சில ஆண்டுகளுக்கு முன்பு, எப்போதென்று சரியாக நினைவில்லை. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, கழுத்தில் கட்டும் தாயத்தைப் பற்றிய ஒரு செய்தியைப் படித்தது நினைவலைகளில் ஒரு ஓரமாகப் பதிந்திருந்தது. அந்தச் செய்தியில், தாயத்துக் குப்பிகளுக்குள் குழந்தையின் காய்ந்த தொப்புள் கொடியைப் பாதுகாப்பாக வைத்திருந்ததாக ஒரு தகவல். ஆனால், அந்தச் செய்தியைப் படித்ததோடு சரி, அதன் பிறகு அதைப் பற்றிய ஆர்வம் துளிர்க்கவே இல்லை. மரபணு சார்ந்த துறைக்குள் வந்த பிறகு, குருத்தணுக்களைப் பற்றிப் படிக்கும் போது, அந்தச் செய்தி நினைவுக்கு வரவே, பண்டைக்காலத்தில் தாயத்துக்குள் காய்ந்த தொப்பிள் கொடியைப் பாதுகாத்ததற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ஆனால், மருத்துவத்திற்கும், பண்டைய கால தொப்புள் கொடி சேமிப்பிற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஓர் ஆதாரப்பூர்வமான தரவுகளும் கிடைக்கவில்லை‌.

சரி, குருத்தணுக்களுக்கும் தொப்புள் கொடிக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பவர்களுக்கு, தொப்புள் கொடியில் அதிக அளவிலான குருத்தணுக்குள் கிடைக்கும். அதனால் அவற்றைச் சேமித்து வைத்தால் பிற்காலத்தில் தேவைப்படும் போது அதை மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் சொல்கின்றன. தொப்புள் கொடி மட்டுமன்றி எலும்பு மஜ்ஜையிலும் (bone marrow) குருத்தணுக்கள் அதிகம் உள்ளன. மஜ்ஜையிலிருந்து எடுக்கும் குருத்தணுக்களை வைத்துப் பிற்காலத்தில் ரத்தம் சார்ந்த புற்றுநோய்களையும், சில வகையான மரபணுக் குறைபாடுகளையும் குணப்படுத்த முடியும். வகை 1 நீரிழிவு நோய், பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease), இதய நோய், சில வகையான நோயெதிர்ப்பு மண்டலக் கோளாறுகள் போன்றவையும் இந்தக் குருத்தணுக்கள் மூலம் சரி செய்ய முடியும் என்கின்றன சில ஆய்வுகள்.‌

இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் ஒவ்வாமையால் ஏற்படும் graft rejection போன்றவற்றைத் தவிர்க்கும் ஒரு மாற்று சிகிச்சை முறையாக இந்தக் குருத்தணுக்களைப் பயன்படுத்துகின்றனர். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் மாற்றும் போது, உறுப்பைப் பெறுபவரின் உடலிலிருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் புதிதாக மாற்றப்பட்ட உறுப்புகளுக்கு எதிராக‌ச் செயல்படும். புதிய உறுப்பை, உடலுக்குள் புகுந்துவிட்ட அந்நிய செல்களாகக் கருதுவதுதான் இந்த நோயெதிர்ப்பு மண்டலம் செயலுக்கு வருவதற்கான காரணம். அதனால்தான் நெருங்கிய ரத்த சொந்தம் உடையவர்களின் உறுப்பை இந்தச்‌ சிகிச்சை முறையில் பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கின்றனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னால் குறிப்பிட்ட சில பரிசோதனைகளை எடுக்க வேண்டியது அவசியம். அதில் குறிப்பாக ரத்த வகை ஒத்துப் போகிறதா?, உறுப்பைப் பெறுபவரின் உடலில் இருக்கும் நோய் தடுப்பு செல்கள் மாற்றப்பட்ட உறுப்பைத் தாக்குவதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா?, ஏதேனும் எதிரணுக்களை (antibody) உருவாக்குவதற்கான வாய்ப்பிருக்கிறதா? போன்றவற்றைப் பரிசோதித்த பிறகே அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இத்தனையையும் தாண்டி இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.‌ உரிய நேரத்தில் உறுப்புகள் கிடைக்காமல் போவது, அப்படியே கிடைத்தாலும் அது சிகிச்சைப் பெறுபவரின் உடலோடு ஒத்துப் போகாமல் இருப்பது, இப்படிப் பலவற்றைக் கடந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இந்தியாவின் மனித உறுப்புகள் மாற்றுச் சட்டத்தின் (Transplantation of Human Organs act – 1994) வழிமுறைகளின் கீழ் நடத்தப்பட வேண்டும்‌. இந்தச் சட்டம் வணிக ரீதியான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்குத் தடைவிதித்துள்ளது. ஒருவர் இறப்பதற்கு முன்பும், இறந்த பின்பும் உறுப்புகளைத் தானம் செய்வதற்குச் சட்டத்தில் இடமுண்டு.

ஒவ்வாமையைத் தடுக்க சிகிச்சை பெறுபவரின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள், இரட்டையர்களாக இருக்கும் பட்சத்தில் இரட்டையரில் சிகிச்சைப் பெறுபவர் அல்லாத இன்னொருவர் என நெருங்கிய சொந்தங்கள் குறிப்பாக ஒத்த மரபணு கட்டமைப்பைக் கொண்டவர்களின் உறுப்புகளைக் கொடுக்க முன்வரலாம். ஆனால், இருதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை இறந்தவர்களிடமிருந்தோ அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தோ உரிய பரிசோதனைக்குப் பிறகு மட்டுமே பெற முடியும்.

இந்தச் சவால்களை எல்லாம் கடப்பதற்காகக் குருத்தணுக்களைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி உலகெங்கும் நடந்து வருகிறது.‌ ஒருவரிடமிருந்து எடுத்துச் சேமித்து வைத்த pluripotent குருத்தணுக்களைப் பிற்காலத்தில் அதே நபரின் சிகிச்சையில் பயன்படுத்துவது ஒவ்வாமையைத் தடுக்கும் ஒரு வழி. இந்த உத்தியை வைத்து organoids என்னும் உறுப்புகளின் சிறிய நகலை (miniature) ஆய்வுக் கூடங்களில் உருவாக்கி வருகின்றன. இதை உருவாக்குவதன் மூலம் ஓர் உறுப்பின் முழுச் செயல்பாட்டையும், அதன் கட்டமைப்புச் சிக்கல்களையும் முழுமையாகப் புரிந்துக் கொள்ள முடியும். உறுப்புகள் பற்றாக்குறையைச் சமாளிக்கச் செயற்கையாக ஆய்வுக் கூடங்களில் ஒருவரின் குருத்தணுக்களைக் கொண்டு குறிப்பிட்ட உறுப்பை உருவாக்க முடியும். இதில் சில நெறிமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இன்னும் இது ஆராய்ச்சி நிலையில்தான் இருக்கிறது.‌

தீ விபத்துகளில் ஏற்படும் தீக்காயங்களுக்குத் திசு வளர்ப்பு முறையில் தோல் செல்களை உருவாக்க குறிப்பிட்ட தோல் குருத்தணுக்களை எடுத்து அதை ஆய்வுக்கூடத்தில் திசுவாக வளர்த்து, தோல் தகடை உருவாக்கிய பிறகு, அதைச் சேதமடைந்த தோலுக்குப் பதிலாக பயன்படுத்துவர். சிகிச்சைப் பெறுபவரின் செல்களையே இந்தச் சிகிச்சை முறையில் பயன்படுத்துவதால் ஒவ்வாமையைத் தவிர்க்க முடியும்.

இது போன்ற பல ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. இது பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இங்குப் பல உயிர்களைக் காக்க முடியும். இது போன்ற சிகிச்சை முறையில் குருத்தணுக்கள் பயன்படுவதற்காக, முன்கூட்டியே குருத்தணு வங்கிகளில் செல்களைச் சேமித்து வைப்பதைப் பரிந்துரைக்கின்றனர்‌. பிறந்தக் குழந்தையின் தொப்புள் கொடியில் குருத்தணுக்கள் அதிகம் இருப்பதால் அதை உறைய வைத்து குருத்தணு வங்கிகளில் சேமித்து வைப்பது வழக்கம். இப்படிச் சேமித்து வைக்கப்பட்ட குருத்தணுக்கள் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை ஆற்றல் குறையாமல் இருக்கும்.‌ ஆனால், இந்தக் கால அவகாசம், பதப்படுத்தப்படும் முறை, பதப்படுத்தப்பட்ட செல்களின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொருத்தது. பிற்காலத்தில் தேவைப்படும் போது சேமித்து வைத்திருக்கும் குருத்தணுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குருத்தணு சேமிப்பு, குருத்தணு சிகிச்சை, திசு வளர்ப்பு, உறுப்பு படியெடுப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை என அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்தது. சில வகை புற்றுநோய்களைக் குணமாக்கக் குருத்தணுக்களுக்குப் பதிலாகக் குருத்தணு அதிகம் இருக்கும் எலும்பு மஜ்ஜை போன்ற உறுப்புகளையே அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மாற்றி வைப்பர். இதில் முக்கியமாக leukemia உள்ளிட்ட ரத்தப் புற்றுநோய்கள் அடங்கும்.‌

இத்தனை நன்மைகள் இருக்கும் இந்தச் சிகிச்சை முறையின் மறுபக்கத்தைப் பற்றியும்‌ அறிந்து கொள்வது அவசியம்.‌ திரைப்படங்களில் காட்டப்படும் மனித உறுப்பு திருட்டு மற்றும் வியாபாரம், உண்மையாகவே பல நாடுகளில் நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக அந்தந்த நாடுகளுக்கெனத் தனியாகச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் செயற்கையாக உருவாக்கப்படும் உறுப்புகளால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் வர்த்தகத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.‌ ஆய்விலிருக்கும் இந்தச் சிகிச்சை முறை வெற்றிப் பெற்றால் நிச்சயம் அது வணிகரீதியான பல இன்னல்களைக் கொண்டு வரும். இதைக் கருத்தில் கொண்டுதான் ஒவ்வொரு நாட்டின் அரசும் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எலி போன்ற உயிரினங்கள் முதற்கொண்டு அனைத்திற்கும் ஆய்வு நடத்தப்படும் நிறுவனத்தின் நெறிமுறை குழுவின் (Institutional ethics committee) அனுமதி பெற்றிருக்க வேண்டும். உயிர்களையோ அல்லது உயிரினங்களின் செல்களையோ ஆய்வுக்காகப் பயன்படுத்தினால் அதற்கான முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்படும் முறையான ஆய்வின் வெளிப்பாடு உயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நன்மைக்காக இருப்பது அவசியம். புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் வரும் போது‌ சட்டங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சுரண்டல்களும் மோசடிகளும் குற்றங்களும் குறையும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.