Site icon Her Stories

யாருக்காகத் திருமணம்?

திருமண வாழ்க்கை ஏன் பலருக்கு இவ்வளவு சிக்கலானதாகவும் வலிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது? சிலர் வாய்விட்டு தம் அனுபவங்களை சொல்லிக் கொள்வர், பல பெண்கள் மௌனமாக துன்பம் அனுபவிக்கின்றனர்.

யாரும் திருமணம் செய்யக்கூடாது  என்று சொல்லவில்லை. கடவுளை நம்புவதையும் நாத்திகராக இருப்பதைத் தேர்ந்தெடுப்பதையும் போன்றதே இதுவும் – இது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலானது. சிலர் திருமணத்தை நம்புகிறார்கள், சிலர் நம்புவதில்லை. திருமணம் செய்து கொள்ள விரும்பாதது அசாதாரணமானது அல்லது இயற்கைக்கு மாறானது அல்ல; பிறப்பு இறப்பு போல் இயற்கையானது அல்ல என்பதையை ஏற்கனவே முன்னைய அத்தியாயங்களில் பார்த்தோம். நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா இல்லையா என்பது உங்கள் விருப்பு அடிப்படையிலான தேர்வாகும்.

சரி ஏன் திருமணங்கள் நிலைத்து நிற்பதில்லை அல்லது உண்மையான மகிழ்ச்சியையும் தன்னிறைவையும் கொடுப்பதில்லை என்பதை இந்தத் தொடர் முழுவதும் பேசி, அலசி ஆராய உள்ளோம். பொதுவாக பெற்றோர்களும் சுற்றமும் என்ன வகையில் திருமணங்களில் பங்களிக்கின்றனர் என இந்த அத்தியாயத்தில் ஆராயத் தொடங்குவோம்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் மற்றும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர் சமூகங்களிலும் வாழும் தமிழ் பேசும் குடும்பங்களை இங்கு தமிழ் பெற்றோர் என இனம் காண்கிறோம்.

 சில சமயங்களில், தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் திருமண வாழ்க்கையில் அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டு, அவர்களின் திருமணங்களைச் சிதைத்துவிடுகின்றனர்.  திருமணமான தம்பதிகள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தாங்கள் மகிழ்ச்சியடைவது சாத்தியமில்லை என்பதை நமது பெற்றோர்களும் உறவினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.  தம்பதிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிக முக்கியமானது.

‘சரியான குடும்பங்களை’த் தேடுவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக சிறந்த வாழ்க்கை துணைகளை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.

குடும்ப வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் துரோகம் ஆகியவை மட்டுமே திருமணங்கள் முறிவதற்குக் காரணம் அல்ல. கண்ணுக்கு தெரியாத வடுக்கள் பலவும் உண்டு. திருமணமான தம்பதியினரிடையே தவறாக நடக்கக்கூடிய இன்னும் பல விஷயங்கள் உள்ளன, அவை வெளியுலகம் பார்க்காதவை.  சில நேரங்களில், இரண்டு பேர் தாங்கள் இணக்கமாக இல்லை என்பதை உணர்கிறார்கள். சில நேரங்களில், அவர்கள் இருவரும் சிறந்த மனிதர்களாக இருப்பர், ஆனால், ஒருவருக்கொருவர் சரியானவர்கள் அல்ல என்பதை அவர்கள் உணர்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தமிழ் பெற்றோர் ஒருவர் திருமணத்திலிருந்து வெளியேறுவதற்கு இந்தக் காரணங்களை போதுமானதாகக் கருதுவதில்லை. அதுவும் மாற வேண்டும்.

வெற்றிகரமான திருமணத்தின் வரைவிலக்கணத்தை நாம் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டு பேர் ஒன்றாக இருக்க திருமணம் என்ற  அடையாளம் தேவையில்லை. தமிழ் பெற்றோரிடம் நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள் என்று சொன்னவுடனே அவர்கள் திடீரென்று உங்களை விரைவில் திருமணம் செய்து கொள்ள நச்சரிப்பார்கள். வெளியேற வேண்டிய ஒருவர் எப்படியும் வெளியேறுவார், மேலும் உறவில் உறுதியான ஒருவர் எந்த அடையாளமும் இல்லாமல் அப்படியே இருப்பார். ஒரு உறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, திருமணம் என்ற அடையாளம்கூட உத்தரவாதம் தருவது இல்லை.

 எல்லா பிரச்சனைகளுக்கும் திருமணம் என்பது இறுதித் தீர்வு அல்ல. உங்கள் மகனோ அல்லது மகளோ கையை மீறிப் போவதாக நீங்கள் நினைத்தால், அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது அவர்களின் வாழ்க்கையைச் சீர்திருத்தப் போவதில்லை. உண்மையில் இது மிகவும் மோசமான முடிவு. அவர்கள் முழுக்க தயாராக இல்லாதபோது அவர்களை திருமணம் செய்துவைப்பதன் மூலம், நீங்கள் அவர்களின் வாழ்க்கை துணைகளின் வாழ்க்கையையும் அழிக்கிறீர்கள். உங்கள் மகன்/மகளை ‘அடக்க’ அல்லது வாழ்க்கையில் பொறுப்பானவராக மாற்ற விரும்பினால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தவறானது. ஏனெனில் திருமண வாழ்க்கை, சீர்திருத்தப் பள்ளி அல்ல.

நமது சொந்த ஜாதி, மதம் அல்லது பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறந்த வாழ்க்கை துணை தேர்வாக இருப்பார் என்று நம்புவதை நிறுத்த வேண்டும். கலப்பு பண்பாட்டுத் திருமணங்கள் சில நேரங்களில் முறிந்து போவதை நாம் அறிந்ததைப் போலவே, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் கொடூரமான பல முடிவுகளைக் கண்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன. எந்த ஒரு பண்பாடோ, மதமோ நல்ல கணவன்-மனைவிக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. மக்களை அவர்களின் பின்னணியைக் கொண்டு மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, தனிப்பட்ட முறையில் அவர்கள் யார் என்று மதிப்பிட வேண்டும்.

Photo by Filipe Almeida on Unsplash

35 வயதுக்குள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் இந்த சமூகம் இத்தனை வெறித்தனமாக இல்லாவிட்டால், நாம் நம் கனவுகளை அச்சமின்றி மெய்ப்படுத்தி, நம் வாழ்க்கைக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய முடியும். ‘சரியான நேரத்தில்’ பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதை இவ்வளவு பெரிய விஷயமாக்குவதை நம் பெற்றோர் நிறுத்த வேண்டும். வேண்டியபோது அது நடக்கும். ஒரு குடும்பத்தைத் தொடங்குவதை விட மிக முக்கியமான வாழ்க்கை இலக்குகள் இளம் வயதினருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு உள்ளன.

மேலும், எல்லோரும் ஆடம்பரமான திருமணங்களை விரும்புகிறார்கள். ஆனால் அது உண்மையில் அவசியமா? ஒரு குடும்பம் திருமணத்துக்குச் செலவிடும் பணத்தின் அடிப்படையில், சமூகம் அதனை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம்; வெறுக்கிறோம். திருமணங்களை போட்டியாக ஆக்குவதை நிறுத்த வேண்டும். வாழ்நாள் முழுவதையும் ஒன்றாகக் கழிக்க விரும்பும் இருவரின் இணைப்பு, அது அப்படியே இருக்கட்டும்.

பல சமயங்களில், வருங்கால மணமகனை அல்லது மணமகளை விரும்பினாலும்கூட, சமூக அழுத்ததுக்கு உட்பட்டு மட்டுமே பெற்றோர்கள் கலப்புப் பண்பாடு, சாதி அல்லது மதங்களுக்கு இடையிலான திருமணங்களை எதிர்க்கிறார்கள். சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மட்டுமே அவர்கள் தங்கள் குழந்தையின் மகிழ்ச்சியை தியாகம் செய்ய தயாராக உள்ளனர். இந்நிலை மாற வேண்டும், குழந்தைகளின் மகிழ்ச்சியை முக்கியமாகக் கருத வேண்டும்.

சமுதாயத்தை எப்போதுமே எம்மால் மகிழ்விக்க முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் செயல்களை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

உங்கள் நல்லது கெட்டதுகளில் ‘அந்த நாலு பேர்’ கூடவே இருக்கப் போவதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு எது சிறந்தது என்று சிந்தியுங்கள். உங்கள் சமூக அந்தஸ்துக்காக அல்ல, நிச்சயமாக சமூகத்திற்காக அல்ல, குறைந்த பட்சம் உங்கள் மனநிறைவுக்கும் மனநிம்மதிக்கும் சிந்தியுங்கள்.

இந்தக் கால கல்யாணச் சந்தையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சந்தை நிலவரம் எப்படி உள்ளது. பாலின ரீதியாக என்ன பாகுபாடுகள் உள்ளன? எதிர்பார்ப்புக்கள் என்ன? தொடர்ந்து பேசலாம் தோழர்களே…

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 

Exit mobile version