பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி, இளம் பெண்கள் தங்கள் கருமுட்டைகளைச் சேமித்து வைத்து, பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக ஒரு நிலையை அடைந்ததும் தங்கள் விருப்பத்திற்கேற்ப சேமித்து வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் வயதாவதால் ஏற்படும் கருமுட்டையின் ஆரோக்கிய குறைவைத் தடுத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது சரியா, தவறா என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், கருமுட்டை சேமிப்பைப் பற்றி புரிந்துகொள்வது அவசியம்.

பொதுவாகவே முப்பது வயதிற்கு மேல் பெண்களின் கருமுட்டையின் ஆரோக்கியம் படிப்படியாகக் குறைய‌த் தொடங்கும். இதனால் வயதாக ஆக கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். இப்போதிருக்கும் காலக்கட்டத்தில் பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியான வளர்ச்சியைப் பொருத்தே குழந்தைக்கான திட்டமிடுதல் நடக்கிறது. அப்படிச் சில நேரத்தில் காலம் கடந்து குழந்தைக்காகத் திட்டமிடும் போது இயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது சிக்கலாகிறது. தெருவுக்குத் தெரு செயற்கைக் கருத்தரித்தல் மையங்கள் உருவாகியுள்ள நிலையில் கருமுட்டை சேமிப்பு என்பது மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது.‌

கருமுட்டை சேமிப்பு என்பது விந்தணு சேமிப்பைக் காட்டிலும் கொஞ்சம் கடினமானது‌. காரணம், மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு மாதத்திற்கு சினைப்பையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கரு முட்டைகள்தான் வெளியேறும். ஆனால் கருமுட்டை சேமிப்பிற்கு இந்த எண்ணிக்கை போதாது என்பதால், எண்ணிக்கையை அதிகரிக்க ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துவர். இந்த ஊசிகளைப் பயன்படுத்திய பிறகு கருமுட்டை உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தக் கருமுட்டையை எடுத்து -196° செல்சியஸில் சேமித்து வைப்பர். ஏன் இயற்கையாக வெளியேறும் கருமுட்டைகளைச் சேமித்து வைக்க முடியாதா என்று கேட்பவர்களுக்கு,  சேமித்து வைக்கப்படும் அந்த ஓரிரு கருமுட்டைகள் கருத்தரித்தலுக்குச் சிறந்ததாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அதனால் சேமித்து வைக்கப்படும் கருமுட்டையின் எண்ணிக்கை அதிகரித்தால், கருத்தரித்தலுக்குச் சிறந்த கருமுட்டையைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதற்காகத்தான் இந்த ஹார்மோன் ஊசிகள். இந்த ஊசிகளைத் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பயன்படுத்திய பிறகுதான் மருத்துவர்களால் கருமுட்டைகளைச் சினைப்பையிலிருந்து எடுத்துச் சேமித்து வைக்க முடியும்.

செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சைக்காக (IVF) வரும் பெண்களும் இந்த ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்த வேண்டும். இப்படி ஹார்மோன் ஊசிகளால் தூண்டிவிடப்படும் கருமுட்டை வெளியேற்றத்திற்கு ஆங்கிலத்தில் super ovulation என்று பெயர். இதற்குக் கணிசமான பக்கவிளைவுகளும் உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே கருமுட்டை சேமிப்பிற்கான இந்த மருத்துவ நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.

சேமித்து வைக்கப்படும் கருமுட்டைகளைப் பிற்காலத்தில் அந்தப் பெண்ணே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது‌ வேறொரு பெண்ணிற்கும் அதைத் தானமாகவும் வழங்குவதற்குச் சட்டத்தில் இடமுண்டு. உதாரணமாக, இழைமணி தாயனை சார்ந்த சில மரபணு‌ குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், அடுத்த தலைமுறைக்கு அந்த நோயைக் கடத்தாமல் இருப்பதற்காக வேறொரு பெண்ணுடைய கருமுட்டையைப் பயன்படுத்தி கருத்தரித்துக் கொள்ளலாம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தக் கருமுட்டையை வைத்து உலகளவில் மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறது. இதை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கருமுட்டையை மருத்துவ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக கருமுட்டை வங்கிகளில் சேமித்து வைத்து, பிற்காலத்தில் தானே அதைப் பயன்படுத்தி கருத்தரிப்பது. இரண்டு, மருத்துவக் காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ வேறொருவருடைய கருமுட்டையைப் பயன்படுத்தி (தானமாகப் பெற்று) கருத்தரிப்பது.

உலகளவில் கருமுட்டை சேமிப்பில் அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள்  சிறந்து விளங்குகின்றன. உலகின் முக்கால் வாசி நாடுகளில் கருமுட்டை சேமிப்பிற்கு அனுமதியுண்டு. ஆனால் அந்த நாடுகள் அனைத்தும் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கருமுட்டையைச் சேமிக்க அனுமதிப்பதில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே சில நிபந்தனைகளுடன் கருமுட்டை சேமிப்பை அனுமதிக்கும் நாடுகளும் உண்டு. உதாரணமாக, சவுதி அரேபியாவில் திருமணமான பெண்களுக்கு இயற்கையாகக் கருத்தரிப்பதில் சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே கருமுட்டையைச் சேமிக்க அனுமதியுண்டு.

அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கருமுட்டை சேமிப்பு மற்றும் கருமுட்டை தானம் இரண்டுக்குமே அனுமதியுண்டு. இதில் கருமுட்டை தானம் செய்பவரின் விவரங்களை வெளிப்படையாகக் கூறவும் அல்லது ரகசியமாகக் காக்கவும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இங்கிலாந்தில் கருமுட்டை தானம் செய்பவரின் விவரங்களை மறைமுகமாக வைக்க அனுமதியில்லை. இது தவிர இங்கிலாந்தில் கருமுட்டை தானம் செய்பவருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. லத்தீன் அமெரிக்கா நாடுகளான அர்ஜென்டினா, பிரேசில், மெக்ஸிக்கோ முதலிய நாடுகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய கருமுட்டை தானத்திற்கு இடமுண்டு.‌

ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துருக்கி, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் கருமுட்டை தானம் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது வேறொரு பெண்ணுடைய கருமுட்டையைப் பயன்படுத்தி அதன் மூலம் கருத்தரிப்பது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்நாடுகளில் கருமுட்டை சேமிப்பிற்கு அனுமதியுண்டு. பிரான்ஸ், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கருமுட்டை தானம் சில நிபந்தனைகளுடன் உரிய மருத்துவக் காரணங்களுக்காக அனுமதிக்கப்படுகிறது. கருமுட்டை தானத்தை அனுமதிக்கும் நாடுகளில் சில நாடுகள் மட்டுமே இழப்பீட்டு தொகையோ அல்லது காப்பீடோ சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு வழங்குகிறது.

கருமுட்டையை எவ்வளவு நாள்‌ சேமித்து வைத்திருப்பது என்பது அந்தந்த நாடுகளின் தனிப்பட்ட சட்டங்களைச் சார்ந்தது. பொதுவாகவே பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை கருமுட்டைகளை உறைந்த தன்மையில் தரம் குறையாமல் பாதுகாக்க முடியும். ஆனால் இது கருமுட்டை சேமிப்பு செயல்முறையின் போது அதை உறைய வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நுட்பத்தை பொருத்தது.

இதன் தொடர்ச்சியாகச் செயற்கைக் கருத்தரித்தல் (IVF) மூலம் விந்தணுவும் கருமுட்டையும் சேர்ந்து உருவான ஐந்து அல்லது ஆறு நாட்களே ஆன கருவை உறைய வைத்து பிற்காலத்தில் அதே தம்பதியோ அல்லது அந்தக் கருவைத் தானமாகப் பெற்ற வேறொரு பெண்ணோ செயற்கைக் கருத்தரித்தலின் உதவியோடு அந்தக் கருவைக் குழந்தையாகப் பெற முடியும். இப்படிக் கருவை உறைய வைத்துச் சேமிக்கும் முறைக்கு embryo freezing என்று பெயர். 1992ஆம் ஆண்டு உறைய வைத்த கருவிலிருந்து 2022இல், சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து வாடகைத் தாய் மூலம் இரட்டையர்கள் பிறந்திருப்பது மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முப்பது ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருவிலிருந்து குழந்தைப் பிறந்திருப்பது உலகில் இதுவே முதல்முறை. 

இது சரியா தவறா? இதன் சாதக, பாதகங்கள் என்ன என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.