இலைமறை காய்மறை

ஆதிமனிதன் இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்டு உடலுறவில் ஈடுபட்டான். அதன்பின் பெண்ணின் வயிற்றுப்பகுதி சிறிது சிறிதாக பெரிதாகி, சில மாதங்களுக்குப் பிறகு தன்னைப் போலவே தோற்றம் அளிக்கும் சிறிய உருவத்தை ஈன்று எடுப்பதையும் கண்டு வியப்பில் ஆழ்ந்து போனானாம்.

மனித இனம் தோன்றிய முதல் சில பத்தாண்டுகளுக்கு இந்த பிரமிப்பு ஆணுக்கு இருந்து வந்ததாம். அதன்பின் தான் விலங்குகள், பறவைகள் இனப்பெருக்கம் செய்வதை கூர்ந்து கவனித்தானாம். அப்புறம் தான் உடலுறவின் விளைவாக ஏற்படுவதே குழந்தைப்பேறு என்பதை‌ ஆதி மனிதன் உணர்ந்தான் என்று சொல்கிறது ஒரு கதை.

 அப்படி குழந்தை எப்படி உருவாகிறது என்றே தெரியாமல் இருந்த காலம்  ஒன்று. இப்போது ‘காப்பர்-டி வைக்கணும்’, ‘ஒரு பாக்கெட் காண்டம் கொடுங்க’ என்று மருந்துக்கடைகளிலும் மருத்துவமனைகளிலும் போய்க் கேட்க முடிகிறது என்றால் இந்த இரண்டுக்குமான இடைப்பட்ட வரலாறு மிக நீண்டது.

 கருத்தடை முயற்சிகளை மேற்கொள்வது குற்றம் என்று பல்வேறு மதங்களும் சட்டங்களும் ஆரம்பகாலம் முதலே பேசி வந்திருக்கின்றன. இன்னமும் சில சமூகங்களில் அப்படியான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. மக்கள் தொகை பெருக்கமே பசி, பட்டினி, பஞ்சம், அதிக உயிரிழப்புகள் இவற்றை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தபின் உலகின் பல்வேறு பகுதிகளில் குடும்பக் கட்டுப்பாடு தேவை என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கின.

சில பண்டைய சமூகங்களில் குழந்தைப் பேற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பெண்கள் மத்தியில் செவிவழிச் செய்தியாக உலவி வந்ததாகவும், அது ஆண்களுக்கு கூட தெரியாது என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பண்டைய கிரேக்கம், எகிப்து போன்ற நாகரிகங்களில் விந்தணு பெண்ணின் கருக்குழாயைச் சென்று அடையாமல் இருப்பதற்காக தேன், நெய், இந்துப்பு, சில தாவர வகைகள் இவற்றைக்கொண்டு தயார் செய்த கலவைகள்  பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பண்டைய இந்தியாவிலும் வாத்ஸ்யாயனர் குழந்தைப் பேற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி தன் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

வரலாற்றின் பாதையில் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தியதால் கவிழ்ந்த அரசாங்கங்களும் உண்டு, திருமணம் செய்யாமல் இருப்பதும், திருமணத்தைத் தள்ளிப் போடுவதும் தான் குழந்தைப் பேற்றைத் தவிர்க்க சிறந்த வழிகள், நிம்மதியான மனித வாழ்வுக்கு இதைக் கடைப்பிடியுங்கள் என்று கூறிய/ கூறிவரும் மதங்களும் உண்டு.

குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய மேலை நாடுகளில் சென்ற நூற்றாண்டின் மத்தியில் மையங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறு துவங்கப்பட்ட மையங்கள் மீது எதிர்ப்புகள் கிளம்பி, அரசு வழக்கு போட்டதும், அதன்பின் மக்கள் அதை ஆதரித்து பெரும் இயக்கமாக மாற்றியதும் நடந்தது. இன்று மேலை நாடுகளில் பாதுகாப்பான உடலுறவு (safe sex) மேற்கொள்வது எப்படி, பாலியல் நோய்களையும் கர்ப்பத்தையும் எப்படி தவிர்க்கலாம் என்பது பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படுகிறது.

Photo by Deon Black on Unsplash

 இயற்கையின் விளையாட்டை மனிதனால் தவிர்க்க முடியாது, ஆனால் அதனால் ஏற்படும் இளவயது கர்ப்பங்கள், பேறுகால மற்றும் சிசு மரணங்கள், பாலியல் நோய்கள் இவற்றைத் தவிர்ப்பது இத்தகைய கல்வியின் நோக்கமாக அங்கு பார்க்கப்படுகிறது. நமது நாட்டிலும் திருமணத்திற்கு முன்பாக தம்பதிக்கு கலந்தாலோசனை (premarital counselling) வழங்க வேண்டும், தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்து கற்றுத் தர வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. இருந்தாலும் மேலை நாடுகள் சந்தித்து விட்ட வளர்ச்சியை அடைய நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.

கருத்தடை முறைகளை பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். சினைமுட்டை உருவாவதை தடுக்கும் வழிமுறைகள் முதலாவதாக வருகின்றன. கருத்தடை மாத்திரைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் மாலா D மாலா N போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை தான். புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை குறிப்பிட்ட டோஸில் மாத்திரை வடிவில் தொடர்ந்து கொடுக்கும்போது முட்டை வளர்ச்சி தடுக்கப் படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும். ஆனால் வழக்கமான முட்டை வளர்ச்சி இருக்காது (Anovulatory cycles).

 அடுத்த வழிமுறை விந்தணுவும் சினைமுட்டையும் சந்திப்பதைத் தடுப்பது. இதற்குத்தான் ஆணுறைகள், பெண்ணுறைகள் (female condoms) பயன்படுகின்றன. நீண்ட நாட்களாக நடைமுறையிலுள்ள Calendar methodஐ  இந்த வகையில் சேர்க்கலாம். ஒரு பெண்ணிற்கு 30 நாட்களுக்கு ஒருமுறை சீராக மாத விலக்கு வருகிறது என்றால், மாதவிடாய் தொடங்கியதிலிருந்து பதினாறாவது நாள் அதாவது அடுத்த மாத விடாய்க்கு 14 நாட்கள் முன்பாக அவளது உடலில் சினை முட்டை வெளியேறும். இந்த 14வது நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பும் இரண்டு நாட்கள் பின்பும் உடலுறவு கொண்டால், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்தக் காலகட்டத்தில் மட்டும் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தால் நிறைய பேருக்கு குழந்தை பேற்றைத் தள்ளிப் போடலாம். நடைமுறையில் இது சற்றுக் கடினம். சரியாக தேதியை கவனிக்கவில்லை என்றாலோ, மாதவிடாய் சுழற்சி முன்பின்னாக வந்தாலோ இந்த வழிமுறை தவறிப் போவதற்கான வாய்ப்பு உண்டு.

காப்பர் டி

அடுத்ததாக, சினை முட்டையும் விந்தணுவும் கருக்குழாயில் இணைந்து விட்டாலும் அதை கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளாமல் செய்வதற்கு காப்பர்-டி போன்ற சாதனங்கள் உதவுகின்றன. பெரும்பாலான பெண்களுக்கு காப்பர் டி உடலில் பொருந்திப்போகும். சிலருக்கு அழற்சி, ஒவ்வாமை ஏற்படலாம். அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய கருத்தடை மாத்திரைகளும் உண்டு (Emergency Pill). பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்ந்த 72 மணி நேரத்திற்குள் இந்த மாத்திரையை பயன்படுத்தினால் கருத்தரித்தலைத் தடுக்கலாம்.

i pill

பிற முறைகளால் தோல்வி ஏற்பட்டோ விரும்பத்தகாத வகையில் கரு தங்கி விட்டது என்றால் அதன்பின் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கும் சட்டத்தில் இடமுண்டு. MTP act 1971 இதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறது.

குடும்பம் முழுமையான உடன், அதாவது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பிறந்து விட்டன, இனி குழந்தை வேண்டாம் என்று நினைத்தால் நிரந்தரமான கருத்தடை முறைகளை (Permanent sterilization) மேற்கொள்ளலாம். பெண்களுக்கு tubectomy மற்றும் ஆண்களுக்கு Vasectomy செய்யப்படுகின்றது. இரண்டாவது அல்லது மூன்றாவது பிரசவம் முடிந்த ஓரிரு நாட்களுக்குள்ளாக பெரும்பாலான பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். சிசேரியன் என்றால் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போதே குடும்பநல அறுவை சிகிச்சையையும் சேர்த்து செய்து கொள்ள முடியும்.

ஆண் கருத்தடை முறையான வாசக்டமி தழும்பில்லாதது, முற்றிலும் பாதுகாப்பானது, பலரும் நினைப்பது போல் அல்லாமல் ஆண்மைக் குறைவை அது எந்த விதத்திலும் ஏற்படுவதில்லை. நமது நாட்டின் குடும்பநலத் துறை ஆர்வமிக்க ஊழியர்களாலும் தன்னார்வலர்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கர்ப்பகாலத்திலும் பேறுகாலத்தின் போதும் இந்த ஊழியர்கள் ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் முன் இருக்கும் கருத்தடைக்கான வாய்ப்புகளை விவரித்து பொருத்தமான முறையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறார்கள்.

நான் அறிந்த ஒரு ஊர் அது. சற்று வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கொண்டது. பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளில் வேலை செய்வார்கள். கூட்டுக் குடும்ப அமைப்பு அங்கு பரவலாக இருக்கும். பெண் எடுப்பது, கொடுப்பது உள்ளூரிலேயே தான். பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் சமைத்து வைத்துவிட்டுத் தன் தாய் வீட்டிற்கு உணவு உண்பதற்காக செல்வார்கள். அதுபோக, வருடத்தின் குறிப்பிட்ட மாதத்தில் ஓய்வுக்காக தாய் வீட்டுக்குச் சென்று தங்கி விடுவார்கள். அந்தப் பழக்கத்திற்கு சடவு ஆறுதல் (ஓய்வெடுத்தல்) என்று பெயர்.

கணவனின் வெளிநாட்டு வாசத்தால் பிரிந்திருந்தனர் ஒரு தம்பதியர். கணவன் விடுமுறையில் வருகையில் அந்தப் பெண்ணுக்கு தாய் வீட்டிற்கு செல்ல வேண்டிய மாதம் வந்து விட்டது. கணவன் மனைவியை சந்திக்க தன் மாமியார் வீட்டுக்குப் போக வர இருந்திருக்கிறான். அந்த சமயம் பெண் கருவுற்று விட்டாள். சடவு ஆறப் போன மாதத்தில் கர்ப்பமுற்றால், ஊர் என்ன சொல்லுமோ, பெண்ணின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாகுமோ என்ற பயத்தில் கணவனும் மனைவியுமாகச் சென்று ஒரு சட்டவிரோத மையத்தில் கருக்கலைப்பில் ஈடுபட, அந்தப் பெண் அதிக ரத்தப்போக்கால் மரணமடைந்தாள். இது இருபது வருடங்களுக்கு முன்பாக மருத்துவத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம். ஆனால் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சமீபத்தில், ‘என் வீட்டுக்காரர் வெளிநாட்டிலிருந்து வர்றாரு… எனக்கு ‘அந்தாரா’ போடலாமா?’ என்று கேட்டு அரசு மருத்துவமனைக்கு வந்தார். அந்தாரா (Antara) என்பது குறுகிய காலத்திற்கான கர்ப்பத்தடை முறை. ஒரு ஊசியை செலுத்தி விட்டால் அடுத்த மூன்று மாதங்களுக்கு கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்கலாம். இது பற்றிய புரிதல் அந்தப் பெண்ணுக்கு இருந்தது எனக்கு சந்தோஷம் தந்தது.

Antara

இலைமறை, காய்மறையாக கருத்தடை முறைகள் பின்பற்றப்படும் நாடு இது. ஆணுறை வாங்க வேண்டுமென்றால் ஒரு மருந்துக் கடையை வெகுநேரமாக நோட்டமிட்டு, வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் போய் ரகசியமாகக் கேட்டு வாங்குவது தான் நம் நாட்டில் வழக்கம். பெருமுயற்சி எடுத்தாலன்றி இத்தகைய தயக்கம் மக்களிடையே விலகாது. குடும்ப நலம் குறித்து தங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி அறியாமையைப் போக்குவது மக்கள் தொகைப் பெருக்கத்தைத் தடுப்பதற்கும்,  தனிமனித/ குடும்ப ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியம்!

படைப்பாளர்

டாக்டர் அகிலாண்டபாரதி

கண் மருத்துவர், எழுத்தாளர்கதைசொல்லி. அன்றாட வாழ்வில் தான் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் கதைகளையும் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறார் வாசகர் வட்டம் ஒன்றை நடத்திவருகிறார். நாவல்கள், சிறுகதைகள், சிறார் கதைகள், கட்டுரைகள் என பல தளங்களில் பரந்துபட்ட எழுத்து இவருடையது.