1

இந்த திங்கட் கிழமைகள்

ஏனிப்படி இருக்கின்றன

எழும்போதே மணிமுள்ளை,

நொடி முள்ளாக ஆக்கி விடுகின்றன 

செருப்புகளைக் கால் மாற்றிப் போட்டு

விழுத்தப் பார்க்கின்றன

பூமிக்குப் புதிதாக வந்ததுபோல்
பாதைகள் தடம் மாற
நடையை ஓட்டமாக்கிப்

பறக்க வைக்கின்றன
பறந்தும் இரயில்களைத்

தவற விடுகின்றன

அலுவலகத்தைக் கண்டடைந்ததும்

கடிகாரங்கள் நின்று விடுகின்றன
எங்கும் தேர்வறையின் பதட்டம்

-ஞாயிறிலிருந்து திங்கள்
திங்களிலிருந்து செவ்வாய்-

வாரா வாரம் 
இந்தத் திங்கட் கிழமைகள் மட்டும்
வண்ணத்துப் பூச்சியிலிருந்து புழுக்களாக உருமாறும் தினம்

2

Photo by Teodor Terziev on Unsplash

சொற்களுடைந்த

கனவின் புதிர்ப் பாதையில்

வாழ்வென்பது யார் கனவு

நான் காண்பதால் எனதா

நீ வந்ததால் உனதா

இல்லை நமதா

Photo by Alexey Derevtsov on Unsplash

மரணமென்பது – 

யாருமற்ற இருள் குகையா

பேரமைதியா

நீருள் மூழ்குதலா

வானில் மிதத்தலா

தனித்துணை ஒற்றைவழிப் பாதையா

பாதையிலிருந்து கண் மறைவதா

எப்போதும் காணாத எல்லாமா

Photo by Evie S. on Unsplash

எங்கிருந்தன

இந்த வேனில்கால இலைகள்

எங்கு சென்றன

இலையுதிர்கால மலர்கள்

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.

பிருந்தாவின் முந்தைய கவிதைகள்