UNLEASH THE UNTOLD

ஆதிரை தீட்சண்யா

வெறுப்பு விஷ விதைகளை ‘அன்பு’ எனும் ஆயுதத்தால் களைவோம்!

மனிதகுலம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் அறிவார்ந்த சமூகமாக மனித இனம் அறியப்படுகிறது. ஆனால், நம் அறிவு அனைத்தையும் நமக்கெதிராகத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல்தான் இந்த இனம் இருக்கிறது. நாம் என்றால் அது நம் மனித இனம் முழுவதையும்தான் குறிக்கும். நம்மைச் சூழ்ந்து இருக்கும் அத்தனை உயிர்களையும் நமக்கு அளிக்கப்பட்ட ஒன்றாக, நம் பயன்பாட்டுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சுயநலம், இயற்கையைச் சீண்டுவதில் தொடங்கி சக மனிதனைச் சீண்டுவதில் முடிகிறது. அனைத்து மதங்களும் ஓயாமல் போதிப்பது அன்பைத்தான்.

நஞ்சை விதைக்கும் நாயகர்கள்

வெற்றிபெற்ற தொழில் அதிபராக இருக்கும் நாயகியின் திமிரை நாயகன் அடக்குவதும், தன்னை மணம் புரியக்கேட்கும் பெண்ணை அவமதிப்பதும், ஆனால், தான் இன்னொரு பெண்ணை ஸ்டாக்கிங் செய்வதைப் புனிதப்படுத்துவதும், வேலை எதுவுமின்றி அலைந்தாலும் தான் ஆண் என்பதால் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் அதை காதல் என்று வகைப்படுத்துவதும் காலம்காலமாக சினிமாவில் இயல்பாக்கப்பட்ட விஷயங்கள்.