Site icon Her Stories

மார்பகப் புற்றுநோய் – தெரிந்ததும் தெரியாததும்

‘சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே’

என்று கற்பனையில் வேண்டுமானால் கண்டு துதிக்க ‘பென்னம் பெரிய முலைகள்’ அழகாக இருக்கலாம். உண்மையில் முலைகளால் பெண்கள் படுகிற அவஸ்தைகள்தான் அதிகம்!  

மார்பகம் சுரப்பிகளாலும், திசுக்களாலும் ஆனது. சுரப்பிகள் குழந்தை பிறப்புக்குப்பின், பால் சுரக்கும் வேலையைச் செய்கின்றன. ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் போன்ற பெண்களுக்குரிய ஹார்மோன்களைச் சுரக்கும் வேலையையும் மார்பகச் சுரப்பிகள் செய்கின்றன. சுரக்கும் பால் சிறப்பு நாளங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, மார்பகக் காம்பினை அடைகிறது.

நியூஜெர்சியில் பல குஜராத்தி வீடுகளில் இந்தியாவில் இருந்து அன்னையர் விடுமுறைக்காக வரும்போது சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றைச் செய்து விற்பதுண்டு. பத்து பத்தாகப் போட்டு, பொட்டலம் கட்டி வைத்திருப்பார்கள். காலையில் தொலைப்பேசி சொல்லிவிட்டால், மாலை வரும் போது எடுத்துக்கொண்டு, பணம் கொடுத்துவிட்டு வந்துவிடலாம். அந்த ஊதியம் அவர்கள் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரும். சிலர் தொட்டுக்கொள்ள ‘தால்’, ‘சப்ஜி’ போன்றவற்றையும் வாங்கிச் செல்வது உண்டு. மணிக்கு  20 டாலர்வரை அவர்களால் ஈட்டமுடியும். அப்படிச் செய்து வரும் ஒரு மூதாட்டியை ஒரு மாலையில் சந்தித்தேன்.

அவர் மார்பு வலிப்பதாக என்னிடம் சொன்னபோது, அவர் மகனிடம் அரசாங்கம் நடத்தும் இலவச  மருத்துவ விடுதிக்கு அழைத்துவரச் சொன்னேன். அதை எக்ஸ்-ரே எடுத்தபோது, கட்டி இருந்தது தெரியவந்தது. அது புற்று நோயாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், கட்டியைப் பரிசோதிக்க வேண்டும் எனச் சொன்னபோது, அவர் மகன், “இங்கே அம்மாவிற்குக் காப்பீடு இல்லை, இந்தியா போவதற்குள் ஒன்றும் ஆகிவிடாது, அங்கேயே போய் கவனித்துக்கொள்ளட்டும்,” என்றே வாதாடினார்.

இங்கே இலவச பயாப்ஸி, ஊசி மூலம் செல்களை எடுத்துப் பரிசோதிப்பது முதல், கட்டியை அகற்றுவது வரை செய்ய முடியும் என்றாலும் பிள்ளைக்குக் காசு அதற்கு மேல் செலவாகும், அம்மாவை வீட்டில் யார் பார்த்துக்கொள்வது என்றெல்லாம் கவலை!

மகனுக்குத் தெரியாமல், அவரும் மருமகளும் அலுவலகம் சென்றிருக்கும் நேரங்களில் அந்த அம்மாவின் கணவர் உதவியுடன் மருத்துவமனை அழைத்துக்கொண்டு போய் பரிசோதனைகள் செய்து, கட்டியை அகற்றினோம்.

சிகிச்சை முடிந்த அன்றுகூட, சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள அவர் உணவு சமைத்தார் என்பது தனிக் கதை!

மார்பகப் புற்று நோய் வரக் காரணிகள்

Photo by Klaus Nielsen: https://www.pexels.com/photo/people-holding-a-placard-6303776/

மார்பகப் புற்றுநோயுள்ள பெரும்பாலான பெண்களுக்கு, குறிப்பிடத்தக்க ஆபத்தான காரணிகள், அவர்கள் பெண்கள் என்பதைத்தவிர எதுவும் வெளித் தெரியாது. பெண்களே இந்நோயால் 100 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுகட்டியின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களால் ஏற்படும் ஆபத்துகள் கீழ்க்காண்பவை.

மற்ற காரணிகள்

மார்பகப்புற்றுநோய் வருவதைத் தடுக்கவும், வந்தபின் பரவுவதைத்  தடுக்கவும் இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.

முதல் நிலை சிகிச்சை முறை

எக்ஸ்-ரே எடுத்து, அதில் ஐயம் இருந்தால், ஊடுகதிர்  மூலம் செய்யும் ultrasound  செய்ய வேண்டும். அப்போது கட்டி இருந்தால், அது நீர்க் கட்டியா அல்லது உண்மையிலே திசுக்கள் நிறைந்ததா எனத் தெரியவரும். பிறகு தேவை எனில் MRI செய்யலாம்.

அதன் பின் ஊசி வழியாக பையாப்சி எடுப்பது, செல்களை எடுத்து அதில் புற்று நோய் செல்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதிப்பது, பிறகு அதற்கான சிகிச்சை அளிப்பது எனப் படிப்படியாகச் செல்ல வேண்டும்.

வரும் முன் காத்தல்

இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் வரும் முன்பே அதைக் கண்டறிதலும் அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை, பழக்கங்களைக் கைக்கொள்ளுதலும் கடைபிடிக்கப்படுகின்றன.

மார்பக சுய பரிசோதனை

மாதாமாதம் செய்து கொள்ளும் மார்பக சுயபரிசோதனை மிகவும் ஆரம்ப நிலையில் புற்று நோயைக் கண்டறிய மிகவும் உதவுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்று நோய் குணமடைய 85% சாத்தியம் உண்டு. ஒரு நெல்லிக்காயளவு இருக்கும் கட்டியினைக்கூட சுய பரிசோதனையில் கண்டறியலாம். இவ்வாறு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்ல நிணநீர் கட்டிகளில் இந்நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.

மார்பக எக்ஸ்-ரே

சுய பரிசோதனையில் ஏதேனும் ஐயப்பாடு வருமானால், மருத்துவர்கள் மார்பக எக்ஸ்-ரே பரிந்துரை செய்வார்கள். சாதாரண நிலையில் மார்பகம் எப்படி இருக்கிறது என்பதையும் எக்ஸ்-ரே எடுத்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.

மருத்துவப் பரிசோதனை

பெண்கள், அதிலும் 50 வயதைக் கடந்தவர்கள், வருடம் ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்வது மிகவும் சிறந்தது. குழந்தைகள் பெற்றுக்கொள்வத , மாதச் சுழற்சி மாற்றங்கள் என ஹார்மோன்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்தப் பரிசோதனை மிகவும் அவசியமாகும்.

ஹார்மோன் அடங்கிய மருந்துகள்

ஈஸ்ட்ரஜனுக்கு எதிர்வினை புரியக்கூடிய மருந்துகள் புற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் மிகவும் சக்திவாய்ந்தவை. ஆனாலும் இவ்வகை மருந்துகள் குறுகிய காலத்துக்குள்ளேயே மாத சுழற்சியை நிறுத்துவதும் அதற்கான அறிகுறிகளைத் தரக்கூடியதாக இருப்பதும், பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் எலும்பு முறிவுகள் ஏற்படும் சாத்தியங்கள், எலும்பின் சக்தி முறைய காரணங்கள் அதிகமாகும். இப்போது பிராக்கலி போன்ற காய்கறிகளில் உள்ள இண்டோல் 3 கார்பினால், மஞ்சளில் உள்ள கர்க்குமின் போன்ற வேதிப் பொருள்கள் ‘காக்ஸ்’ எனப்படும் மரபணுவில் புற்றுநோய்க்குக் காரணமான பகுதியைத் தடுப்பதால், நோயைப் பரவவிடாமல் தடுப்பது சாத்தியம் எனத் தெரியவந்துள்ளது. இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவுப் பொருட்கள் மூலம் மார்பகப் புற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வழிகள்

தொடர்ந்து நடக்கும் ஆய்வுகள் மூலம் உணவுப்பொருள்கள் மூலம் புற்றுநோயைத் தடுப்பதே மிகச் சிறந்ததாகவும் அதிகப் பயனுள்ளதாகவும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. உணவுப் பொருள்களால் மார்பகப் புற்று நோயை எந்த அளவிற்குக் குறைக்கமுடியும் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாதென்றாலும், பலனிருப்பது தெரிய வந்துள்ளது.

உணவில் உள்ள கொழுப்பு சத்துகளின் தாக்கம்

உணவில் உள்ள கொழுப்பு சத்து, மார்பகப் புற்று நோய்க்கு எந்த வகையில் காரணமாக இருக்கமுடியும் எனத் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க மக்களின் உணவில் சராசரியாக 40% கொழுப்பு இருக்கிறது. இது 20% ஆகக் குறைந்தால் பலன் இருக்கக்கூடும். கொழுப்பின் அளவு என்பது மட்டும் இல்லாமல், எந்த வகையான கொழுப்பு என்பதும் முக்கியம். எடுத்துக்காட்டாக polyunsaturated கொழுப்பு, பரிசோதனை விலங்குகளில் மார்பகப் புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சூரியகாந்தி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கெடுதலைத் தரும்.

அதே சமயம் சில எண்ணெய் வகைகள், எடுத்துக்காட்டாக ஆலிவ் எண்ணெய் போன்றவை நல்ல பலன் தருகின்றன. கனோலா எண்ணெய், சால்மன் மீனில் இருந்து கிடைக்கும் மீன் எண்ணெய் ஆகியவை நல்ல பலனைத் தரும். நார்ச்சத்து உணவில் அதிகம் இருப்பதும் நன்மை பயக்கும். பொதுவாக கைக்குத்தல் அரிசி, நன்றாகச் சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவு (unprocessed wheat) உமியுடன் கூடிய தானியங்கள், சிலவகைக் காய்கறிகள் இவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. முழு தானியங்கள் கூடிய சீரியல்கள் அல்லது ரொட்டித் துண்டுகளை காலை உணவில் சேர்த்துக் கொள்வதும் மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

பிராக்கோலி, பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ், கேல், மற்றும் முட்டை கோசு போன்ற பலவகை காய்கறிகளில் உள்ள இண்டோல் 3 கார்பினால் புற்றுநோய்க்குக் காரணமான மரபணுவை அடக்குவதாலும் (suppress), ஈஸ்ட்ரஜனின் பலவகை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதாலும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க வல்லது.

Photo by Leeloo The First: https://www.pexels.com/photo/a-brassiere-cutout-on-a-pink-surface-7805692/

இக்கட்டுரையில் சொல்லப்பட்ட பல செய்திகள், ஒரு சாதாரண வாசகரைக் கருத்தில் கொண்டே எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தாலோ, அல்லது ஐயப்பாடு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவதே நன்மை பயக்கும்.

மேலும் பெண்கள், அதிலும் நிறையக் குழந்தைகள் உள்ள பெண்கள், கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும் பெண்கள், இயல்பாக நிகழும் சுழற்சியை மாற்றுவதாலும், பல வித ஹார்மோன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்புண்டு. வந்த பின் அல்லலுறுவதைவிட வரும்முன் காப்பதும் கண்டறிவதும் நல்ல பலன்களைத் தரும் என்பதில் ஐயம் இல்லை.

படைப்பாளர்

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Exit mobile version