Site icon Her Stories

அம்மாவுக்கு வேண்டும் மேமோகிராம்

பாலூட்டி விலங்குகளில் பெண் உடலின் வெளிப்புறம் பாற்சுரப்பிகள் கொண்ட ஒரு தசைக்கோளம் அமைந்திருக்கிறது. அது மார்பகம் என்று அழைக்கப்படுகிறது.

பூப்பெய்தும் பருவம் வரை இருபாலருக்கும் மார்புகள் ஒன்று போலவே இருக்கும். பூப்பெய்த பின் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களால் பெண்களின் மார்பகங்கள் பெரியதாக இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இடப்பக்க மார்பகம் சற்றுப் பெரிதாக இருக்கும். ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களால் ஆண்களுக்கு மார்புகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கும்.

இதர பெண் பாலூட்டிகளில் மார்பகங்கள் கருவுற்ற காலங்களில் மட்டும் முழுமையடைகின்றன. ஆனால் மனித இனத்தில் மட்டும் கருவுறாத காலங்களிலும் முழுமையான மார்பகங்கள் அமைந்திருக்கும். மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது என்பது கவலை அளிக்கும் விஷயம். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இளம்பெண்களுக்கு மிக அதிக அளவில் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் இந்த நோயால் இறக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் 1,78,500 புதிய மார்பகப் புற்றுநோய்கள் ஏற்படுவதும், 90,500 பெண்கள் இறப்பதும் இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சுமையைக் குறைக்க வேண்டிய அவசரத் தேவையை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

ஆய்வுக் கணிப்புகளின்படி 2025ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5.6 மில்லியன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த நோய் ஆண்டுதோறும் 4% அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை எச்சரிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பெண்கள் மார்பக பரிசோதனை மேற்கொண்டால், அதில் 25 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுகளின்படி தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் பெண்கள் மார்பக பரிசோதனை மேற்கொள்ளும்போது, 37 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்னொரு ஆய்வில் இந்த எண்ணிக்கை 2023 ம் வருடம் ஒரு லட்சம் பெண்களில் 52 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகிறது. 

மார்பக செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து புற்று நோயை உருவாக்குகிறது. இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், உடலின் இதர பாகங்களுக்கும் இது பரவுகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த மார்பக புற்றுநோயைக் கண்டறியும் பெண்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 99 சதவீதம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களை இன்னது தானென்று வரையறுக்க இயலாது. மிக இளம் வயதில் பூப்படைந்த பெண்கள், ஐம்பது வயதுக்கு மேலும் மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், காலதாமதமாக அதாவது முப்பது முப்பத்தைந்து வயதுகளில் முதலாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள், மிக நெருங்கிய ரத்த உறவுகளில் மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்தால், மாறிவரும் உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்தல், தாய்ப்பால் கொடுக்காதது, மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாதவர்கள், ஹார்மோன் சார்ந்த மாற்றங்கள் மற்றும் உடல் உழைப்பு மிகவும் குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால் உறுதியாகக் கூற இயலாது. இந்த வரைமுறைகளுக்குள் உட்படாதவர்களுக்கும், மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் இந்நோய் வரலாம்.  

ஒவ்வொரு ஆண்டும் பிங்க் அக்டோபர் மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இளஞ்சிவப்பு ரிப்பன்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் ஆகியவை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்லவும், நோயைக் கண்டறியவும், தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்கவும், சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்டவும் இந்த மாதம் அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பெண்களுக்கான பொதுவான நோய்களில் ஒன்றாக மார்பகப் புற்றுநோயை அறிவித்திருக்கிறது.

வருடத்திற்கு அரை மில்லியன் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். உலக அளவில் நான்காம் இடத்திலிருந்த இந்த நோய் இப்போது முதலிடத்தைப் பிடித்து விட்டது. இந்தப் பிங்க் மாதம் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனநலன்களைப் பாதுகாக்கவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தரவும் ஒரு தளமாகச் செய்யபடுகிறது. வயது, மரபியல், ஹார்மோன் காரணிகள், கதிர்வீச்சு, வாழ்க்கை முறை போன்றவை மார்பக புற்றுநோயின் ஆரம்பக் காரணிகளாக அமைகின்றன.

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி மற்றும் இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்டரிஸின் மருத்துவப் பிரிவு இணைந்து 1985 ம் ஆண்டு பிங்க் அக்டோபர் பிரச்சாரத்தைத் துவக்கின. இது மார்பக புற்றுநோயை கண்டறிந்து தடுப்பதற்கான மேமோகிராம் பரிசோதனையை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. 1991ஆம் ஆண்டு சார்லோட் ஹேலி என்ற பெண் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உறவினர்களுக்கு இளஞ்சிவப்பு நிற ரிப்பன்களை அனுப்பினார். மேலும் பிங்க் நிறம் பெண்களுக்குரிய நிறமாக உணரப்படுவதால் பிங்க் ரிப்பன்கள் அதன் சின்னமாக விளம்பரப்படுத்தப்பட்டன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு இந்த ரிப்பன் சின்னமாகவும் விளங்குகிறது.

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் அவ்வப்போது மார்பகத்தில் கட்டிகள் ஏதும் உள்ளதா என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் அக்குள் அல்லது மார்பில், வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டிகள் தோன்றுவது, மார்பகத்தின் வடிவம் அல்லது அளவில் மாற்றங்கள் ஏற்படுவது, முலைக் காம்பில் திரவம் அல்லது இரத்தம் கசிவது, மார்புக் காம்பு  உள்ளிழுத்துக் கொள்வது, தோல் மங்கலாக அல்லது சிவந்து காணப்படுவது, மார்பகத்தில் வலி போன்றவை ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை சந்தித்து முறையாக பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.


அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று, கைகள் இரண்டையும் மேலே துாக்கி, இரு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மார்பகங்களின் எல்லாப் பகுதிகளிலும், விரல்களால் அழுந்தத் தடவி, கட்டிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதுவே சுயபரிசோதனை செய்யும் முறையாகும். மாற்றங்கள், சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் செல்வது நலம். 

Photo by sydney Rae on Unsplash

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, விழிப்புணர்வு மாதம் 2024இன் கருப்பொருள், ‘மார்பகப் புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக் கூடாது’ என்பதாகும். அதன்படி, இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள்,  பாதிக்கப்பட்டுத் தனிமையில் வாடுபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களாக உணரக் கூடிய நோயாளிகளின் மனப் போராட்டங்களை பொதுச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகும். இதனால் நோயாளிகள் அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் பெறுவதை உறுதி செய்ய இயலும்.

அக்டோபர் 13 மெட்டாஸ்டேடிக் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தவகைப் புற்றுநோய் மார்பகங்களைத் தாண்டி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பான படிப்புக்கு நிதி திரட்டவும் இந்த நாளின் நோக்கமாகும்.


அக்டோபர் 17 முதல் 23 வரை ஆண்கள் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் ஆண்கள், திருநங்கைகள் மற்றும் பைனரி இல்லாத நபர்களுக்கு (ஆண்/பெண் என்ற வகைமைக்குள் வராமல் ‘அவர்கள்/ Them என்ற விளிக்குள் அடங்குபவர்கள்) விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். நூறு ஆண்களுக்குள் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். 

மேமோகிராம் என்பது மார்பகத்தின் எக்ஸ்ரே ஆகும். இது உணரப்படாத கட்டிகளைக் கண்டறிய பெரிதும் உதவுகிறது. நாற்பது முதல் ஐம்பத்து நான்கு வயது வரை உள்ள பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் பரிசோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஐம்பத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் முடிந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் இந்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் மார்பகங்கள் மென்மையாகவும், வலி மிகுந்தும் இருக்கும். மேலும் பரிசோதனையின் போது வாசனை திரவியங்கள், பவுடர், டியோடரன்ட், லோஷன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. பெண்கள் இதனைக் கவனத்தில் கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

என் தோழியின் வயதான உறவுப் பெண் அக்குள் வீக்கம் என்று இந்த மேமோகிராம் பரிசோதனையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் செய்தார். அவருக்கு மார்பகப் புற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் முடிவில் அவரது ஒரு மார்பு அகற்றப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக நலமாக இருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பது அறிந்ததும் அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றிவிட்டார். இந்த நிகழ்ச்சி ‘ஏஞ்சலினா விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. BRCA என்ற மார்பக புற்றுநோய் சோதனை செய்தபின் மரபணு ரீதியாக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று அறிந்ததும் அவர் இந்த முடிவை எடுத்தார். இது மற்ற பெண்கள் இடையே உள்ள தயக்கத்தை போக்கி தாங்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற ஊக்குவிப்பை ஏற்படுத்தியது. 

அறுவைசிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சை போன்றவற்றின் மூலம் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.

தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும். தாய்மார்கள் கட்டாயம் பாலூட்ட வேண்டும். தக்காளி, கேரட், கருப்பு திராட்சை, மாதுளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புரொகோலி, பூண்டு ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த புற்றுநோய்க்கு எதிரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மிளகாய்த் தூள், மசாலா வகைகளில் சிவப்பு நிறத்தை கூட்ட சூடான் ரெட் டை கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. இவற்றைத் தவிர்த்து விடலாம். ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. தினசரி உடற்பயிற்சியைக் கட்டாயம் செய்ய வேண்டும். உடலை ஆரோக்கியமாகவும், ஹார்மோன்களை சீராகச் சுரக்கவும் வைக்க வேண்டும். 

நம்மால் முடிந்த பொருள்தானம், நிதி திரட்டுதல் அல்லது உடல் உழைப்பை அளித்தல் போன்ற பல்வேறு வகைகளில் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில் நாமும் பங்கு பெறலாம். பல பள்ளிகள் அல்லது பணியிடங்களில் இந்த மாதத்தின் ஒரு நாளில் பிங்க் நிற ஆடை அணிந்து மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பற்றி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனையைச் செய்து கொள்வதில் இருக்கும் தேவையற்ற கூச்சத்தையும், தயக்கத்தையும் போக்க நாம் முயற்சிக்க வேண்டும். பெண்களிடம் இருக்கும் அறியாமையும், தங்கள் உடல்நலம் சார்ந்த அக்கறையின்மையும், குடும்பத்தினரின் மெத்தனப் போக்கும் மாற்றப்பட வேண்டும்.

இந்தச் செயல்கள் விழிப்புணர்வு மாதத்தில் மட்டுமல்லாது, ஆண்டு முழுவதுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். தடுப்பு முறை, சிகிச்சை முறையில் இருந்து மிகச் சிறிய தொலைவில் தான் இருக்கின்றது. அதை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். 

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

Exit mobile version