“டே, நீ இதைப் பண்ண இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்க… அப்போ பொட்டதான் நீயி…” என்றாள் சிந்து காட்டமாக.

“நீதான் பொட்டை, நான் ஆம்பளை” என்று உடனடி பதிலடியாக வந்தது ஜீவாவிடமிருந்து.

இந்த உரையாடல்களை வேறு எழுத்து வேலையாக இருந்தாலும் ஆசிரியர் தனலட்சுமி உற்றுக் கவனித்தே வந்தார்.

“ஏய் சிந்து, ஒரு பொண்ணே பொட்டைங்கிற வார்த்தைய இழிவா பயன்படுத்தலாமா? என்னபா இப்படி பண்ற? நம்மை நாமே இழிவுபடுத்திக்கறதா?” என்று கடிந்தாள் புஜ்ஜி.

அவளே தொடர்ந்து… ”டீச்சர் இவுங்க பேசறத கேட்டிங்களா! பொட்டன்னா பொண்ணுதான். சிந்துவே இப்படி இழிவாபயன்படுத்தறது வருத்தமா இருக்கு. ஏன் இந்த வார்த்தையை இப்படி இழிவா பயன்படுத்தறாங்க? அதன் உண்மையான பொருள் என்னான்னு தெரிஞ்சுக்கணும் டீச்சர்” என்று தன் விருப்பத்தைக் கூறினாள் புஜ்ஜி.

“நானும் இதைத்தான் நினைச்சேன். நீயே கேட்டுட்ட புஜ்ஜி, மிக்க மகிழ்ச்சி. இன்னிக்கி கடைசி பாடவேளைல உரையாடல் வைப்போம்ல… இதைப் பற்றி உரையாடலாம். வேறேதேனும் தலைப்பு நிலுவைல இருக்கா?” என்று வினவினார் ஆசிரியர் தனலட்சுமி.

” இல்லை டீச்சர்” என்றான் முகில்.

“சரி… இன்று இந்தத் தலைப்பிலேயே உரையாடிடுவோம்” என, சமூக அறிவியல் வகுப்புக்கான பாடத்தைத் தொடங்கினார்.


School kids
School vector created by pikisuperstar – www.freepik.com

கடைசி பாடவேளைக்கு முந்தைய இடைவேளைக்கான மணி அடித்தவுடனே புஜ்ஜி, தனலட்சுமி ஓடிவந்தாள்.

“டீச்சர் டீச்சர்… வாங்க வகுப்புக்கு உரையாடல் நடத்தணும்னு சொன்னோம்ல” என்று பரபரத்தாள் புஜ்ஜி.

“புஜ்ஜி, இடைவேளை முடிந்து நீ வகுப்புக்குத் திரும்பும்போது நான் அங்கு இருப்பேன் சரியா” என்று ஆசிரியர் அனுப்பினார் புஜ்ஜியை.

“மா… லை வணக்கம் டீச்சர்” என்றனர், தனலட்சுமி ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்ததும்.

“அனைவருக்கும் வணக்கம்… உரையாடலைத் தொடங்கலாமா?” என்றார் ஆசிரியர்.

“ம்… சரி… உரையாடலைத் தொடங்குவோம். புஜ்ஜி விரும்பிக் கேட்டதால பொட்டைங்கிற தலைப்புல உரையாடப் போறோம். பொட்டைங்கிற சொல்லின் பொருள் என்ன? இந்தச் சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுது? இதை எங்கெல்லாம் பயன்படுத்தி கேட்டிருக்கீங்க?” என ஆரம்பித்தார் ஆசிரியர்.

உரையாடும்போது வட்ட வடிவில் அனைவரும் அமர்வது வழக்கம். இன்றும் அப்படியே…

“ சரிங்க டீச்சர், நான் முதல்ல சொல்றேன். பொட்டன்னா பெண். எங்க வீதில சண்டை போடும்போது அடிக்கடி இந்தச் சொல் பயன்படுத்தக் கேட்டிருக்கேன். ஆண் துணிச்சலா ஒரு செயலைச் செய்யலைன்னா இப்படிச் சொல்லிப் பார்த்திருக்கேன்” என்றான் ஏழுமலை.

”சிறப்பு! அடுத்து பகலவன் சொல்லு” என்றார் தனலட்சுமி.

“எனக்குப் பொருளெல்லாம் தெரியல. ஆனா, விளையாட்டுல நல்லா விளையாடலன்னாலும் தோத்துப்போகும்போதும் ஆண்களை அந்த வார்த்தையைச் சொல்லி, திட்டிக் கேட்டிருக்கேன்” என்றான் பகலவன்.

“சரியா சொன்ன பகலவா. பிறகு பாஷா நீ சொல்லு” என்றார் ஆசிரியர்.

“டீச்சர் அதனோட பொருள் பொட்டைக் கோழின்னா பெண் கோழியச் சொல்றோம்னு புரியுது. அங்க வீட்ல ஆண்கள் அழும்போது, ‘ஏன்பா பொட்டச்சி மாதிரி அழுவுற’ன்னு கேட்பாங்க… ஏன் டீச்சர் ஆண் துக்கத்துல அழுவாச்சி வரும்தான… ஏன் பெண்கள் மட்டும்தான் அழணுமா?” என்று அப்பாவியாகக் கேட்டான் பாஷா.

“சரியான கேள்வி… உரையாடலின் முடிவில் பேசுவோம். இப்போ கதிரவன் நீ சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.

“பொட்டைன்னா பொண்ணுதான் டீச்சர். வீட்டுக்கு வெளில இருந்து யாராவது சண்டைக்கு வரும்போது எங்கப்பா அமைதியா அதை எதிர்க்காம உட்கார்ந்திருந்தா, ‘பொட்டச்சி நானே போயி சண்டை போடுவேன். நீங்க இப்படி சும்மா உக்கார்ந்துக்கிட்டு இருக்கிங்களே’னு அம்மா சொல்லுவாங்க” என்றான் கதிரவன்

”ஓ அம்மா சொல்வாங்களா? அடுத்து புஜ்ஜியோட முறை… சொல்லுமா” என்றார் ஆசிரியர்.

”பொட்டைன்னா பொண்ணுதான். ஆண்கள் இழிவா சொல்றதுக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தறாங்க. ஆனா, எனக்குச் சுத்தமா பிடிக்காது. நான் பயன்படுத்தமாட்டேன் டீச்சர். எங்க வீட்ல எங்க அண்ணன் வீட்டு வேலை எதாவது செஞ்சான்னா, ‘ஏன்பா பொட்டச்சி மாதிரி வீட்டுவேலை செய்யறே’னு கேட்பாங்க அப்பா” என்று நிதானித்துப் பேசினாள் புஜ்ஜி.

”புஜ்ஜியின் ஆதங்கம் அனைவருக்கும் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன். சரி கார்த்தி நீ சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.

”இல்ல டீச்சர். நான் இன்னும் கொஞ்சம் யோசிக்க நேரம் வேணும்… அதனால பிறகு பேசறேன்” என்றான் கார்த்தி.

அடுத்து அமர்ந்திருந்த திவ்யாவைப் பேசச் சொன்னார் ஆசிரியர்.

”பொட்டைன்னா பொண்ணுதான். நான் கல்லாங்காய் நவீனோடு விளையாண்டேன். உடனே நண்பன் யாகைய்யா வந்து, ‘ஏண்டா பொண்ணுங்க விளையாட்ட விளையாடற’னு கிண்டல்” என்று சொல்லி முடிக்கும்முன்னே, யாகைய்யா குறுக்கிட்டு, “நான் அப்படி சொல்லல” என்று சொன்னதும்…

ஆசிரியர் குறுக்கிட்டு, “யாகைய்யா உன் முறை வரும்போது காத்திருந்து நீ கருத்து சொல்லலாம்.இப்போ குறுக்கிடுவது தவறு“ என்றார் ஆசிரியர்.

“மன்னிக்கணும் டீச்சர். இருந்தாலும் என்னைப் பற்றிச் சொல்லும்போது எப்படி கேட்காமல் இருப்பது“ என ஆதங்கப்பட்டான் யாகைய்யா.

“ம்… அடுத்து நான்சியோட முறை… சொல்லுமா” என்றார் ஆசிரியர் தனலட்சுமி.

“பொட்டைன்னா பொண்ணுதான். ஆனா, ஆணைத் திட்டும்போது ஏன் பொட்டைன்னு திட்றாங்கன்னு தெரியல. இதெல்லாம் ஆணாலதான் முடியும்னு சமூகத்துல விதிமுறையாவே இருக்கு. அப்போ பெண்ணால துணிச்சலா வீரமா இருக்க முடியாதா?“ என்றாள் நான்சி.

”கார்த்தி இன்னும் கருத்து சொல்லல… சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.

”ஆண் பயப்பட்டான்னா, அப்போ அந்த வார்த்தையால அவனை மலிவாச் சொல்வாங்க டீச்சர்” என்று நச்சென்று கருத்தை உதிர்த்தான் கார்த்தி.

”அனைவரும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் அருமையாகவும்சொல்லியிருந்தீங்க. இப்போ தொகுத்துச் சொல்வோம். அவங்கவங்க சிந்தித்து முடிவுக்கு வரட்டும்…”