பொதுவாக கருக்கலைப்பு (abortion) என்று சொல்லும்போது, மக்கள் மனதில் ‘அது ஒரு தீய செயல்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் கருக்கலைப்பு செய்ததற்காக நீதிமன்றம் பூர்வி பட்டேல் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணிற்கு இருபது ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கியது. பின்னர் தண்டனை குறைக்கப்பட்டது. அவர் 2013ஆம் ஆண்டு மருத்துவரை அணுகாமல், தானே மருந்துகள் சாப்பிட்டு ஆறு மாத கர்ப்பத்தை கலைக்க முயன்ற குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். இளம்பெண்கள் இதுப் போன்ற சிக்கலில் மாட்டும்போது, இது அந்த பெண்ணின் தவறு மட்டும்தானா சம்பந்தப்பட்ட ஆண் ஏன் தண்டிக்கப்படவில்லை போன்ற கேள்விகள் நமக்கு எழாமல் இல்லை.

அவருக்கு சரியான நேரத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு அவரே துணிந்திருக்கமாட்டார் என்பதும் உண்மை. பூர்வி பட்டேல் வழக்கு ஒரு உதாரணம் மட்டுமே. இது போல பல சிக்கல்களைத் தொடர்ந்து விவாதங்கள், போராட்டங்கள் உலகெங்கும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு அமெரிக்கா சந்திக்க இருக்கும் தேர்தல் விவாதங்களில் கருக்கலைப்பு ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. கருக்கலைப்பு என்பதன் நோக்கம் சிசுவை வதைப்பது அல்ல. என்ன காரணம் கருதி செய்யப்படுகிறது என்பதை அறியாமல், அதை விமர்சனம் செய்வது தவறு.

ஒரு கருவைச் சுமப்பதற்கு அந்த பெண்ணின் உடலும் மனதும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு அவளை கட்டாயப்படுத்தக் கூடாது. எப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொண்டால் தனது வாழ்க்கை லட்சியங்களையும் கைவிடாமல் தொடர முடியும் என்று அவளுக்கு தோன்றுகிறதோ, அதையும் நாம் மதிக்க வேண்டும்.

கருக்கலைப்பு என்பது சட்டப்படி தவறல்ல. அதற்கு சில விதிமுறைகளும் சட்டங்களும் இருக்கின்றன. இந்தியச் சட்டம் MTP act 1971 உருவான பிறகு மறைமுகமாக பல பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம்.

பெண்ணின் உடலில் கருமுட்டைப் பைகள் (ovaries ) மாதம் ஒரு கருமுட்டையை வெளியிடுகின்றன. அவை மாதத்தில் குறிப்பிட்ட சில நாள்கள் விந்தை சந்தித்து, கருவாக வளரக்கூடிய தன்மை உடையனவனாய் இருக்கின்றன. அதுதான் மாதத்தின் fertile period. (வழக்கமான மாதச்சுழற்சியில் பீரியட்ஸ் ஆன முதல் நாளில் இருந்து 12 வது முதல் 16வது நாள் வரை). ஒரு காலத்தில் இந்த குறிப்பிட்ட நாள்களைக் கணித்து, அந்த நாள்களில் உறவு கொள்ளாமல் இருப்பதே குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக இருந்தது. அது தோல்வியுற்றதில் வியப்பில்லை. பின்னர் தினம் சாப்பிட வேண்டிய மாத்திரை வகைகளும், மூன்று மாதத்திற்கு ஒரு முறைப் போடும் ஊசிகளும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று ஆனது.

அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடைச் சாதனங்களுள் ஆண்கள் பயன்படுத்தும் ஆணுறையும் (condom), பெண்கள் பயன்படுத்தும் காப்பர் டி-யும் (copper T Intrauterine contraceptive) அடக்கம். இவற்றை barrier (பேரியர்) முறை எனக் கூறலாம். இவையெல்லாம் தற்காலிகக் கருத்தடை முறைகள் மட்டுமே .

ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அறுவை சிகிச்சை முறைகளும் கருத்தடையில் உதவும். இரண்டு குழந்தைகள் ஆகிவிட்டன, இதற்குப்பின் நிரந்தரமாகக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்தபின், அறுவை சிகிச்சை முறையை நாம் பின்பற்றலாம். அதாவது மாதந்தோறும் கருமுட்டைகளை/எம்பிரியோ கர்ப்பப்பைக்கு எடுத்துச் செல்லும் குழாய்களான ஃபலோபியன் டியூபுகள் அடைக்கப்படும் (tubal ligation).

யோனி வழிக் குழந்தைபேறுக்குப் பின் சிறுதுளை அறுவை சிகிச்சையோ (laparoscopic tubal ligation after vaginal delivery), அல்லது அறுவை சிகிச்சை வழிக் குழந்தைப் பேறுடன் சேர்ந்தும் செய்யலாம் (caesarean section with tubal ligation). இதில் நாம் கவனிக்க வேண்டியது – குழந்தை நன்றாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டு, குழந்தை பிறந்து ஆறு வாரங்களுக்கு பிறகும் இந்த அறுவை சிகிச்சையைச் செய்யலாம் சென்பதே. அரை மணி நேரத்தில் முடியக்கூடிய அறுவை சிகிச்சை இது.

ஆண்களுக்கும் அதே போன்று விந்து வெளியேறாமல் இருக்க வாஸ் டிஃபரன்ஸ் (vas deferens) என்னும் சிறிய குழாய் அடைக்கப்படும். இந்த சிகிச்சையை வாசக்டமி (vasectomy) என்பர். இதுவும் குறைந்த நேரத்தில் செய்யக் கூடியதுதான். ஆனால் எத்தனை ஆண்கள் இதைச் செய்ய முன் வருவார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.

திருமணமாகி ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாக்குவது தான் குடும்பம். அது ஒரு மிகப்பெரிய கடமை. குழந்தை பெற்றுக் கொள்வது அந்த குடும்பத்தின் பெருமைக்குரிய விஷயம் அல்ல! அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய கடமையைக் கருதி, பொருளாதாரம் மற்றும் பெண்ணின் உடல்நலன் சார்ந்த முடிவாக குழந்தைப் பேறு இருக்க வேண்டும்.

Photo by Dylan Hunter on Unsplash

ஒரு பெண் தாயாகும் போது அவள் உடலில் பல மாற்றங்கள் இருக்கும். அவள் தன் உடலையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சிக்கும் பாலூட்டுவதன் மூலமாக நல்ல உணவும் அரவணைப்பும் தந்து வளர்க்க வேண்டும். ஆணைப் பொறுத்தவரை பிள்ளைப்பேறால், உடலளவில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களின் வேலைக்கும் இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது, உடலளவிலும் சோர்ந்து, கடமைகளும் அதிகமாகி தற்காலிகமாக வேலையில் முன்பு போல ஈடுபட முடியாமல், ஒரே சமயத்தில் பல மாற்றங்களை சந்திப்பது பெண் மட்டுமே.

தாய்மை என்பது ஒரு வரம் என்று சொல்லப்பட்டாலும் அதிகப் பொறுப்புகள் அதுவரை சுய சிந்தனையோடு வாழ்ந்து வேலைக்கு சென்று சம்பாதித்து வந்த பெண்ணுக்கு, அது ஒரு பின்னடைவு என்று நினைக்காமல் இருக்க முடியாது. அதைச் சரியான முறையில் கையாண்டு, குழந்தை வளர்ப்பையும் தனது வேலை வாய்ப்புகளையும் சாமர்த்தியமாக நகர்த்திச் செல்லவேண்டும். சில வீடுகளில் குழந்தை வளர்ப்பிற்கு குடும்பம் உறுதுணையாக இருக்கிறது என்ற பட்சத்தில், ஆறு மாத விடுப்புக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைப் பெற்ற தாய் தனது வேலையில் கவனம் செலுத்த முடியும். ஆனால் எந்த உதவியும் இல்லாமல் குழந்தை வளர்ப்பிலும் குடும்பப் பொறுப்புகளிலும் ஈடுபட்டு, தன்னைப் பற்றி யோசிக்க நேரம் இல்லாமல், ஆண்டுகள் கடந்து போவதுக்கூட தெரியாமல் இருப்பவர்களும் உண்டு.

ஒரு பெண்ணிற்கு இருதய நோயோ அல்லது வேறு நோயின் காரணமாக உடல் பலவீனமாக இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி பிள்ளைப் பேறை ஒத்தி வைக்கலாம் அல்லது தடுக்கலாம். உணவு பரிமாறுவதில் தொடங்கி பல கலாசார வழக்கங்களால், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போய் விடுகிறது. பல பெண்கள் ‘டயட்’ என்று சொல்லி, ஆரோக்கியத்தை இரண்டாம் பட்சமாக பார்ப்பதுமுண்டு. அதனால் சீரற்ற மாதசுழற்சிப் பிரச்னைகள் பெருகி,
குழந்தை வேண்டி சிகிச்சை எடுக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது ஒரே நாணயத்தின் மறுப்பக்கமே.

கருத்தடை மற்றும் கருக்கலைப்பு முறைகள் சரியான புரிதலோடு அணுகும்போது குடும்பக் கட்டுப்பாடு மட்டுமின்றி, மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் ஒரு முயற்சியாக, அந்த நாட்டுப் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடுதல் என்பதும் புரியும். இதை உணர்ந்து தற்காலத்திற்கேற்றவாறு மத மற்றும் அரசியல் சாயம் பூசாமல், பெண் நலன் கருதி நடுநிலையோடு முன்னேற்றத்தை நோக்கி நகர்வோம்.

படைப்பாளர்

மரு. தென்றல்

சென்னையில் பணிபுரியும் கதிரியக்க மருத்துவர் . புலனங்களில் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து, 2023ல் வளரி எழுத்துக்கூடத்தின் மூலம் இவரது ‘பெண் எனும் போன்சாய்’ கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.