Site icon Her Stories

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-2

International Institute of Social History

எனது குட்டி பன்றியே,

நீ சந்தோசமாக இருப்பது அறிந்து நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்! அதுவும் எனது கடிதம் உன்னை குதூகூலப்படுத்தியுள்ளது, உனக்கு என் தேடுதல் ஏற்பட்டிருக்கிறது, நீ வண்ணமயமான அறையில் வசித்துக்கொண்டு, கோலோனில் சாம்பைன் பானம் அருந்திக்கொண்டு, அங்கிருக்கும் ஹெகல் விடுதிகளில்,என்னைப்பற்றிய கனவுகளில் மிதந்துகொண்டு, எளிதாகச் சொல்வதென்றால், நீ என்னுடையவனாக, எனது இனிய இதயமாக இருக்கிறாய் என் அருமை குட்டி பன்றியே.

ஆனால் எல்லாவற்றிலும் ஒன்றை மட்டும் நான் தவறவிடுகிறேன். நீ என்னுடைய கிரேக்க நடைக்காக என்னை சிறிதளவாவது புகழவேண்டும். அதற்காக சிறிது நேரம் ஒதுக்கி எனக்கு பாராட்டுதலுடன் கூடிய ஆழ்ந்த ஞானம் கொண்ட ஒரு கட்டுரை எழுதவேண்டும். அது நீ எழுதியது போலவே இருக்க வேண்டும்.

நீ ஒரு ஹெகல் தத்துவம் கொண்டவன். நீ யாரையும் அவர்கள் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், உனது எண்ணப்படி இல்லையென்றால் அங்கீகரிக்க மாட்டாய். ஆகவே நானே,எனது திறமைக்கேற்ற,மென்மையான தன்மையிலேயே ஓய்வெடுத்துக்கொண்டே எழுதி விடுகிறேன். ஆம், எனது இனிய இதயமே, மிகவும் மென்மையான படுக்கையிலும், தலையணையிலும் ஓய்வெடுத்துக்கொண்டேதான் இந்த சிறிய கடிதத்தையும் அனுப்புகிறேன்.

ஞாயிறு அன்று நான் தைரியமாக ஒரு காரியத்தில் இறங்கி முன் அறைகள் வரை சென்றேன். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்து அதற்காக நானே எனக்கு தண்டணை கொடுக்க நேர்ந்தது. ஷ்கிலீச்சர் சற்றுமுன் தனக்கு ஒரு இளம் புரட்சிக்காரனிடமிருந்து கடிதம் வந்ததாகக் கூறினான். ஆனால் பின்பு அவனது தேசத்தைச்சேர்ந்தவனையே தவறாக சந்தேகிக்க நேர்ந்ததாகவும் சொன்னான். அவன் சந்தைப்பங்குகளையோ அல்லது வேறு எதுவுமோ வாங்கிக்கொள்பவனாகவும் உணரவில்லை. என் நேசமிக்கவனே, என் இனிய இதயமே, இப்போது அரசியலிலும் நீ உன்னையே ஈடுபடுத்திக்கொள்ளலாம். அதுவும்கூட மிகவும் சவால்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

என் இனிய இளம் கார்ல், ஒன்றுமட்டும் எப்போதும் நினைவில் இருக்கட்டும். இங்கு இந்த வீட்டில் உன்னுடைய இந்த இனிய இதயம் உன்னையே சார்ந்து உன் மீது நம்பிக்கையுடனும், துயரப்பட்டும் முற்றிலும் உன் எதிர்காலத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்பே, அன்புச்சுவையான இதயமே, நான் மறுபடியும் எப்படியாவது உன்னை சந்திக்க விழைகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக நான் இன்னும் அந்த நாளை குறித்துக்கொள்ளவும் இல்லை, குறிக்கவும் முடியவில்லை.

நான் முழுவதுமாக குணம் அடையும் முன் எனக்கு பயணம் செய்ய அனுமதியும் கிடைக்காது. ஆனால் இந்த வாரம் இங்கு இருந்தே ஆகவேண்டும். இல்லையெனில் நமது அன்புக்குறிய வைத்தியர் போய்விடுவார்; பின்பு அந்த திறமையானவரை பார்க்கமுடியாது. இன்று அதிகாலையில் ஆகஸ்பர்க் நாளிதழில் மூன்று ஹெகலியன் கட்டுரைகளைப்படித்தேன்,மேலும் ப்ரூனோவின் புத்தகம் பற்றிய அறிவிப்பும் பார்த்தேன்.

The Guardian (ஜென்னி மற்றும் மார்க்சின் கல்லறை)

நேசமே, இன்சுவை இதயமே, குறிப்பாக சொல்லவேண்டுமானால் நான் உன்னிடமிருந்து நீ கேட்டுக்கொண்டபடி பிரியாவிடை பெற இரண்டு வரிகள் மட்டும் கேட்டிருந்தாய். ஆனால் இந்தப்பக்கம் முழுவதும் நிறைத்து எழுதியாகிவிட்டது. ஆனால் இன்று கடித முறைப்படி கட்டாயமாக எழுதியாக வேண்டும் என்பதில்லாமல் கடைசி பக்கம் வரை இழுத்து எழுதிவிட்டேன். மேலும் இது உண்மைதானே என் இனிய இதயமே, அதற்காகவும் அதில் உள்ள விசயங்களுக்காகவும் இந்த இளம் ஜென்னியின் மேல் உனக்கு கோபம் ஏற்படாது அல்லவா?

உன் மனதில் இறுத்திக்கொள்ளவேண்டும்: மிகவும் வேண்டியவர்தான் தன்னிடம் உள்ளதற்குமேல் அள்ளிக்கொடுக்க முடியும். இன்று பறவை போல, தேனீ போல சிறகடிக்கும் என் சிறிய தலை பரிதாபகரமாக ஒன்றும் இல்லாத வெற்றிடமாக ஆனால் சதா ஓடிக்கொண்டும், சிறகடித்துக்கொண்டும் பல எண்ணங்களை அரைத்துக்கொண்டும் உள்ளது. என் எண்ணங்கள் எல்லாம் பறந்தோடிவிட்டது. ஆனால் எனது சிறிய இதயம் முழுவதும் உன்மேல் உள்ள அன்பால் நிறைந்து வழிந்து உன்னைத்தேடுவதிலேயே நீடித்திருக்கிறதே, என் அளவில்லா அன்பால் காதலிக்கப்படுபவரே.

பென்சிலால் எழுதி ’வாபனிடம்’ கொடுத்து அனுப்பிய கடிதம் கிடைத்ததா? அநேகமாக நமக்கிடையே கடிதம் பரிமாறிய அவர் இனிமேல் சரிப்படமாட்டார். எனவே வருங்காலங்களில் நான் எனது ஆசானும் போதகருமான உனக்கு நேரிடையாகவே அனுப்பிவிடுகிறேன்.
கமாண்டர் ’நேப்பியர்’ சற்றுமுன் கையில்லா வெள்ளை மேல்சட்டையுடன் கடந்தார். ஒருசிலரது தரம் குறைந்த உணர்வு பார்த்தகணமே மறைந்துவிடும். எனக்கு அது ஓநாய்கள் ஒரு குகைக்குள் இருந்து வெளியே தலை நீட்டி, முரட்டு ராணுவம் முழுஅணிவகுப்புடன் கடக்கும்பொழுது மறைந்துவிடுவதுபோல் தோன்றியது. நமது கலை இழந்த நாடக மேடைகளில் மட்டுமே இதைப்போன்று கயிறுகளால் பிணைக்கப்பட்ட கழுகுகள், கோட்டான்கள் மற்றும் முதலைகளை காணமுடியும். இந்த விதத்தில் இதன் யாந்திரீகத்தன்மை சிறிது வேறுபட்டது.

நாளை முதன்முறையாக அப்பா தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைவிட்டு நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படுவார். அவரது நோய்நீங்கும் விதம் தாமதமாவது குறித்து அவரை நிறையவே பயமுறுத்திவிட்டார்கள். ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்டளைகளை பிறப்பித்த வண்ணமே இருக்கிறார். எனவே அவருக்கு மிகப்பெரும் விருதான கமாண்டர்களின் தலைமை அடையாளமான குறுக்கு பட்டை அளித்து கெளரவப்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நான் சுகவீனமாக இங்கு படுத்திருக்கவில்லையென்றால், நான் எனது உடைமைகளையெல்லாம் இந்நேரம் மூட்டைகட்டியிருப்பேன். எல்லாம் தயார்- பாவாடை, கவுன்கள், சட்டை காலர்கள், மேலுடைகள் எல்லாமே அழகாக அடுக்கி தயாராக உள்ளது. ஆனால் அணிபவர்தான் இன்னும் சரியான நிலைக்கு வரவில்லை. ஓ,என் அன்புக்குரியவனே,என் உறக்கமில்லாத இரவுகளில் எல்லாம் எப்படி உன்னையும் உன் காதலையும் நினைவில் தாங்கியுள்ளேன் தெரியுமா? எப்படியெல்லாம் உனக்காக பிரார்த்தித்தும் ஆசீர்வதித்தும் உன்னை ஆசீர்வதிக்க வேண்டியும் மேலும் எப்படியெல்லாம் இனிமையான கனவுகளில் அத்தனை பிரார்த்தனைகளும் நடப்பதுபோல் நிச்சயம் பலிப்பதுபோல்…

இந்த மாலையில்கூட ஹெய்சிங்கர் ”போன்” என்ற நாடகத்தில் நடித்தாள். நீ அங்கு போகமுடியுமா? அவள் எனக்கு ’டோனா டயன்னா’ போல் தெரிந்தாள்.
அன்புமிகு கார்ல், நான் உனக்கு மேலும் பல விசயங்கள் சொல்ல வேண்டும். எல்லாமே சொல்ல மீதமிருக்கிறது. ஆனால் என் அம்மா இதற்கு மேல் பொறுத்துக் கொள்ளமாட்டார்….எனது பேனாவை பிடுங்கிக்கொள்வார். பின்பு எனது ஆத்மார்த்தமான அன்புடன் கலந்த வாழ்த்துகளைக்கூட சொல்ல முடியாது. ஒவ்வொரு விரலிலும் ஒரு முத்தம் மட்டும் கொடுத்து பின்பு தொலைவில் அனுப்பி விடுவேன்.

மார்க்ஸ் குடும்பம் (The Soul of matter)

அது வெகுதூரம் பறந்து, பறந்து என் கார்லிடம் சென்று இதமாக உதடுகளில் இறுக்க ஒட்டிக் கொண்டு கார்ல் அதை அடையும்போது பலவித காதல் தகவல்களை சப்தமின்றி மெதுவாக, சுறுக்கமாக, இனிமையாக, ரகசியமாகக் கூறி,எனது காதல் உணர்வுகளையெல்லாம் தெரிவித்துவிடும்… ஆனால் இல்லை இல்லை உன் மனைவிக்கு அதில் கொஞ்சம் மீதம் வைத்துவிடு.

விடைபெறுகிறேன் என்னால் மட்டுமே காதலிக்கப்படுபவரே, இதற்கு மேல் என்னால் எதுவும் எழுத முடியவில்லை, இதற்குமேல் எனது தலை சுற்ற ஆரம்பித்துவிடும். நீ அறிவாயோ பலவிதங்களில் சுற்றித்திரியும் ’சோனிட்டு’ பற்றி? ஓ..ரயில்வேயைச் சார்ந்த அன்பிற்குரிய சிறிய மனிதன் அல்லவா…ஓ எனது அன்பு சிறுவனே…நான் உன்னை திருமணம் செய்துகொள்வதென்பது நிச்சயமில்லையா?
ஓ….ஓ….எனது இனிய இதயமே…

கட்டுரையாளர்:

சோ.சுத்தானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர்.

வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும், தான் மேற்கொண்ட சில பயணங்கள் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கிற நூலாக எழுதியிருக்கிறார் சுத்தானந்தம். இதில் அவருடைய கிராம வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, இயக்க வாழ்க்கையின் சில பகுதிகளை அறிந்துகொள்ளலாம்.

Exit mobile version