‘குணசுந்தரி’ 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். பி.என். ரெட்டி மற்றும் ஏ. சக்ரபாணி இப்படத்தைத் தயாரித்தனர். கதை ஷேக்ஸ்பியரின் கிங் லியர் (Shakespeare’s King Lear) நாடகத்தின் தழுவல். இது 1949 இல் தெலுங்கில் குணசுந்தரி கதா என வெளிவந்த திரைப்படத்தின் மறுபதிப்பு.  தெலுங்கில் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் தமிழில் வெற்றி பெறவில்லை. 

ஆண் நடிகர்கள்

இளவரசனாக ஆர்.கணேஷ்

உருமாறிய இளவரசனாக எம்.இ. மாதவன்

உக்ரசேனனாக எஸ்.வி. ரங்கராவ்

இரண்டாவது மருமகனாக எம்.என். நம்பியார்

மூத்த மருமகனாக அ. கருணாநிதி

துரைசாமி

வி.எம். ஏழுமலை

ஆர். நாகேஸ்வர ராவ்

சி.வி.வி. பந்துலு

ஆர்.எஸ். ராமசாமி

ஈ.ஆர். சகாதேவன்

பாலகிருஷ்ணா

பெண் நடிகர்கள்

குணசுந்தரியாக சாவித்திரி

ரூபசுந்தரியாக லட்சுமி பிரபா

ஹேமசுந்தரியாக டி.பி. முத்துலட்சுமி

ஏ. கமலா சந்திரபாபு

டி.என். மீனாட்சி

ருஷ்யேந்திரமணி

சீதை

ரஜனி

தனம்

குமாரி துளசி

குழந்தை சாரதா

குழந்தை ஜெயா & நிர்மலா

குழந்தை உமா & கோமளா

உக்கிர சேனன், தாரா நாட்டின் மன்னர். அவருக்கு ரூபசுந்தரி, ஹேமசுந்தரி மற்றும் குணசுந்தரி என மூன்று மகள்கள் உள்ளனர்.

குணசுந்தரி இளையவர். குணசுந்தரி பிறக்கும் போது அவர்களின் தாய் இறந்துவிடுகிறார். உக்கிர சேனன் மூன்று பெண்களையும் மிகுந்த கவனத்துடன் வளர்க்கிறார். பெண்கள் வளர்ந்த பிறகு, ஒரு நாள் தந்தைக்கும் மகள்களுக்கும் இடையிலான உரையாடலின் போது, ​​இரண்டு மூத்த மகள்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தந்தை தான் முதன்மையானவர் என்று அறிவிக்கிறார்கள். குணசுந்தரி கணவர்தான் என்று கூறுகிறார். 

தந்தை, குணசுந்தரி மீது அதிருப்தியும் கோபமும் அடைகிறார். அவர் இரண்டு மூத்த மகள்களையும் அவர்களின் உறவினர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். குணசுந்தரியை, உடல் ஊனமுற்ற ஒரு வயதான ஏழைக்குத் திருமணம் செய்து வைக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் உண்மையில் இளவரசன். உருமாறும் வித்தையை குருவிற்குத் தெரியாமல் திருடிக் கற்றதால் இந்நிலையை அடைந்தவர். மனைவியைத் தவிர வேறு யாருக்கும் இந்த உண்மை தெரிந்தால், இவர் கரடியாக மாறிவிடுவார் என வேறு ஒரு சாபமும் அந்த குரு கொடுத்திருக்கிறார்.

இவர்கள், நாட்டிலிருந்து வெளியில் வாழ்கிறார்கள். அப்போது மன்னர் நோய்வாய்ப்படுகிறார். மகேந்திர மணியால்  மட்டுமே அவரது நோயைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

குணசுந்தரியின் கணவர் மகேந்திர மணியைக் கொண்டு வருகிறார். ஆனால் அக்காக்களிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குணசுந்தரி உண்மையை உளறிக் கொட்ட இளவரசன் கரடியாக மாறிவிடுகிறார். 

குணசுந்தரியின் வேண்டுதலின் பலனால் சாபங்கள் நீங்க, இளவரசன், குணசுந்தரி இருவரும் இன்புற வாழ்கிறார்கள். மன்னரும் உண்மையை உணருகிறார். குணசுந்தரி மற்றும் அவருடைய கணவருக்குத் தன் நாட்டைக் கொடுக்கிறார். 

திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கண்டசாலா. பாடல்களை எழுதியவர் தஞ்சை என். ராமையா தாஸ்.

https://www.youtube.com/watch?v=WrBaRcjEeO0

மிகவும் இனிமையான இந்தப்பாடல் ஏ எம் ராஜா பாடியது. இப்பாடல் தணிக்கையில் நீக்கப்பட்டதாக கிணற்றுத் தவளை என்ற இணையப்பக்கம் சொல்கிறது.

கலையே உன் விழி கூட கவி பாடுதே

தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே

ஒளி வீசுதே

நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே

அலை மோதும் வேளை வாராய் முன்னாலே

அனுராக நிலையே பாராய் கண்ணாலே

இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி

இசையோடு பாடும் வேதாந்த வாணி

இணை யாரும் இல்லையே எழில் மேவும் மேனி

ஜிக்கி பாடிய பாடல் இது. 

ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி

வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன்

இன்ப கானம் பாடுவேன் ஹோய் 

வண்ணக் கலாபமெனும் பெண்ணாளும் நானே

பெண்ணைக் கண்டால் ரசிக்கும் கண்ணாக நானே

கண்ணைப் பறிக்கும் மின்னல்கலையாகினேனே

தென்றல் நிலாவில் கொஞ்சும் மலராகி நானே

தேன் மலர் மேல் தவழும் மதுவாகி நானே

சிந்தும் மதுவில் கெஞ்சும் வண்டாகினேனே

A.M.ராஜா P.சுசீலா இணைந்து  பாடிய பாடல் இது. 

நான் செய்த பூஜா பலம்

நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட

இல்லை நான் செய்த பூஜா பலம் ….

அரவிந்த மலரோடு அனுராக நிலை காண

ஆதவன் உதயமானான்

இல்லை ….அரவிந்தம் உதயமானாள்

தேன்மலர் மணம் போல தெய்வீக நிலை காண 

தென்றலும் உதயமானான்

இல்லை ..தேன் மலர் உதயமானாள் 

ஆண்டவன் கட்டளையை 

மீற முடியுமா? -2

அதை மாற்ற முடியுமா?

அவனவன் இஷ்டம்போல் வாழ முடியுமா?

முடியாதப்பா முடியாது 

இந்த உலகமே நாடக மேடையாடா

இந்த உருவமெல்லாம் வேஷதாரியடா 

தற்பெருமை கொண்டவன் கெடுப்பாரன்றி 

தானே கெடுவானாடா தானே அழிவானடா 

அற்ப மதியின் ஆணி வேறாகும் 

நானெனும் அகந்தையடா 

இந்த …. வேஷதாரியடா

ஒளியான உருவத்தின் நிழலுமே 

இருளாகக் காணுமடா 

முறையான உண்மையடா- இதை 

உணராமல் உயர்ந்தவன் தாழ்ந்தவன் 

என்று பேசிடும் உலகமடா 

இந்த.. வேஷதாரியடா

S.C.கிருஷ்ணன், K. ராணி இணைந்து பாடிய பாடல் இது.

ஹரஹர உடுக்கையின் நாதம் 

பரமசிவ வேதம் பரம ரகசியம் 

தெரிந்து கொள்வீர்-2

மண்ணும் விண்ணும் எதுவோ- நம் 

கண்ணால் பார்ப்பது எதுவோ 

மண்ணையும் விண்ணையும் புரிந்து கொள்ளாத 

மானிடப் பிறவியின் ஆணவம் எதுவோ 

தெரிந்து கொள்வீர்-2

பகலுக்கு பின்னே இரவு- அந்த 

இரவுக்குப் பின்னே பகலாம் 

பகலுக்கும் இரவுக்கும் பின்னால் எதுவோ 

தகதிமி தகதிமி தத்தித் தரிகிடதோம் 

தெரிந்து கொள்வீர்-2

*நெருப்பால் சூடான நீரு- அந்த 

நெருப்பையே அணைக்கும் பாரு 

நீதியானதோர் வேத வாக்கியமிது 

நினைத்துப் பார்த்தாலே புரிந்து கொள்ளுவீர் 

தெரிந்து கொள்ளுவீர் -2

வித்துக்கு முதலே விருக்ஷம்- அந்த 

விருஷத்தின் முதல் வித்து 

வித்தா விருக்ஷமா முதல் எதுவெனவே 

தத்துவம் தெரிந்த கரடி ராஜனிவன் 

தெரிந்து கொள்வீர்-2

“நெருப்பால் சூடான நீரு- அந்த 

நெருப்பையே அணைக்கும் பாரு” 

சொற்களைப் பிற்காலத்தில் ‘கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்’ பாடலில் கவியரசு கண்ணதாசன்  

“நெருப்பென்று சொன்னால்

நீரிலும் அணையும்

நீரென்று சொன்னால்

நெருப்பிலும் வேகும்”

எனப் பயன்படுத்தியிருக்கிறார். 

ஓஹோ பிரம்ம தேவனே -உன் 

பெருமையை நானென்ன சொல்வேன் பிரம்ம தேவனே

பெரிய புத்திசாலியப்பா பிரம்ம தேவனே

பேருமில்லே ஊருமில்லே பிட்சாதிபதி என்னை 

பிடிச்சி அடிச்சி ராஜா மகளை

தாலி கட்டச் செய்தாய் 

 பெரிய இடத்தில் மாப்பிள்ளையாக 

பெரும் வாங்கி வச்சாய் 

என்ன வேலை செய்தாயப்பா பிரம்ம தேவனே

அட தெய்வமே ஏ… தோம் 

கோடை வெய்யில் தெரிஞ்சிடாத 

ராஜா பெற்ற செல்வமே 

மூடனான எனக்கு சேத்து முடிச்சு

போட்ட தெய்வமே 

அட தெய்வமே என்ன எழுத்து  

எழுதினாயோ பிரம்ம தேவனே

தந்தை தான் எல்லாம் என நினைக்கும் குடும்பத்திலும் தந்தை தனது பெருமை குறித்தே சிந்திக்கிறார். கணவர் தான் எல்லாம் என நினைக்கும் குடும்பத்திலும் பெண்கள் ஓராயிரம் இன்னல்கள். தங்களுக்கு எது சரி என முடிவெடுக்கும் பெண்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். 

கதை, திரைக்கதை வசனம் என இதுவும் ஒட்டவில்லை. அதனால் பெரிதும் சொல்லுவதற்கு இல்லை. 

மூன்றாம் பகுதி முற்றும்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.