Site icon Her Stories

வரும் முன் காப்போம்

கேள்வி

எங்க பையனுக்கு 5 வயது முடிந்து விட்டது. புது பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும். எதெல்லாம் பார்க்க வேண்டும்?

பதில்:

ஜூன் மாதம் நிறைய குழந்தைகள் புது பள்ளிக்கூடத்தில் சேர்வார்கள். இப்போது இருந்தே தேடினால்தான் நம் மனசுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் பிடித்த மாதிரி அமையும். இந்த நேரத்தில் இது சரியான கேள்வி.

பள்ளிக்கூடம் என்பது குழந்தையின் முழு வளர்ச்சி, குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி இருக்க வேண்டும். பாடங்களைப் புரிந்துகொண்டு மார்க் வாங்க வைப்பது மட்டுமே பள்ளியின் நோக்கமல்ல.

 இவையெல்லாம் ஓரளவாவது இருந்தால் அது Child Friendly School. அதாவது  குழந்தை நேயப்பள்ளி. உங்கள் சுட்டியை தாராளமாக சேர்க்கலாம்.

 அதிகமான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மட்டும் தான் தரமானவை என்பது இல்லை. இதைப் புரிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கூடம் என்பது குழந்தைக்குப் பாதுகாப்பானதாக, உணர்வுகளுக்கு இனிமையானதாக, மன அளவில் குழந்தைகளை உயர்த்திவிடுவதாக, மொத்தமாக மகிழ்ச்சி நிறைந்த ஒரு வீடாக இருக்க வேண்டும். அது குழந்தையின் பல்வேறு திறன்களை, முக்கியமாக ஆழமாக சிந்தித்து செயல்பட வைக்கும் இடமாக இருக்க வேண்டும்.

இதெல்லாம் மருத்துவர் கங்கா சொல்லவில்லையம்மா! ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கூட்டமைப்பும் (UNICEF) இந்திய குழந்தை மருத்துவர் கூட்டமைப்பும் இந்த வழிமுறைகளைத் தொகுத்தளித்திருக்கின்றன.

கேள்வி

யமுனாவுக்கு பத்து வயது ஆகிறது. ஹெச்.பி.வி. (HPV – கருப்பை வாய் புற்றுநோய்த் தடுப்பூசி) போடச் சொல்கிறார்களே? அது கட்டாயமா?

பதில்

தடுப்பு ஊசிகள் குழந்தையின் எதிர்கால நல்வாழ்விற்கு அவசியம். அதுவும் இந்த ஊசி குழந்தைகளுக்குக் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். 1990களில் தொடங்கி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பல அடுக்கு ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டிருக்கிறது. 2000களின் தொடக்கத்தில் புழக்கத்துக்கு வந்தது. பெரிய பக்க விளைவுகள் இன்றி 25 வருடங்களாக இது பயன்பாட்டில் உள்ளது.

ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று என்பது ஒரு பாலியல் நோய் – அதாவது பாலுறவால் பரவக் கூடியது. ஆண்களிடமிருந்து பெண்களுக்குத் தொற்றுகிறது. இந்தத் தொற்று நீடித்து இருக்கும்போது கருப்பை வாய் மற்றும் பிற பகுதிகளில் (Vulva, Vagina போன்ற பெண்ணுறுப்பு சார்ந்த பகுதிகள்) புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். ஆண்களுக்குப் பிறப்புறுப்பு, மலத்துவாரம் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படும். புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புபெண்களுக்கு மிகவும் அதிகம்.

இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் மார்பகப் புற்றுநோய் முதல் இடத்திலும் கருப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. 2022ன் புள்ளி விவரப்படி 6,60,000 மகளிருக்குப் புற்றுநோய் ஏற்பட்டு அதில் 35,000 மகளிர் இறந்திருக்கிறார்கள். வளர்ந்துவரும் நாடுகளில்தான் இறப்பு விகிதம் அதிகம்.

மற்றுமொரு ஆராய்ச்சி முடிவின்படி இந்த ஹெச்.பி.வி தடுப்பூசி போடுவதால் இறப்பு 62% குறைந்திருப்பதாகவும் தெரிகிறது. இது மகிழ்ச்சியான செய்தி அல்லவா?

இந்த வைரஸ் தொற்று புற்றுநோயை மட்டுமே ஏற்படுத்துவது இல்லை. பெண்களுக்குக் கருப்பை வாயில் புண், கருத்தரிப்பதில் தாமதம், கருச்சிதைவு, குறைமாதக் குழந்தை மற்றும் எடை குறைந்த குழத்தைப் பிறப்பு ஆகியவையும் ஏற்படக்கூடும். ஆண்களுக்கு மலத்துவாரத்தைச் சுற்றி மரு போன்ற புண்கள் (Anal wart), விந்தணு எண்ணிக்கைக் குறைவு, விந்தணு அமைப்பில் மாறுபாடுகள் ஆகியவை ஏற்படுகின்றன.

இந்தத் தடுப்பூசி தற்போது அரசு மருத்துவ சேவை மூலம் இலவசமாக அளிக்கப்படுவதில்லை. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கின்றன

இந்தத் தடுப்பூசி ஆண், பெண் இரு பாலருக்கும் அளிக்கப்பட வேண்டும். முதல் பாலியல் உறவுக்கு முன்பு அளிக்கப்பட வேண்டும்.

15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முறையும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மூன்று முறையும் ஊசி போட வேண்டும். இரண்டு தவணை போடும்போது முதல் ஊசி போட்டு ஆறு மாதங்கள் சென்று அடுத்த ஊசி போடவேண்டும். மூன்று தவணைகள் தேவைப்படும்போது முதல் ஊசி போட்டு 1-2 மாதங்களில் இரண்டாவது தவணை, ஆறு மாதங்களில் மூன்றாவது தவணை என்று கணக்கிட்டு ஊசி போட வேண்டும். இந்த ஊசிகள் 80-90% வைரஸ் தொற்றினைத் தடுக்கின்றன. 60-70% புற்றுநோயைத் தடுக்கின்றன.

லேசான காய்ச்சல், உடம்பு வலி, ஊசி போட்ட இடத்தில் லேசான வலி போன்ற பக்க விளைவுகள் ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கும்.

மகளிரின் நலத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் ஹெச்.பி.வி தடுப்பு ஊசியைக் கட்டாயம் யமுனாவிற்கும் பரிசாக, சொத்தாக அளியுங்கள். உங்கள் நண்பர்களின் ஆண், பெண் குழந்தைகளுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Exit mobile version