வால்மீகி இராமாயணத்தின் 109ஆம் சருக்கத்தின் 30வது சுலோகத்துக்கான விளக்கத்துடன் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்.

ஜாபாலி என்கிற முனிவருக்கும் இராமனுக்குமான இந்த உரையாடலை எந்த ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர்களும் நமக்குச் சொன்னதில்லை. எந்த ஒரு திரைப்படத்திலோ அல்லது தொலைக்காட்சி தொடரிலோ நாம் இந்தக் காட்சியைப் பார்த்ததில்லை. ஆனால் இது வால்மீகி இராமாயணத்தில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவரால் சாப்பிடப்பட்ட உணவானது பிறருடைய உடலை அடையுமானால், (உயிருடன்) தூர தேசத்தில் வசிக்கும் தந்தைக்கு அவனுடைய மகன் திவசம் செய்வானா?
அப்படிச் செய்தால் பிராம்மணார்த்தம் உள்ளவன் சாப்பிட்ட சாதம் அப்படித் தூர தேசத்தில் உள்ளவனுக்குச் சாப்பாடாக ஆகட்டும். அதாவது உலகில் ஒருவன் சாப்பிட்ட சாப்பாடு, தேசாந்திரத்தில் உள்ளவனை அடையுமேயானால், அதேபோல இங்கும் திவசத்தில் பார்ப்பனன் உண்ட உணவு, பித்ருக்களைச் சென்றடையும். அப்படி உலகில் இல்லையே? ‘பிரத்தியட்சத்திற்கு விரோதமான சிரார்த்த கருமம் வீண்’ என்று நாத்திக வாதம் செய்தார் முனிவர். இத்தகைய நாத்திக வாதத்தை மனதில் வெறுத்தவராக, உக்கிரமான பராக்கிரமசாலியான தசரதராஜகுமாரனான ராமன், அந்த ஜாபாலி முனிவரை பார்த்தார். அவர் பேசிய பேச்சுக்களின் அர்த்தங்களை நினைத்து நினைத்துப் பொறுக்க முடியாதவராய் அவற்றை நிந்தித்து உதறித் தள்ளினார். பிறகு அவரைப் பார்த்து நீதி நிறைந்த சொல்லை உபதேசித்தார்.

மேற்கொண்டு தொடரும் இந்த விவாதத்தில் ஜாபாலி முனிவர் பேசிய அனைத்துமே அறிவியல் பூர்வமானதாக இருக்கும். ராமனின் பதில்கள் எல்லாமே ஆகச்சிறந்த மழுப்பல்களாகவே இருக்கும்.
பார்ப்பனர்கள் செய்யும் திவசத்தில், மற்றொரு பார்ப்பனர் பிராமணார்த்தம் சாப்பிடுகிறார். இதே, மற்ற ஜாதியினர் வீட்டில் சாப்பிடுவதை இவர்கள் இழிவாகக் கருதும் காரணத்தினால், தக்ஷனையுடன் சேர்த்து, ஒரு குடும்பமே சமைத்துச் சாப்பிடத் தேவையான அளவுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அனைத்தையுமே பொருள்களாகப் பெற்றுக் கொள்கின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.
ஒருவர் இறந்து முதல் வருடம் முடிய, செய்யப்படவேண்டிய சபிண்டீகரணம் பன்னிரண்டாம் நாளில் செய்யப்படுகிறது. அதேபோல நிதானமாக ஒருவருடம் முழுவதும் செய்யப்படவேண்டிய சடங்குகள் அனைத்தும் வேக வேகமாகப் பதின்மூன்று நாள்களுக்குள் முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு முறை, நிதானமாக வருடம் முழுவதும் செய்யப்படுகிறது. அதற்கு என்ன காரணம் சொல்லிவைத்திருக்கிறார்கள் தெரியுமா?
ஒருவர் இறந்தபிறகு, அவரது ஆன்மாவுக்கான நேரக்கணக்கு நமது நேரத்துடன் மாறுபடுமாம். உதாரணமாக, நமக்கு ஒரு வருடம் என்பது, இறந்த ஆன்மாவுக்கு ஒரு நாள் என்பதாகச் சொல்கிறார்கள்.
இப்படி இருக்க, இறந்த நபருக்கு இறுதிக் கடன்கள் செய்யும் கர்த்தாவாகிய மகன், சடங்குகளை முழுமையாகச் செய்துமுடிக்காமல் இறந்துபோனால், முன்னம் இறந்தவரின் ஆன்மா முக்தி அடையாது. அப்படியே விட்டுவிட்டால் அது தருமத்துக்குப் புறம்பானது. அதனால் நமது நேரக் கணக்குப்படி உடனுக்குடன் அனைத்தையும் ஒருமுறை செய்துமுடித்துவிட்டு, மகன் நல்லபடியாக உயிர்த்திருந்தால், இறந்த ஆன்மாவின் நேரத்தைக் கணக்கில் கொண்டு மீண்டும் ஒரு முறை வருடம் முழுதும் செய்வதாகக் கதை சொல்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, கொரோனா பேரிடரை நாம் சமீபத்தில்தான் எதிர்கொண்டு மீண்டு வந்திருக்கிறோம். அதேபோன்றதொரு கொள்ளைநோய் காலத்தில், அவசரகதியாக இதுபோன்ற ஒரு முடிவை அன்று வாழ்ந்தவர்கள் எடுத்திருக்கலாம். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஏன் செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்கிற தெளிவே இல்லாமல், இதையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம் என்பதே உண்மை.
ஒருவர் மரணித்ததும், மொத்தம் 16 திவசங்கள் ஒரு வருடத்துக்குள் செய்துமுடிக்க வேண்டும் என்று முன்னமே குறிப்பிட்டிருந்தேன்.
இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னமே அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கவேண்டியதாக இருக்கும். சமையலுக்கு என்று ஆள் வைத்துக்கொண்டாலும், உடலை வருத்திக் கொள்ளாமல் எதையும் நடத்தி முடிக்க இயலாது.
அதிகாலை தொடங்கினால், எல்லாம் முடிந்து, வீட்டினர் சாப்பிடக் குறைந்தது மதியம் இரண்டுமணியாவது ஆகிவிடும். நீராடிவிட்டு, அவரவர் நடைமுறைப்படி உடையணிந்து, தலையில் கட்டிய ஈரத் துணியுடன், அடுக்களைக்குள் நுழைந்தால், பெண்களின் அன்றைய நாள் அங்கேயே முடிந்துபோகும்.
இதற்கிடையில் தண்ணீர் அருந்தக் கூடாது, இயற்கை உபாதைகளை அடக்கிக்கொள்ள வேண்டும். பட்டப் பட்டினியாக அனைத்தையும் செய்துமுடிக்க வேண்டும். இதில் அதிக பாதிப்புக்கு ஆட்படுபவர்கள் பெண்கள்தான் என்று இங்கே நான் சொல்லித் தெரியத் தேவையில்லை.
என் மாமனார் மற்றும் அப்பா இறந்த சமயங்களில் இதையெல்லாம் கடைபிடித்திருக்கிறேன். நாள் முழுவதும் பட்டினிக் கிடந்து, எல்லாம் முடிந்து, மதியம் மூன்று மணிக்கு மேல் அன்றைய நாளுக்கான முதல் உணவைச் சாப்பிட்ட அடுத்த நொடி, வயிற்றில் மூளும் எரிச்சலுடன் ஒற்றைத் தலைவலி வந்துவிடும். மீண்டும் சரியாகி, உடல் இயல்புக்குத் திரும்ப எனக்கு மூன்று நாள்கள் கூட ஆகும்.
முதல் பதின்மூன்று நாள்கள், அடுத்த இருபத்தி ஏழாம் நாள் எனத் தொடங்கி, அடுத்தடுத்த மாதத் திதிகள்… திரும்பிப் பார்ப்பதற்குள் வந்துவிடும். பெண்களின் மாதவிடாய் நாள்கள் குறுக்கே வந்தால், அதிலும் சங்கடம். அதைத் தள்ளிப்போட மாத்திரைகள் உபயோகிக்காத பெண்களே இல்லை எனலாம். இதையெல்லாம் புனிதமாக நம்பி கடைப்பிடித்திருந்த காலத்தில், நிறைய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, அதனால் உண்டான பக்க விளைவுகளை நன்றாகவே அனுபவித்திருக்கிறேன்.
அனைத்தையும் செய்துமுடித்துவிட்டு, நம் உடல் உபாதைகளை வெளியில் சொன்னால் கூட, “இப்படிப் பேசினால் அது பாவச் செயல், திவசம் செய்த பலனே இல்லாமல் போகும், சொல்லாதே” என்று சொல்லிச்சொல்லியே இந்தப் புனிதக் கோட்பாடுகளைத் தலைமுறைத் தலைமுறைகளாகக் காப்பாற்றி வருகிறார்கள்.
ராமானுஜ தாத்தாச்சாரியாரின் எழுத்துகள் ஏற்படுத்திய பாதிப்பில், அதுவும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், அதில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்களை அலசி ஆராய்ந்தேன். மேலும் பல விஷயங்களை படித்துணர்ந்து, சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து, இதற்குப்பின் இருக்கும் பித்தலாட்டங்களைப் புரிந்துகொண்டேன். ஒரு கட்டத்தில் இதற்கெல்லாம் நான், ‘என்னை வருத்திக்கொண்டு இதைச் செய்யமாட்டேன்’ என்று சொல்லக் கற்றுக்கொண்டேன். ஆனாலும் இதெல்லாம் காலம் கடந்த ஞானோதயமாகவே இருக்கிறது.
இது எனக்குமட்டும் நேர்ந்ததல்ல, என் போலப் பல பார்ப்பன பெண்கள் தொடர்ந்து அனுபவிக்கும் அவலம் இது. பார்ப்பனர் அல்லாத பெண்களும் இதுபோன்ற சடங்குகளிலிருந்து தப்பிக்க இயலாது என்பதையும், நம் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னும் தெளிவாகச் சொன்னால், இறந்தபின் ஒருவரது ஆன்மா, நம் பார்வைக்குப் புலப்படாத ஏதோ ஓர் உலகத்தில் சுகித்து இருக்கவேண்டும் என்கிற மாயையில் இங்கே உயிரும் உணர்வுமாக இருக்கும் நாம், தினம் தினம் நரக தண்டனைகளை அனுபவிக்கிறோம்.
அதனாலேயே, பெண்களுக்கு இதையெல்லாம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். நேரடியாகப் பலரிடம் சொல்லியிருக்கிறேன். சிலர் உணர்ந்து கடைபிடிக்கவும் செய்கிறார்கள்.
உண்மையில், நம் குடும்ப அமைப்பில், ‘என்னால் இதைச் செய்ய முடியாது’ என்று சொல்லும் உரிமை பெரும்பாலான பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த அமைப்பை உடைத்துக்கொண்டு எல்லோராலும் விடுபட இயலாது. ஆனால், தானாக முடிவு செய்து, ‘இதில் என்னால் மாற்றம் கொண்டுவர இயலும்’ எனும் இடத்தில் உள்ள பெண்கள், மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்துவைக்கலாம். சிறுகச் சிறுக மாற்றம் உண்டாகும். உண்மையில் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பேருபகாரம் இது!
1990இல் வெளியான மை டியர் மார்த்தாண்டன் என்கிற திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அதில் அந்த மார்த்தாண்டன் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணை நிச்சயித்து வைத்திருப்பார்கள்.
அவரிடம், மார்த்தாண்டனாக நடித்த பிரபு தனியாக பேசுவதாக ஒரு காட்சி வரும். ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்பார்.
‘நான் உங்களுக்காகப் பிறந்தவள், மகாராஜா? உங்களுக்கு என்ன பெயர் பிடிக்குமோ அப்படியே கூப்பிடுங்கள்?’ என அந்தப் பெண் பதில் சொல்வார்.
தொடர்ந்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாமே இதே பதிலைத்தான் சொல்வார். கடைசியாக, ‘நான் என்ன சொன்னாலும் கேட்பாயா?’ என்று கேட்பார்.
அதற்கும், அந்தப் பெண் அதே பதிலைச் சொல்வார். உடனே ‘நாய் மாதிரி குறை’ என்பார் பிரபு. அந்தப் பெண்ணும் நாய் போல் குறைத்துக் காண்பிப்பார். ‘அப்படியே ஒற்றைக் காலால் நொண்டு’ என்பார். அதேபோல குரைத்தபடியே ஒற்றைக்காலால் நொண்டிக் கொண்டே அங்கிருந்து போவார் அந்தப் பெண்.
இந்தக் காட்சியை நகைச்சுவை போல எடுத்திருப்பார்கள். ஆனால் உற்று நோக்கினால், நாம் ஒவ்வொருவரும் இப்படிப் பழக்கி வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது புரியும்.
இதுபோல நான் பார்த்து நொந்த, சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், வரம் , சாபம், ஜாதகம், தோஷம், பரிகாரம் என்று சொல்லி குரங்காட்டி வித்தை போல மற்றவரை ஆட்டுவிக்கும் கோமாளிக் கூத்துகள் சிலவற்றைச் சொல்கிறேன்.
நெருங்கிய குடும்ப நண்பரின் அம்மா இறந்துவிட்டார். அவருக்கான காரியங்கள் செய்ய, அவரும் அவரது மனைவியும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.
ஒரு நாள் பின் மாலை வேளையில் அவர்கள் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். வழக்கமாகச் சுடிதார் போன்ற உடையோ, கொசுவம் வைத்து புடவையோதான் அணிந்திருப்பார். அன்று அந்தத் தோழி மடிசார் அணிந்திருந்தார். “என்ன, இந்த நேரத்தில்கூட மடிசாரில் இருக்கீங்க?” என்று கேட்டேன்.
“புரோகிதர்தான் மடிசார் கட்டிக்க சொன்னார்” என்றார்.
“தினம் செய்ய வேண்டிய சடங்குகள்தான் காலையே முடிந்துவிடுமே, அவர் சொன்னார் என்று இந்த நேரத்தில் கூட ஏன் மடிசாரிலேயே இருக்கவேண்டும், உங்களுக்கு வசதியான உடைக்கு மாறியிருக்கலாமே?” எனக் கேட்டேன்.
“நாள் முழுக்க, தூங்கும்போதுகூட மடிசார்லதான் இருக்கணுமாம்! புரோகிதர் சொல்லிட்டார், மாத்தி எதையாவது செஞ்சா (மாமனார்) அப்பா வருத்தப்படுவார். அதான் இப்படியே இருக்கேன்” என்று முடித்துக் கொண்டார். அதற்குமேல் அவரிடம் எதையும் பேசி பயனில்லை என்று விட்டுவிட்டேன்.
தினமுமே மடிசார் கட்டிக்கொள்ளும் பெண்மணிகள் கூட, பழைய 9 கஜம் புடவைகளை 6 கஜமாகத் துண்டித்து வைத்துக்கொண்டு, இரவில் உறங்க வசதியாக மாற்றி உடுத்திக்கொள்வர். இது என்ன கட்டாயம் என்று எனக்குப் புரியவில்லை. ‘புரோகிதர்’ சொன்னால் அந்தப் பகவானே நேரில் வந்து சொன்னதுபோல் அல்லவா எடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் புரோகிதரை எனக்கு நன்றாகவே தெரியும். வயதில் மூத்தவர் சொல்கிறார் என்று கூட எடுத்துக்கொள்ள இயலாது. இன்னும் சொல்லப்போனால், அவர் அந்தப் பெண்மணியை விட இளையவர். அவர் வீட்டுப் பெண்கள் கூட இந்தளவுக்கு அவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம் தோன்ற, எனக்கு உண்மையில் நகைப்பாகத்தான் இருந்தது.
இதெல்லாம், கலாச்சாரக் காவலர்களாக மாறி, தங்கள் குலப் பெண்களுக்குத் தங்கள் பண்பாட்டைச் சொல்லிக்கொடுக்கும் ஆணாதிக்க மனநிலை மற்றும் பெண்களின் வசதியைப் பற்றிய அக்கறையில்லாத ஆணாதிக்கம் இல்லாமல் வேறு என்னவாம்?
அடுத்ததாக என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் மரணித்தபோது நிகழ்ந்த சம்பவத்தை சொல்கிறேன். ஒருவர் இறந்து, அவரது உடல் எரியூட்டப்பட்ட பிறகு, பால் ஊற்றுவது என்று ஒரு சடங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே. எரிந்த பிறகு மீதமிருக்கும் எலும்புகளைச் சேகரித்து, நீர்நிலையில் கரைப்போம்.
விறகு வைத்து எரியூட்டப்பட்டால், இது அடுத்த நாள் செய்யப்படும். இதே, மின் மயானத்தில் தகனம் செய்யும்போது, இந்தச் சடங்கை அன்றே உடனுக்குடன் செய்தாகவேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்பதை யாராலும் மறுக்க இயலாது. எது எப்படி என்றாலும், பால் ஊற்றும் சடங்கு செய்ய ஒருவரது சடலம் எரியூட்டப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
கொரோனா பேரிடர்க் காலத்தில், முதல் அலை முடிவுக்கு வந்துகொண்டிருந்த சமயம், முதுமை காரணமாக இயற்கையாக அவரது மரணம் நிகழ்ந்தது. அந்த இக்கட்டான நேரத்திலும் கூட, ஒரு புரோகிதரை நியமித்து, முறைப்படி சடங்குகள் செய்து, அவரது உடல் மின் மயானத்துக்குக் கொண்டுசெல்லப் பட்டது. உடலை எரியூட்டுவதற்கு முன் மயானத்தில் வைத்துச் செய்யப்படும் சில சடங்குகள் இருப்பதால், நியமித்திருந்த புரோகிதரும் அங்கே சென்றிருந்தார்.
அங்கே போய் பார்த்தால், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக வந்தவண்ணம் இருக்க, சடலத்தை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல். நோய் தொற்றிகொள்ளும் அபாயம் இருந்தாலும், பெற்ற பிள்ளைக்குத்தான் காத்திருக்க வேண்டிய கடமை, மற்றவருக்கு என்ன வந்தது.
அங்கே வந்த சடலங்களைப் பார்த்துப் பயந்துபோன அந்த புரோகிதர், அவசர அவசரமாக மந்திரங்களைச் சொல்லி முடித்து, மாவால் ஒரு பொம்மை செய்து, இறந்தவரின் பிரேதம் எரியூட்டப் படுவதற்கு முன்பாகவே பால் ஊற்றும்போது சொல்லவேண்டிய மந்திரத்தையும் சொல்லி தன் கடமையை முடித்துக்கொண்டு, அங்கிருந்த உறவினர் ஒருவரிடம் சொல்லிவிட்டு, பின்னங்கால் பிடரியில்பட ஓடியே போனார்.
உண்மையில், இறந்தவரின் ஆன்மா நற்கதி அடையவேண்டும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் இதுபோன்ற சடங்குகளை இப்படி முன்னுக்குப் பின் முரணாகச் செய்து முடிக்கும்போது உண்மையான நோக்கம் என்று நாம் நம்பிக் கொண்டிருப்பது நிறைவேறுகிறதா அல்லது அப்படி நிறைவேறிவிட்டதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா?
நீத்தார் கடன்களை நிறுத்தக் கூடாது எனத் திவசம் செய்துவிட்டு, மொத்தக் குடும்பமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அல்லலுற்றது; உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறந்துபோனது எனக் கொரோனா பேரிடர் சமயத்தில் நிகழ்ந்த, நான் நேரடியாகப் பார்த்த நிறையச் சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தொகுத்தாலே, தனிப் புத்தகமாகப் போடலாம்.
எனது நெருங்கிய தோழி ஒருவர், அவரது தங்கைக்குப் பிரசவம் நடந்தது. திரு ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பதவியேற்று, முழு பொதுமுடக்கம் போடப்பட்ட, கொரோனாவின் இரண்டாம் அலையின் தொடக்க நாள்கள் அவை. அந்தப் பெண்ணை, மருத்துவமனைக்குள் போய் பார்க்கக்கூடக் குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்றால், அந்த நாள்கள் எவ்வளவு பயங்கரமானதாக இருந்திருக்கும் என்று நினைவுபடுத்திப் பாருங்கள்.
ஒரே ஒரு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல், ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை வாயிலிலேயே ஒரு காரில் அமர்ந்தபடி அதே நாளில்தான் என் சித்தி இறந்துபோனார். நிலைமையின் தீவிரம் இப்படி இருக்க, பிரசவித்த அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துவந்த பிறகு, புரோகிதரை அழைத்து, தீட்டு கழிக்கும் சடங்கைச் செய்யவேண்டும் எனத் தீவிரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் அவரது அம்மா என வருந்தினார் பகுத்தறிவுவாதியான எனது அந்தத் தோழி.
என் சித்தியின் மரணத்தைப் பற்றிச் சொல்லி, என் உறவினர் வீட்டில் நடந்த சம்பவத்தையும் சொல்லி, இந்த நேரத்தில், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பல இடங்களுக்குச் சென்று வருபவரை அழைத்து, இதையெல்லாம் செய்வது, பிரசவித்து, ஏற்கனவே பலகீனமாக உள்ள பெண்ணுக்கும், சிறு குழந்தைக்கும் தொற்று ஏற்பட காரணமாக அமையலாம். வீட்டைத் துடைத்து மெழுகி, உங்கள் வீட்டில் உள்ளவர்களையே தீட்டு கழிக்கச் சொல்லுங்கள். இதில் ஒன்றும் தவறில்லை, என அவருடைய அம்மாவுக்குப் புரியவைக்கச் சொன்னேன். சூழ்நிலை உணர்ந்து, அவரது அம்மாவும் அதை ஒப்புக்கொண்டுவிட்டார்.
இதே போல என் சித்தியும் சூழ்நிலை புரிந்து நடந்திருந்தால், அவரது உயிர் பிரிந்திருக்காது. நட்பு முறிந்துபோகும் எனப் பயந்து, குடும்ப நண்பர் ஒருவர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்தினால் மட்டுமே அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதே வலிமிகுந்த உண்மை.
தொடக்கக் காலத்தில் பார்ப்பனர் மட்டுமல்ல, சத்ரியர், வைசியர் ஆகிய வருணத்தினரும் வேதம் படிக்கலாம் என்று இருந்தது. எனவே, தப்பும் தவறுமாகச் சொல்லி யாராலும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்த இயலாது. தொடர்ந்துவந்த காலத்தில் பார்ப்பனர் மட்டுமே வேதம், மற்றும் சடங்குகளுக்கான மந்திரங்களை கற்றவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய காலத்தில் மிகக் குறிப்பிட்ட சிலரைத் தவிர, மந்திரம் சொல்லி சடங்குகளைச் செய்துவைக்கும் பார்ப்பனர்கள் அனைவருமே, வெறும் தொழிலுக்காக மட்டுமே மந்திரங்களைக் கற்கின்றனர். இதைத் தொழிலாக ஏற்றுச் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், சடங்குகள் செய்யத் தேவையான மந்திரங்களை மாத்திரமே கற்கின்றனர் என்றும் கூடச் சொல்லலாம்.
காரணம் இன்றைய தேதியில் இது ஒரு பெருவணிகம். மற்ற வணிகங்களில் உள்ளது போல நுகர்வோரைக் கட்டிவைக்கும் வியாபார உத்திகள் இங்கேயும் உண்டு. வியாபாரப் போட்டியும் அதிகம் உண்டு.
நவீனக் கல்வியில் ஆர்வம் இல்லாமல், முழுமையாகப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காமல், இளம் வயதில் பொறுப்பில்லாமல் காலத்தை ஓட்டிவிட்டு, குடும்பத்தைப் பேணவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, பிழைப்புக்காக இதைக் கையில் எடுத்தவர்கள் பலர்.
ஏனென்றால், பிரபலமாக இருக்கும் வேதபாடசாலைகளில், ஆண் பிள்ளைகளுக்கு வேதத்துடன்கூட, தரமான நவீனக் கல்வியை இலவசமாகவே கொடுக்கிறார்கள். நவீனக் கல்வி, சமஸ்கிருதம், வேதம் அனைத்தையும் பொறுப்புடன் பயின்று, மேற்படிப்பும் முடித்து, அனைத்துத் துறைகளிலும் வேலை செய்பவர்கள் அதிகம் உள்ளனர்.
இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், திருமண மந்திரங்களாகட்டும், இறுதிச் சடங்குகளுக்காகச் சொல்லப்படும் மந்திரங்கள் ஆகட்டும், எதுவுமே முழுமையான வேத மந்திரங்கள் கிடையாது. இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் எடுத்துக் கலந்துகட்டி சொல்லப்படுபவை. உதாரணமாக, திருமணத்தில் தாலி அணிவிக்கும்போது சொல்லப்படும் மாங்கல்யம் தந்துனானே மந்திரத்தைச் சொல்லலாம். உண்மையில், இன்று பெண்கள் பெருமையாக எண்ணிப் பூசிக்கும் தாலி பற்றி மனுவிலும் சரி, வேதங்களிலும் சரி எதுவுமே சொல்லப்படவில்லை.
பார்ப்பனர்கள் நவீனக் கல்விக்கு மாறிய பிறகு, மாதாந்திர அமாவாசை மந்திரங்கள் கூட அறிந்துகொள்ளப் பெரும்பாலானோர் ஆர்வம் காண்பிக்கவில்லை என்பதே உண்மை. தினம் செய்யவேண்டிய சந்தியாவந்தன மந்திரங்கள்கூட தெரிந்துகொள்ளாதவர்கள் இங்கே அதிகம். இப்படி இருக்க, பிழைப்புக்காக மந்திரம் சொல்பவர்களுக்கும் சரி, அவர்கள் சொல்லச்சொல்ல அதை அப்படியே திரும்பச் சொல்லி சடங்குகளைச் செய்பவர்களுக்கும் சரி, அந்த மந்திரங்களுக்கான விளக்கங்கள் எதுவும் தெரியாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் மந்திரம்.
ஒருவர், பெரும் பதவியில் இருப்பவராக இருப்பார், சுலபமாக அணுக முடியாத இடத்தில் இருப்பார். முன் அனுமதி இல்லாமல், ஒருவரைச் சந்திக்கவே மாட்டார், உறவினர்கள் கூட சுலபத்தில் அவரை அணுக முடியாது என்கிற நிலையில் நடந்துகொள்வார். ஆனால், வயதில் சிறியவராக இருந்தாலும் கூட, அவர்கள் வீட்டு விசேஷங்களைச் செய்துவைக்கும் பார்ப்பனரின் கால்களில் விழுந்து வணங்குவார், அவர் வேதம் ஓதுகிறார் என்கிற ஒரே காரணத்துக்காக.
உண்மையில் இதையெல்லாம் விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ நாம் அதிகம் படித்த பண்டிதராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நாம் வேத விற்பன்னராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை! நாம் எல்லோருமே பகுத்து ஆராயும் அறிவு கொண்ட மனிதர்தானே? நமக்கு நன்மை தீமைகளைச் சொல்லி, நமக்கு உபதேசிக்கும் இடத்தில் இருக்கும், நம் நம்பிக்கைக்கு உரிய குருவாக இருப்பவர், நம் நன்மையை விரும்புபவராக, நம்மிடம் உண்மையாக நடந்துகொள்பவராக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா. அதற்கான தகுதிகள் அவர்களுக்கு இருக்கவேண்டாமா?
முக்கியமாக அவர் உபதேசிக்கும் விசயங்கள் உண்மைக்குப் புறம்பானவையாக இருக்கக்கூடாது அல்லவா?
ஆனால் அவர்கள் சொல்வதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு, காணிக்கை என்கிற பெயரில் ஒரு பெரும் தொகையையும் கொடுத்து, கண்மூடித்தனமான நம்பிக்கையில், அவர்கள் நில் என்றால் நின்று, உட்கார் என்றால் உட்கார்ந்து, ஒற்றைக் காலால் நொண்டிக்கொண்டே ஓடு என்றால் ஓடி, நம் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த நாமே அனுமதிப்பது, எந்தளவுக்கு அறிவார்ந்த செயல் என்பது எனக்குப் புரியவே இல்லை.
என்று இதையெல்லாம் உணர்ந்து, தற்காலச் சூழலுக்குப் பொருந்திப் போகும் இயல்பான, இலகுவான எந்தவித தளைகளும் அற்ற வாழ்வியல் நடைமுறைகளுக்கு நாம் நம்மை பழக்கிக்கொள்கிறோமோ, அன்றே நாம் முழுமையான ஞானம் பெற்றவர்களாக ஆகிறோம்!
ஜாதி மதம் கடந்து, சக மனிதருக்காக, குறிப்பாகப் பெண்களுக்காக நான் சொல்ல விரும்புவது இதைத்தான்!
- உள்ளிருந்து ஒரு குரல்