காதலர் தினத்தை, பலரும் காதலைக் கொண்டாடி கடப்பதைக் காண்கிறேன். காதல் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல. கலங்கடிக்கக் கூடியதும் ஆகும். பஞ்சாபி கவிஞர் அம்ரிதா பிரீதமின் காதலும் அவ்வாறானதே…

காதலைக் கடக்க நேர்ந்த எவரையும் அது விட்டுவைப்பதில்லை. அலைக்கழிக்கச் செய்து, உவகை, அழுகை, ஆத்திரம், மௌனம், இறப்பு என்னும் கலவைக்குள் அழுத்தியெடுத்து அடங்குகிறது. காதலைக் கொண்டாடும் கலாசாரங்களில் அதைத் தூய அன்பென்றும் காதலித்தவனையே கைப்பிடிப்பவள் பாக்கியசாலியென்றும்… அதை இழந்தவர்கள் அபாக்கியவாதிகளாகவும் தன்னையே மாய்த்துக் கொள்பவர்களாகவும் காட்டப்பட்டிருக்கிறது.

கலாசார காலகட்டம் மாறிய காலத்தில், காதலும் பல அவதானிப்புகளுடன் பயணிக்கத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞர் அம்ரிதா பிரீதம் அவர்களின் வாழ்க்கையை, அவரது காதலை நோக்க சற்று நேரம் கிடைத்தது. அவர் காலத்தில் வாழ்ந்த சக பெண்களைவிட மிகுந்த தைரியமும் தன்னுயர்வும் கொண்டவர் பிரீதம்.

சிறு வயதிலேயே தாயை இழந்த அம்ரிதா, திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். லாகூரில் வசித்து வந்தார். அவரின் இளம்வயது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை சந்தித்திருந்தது. அந்த காலகட்டத்தில் நடந்தவற்றை பஞ்சாபி மற்றும் இந்தியில் கவிதைகளாகத் தொகுத்திருந்தார். அவை மிகவும் பிரபலமானவை. அவரின் படைப்புகள் சாகித்திய அகாதமி விருது (1956), ஞானபீட விருது (1982) பெற்றன. அவரது இலக்கியப் பங்களிப்புக்கு பத்ம விபூஷண் விருது (2004) கிடைத்தது.

அவருக்கு காதலாய் ஸாஹிர் லூதியான்வி கிடைத்தபோது, அம்ரிதாவுக்கு பிரீதமுடன் திருமணம் ஆகியிருந்தது. அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வொன்றில், முதல் பார்வையிலேயே காதலில் சிக்குண்டனர். அன்றிரவு மழையின் காரணமாய் அந்த கிராமத்திலேயே அவர்கள் தங்க வேண்டிவந்தது. ஸாஹிருடனான அம்ரிதாவின் நினைவுகள், அவரின் கவிதை தொகுப்பில் இணைந்தன. அவரது சுயசரிதையில் ஸாஹிரின் நிழலுடன் தான் நடந்ததை நினைவுகூர்கிறார்.

இருவருக்குமிடையே இரண்டே விஷயங்களால் மட்டுமே இடைவெளி என்கிறார் அம்ரிதா.

‘There were two obstacles between us – one of silence, which remained forever. And the other was language. I wrote poetry in Punjabi, Sahir in Urdu.’

அவர்கள் இருவருக்குமான காதலில், மௌனம் அதிகமான சத்தங்களை ஏற்படுத்தியிருந்தது. ஆழமான காதலின் வலிகளுடன் அம்ரிதா பயணித்தார். பிரீதமுடன் அவரின் மணவாழ்க்கை முதலிலிருந்தே சரிவர கட்டமைக்கப்படவில்லை. இரு குழந்தைகளுடன் பிரீதமிடமிருந்து பிரிதல் உறுதியாயிற்று. காதலுடன் ஸாஹிர் லூதியான்வியின் கரம் பற்ற விரும்பிய அம்ரிதா, அதிக காதல் கவிதைகளை எழுதினார்.

ஸாஹிருடன் அம்ரிதா

‘ஆக்ரி கத்’ (கடைசிக் கடிதங்கள்) புதினமும் அவர்களின் முதல் சந்திப்பை விவரித்தது. அவரின் ‘சுனெஹ்ரே’ (செய்திகள்) என்னும் கவிதை நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. அவர்கள் சந்தித்துக்கொண்ட இரவுகளில் லூதியான்வி குடித்த சிகரெட்களின் மிச்சத் துண்டுகளை சேகரித்து வைத்து, அம்ரிதா தனிமையில் இருக்கும்போது புகைப்பதுண்டாம். அது லூதியான்வியை ஸ்பரிசத்தலுக்கு சமமானதாய் இருந்ததாக தன்னுடைய சுயசரிதையான ‘ரசீதி டிக்கெட்’டில் ( Revenue Stamp) குறிப்பிட்டுள்ளார். அம்ரிதா ஸாஹிரின் மேல் வைத்திருந்த ஆழமான காதலையும் அவரின் கைபிடித்து நடக்க தான் விருப்பப்பட்டதையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

ஆனால் ஸாஹிர் அவ்வாறு இல்லை. மிகுந்த மௌனம் சுமந்தவர். பிரிவினைக்குப் பிறகு, பம்பாயில் குடியேறி அங்கு பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றி வந்தார். தான் அம்ரிதாவை காதலிப்பதாகவோ, தனக்காகத்தான் அம்ரிதா காதலை கவிதையாக்குகிறாள் என்றோ சொன்னால், தன் நண்பர்கள் சிரிப்பார்கள் என எண்ணியவர் அவர். இருவரும் சந்தித்த காலம் மிக குறைவாக இருந்தாலும், காதல் கடிதங்கள் அதிகமாய் பரிமாறிக் கொள்ளபட்டிருந்தன.

அம்ரிதாவைப் போல ஸாஹிர் இல்லை. அவரின் கவிதைகள் இடதுசாரி இலக்கியம் சார்ந்திருந்தது. அவருக்குக் காதல் இரண்டாம் பட்சமாய் இருந்தது. அம்ரிதாவின் இத்தனை காதல் அழைப்புகளையும் அவர் இழக்கக் காரணம் அவரின் தாய் மேல் அவர் கொண்டிருந்த மிகையான அன்பு எனக் கூறுகிறார் அம்ரிதா. சிறுவயதிலிருந்தே தாயின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால், இன்னொரு பெண்ணை ஏற்றுக்கொள்வதில் ஸாஹிருக்கு சிரமம் இருந்தது.

பின்னாளில் சுதா என்னும் கவிஞருடனும் இன்னும் சில பெண்களுடனும் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாத உறவுகளை ஸாஹிர் கொண்டிருந்ததன் காரணமாக, அம்ரிதா அவரிடமிருந்து சற்று விலகி இம்ரோ என்னும் ஓவியருடன் இறுதிவரை இணைந்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட ஸாஹிர் மனவருத்ததில் கவிதைகள் இயற்றியதாகவும் தெரிகிறது. அம்ரிதாவின் அளவு கடந்த காதலை ஏற்க இயலாத தன் கோழைத்தனத்தை அவர் எழுதியிருந்தார்.

“Mehfil se uth jaane walo,Tum logo par kya ilzam

Tum aabad gharo ke vasi Main awaara aur badnaam.”

(People who leave a happy gathering, what blame can I place on you? You come from prosperous homes, and I am infamous and delusional)

அம்ரிதா, படம்: Indian Express

காதலைக் காதலால் அணைக்கும் சாகசம் எல்லோருக்கும் அமைவதில்லை. இத்துனை அன்பு கொண்டிருந்த அம்ரிதாவின் காதலை ஏற்கமுடியாத கோழையாய் ஒரு கவிஞன், தன்னைத் தானே வருத்திக்கொண்டு இறந்திருக்கிறான். அம்ரிதா பிரீதமின் எல்லையற்ற காதல்போல் இந்த உலகில் அனேகர் வாழ்வில் நிகழ்வதுண்டு. தன்னைவிட அதிகமாய், நேசிப்பவரைக் காதலித்திருக்கிறார்கள். மனதில் வலியையும் அதன் விளைவாய் ஒரு சுகத்தையும் கொடுக்கவல்ல ஆற்றல், இம்மாதிரியான காதலுக்கு மட்டுமே உண்டு.காதலின் சக்தி இணைக்கும் இரு இதயங்களை உயிருடன் கொல்லும் ஆற்றல் பெற்றது. அம்ரிதா பிரீதம் – ஸாஹிர் லூதியான்வி காதலும் அதில் ஒரு சான்றாய் எழும்பி நிற்கின்றது.

“Rall gai si es vich ik boond tere ishq di

Esse layi main zindagi di saari kudattan pee layi”

Just because a drop of your love had blended in, I drank down the entire bitterness of life. ~ Amrita Pritam.

படைப்பு:

அகிலா

எழுத்தாளர், விமர்சகர், கலைஞர். மனநல ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.