வாழ்தல் நிமித்தம்

பண்டிகை வந்தால்

பட்டுண்டு…

பலகாரமும் உண்டு

பகட்டு உண்டு…

பதற்றம் தரும் வேலை உண்டு!

விடுமுறை உண்டு

நினைத்ததைச் செய்ய

விடுதலை உண்டோ?

மரபில் சிக்கிய மனிதம்

எண்ணி முறுவலித்தேன்…

உடலெங்கும் வலி படர்ந்தது.

தொடரும்…

ஆற்றின் வெள்ளம்போல்

வாழ்க்கைக் கடக்கும்

கையளவு நீர் மட்டுமே கிடைக்கும்

அதை அமிர்தமாக்குவதும்

அழுக்காக்குவதுமே வாழ்க்கை!

நமது காலத்தின் பின்னும்

ஆறு அதனோட்ட்டம் தொடரும்!

அறிவு

இருக்கும்

குளங்களை நீர்த்து

செவ்வாய் கிரகத்தில் நீரைத்தேடி

செல்வதே அறிவு!

நானும்

பழசேறிய பால் பாத்திரம்

சிறிது தட்டிவிட்டால்

புகை சீறும் பாத்திரம்

கைப்பிடி கழன்ற சுடு பாத்திரம்

ஒட்டிக்கொள்ளும் தோசைக்கல்

இவற்றோடு

பழுதாய்

நானும்

சமையலறையில்…

பெண் எனும் போன்சாய், கோ. தென்றல், ரூ. 75/- வளரி வெளியீடு, மானாமதுரை, 7871548146.