடவுளே மனிதனிடம் கேட்பதாக அய்யா வைகுண்டர் பதிவு செய்கிறார். இறுதியில் பொன்னும் பணமும் பூசைகளும் பிராமண வர்க்கத்தினரைத்தானே போய் சேர்கிறது என்று இருவருமே கொதிப்படைந்துச் சாடுகிறார்கள்.
இதைப் படித்த பிறகும், அய்யா வைகுண்டரை சனாதனி என்று யாரேனும் சொன்னால், அதைவிட கடைந்தெடுத்த முட்டாள்தனம் இருக்க முடியாது.
இவ்வரிகளை வரலாற்றோடு ஒப்பிட்டு பார்ப்போம்; சத்திரியத் தகுதியை அடைவதற்காக, பார்ப்பனீயம் வகுத்த ஹிரண்யகர்ப்ப யாகம், துலாபாரம் போன்ற சடங்குகளுக்காக திருவிதாங்கூர் அரசு செலவு செய்ததால், அரசின் கஜானா நெருக்கடிக்கு உள்ளானது என்று சொல்லியிருந்தேன். இதோ இந்த வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக நிற்கிறது அகிலத்திரட்டு அம்மானையின் மேற்சொன்ன வரிகள்.
மேலும், திருமால் நீசனிடம் உரைத்தவையாக அகிலத்திரட்டு சொல்பவற்றைக் காண்போம்;
‘ஏற்காது இருப்பதற்கு ஏற்ற அடையாளம்
தெற்கே தலை வைத்துச் சென்றதுவும் கண்டிலையோ
பின்னும் அந்த பூசை புனக்காரம் ஆனதெல்லாம்
பின்னும் கடைச்சாதி புலச்சிக்கை எச்சித்தீதான்’8 என்கிறார் திருமால்.
பொருள்
“நான் உன்னிடம் பூசை ஏற்காமல் இருப்பதற்கு அடையாளமாக, தெற்கே தலை வைத்து படுத்திருப்பதை காணவில்லையா? மேலும், எனக்கு நிகழ்ந்த பூசை புனக்காரம் எல்லாம் புலையர் சாதிப்பெண் தந்த எச்சில் நெருப்புதானே தவிர நீ செய்ததில்லை”, என்று திருமால் நீசனிடம் சொன்னார் என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு.
தெற்கே தலை வைத்துப் படுத்து, நீசனுக்குத் திருமால் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்பட்டுள்ளதை கவனிக்க! வடக்கிலிருந்து வந்த ஆரிய பார்ப்பனீயத்தை அய்யா வைகுண்டர் எதிர்த்திருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர முடிகின்றது. மேலும் திருவிதாங்கூர் அரசர்களையும் வடக்கு திசையை சார்ந்தவர்கள் என்று குறிப்பிடுவதையும் காண்க!
இதைத்தான் வடக்கே தலை வைத்துக் (கூட) படுக்காதே என்று சொல்லியிருப்பார்களோ என்னவோ!??
கதையின் தொடர்ச்சி
“நான் வடக்கையும் ஏற்கவில்லை, உன் சாதியப்படிநிலையையும் மதிக்கவில்லை”, என்று திருமால் (கடவுள்) சொன்னதால் நீசன் (திருவிதாங்கூர் அரசர்) கோபம் கொண்டார்.
‘நான் தந்தது ஒன்றும் நாவில் வைக்கவில்லை என்றால்
என் சொந்தமாக என்னோடு இருப்பதென்ன
போ போ’9 என்றான் நீசன்.
‘எளிய சாணான் எனவே எண்ணமிட்டு என்றனையும்
நளியாய் மிகப் பேசி நகைத்தாயே மாநீசா
நாடாள்வார் தமக்கு நான் பட்டமும் சூட்டி
தாடாண்மையான சத்தியமாய் என்றனையும்
ஒரு புத்தியாகி உள் என்னைக் கொண்டோர்க்குப்
புதுப் புத்தி ஈந்து பூலோகம் ஆள வைப்பேன்
மரம் அறிய சீவ செந்து மலையும் மிக அறிய
திரமான வாயு சேடன் முதல் அறிய
வருணன் அறிய மதியும் மிக அறிய
தருணம் வரும் போது சாணாரிடம் வருவேன்
அறிந்து பல சாதி முதல் அன்பு ஒன்றுக்கு உள்ளானால்
பிரிந்து மிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்’10
என்று அரசனிடம் சபதம் செய்து விட்டு திருச்செந்தூர் சென்று விட்டார் திருமால்!
கதை தொடரும்…
தரவுகள்
- வயல்காட்டு இசக்கி, ஆ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2016, பக்கம் எண்: 107.
- அகிலத்திரட்டு அம்மானை, மூலமும் உரையும், பாகம் 1, நா. விவேகானந்தன், M.A.,B.L. இரண்டாம் பதிப்பு 2006, பக்கம் எண்: 260
- அகிலத்திரட்டு அம்மானை, மூலமும் உரையும், பாகம் 1, நா. விவேகானந்தன், M.A.,B.L. இரண்டாம் பதிப்பு 2006, பக்கம் எண் : 264
4,5,6,7,8,9,10 ஆகிய எண்களில் சொல்லப்பட்டிருக்கும் அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளை, அகிலத்திரட்டு அம்மானை, மூலமும் உரையும், பாகம் 1, நா. விவேகானந்தன், M.A.,B.L. இரண்டாம் பதிப்பு 2006, பக்கம் எண்: 286 முதல் 291 வரையிலும், & பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 116 முதல் 118 வரையிலும் காணலாம்.
சாணார்*, புலச்சி* போன்ற வார்த்தைகள் அகிலத்திரட்டு அம்மானையில் இடம் பெற்றிருப்பதால் அவ்வார்த்தைகளை எழுத வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானேன். அன்றி, அவ்வார்த்தைகளை எழுதுவதில் எனக்கோ பதிப்பாசிரியருக்கோ எள்ளளவும் உடன்பாடில்லை.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.