பணம் சேமிக்கும் வங்கிகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் உயிர் காக்கும் வங்கிகளில் ரத்த வங்கிகளைத் தவிர வேறு எந்த வங்கியையும் பற்றிப் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி என்னென்ன வங்கிகள் இருக்கின்றன? விந்தணுக்கள், கருமுட்டையில் தொடங்கி உறுப்புகளை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் வரை அனைத்தையும் சேமித்து வைக்க வங்கிகள் உண்டு. சரி, இவற்றை எல்லாம் ஏன் சேமித்து வைக்க வேண்டும்?

முதலில் விந்தணுக்களைச் சேர்த்து வைக்கும் வங்கிகளைப் பற்றிப் பார்ப்போம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளும் கதிர்வீச்சு சிகிச்சையின் பக்கவிளைவாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இதனால் இயற்கையாகக் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னதாகவே விந்தணுக்களை விந்தணு வங்கிகளில் (sperm banks) சேமித்து வைத்துக் கொண்டால், பிற்காலத்தில் குழந்தைக்காகத் திட்டமிடும் போது உதவியாக இருக்கும். சரி, இந்த விந்தணுக்களை எப்படிச் சேமித்து வைப்பார்கள் என்று கேட்டால், சம்மந்தப்பட்ட நபரின் விந்தணுக்களை மாதிரிகளிலிருந்து பிரித்தெடுத்து கிட்டத்தட்ட -196° செல்சியஸில் உறைய வைப்பார்கள். தேவைப்படும் போது அந்த உறைய வைத்த விந்தணுக்களைக் கருத்தரித்தலுக்கான ஐவிஎஃப் சிகிச்சையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புற்றுநோயை மட்டுமன்றி விந்தணு எண்ணிக்கையைப் பாதிக்கும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த வங்கிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையை மேற்கொண்ட ஆண்கள் ஒருவேளை மீண்டும் குழந்தைக்குத் தயாராக நினைக்கும் போது அறுவை சிகிச்சை மூலம் விந்தணுக்களை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒருவர் இறந்த பிறகுகூட எழுபத்து இரண்டு மணி நேரம் வரை விந்தணுக்கள் உயிர்ப்புடன்தான் இருக்கும் என்பதால் குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது விந்தணுக்களைச் சேமித்து வைக்க முடியும். அதனால் பிற்காலத்தில் ஐவிஎஃப் மூலம் கருத்தரிக்கவும் முடியும். ராணுவ வீரர்கள்கூட இந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்காதான் விந்தணு ஏற்றுமதியில் உலகின் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து டென்மார்க் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பின்னால் நடக்கும் அரசியலையும் வியாபாரத்தையும் தமிழ் சினிமாவில் தாராள பிரபு, குற்றம் 23, யஷோதா போன்ற சில திரைப்படங்கள் எடுத்துக் கூறியுள்ளன. ஆனால் அவற்றில் கூறியிருப்பது வெறும் 10 சதவீதமே என்றாலும் இப்படியும் சில வியாபாரங்கள் நடக்கின்றன என்பதை மக்களிடையில் பிரபலமாக்கியிருப்பதில் தமிழ் சினிமாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் கருமுட்டை சேமிப்பு வங்கியான க்ரயோஸ் இன்டர்நேஷனல் (cryos international) டென்மார்கில் உள்ளது. டென்மார்க்குக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விந்தணு ஏற்றுமதி உலக சந்தையில் மிகப் பெரிய வியாபாரமாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து மக்கள் ஐவிஎஃப் சிகிச்சைக்காக டென்மார்க் மக்களின் விந்தணுக்களையே அதிகம் பயன்படுத்துவதாகத் தரவுகள் கூறுகின்றன. இதற்கு டென்மார்க்கில் விந்தணு தானத்தின் போது கடைபிடிக்கப்படும் சில வழிமுறைகளே காரணம். விந்தணுக்களை வங்கியில் சேமிப்பதற்கு முன்பாக அந்தத் தனிநபர் பல்வேறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். இதனால் பரம்பரை நோய்களோ, பாலியல் தொற்றுகளோ அந்த விந்தணு மூலம் பரவாது என்பதை உறுதி செய்த பின்னரே அது கருத்தரித்தல் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமன்றி விந்தணு தானம் செய்பவர் தன்னுடைய முழு அடையாளத்தை வெளியிடலாம் அல்லது ரகசியமாகவும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் விந்தணு தானம் செய்பவர் தன்னுடைய முழு அடையாளத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். டென்மார்க்கின் விந்தணு வங்கிகளில் விந்தணுக்களைச் சிகிச்சைக்காகப் பெறுபவர்கள், சம்மந்தபட்ட நபரின் முழு விவரத்தையும் தெரிந்துக் கொண்டு, அவரிடம் உரையாடிய பிறகு, விருப்பம் இருந்தால் அவரின் விந்தணுக்களை வங்கியிலிருந்துப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் உண்டு. உடற்கூறுகளைத் தேர்வு செய்தும்கூட, பொருத்தமான நபருடைய விந்தணுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, பிறக்கப் போகும் குழந்தையின் கருவிழி குறிப்பிட்ட நிறத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி அந்தக் குறிப்பிட்ட நிறக் கருவிழியை உடைய நபரின் படத்தைத் தெரிவு செய்து, அவருடைய விந்தணுக்களை வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளும் வழக்கமும் அங்கு உண்டு. உயரம், தோல் நிறம் போன்றவற்றையும் விருப்பத் தேர்வு செய்து கொள்ள முடியும். விந்தணு தானம் செய்தவர் பிறக்கும் குழந்தைக்குத் தந்தையாக முடியாது. சிகிச்சைப் பெற்ற தம்பதிகளே குழந்தையின் அதிகாரப்பூர்வமான தாய் தந்தையர் என்று அந்நாட்டுச் சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கிலாந்திலோ விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தையின் வயது பதினெட்டைத் தொட்டதும் விந்தணு தானம் செய்தவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு ஏதுவாக அவரின் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பது 2005இல் அமலுக்கு வந்தது. இதனாலேயே இங்கிலாந்தில் விந்தணு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

ஆனால் இந்த விதி டென்மார்க்கில் இல்லை. இது போன்ற சில பிரத்யேகமான விதிமுறைகளால்தான் டென்மார்க் விந்தணு தலைநகரமாக (sperm capital) விளங்குகிறது.‌ டென்மார்க் மக்கள் ரத்த தானத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு விந்தணு தானத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்நாட்டு அரசு விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சில மதங்கள் இது போன்ற தானங்களையோ, அதனால் பெற்றுக் கொள்ளப்படும் சிகிச்சையையோ ஏற்றுக் கொள்வதில்லை. அதை ஒரு குற்றமாகவும் கருதுகிறது. இஸ்லாமியர்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களில் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்கு அந்தந்த மதங்கள்  அனுமதிப்பதில்லை. இது மட்டுமன்றி இந்தியா போன்ற குடும்பக் கட்டமைப்பு கொண்ட நாடுகளில் இது மாதிரியான விந்தணு தானங்கள் மூலம் பெறப்படும் ஐவிஎஃப் சிகிச்சைகளை மக்கள் ஏற்றுக் கொள்வதில் உளவியல் சிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன. அதற்குக் காரணம் இது போன்ற நாடுகள் கடைபிடிக்கும் நம்பிக்கைகளும், திருமணம் சார்ந்த வாழ்வியல் முறைகளும். தொழில்நுட்பம் சார்ந்த இனப்பெருக்க ஒழுங்குமுறைக்கான இந்தியச் சட்டத்தில் (Assisted Reproductive Technology Regulation Act – 2021) விந்தணு தானம் செய்வதற்கு இடமுண்டு. தானம் செய்பவரின் அடையாளம் ரகசியமாகக் காக்கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் அந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதிலேதும் குளறுபடி நடந்தால் அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் மக்கள் மத்தியில் இது போன்ற தானங்கள் இன்னும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனம். அதாவது தன்னுடைய கணவனுடைய விந்தணு மூலம் தனக்குப் பிறக்கும் குழந்தைகளை மட்டுமே சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்னும் கற்பிதங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. வேறொரு நபரின் விந்தணுக்கள் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதை அவர்கள் ஒழுக்கக்கேடாகவும், சமூகம் வகுத்திருக்கும் கற்பு நெறியைத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இது ஒரு சாதாரண மருத்துவ நடைமுறை என்பதைப் பல நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதை இயல்பாக கடந்து போகவும் சமூகம் அனுமதிப்பதில்லை. இந்த நம்பிக்கையை மூலதனமாக வைத்து இது போன்ற நாடுகளில் இது சார்ந்த பல வியாபாரங்கள் நடக்கின்றன.

இதைப் பற்றிய புரிதல் இல்லாமல் குழந்தையின்மையைச் சுட்டிக்காட்டி சமூகம் செய்யும் நச்சரிப்பால் பல தம்பதிகள் செயற்கைக் கருத்தரிப்பு முறையைத் தெரிவு செய்கிறார்கள். சிகிச்சைக்காக வரும் தம்பதியின் அனுமதியின்றி வேறொரு நபரின் விந்தணு மூலம் கருத்தரித்தல் சிகிச்சை சில இடங்களில் நடக்கிறது. இதன் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியலும் வியாபாரமும் இருக்கிறது என்பதை அறியாமல் பல பெண்கள் இந்த அரசியல் வியாபார விளையாட்டிற்கு இரையாகி விடுகிறார்கள். தன் வயிற்றில் வளரும் கரு வேறொருவருடைய விந்தணுக்களால் உருவானது என்னும் உண்மை தெரிந்ததும் அவர்கள் தற்கொலை செய்யவும் தயங்குவதில்லை. இது போன்ற மருத்துவ சர்ச்சைகளில் உலகம் முழுவதும் அவ்வப்போது சில மருத்தவமனைகளும் மருத்துவர்களும் சிக்கிக் கொண்டுதான் இருக்கின்றன‌ர்.‌

அதில் மிக முக்கியமான ஒன்று அமெரிக்காவின் கனெக்ட்கட் மாகாணத்தில் நடைபெற்ற மோசடி சம்பவம். குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் தம்பதிகளின் அனுமதியில்லாமலே அவர்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவரின் விந்தணுக்களை, கணவரின் விந்தணுக்களுக்குப் பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையில் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது‌. அதுவும் அந்தச் சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆளாக ஆனப்பிறகு, அவர்களே தங்கள் தாயனையைப் பரிசோதித்துப் பார்த்து இந்த மருத்துவ மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். தன் பெற்றோருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்தான் தங்கள் தந்தை என்பதைத் தங்களால் துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணோ பெண்ணோ இதே மாதிரி அந்த மருத்துவரின் விந்தணுக்களால் பிறந்தவர்களாக இருந்தால் அவர்கள் தங்களுக்குச் சகோதரர், சகோதரிகளாக இருப்பர். சகோதரர் சகோதரிகளை எப்படித் திருமணம் செய்து கொள்வது என்னும் மிகப்பெரிய உளவியல் சார்ந்த வாக்குவாதங்களை அமெரிக்க நீதிமன்றங்கள் எதிர்கொண்டன‌.

இதுபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் பொழுது பாதிக்கப்பட்ட தம்பதிகள் என்ன மாதிரியான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள், எப்படியெல்லாம் அதை எதிர்கொள்கிறார்கள் போன்றவற்றை 2019ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ’குட் நியூஸ்’ திரைப்படம் எடுத்துக் காட்டியுள்ளது. மக்கள் மத்தியில் மருத்துவத்தில் நடக்கும் மோசடிகளையும், சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பப் பின்னணியையும், ஒருவேளை தவறு நடந்தால் அதை எதிர்கொள்வதற்கான சட்டங்களையும் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

விந்தணுக்களைப் போலவே கரு முட்டைகளைச் சேமித்து வைக்கும் வங்கிகளும் உண்டு. அடுத்த பகுதியில் அது பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.