Site icon Her Stories

 புரிதல்கள்

பழமையைப் போற்றுவதாகவும், இயற்கை வழியில் பயணிப்பதாகவும் சொல்லிக் கொண்டு இருக்கும் போக்கைப் பற்றி ஆராய்ந்தறிவது அவசியம். ஒரு குறிப்பிட்ட செயல்முறையையோ அல்லது சமூகத்தையோ இயற்கைக்கு எதிரானது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. இயற்கை என்றால் என்ன, அதன் சிறப்பம்சங்கள் யாது? மனிதன் வரையறுக்கப்பட்ட விதிகளுக்குள் அடங்குவது மட்டுமே இயற்கை கிடையாது. இயற்கை என்பது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதில் எதுவும் சாத்தியம்.‌ இங்கு பால்புதுமையினருக்கோ, தன்பாலீர்ப்பாளர்களுக்கோ கிடைக்கப்பட வேண்டிய உரிமையும் அங்கீகாரமும் கிடைக்காமல் போனதற்கு, இந்த மரபுசார் மனநிலைதான் காரணம். இயற்கையை வெறும் பால்சார் பண்புகளுக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது. அறிவியலாளர் நாராயணி சுப்ரமணியன் எழுதிய ’விலங்குகளும் பாலினமும்’ நூலில், பால் வகைமைகளைப் பற்றியும், பரிணாம வளர்ச்சி பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். தன்பாலீர்ப்பு என்பது விலங்குகளிடம் காணப்படுகிற ஒரு பண்பு. இதற்குப் பரிணாமத்தில் நீண்ட நெடிய வரலாறு உண்டு. மனிதர்களுக்குள் தன்பாலீர்ப்பு பண்பு ஆதிகாலம் தொட்டே இருந்திருக்கிறது. கிரேக்கம், ரோமானியம், இந்தியா, அமெரிக்கா, எகிப்து, இங்கிலாந்து, ஆப்ரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாகரிகத்திலுமே தன்பாலீர்ப்பாளர்கள் இருந்ததாக ஆய்வுகளும் கூறுகின்றன. அதுவும் குறிப்பாக கிரேக்க ரோமானிய மக்களிடம், வயது முதிர்ந்த ஆணுக்கும் இளம் வயது ஆணுக்கும் இடையே உறவு இருந்ததாக இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அந்த உறவுக்கு pederasty என்று பெயர்.

மனிதன் வகுத்து வைத்திருக்கிற ஆண் பெண் என்கிற இருபால் வகைமைகளுக்குள் மட்டும் அத்தனை உயிரினங்களையும் வரையறுத்துவிட முடியாது. பால் சார்ந்த ஏற்ற இறக்கங்களை இயற்கையோடு ஒப்பிட்டு அதன் மூலம் நடத்தப்படும் ஒடுக்குமுறை அபத்தமானது.

இதுபோன்ற ஆபத்தான மனநிலைகளில்தான் பால் சார் சுரண்டல்களும் நடத்தப்படுகின்றன. அதற்கு உதாரணமாகப் பெண்ணுடல் மீது நடத்தப்படும் அத்தனை அத்துமீறல்களையும் சொல்லலாம். கருத்தரிப்பு தொடங்கி, கருத்தடை வரையிலான சட்டங்களுக்குப் பின்னால் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதும் இந்த ஒருதலைப்பட்சமாக நடத்தப்படும் அரசியலால்தான். இந்தத் தொடர் முழுக்கப் பேசப்பட்ட பல அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துகள் யாவும் மனிதன் தன்னை இந்த உலகின் முதன்மை உயிராக நிலைநாட்டிக் கொள்ளவும், தன் இனத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் மேற்கொண்ட உக்திகள்தாம்.

மரபியலையும் சூழலியலையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது அர்த்தமற்றது. சூழல் மாற்றத்திற்கேற்ப நடந்த மரபணு மாற்றங்கள்தாம் பரிணாம வளர்ச்சியின் ஒற்றை வரி விளக்கம். ஒரு செல் உயிரியிலிருந்து மனிதன் வரை நடந்த பரிணாம வளர்ச்சியில், புறச்சூழலின் ஆற்றலை முழுமையாகச் சுரண்டிக் கொண்டது மனிதன்தான் என்றால் அது மிகையாகாது. மற்ற உயிர்கள் அனைத்தும் தன்னையும் தன் சந்ததிகளையும் இவ்வுலகில் நிலைநாட்டிக் கொள்வதை மட்டுமே வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளன். ஆனால், மனிதன் மட்டுமே இவ்வுலகின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறான்.‌

மனித மூளைக்கு எட்டியதை மட்டுமே வைத்து இயற்கைக்கு எதிரானது அல்லது புறம்பானது என்று முத்திரைக் குத்திக் கொண்டு அடக்குமுறை செலுத்துவது ஒரு‌புறம் என்றால், இன்னொரு புறம் ‘இயற்கையை நோக்கி நகர்கிறேன்’ என்று தவறான மருத்துவ சிகிச்சை முறையில் சிக்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில்கூட மஞ்சள்காமாலை, புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்க நாட்டு மருந்து தருவதாகச் சொல்லி நடந்துவரும் மோசடிகளை நாடெங்கும் செய்திகளில் பார்த்த வண்ணம்தான் இருக்கிறோம்.

உறவினர் ஒருவருக்குப் பல மாதங்களாக வறட்டு இருமல் இருந்திருக்கிறது. அவரும் ஒரு மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை உட்கொண்டார். ஆனால், இருமல் நின்றபாடில்லை. வேறொரு மருத்துவரை அணுகியும், அவர் கொடுத்த மாத்திரைகளும் இருமலைச் சரி செய்யவில்லை. இப்படிப் பல மருத்துவர்கள், பல மருந்துகள் மாத்திரைகள். ஆனாலும் இருமல் குணமாகவில்லை‌. கடைசியாக ஒரு மருத்துவர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு இது புற்றுநோயின் அறிகுறியாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்று கண்டறிந்துள்ளார்.  பிறகு, பரிசோதித்துப் பார்த்ததில் தொண்டையில் புற்றுநோய் கட்டி இருந்திருக்கிறது. அதுவும் நான்காம் நிலை புற்றுநோய். தொடர் சிகிச்சைக்குப் பிறகும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல நிறைய செய்திகளைத் தினமும் கடந்து வருகிறோம். உடலில் நீண்ட நாட்களாக இருந்து வரும் ஓர் அறிகுறியை அலட்சியப்படுத்துவதுதான் இங்கு பல நோய்களைத் தீவிரமாக்குகிறது.

தெரிந்தவர் ஒருவருடைய மனைவிக்குப் புற்றுநோய் இருந்தது. இயற்கை மருத்துவத்தில் குணமாகிவிடும் என்று நம்பி, அவர்கள் கொடுத்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். ஆனால், நாளடைவில் நோயின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் நோய் மற்ற உறுப்புகளுக்குப் பரவ ஆரம்பித்து, அவர் படுத்தபடுக்கையாகி விட்டார். கொஞ்ச நாட்களிலேயே அவரை இழந்துவிட்டோம். இங்கு பலரிடம் இருக்கும் சிக்கல் என்னவென்றால், இயற்கை வழி மருத்துவம்‌ என்கி வார்த்தையால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.

கரோனா காலத்தில்கூட நிலவேம்பு கசாயம் குடித்துவிட்டு, எனக்கு கரோனா வராது என்று உறுதியாகச் சொன்னவர்களையும் எனக்குத் தெரியும்‌. உண்மையில், நிலவேம்பு கஷாயம் என்பது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பொதுவாக வலுவூட்டக் கூடிய ஆற்றலுடையது. ஆனால், குறிப்பிட்ட ஒரு நோயை எதிர்த்துப் போராடக்கூடிய ஆற்றல் அதற்குண்டா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்‌. இது ஒரு முன்னெச்சரிக்கை வழிமுறையாக இருக்குமே தவிர, நோய் வந்த பிறகு நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

நோய் வருவதற்கு முன்னால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால், வந்த பிறகு நோயின் தீவிரத்தைத் தெரிந்து‌ கொண்டு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மஞ்சள்காமாலைக்கு எங்கோ ஓர் இடத்தில் இயற்கை வழியில் மருத்துவம் அளிப்பதாகச் சொல்லி, அதுவும் மூன்றே நாட்களில் குணமடைந்துவிடலாம் என்று மக்களைக் கவர்ந்து வரும்‌ சில போலியான மருந்துகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.‌ மஞ்சள்காமாலை முற்றிய நிலையில் கல்லீரல் அழற்சி/கல்லீரல் கரணைநோயாக (liver cirrhosis) மாறி, இறுதியில் அது புற்றுநோயாக உருமாறுவதற்கான வாய்ப்பு உண்டு.

ஆயுர்வேத மருத்துவத்தைத் தொடர்ந்து எடுத்து வந்த 58 வயதான அமெரிக்கப் பெண்மணியின் உடலில் ஈயத்தின் (lead) அளவு கூடுதலாக இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து சில தீவிரமான பக்கவிளைவுகள் இருந்ததாக 2011இல் வெளியான ஓர்  ஆராய்ச்சி கட்டுரை கூறுகிறது‌. எந்தச் சிகிச்சை முறை சிறந்தது என்பதைப் பற்றி விவாதிப்பதற்காக இதை எழுதவில்லை. எந்த ஒரு சிகிச்சை முறையைப் பின்பற்றினாலும், நோயின் தன்மையையும் அதன் தீவிரத்தையும் அறிந்து உரிய மருத்துவ சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.‌ எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் அதைப் பற்றிய கொஞ்சம் அறிவையாவது பெற்றிருப்பது, அதனால் ஏற்படும்  பக்கவிளைவுகளைச் சமாளிக்க உதவும்.

இயற்கை என்னும் பரவலான வார்த்தையை நமக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வதென்பது குறிகிய மனநிலையை உருவாக்கும். சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக மனிதர்களின் Y குரோமோசோம்கள் அளவில் சுருங்கிக் கொண்டே வருகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதற்கான காரணமாகச் சொல்லப்படுவது Y குரோமோசோம் இணையில்லாமல் ஒற்றையாக இருப்பதால், அதில் ஏற்படும் பிறழ்வுகளை எளிதில் சரிசெய்ய முடிவதில்லை என்பதுதான். இது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.‌ மனிதனின் அடுத்த பரிணாமம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஆய்வுகள் நடந்து வந்தாலும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தது இயற்கை மட்டும்தான்‌. மனிதனின் அறிவாற்றல் இன்னும் இயற்கையை நிர்ணயிக்கும் அளவிற்கு விரிவடையவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நீண்ட நாள் வாழும் ஆசையில், மனிதன் தன் ஆயுளை நீட்டிக் கொள்வதற்காகப் பல தொழில்நுட்பங்களையும், சிகிச்சை முறைகளையும்‌ பயன்படுத்தி வருகிறான். ஆனால், இயற்கை இவை எதையும் சட்டை செய்யாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.

Exit mobile version